பின்பற்றுபவர்கள்

11 டிசம்பர், 2007

விக்னேஸ்வரனின் கட்டுரையொன்று

விக்கி என அழைக்கப்படும் விக்னேஸ்வரன் குறிப்பிடத்தகுந்த சமூக அரசியல் விமர்சகர். முன்பு சரிநிகர் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். இவர் காலச்சுவட்டில் எழுதிய கட்டுரையை இங்கு இணைத்துள்ளேன்

தமிழ்ச்செல்வன் படுகொலை
- சமாதான முயற்சிகளுக்கெதிரான தாக்குதல்


தனிநபர்களைக் கொல்வதன் மூலமாக ஒரு நாட்டின் அல்லது ஒரு தேசத்தின் அரசியலை மாற்றி அமைத்துவிட முடியுமா? அந்த நாட்டு மக்களின் அல்லது தேசத்தின் உரிமைகட்கான போராட்டத்தை நசுக்கிவிட முடியுமா? ஒடுக்கப்படுகின்ற மக்களின் அரசியலை முன்வைத்துப் போராடுகின்ற ஒரு அரசியல் இயக்கம் தன்னளவில் எவ்வளவுதான் அரசியல் தவறுகளை மேற்கொண்டாலும், அந்தத் தவறுகட்காக அது ஒடுக்குகின்ற எதிரியின் கையில்சிக்கி அழிவதை அந்த நாட்டு மக்களோ அல்லது தேசமோ ஏற்றுக்கொள்ளுமா?

இவை ஒன்றும் புதிய கேள்விகள் அல்ல. ஈழத்து அரசியற் போராட்ட வரலாற்றில் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்ட கேள்விகள்தான். இவைமட்டுமல்ல, இவற்றுடன் கூடவே, அரசியற் தவறுகள், மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போராட்டங்களை நடாத்தும் ஒரு விடுதலை இயக்கத்தை அதன் நோக்கத்திலிருந்து விலகாமற் செல்ல அனுமதிக்குமா என்ற கேள்வியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இன்றுவரை இந்த விவாதங்கள் தொடர்கின்ற போதும் இலங்கையில் இவ்விவாதங்களின் உள்ளொளி உணரப்பட்டதாகத் தெரியவில்லை. வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இன்னமும் கணக்கெடுக்கப்படாததாகவே இருந்துவருகிறது.

விளைவு, நாட்டில் ஓடும் இரத்தக் களரியும் இளஞ்சந்ததியின் அழிவும் நாட்டின் அனைத்து வளங்களும் ஈடுசெய்ய முடியாத விதத்திலும் வேகத்திலும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட நிகழ்வு, ஒரு மாபெரும் வெற்றியாகத் தென்னிலங்கையின் பல பகுதிகளில் வெடி கொளுத்தி ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்கின்ற அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழ்ச்செல்வனுக்காக அஞ்சலிக் கூட்டங்கள் நடை பெற்றுக்கொண்டிருக்கையில் தெற்கில் இவ்வாறு நடந்தது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய பிளவுக்கு உதாரணமான மிகக்கிட்டிய சம்பவமாகும். இது இலங்கையில் சமாதானத்தைக் காண்பதற்கான காலம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறது. இதன் அர்த்தம் தமிழ்ச்செல்வன் உயிரோடு இருந்திருந்தால் விரைவில் சமாதானத்தைக் கொண்டுவந்து விடுவார் என்பதல்ல, மாறாக, தெற்கு இன்னமும் சமாதானத்தை அவசியமான ஒன்றாகக் கருதத் தொடங்கவில்லை என்பதை இச்சம்பவம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

அரச மற்றும் இராணுவத் தரப்பினைப் பொறுத்தவரை இந்தக் கொலை, புலிகள் தரப்புக்கு விழுந்த மாபெரும் அடி என்ற நம்பிக்கையே நிலவுகிறது. உண்மையில் அப்படி அவர்கள் நம்புகிறார்கள் என்பதைவிட அப்படி ஒரு படத்தை அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்பதே சரியானது. கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சொன்றின்போது கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் இந்தக் கொலை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச 'இது தொடரும். புலிகளின் தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எமக்குத் தெரியும். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவராக இப்படி இல்லாமற்செய்வோம், என்று முழங்கியிருந்தார். ஆனால் உண்மையில் அவருக்குத் தெரியும், தமிழ்ச்செல்வனின் கொலை 'காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை'யாக நடந்த ஒரு சம்பவம் என்று. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தியைப் புலிகள் அறிவிக்கும்வரை இலங்கை இராணுவத்தினருக்குக் கொல்லப்பட்டவர்கள் யார் என்றே தெரிந்திருக்கவில்லை.

வன்னிக்கான கட்டளைத்தளபதி 'எமக்குத் தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்தில் தமிழ்ச்செல்வன் இருந்தார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை' எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கப் பேச்சாளர் ஹெகலிய றம்புக்வலவிற்குப் பாதுகாப்புச் செயலாளர் போலவே, அப்படிச்சொல்வது கௌரவக் குறைவாக இருந்திருக்கிறது.

தமது படையினர் மிகவும் நுணுக்கமான உளவு ஆற்றல்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று காட்டவும் அனுராதபுரம் விமானப்படைத்தளத் தாக்குதலின்போது ஏற்பட்ட இழப்புக்களால் உருவாகியிருந்த சிங்கள மக்கள் மத்தியிலான உணர்வலைகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதற்காகவும் அவர் தாம் தெரிந்துகொண்டே குண்டை வீசியதாக அறிவித்தார். அரசாங்கத் தகவல் அறிவிப்பாளராக இருந்தபோதும், பெரும்பாலும் ஒரு யுத்தகளத் தளபதி போல வீறாப்புடன் பேசுவதற்காகத் தவறான தகவல்களைக்கூடத் தெரிவிக்கத் தயங்காத றம்புக்வலவின் இந்த அறிவிப்பு எதிர்பார்த்ததைவிட அரசுக்குச் சர்வதேச மட்டத்திலிருந்து பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

சமாதானப் பேச்சுக்கான புலிகள் தரப்புப் பேச்சாளர் என்ற முறையில், தமிழ்ச்செல்வனைக் கொலை செய்தது சமாதான முயற்சிகளுக்கு எதிரான நடவடிக்கையாகும் என்ற கண்டனத்தை அரசு எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இதனால், பின்னர் தமக்குத் தகவல் கிடைத்தது உண்மை என்றும் ஆனால் அது புலிகளின் நடமாட்டம் பற்றிய தகவல் என்றும் அதில் தமிழ்ச்செல்வனும் இருக்கிறார் என்பது அவர் கொல்லப்பட்ட பின்னரே தெரியும் என்றும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவூடக அறிவிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.

எது எப்படியிருப்பினும், இந்தக் கொலையை ஒட்டி நடந்த ஆரவாரங்கள் இலங்கை அரசாங்கத்தின் இன்றைய அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகளிடம் இருக்கும் இன்றைய நிலைமை பற்றிய பார்வையானது மிகத் தெளிவாக ஒரு அரசியற் தீர்வை நோக்கியதல்ல, யுத்தத்தில் புலிகளை முழுமையாகத் தோற்கடிப்பதே என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அதிலும் புலிகளை இராணுவரீதியாக அழிக்க எந்த வழிமுறைகளையும் அவர்கள் கையாளத் தயார் என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த வழிமுறைகளில் ஒன்றாக, புலிகளின் முக்கியத் தலைவர்களைத் தேடிப்பிடித்துக் கொன்றுவிடுவதும் அடங்குகிறது. ஆனால், புலிகளை தமிழ்த்தரப்பினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அணியாக அங்கீகரித்துக்கொண்டு அதைச் செய்ய முடியாது என்பதால் - அல்லது அப்படிச் செய்வது நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று என்பதால் - புலிகளை வெறும் பயங்கரவாத அணியென்றும் பிரபாகரனைத் தலைமைப் பயங்கரவாதி என்றும் அரசுத் தரப்பு இப்போது தீவிரமாகப் பேசிவருகிறது. இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதத்தில் ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

அண்மையில், பயங்கரவாதம் மற்றும் இராணுவத் துறை தொடர்பான ஆய்வு நிறுவனமொன்றை (மிஸீstவீtutமீ யீஷீக்ஷீ ஞிமீயீமீஸீநீமீ ணீஸீபீ ஷிtக்ஷீணீtமீரீவீநீ ஷிtuபீவீமீs) சிங்கப்பூரில் நடாத்திவரும் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர் கலாநிதி றொகான் குணரத்னவின் பேட்டி ஒன்றை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று பிரசுரித்திருந்தது. அந்தப் பேட்டி தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் இலங்கை அரசின் அண்மைக்கால வெற்றிகள் தொடர்பாகவும் அரசாங்கத்தின் முன் முயற்சி இன்மை பற்றியும் விமர்சித்திருந்தது. கிழக்கில் இலங்கைப் படையினர் புலிகள் வசமிருந்த நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றி, அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டிருப்பது குறித்தும் அதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுவரும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் கிட்டத்தட்ட யுத்தம் முடிவுக்கே வந்துவிட்டது என்ற ரீதியில் போடும் கூப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தெரிவித்த பதில் இது:

"இது போன்ற ஒரு தேக்கம் நிறைந்த போரில் பிரதேசங்களையோ அல்லது படைகளையோ இழப்பது என்பது ஒன்றும் முக்கியமான விடயம் அல்ல. சர்வதேசரீதியாக நடைபெற்றுவரும் பல போராட்டங்களில் இதற்கு ஆதாரமான பல முன்னுதாரணங்கள் உள்ளன. மேலே ஒரு அரசியல் தலைமை இருந்து செயற்படும்வரை, பிரதேசங்கள் கைப்பற்றப்படுவதும் இழக்கப்படுவதும் திரும்பத் திரும்ப எத்தனை தடவைகளும் நடக்கலாம். அதுபோலவே கீழ்மட்டத் துருப்புகள் கொல்லப்படுவதும் அவை விரைவாகவே புதியவர்களால் ஒப்பீட்டளவில் இலகுவாக நிரப்பப்படுவதும் நடக்கலாம். இவ்வாறான ஒரு யுத்தம் முடிவில்லாத யுத்தமாக நூற்றுக்கணக்கான வருடங்களுக்கும் தொடரலாம். இத்தகைய ஒரு யுத்தத்தில் வெல்வதற்கு இரு முனையிலான முயற்சி அவசியம். ஆனால், இங்கே இருமுனைகளுமே காணப்படவில்லை

முதலாவது முயற்சி, தீவு பூராவுமுள்ள தமிழர்களின் இதயங்களை வெல்வதை மையங்கொண்டதாக அமையவேண்டும். இது மிக முக்கியமான புலிகளின் பிரதேசத்தில் விடுதலைக்கான கலகங்களைத் தூண்டுகின்ற நடவடிக்கையாக அமையும். இப்போது தமிழ் மக்கள் கட்டாந்தரைக்கும் பாறைக்கும் இடையில் அகப்பட்டுக் கிடக்கிறார்கள். இந்த அரசியல்ரீதியிலான முயற்சியானது தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதை நோக்கமாகக்கொண்டிருப்பதுடன் புலிகளின் உயர்மட்டத் தலைமைகளை அழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு, பிரபாகரன் இயக்கத்தின் இறுக்கமான பிடியைத் தனது கையில் வைத்திருப்பதால், பிரபாகரன், அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி, பொட்டு அம்மான், மற்றும் கே.பி. ஆகியோர் இன்று கொல்லப்பட்டால் நாளை யுத்தம் நின்றுவிடும். அரசாங்கத்திடம் அத்தகைய ஒரு மூலோபாயம் குறித்த முன்னெடுப்புக்கள் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், படையணித் தலைமைகள் மற்றும் உளவு அமைப்புக்களை ஒரு அரசாங்கம் வைத்திருப்பது என்பது, பாரிய தந்திரோபாய மூளைகள் பொருத்தமான மூலோபாயங்களை வகுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக அன்றி வேறெதற்குமாக அல்ல. ஆனால் அவர்கள் யாரும் ஒரு வெற்றி பெறக்கூடிய மூலோபாயத்தை உருவாக்குவதை நோக்காகக்கொண்டு பணியாற்றுவதாகத் தெரியவில்லை. (ஷிuஸீபீணீஹ் றீமீணீபீமீக்ஷீ, ளிநீtஷீதீமீக்ஷீ 7, 2007)

றொஹான் குணரத்ன ஈழத் தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு இராணுவ ஆய்வாளர். அரசப் படைத்தரப்புத் தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய தனது 'ஆய்வுகளினூடாக' ஆரூடம் கூறிவந்த ஒருவர் இவர். நூற்றாண்டுப் பழமை வாய்ந்த மற்றும் மேற்கத்தைய இராணுவக் கோட்பாடுகளை வைத்துக்கொண்டும் ஆயுதப் போராட்டங்களென்றாலே அவை பயங்கரவாதம்தான் என்று மட்டுமே புரிந்துவைத்துக்கொண்டும் நிலைமைகளை 'ஆய்வு' செய்து 90களில் பத்திரிகைகளில் கட்டுரைகளும் நூல்களும் எழுதிவந்தவர். அவரது மேற்படி கருத்துக்கூட திக்ஷீமீபீக்ஷீவீநீளீ tலீமீ நிக்ஷீமீணீt போன்றோரின் 17ஆம் நூற்றாண்டு இராணுவச் சிந்தனைகளைத் தாண்டவில்லை என்பதைக் காட்டுகின்றன. உலகிலுள்ள அனைத்து அடக்குமுறை அரச இராணுவமும் இதைத்தான் சொல்கிறது; செய்கிறது. இலங்கையின் றொகான் குணரத்ன போன்ற பேரினவாதப் புத்தி ஜீவிகளினதும் சிங்களப் பேரினவாத யுத்த வெறியர்களதும் சிந்தனை மட்டம் இதற்கு விதிவிலக்காகிவிட முடியுமா என்ன?

ஒரு போராட்ட அமைப்பின் தலைமை முக்கியமானதுதான் என்ற போதிலும் அந்த அமைப்பின் தோற்றத்திற்கான அரசியல் என்ன என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் இவர்களால் ஒருபோதும் கண்டுகொள்ள முடியாது என்பதை இந்த வரிகள் தெளிவாக இனங்காட்டுகின்றன. றொஹான் குணரத்ன போன்ற இராணுவ நிபுணர்களும் அதே அரசியல் கோட்பாட்டைக் கொண்டவர்களுந்தான் இன்றைய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் மட்டத்தில் இருக்கிறார்கள். ஒரே ஒரு வேறுபாடு இலங்கை அரசியல்வாதிகள் றொஹான் கூறுவதுபோல - அமெரிக்கப் பாணியில் - செயற்படாமல் இருப்பதுதான். ஆனால் இதிலுள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால் உண்மையில் அவர்கள் செயற்படாமல் இருக்கிறார்கள் என்பதைவிட அவர்களால் செயற்பட முடியாமல் இருக்கிறது என்பதுதான். தமிழ்ப் பிரதேசங்களில் புலிகளின் தலைமைகளை அழிப்பதற்கான முயற்சிகளில் அரசுப் படையினரால் நேரடியாக வெற்றி கரமாகச் செயற்பட முடியாததன் காரணமாகத்தான் அவர்கள் கருணா அணியினரினூடாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டனர்.

கருணா அணியின் நடவடிக்கை காரணமாகச் சில வெற்றிகளை அவர்களால் பெற முடிந்தபோதும் பெருமளவிலான சாதனைகள் எதனையும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. பதிலாக, கருணா அணிமூலம் வெற்றிகரமாகச் சாதிக்கப்பட்டதெல்லாம் கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற சமூக விரோதச் செயல்களை வளர்த்துவிட்டதும் அதற்கு ஆதரவான அரசுத் தரப்பு அணியொன்றை உருவாக்கிவிட்டதுந்தான். இதன் விளைவு அரசாங்கத்தை அரசியல்ரீதியாக சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டிருக்கிறது. கருணாவைப் பயன்படுத்தித் தமக்கு வேண்டியவற்றைச் சாதித்துக்கொண்ட அரசு சார்புச் சக்திகளுக்குக் கருணா அணியினால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்க அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவது தவிர்க்க முடியா மற்போய்விட்டது. கருணாவுக் கெதிராகக் கருணாவின் துணையாளாக இயங்கிய பிள்ளையானை வளர்த்துவிட்டுக் கருணாவை நாட்டில் இருக்க முடியாத நிலைக்குத் தள்ளியதுடன் சாதாரண வெளிநாட்டு ஏஜென்சி வியாபாரம் செய்யும் நபர்கள்செய்வதுபோல அரசாங்க அமைச்சே தலைமாற்றிய கள்ளக் கடவுச்சீட்டில் வி.ஐ.பி ஒருவரது பெயரில் (கோகுல குணவர்த்தன) விசா எடுத்து இலண்டனுக்கு அனுப்பியிருக்கிறது. இந்தக் குடியகல்வுச்சட்ட மீறலுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்ட போதும் இலண்டனில் கருணா கைதானதன் காரணமாகப் பலத்த அவமானத்தை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டதுடன் சர்வதேச நாடுகளின நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது.

தமிழ்ச்செல்வனது கொலை, யுத்தமுனையில் புலிகளைப் பலவீனமடையச் செய்துவிடும் என்னும் நம்பிக்கை அரசுக்கு இருக்கும் என்று யாரும் நம்பத் தேவையில்லை. அப்படி நம்பியிருந்தாலும் அதற்குப் பின் முகமாலைப்பகுதியில் நடந்த யுத்தத்தில் அரசுப்படைகள் எதிர்கொண்ட பெரும் அழிவுகள் அந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கும். உண்மையில் தமிழ்ச்செல்வனது கொலை தொடர்பாக இலங்கை அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட ஆரவாரமான மகிழ்ச்சி எல்லாம் மிகக் குறுகிய அரசியல் லாபம் கருதிய ஆரவாரங்கள்தான். ஆனால் இதன் மூலம் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலமாகச் சமாதானத்தை அடைய நாம் ஒருபோதும் விரும்பவில்லை. புலிகளை அழிப்பதே சமாதானத்திற்கான எமது வழி என்ற சிங்கள மக்களுக்கு வலியுறுத்தித் தெரிவித்திருக்கிறது.

தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப்புலிகளது அரசியற் பிரிவின் தலைவர் மடடுமே. அதன் அரசியலுக்கான தலைவர் அல்ல. அந்த அமைப்பின் அரசியலைத் தீர்மானிக்கும் பொறுப்பைக் காலம் சென்ற முன்னாள் தலைவர் அன்ரன் பாலசிங்கம்கூடக்கொண்டிருக்கவில்லை. உண்மையில் அந்த அரசியலின் பிரச்சாரம் மற்றும் அதற்கான வேலைத் திட்டங்கனை நடைமுறைப்படுத்துபவர்களாகவே அவர்கள் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் பாலசிங்கமும் சரி தமிழ்ச்செல்வனும் சரி இலங்கை அரசுடனும் சர்வதேச அணியுடனும் புலிகளின் சார்பாகக் கருத்துரைக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் போதுமான அதிகாரங்களைக் கொண்டிருந்தார்கள். குறைந்தபட்சம் இலங்கை அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட உயர்மட்ட அமைச்சர்களைவிட அவர்கள் அதிகளவுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டிருந்ததுடன் பிரச்சினை தொடர்பான தமது தரப்பு நியாயங்களை மிகவும் தெளிவாகத் தெரிந்தும்வைத்திருந்தார்கள்.

இலங்கை அரசுடனான அண்மைக்காலப் பேச்சுக்களின்போது தமிழ்ச்செல்வன் தமது பக்கம் பற்றி மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் தனது விவாதத்தை முன்வைக்கக் கூடியளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டிருந்தார். இலங்கை அரசுத் தரப்பினரைப் போல நிதானமிழந்து செயற்பட்டுப் பேச்சுவார்த்தை மேடையைப் பயனற்ற ஒன்றாக்கிவிடாமல் சிறப்பான தொழிற் தேர்ச்சியுடன் அவர் செயற்பட்டிருந்தார். தவிரவும் அவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கிவரும் ஒரு அங்கீகரிக்கப்படாத அரசின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கியும் செயற்படுத்தியும் வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் அந்த அரசச் சார்பு சிவில் நிர்வாக அமைப்பைக் கட்டி எழுப்புவதில் மிகத் திறமையுடன் செயற்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, வனவளம் போன்ற பல்வேறு துறைகளை அவர் தலைமையேற்றுச் செயற்படுத்தி வந்துள்ளதாகப் புலிகள் தெரிவிக்கின்றனர். புலிகளின் அரசியற் கருத்துக்களுடனோ அல்லது அவர்களது போராட்ட வழிமுறைகளுடனோ ஒருவர் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் அவர்களது நிர்வாகத் திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று சுனாமி அனர்த்த நிவாரணப் பணியின்போது பல வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் பாராட்டியிருந்தன. தமிழ்ச்செல்வனின் பங்களிப்பு இந்த நிர்வாக முகாமைத்துவ வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்ச்செல்வனது இறுதி ஊர்வல நிகழ்வுகள் அவருக்கு இருந்த செல்வாக்கைத் தெளிவாக வெளிப்படுத்தி இருந்தன. அவர் இறந்ததும் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதும் நிர்வாகம் தடங்களின்றித் தொடர்வதும் அந்த அங்கீகரிக்கப்படாத புலிகளின் அரச நிர்வாகத் துறையின் வெற்றி என்பதில் ஐயமில்லை.

தனிநபர்கள் கொல்லப்படுவதால் அரசியல் அழிவதில்லை; அரசும் அழிவதில்லை என்ற பழைய உண்மையை இச்சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதனை ஒட்டி ஏற்பட்ட நிகழ்வுகள் இருபக்க இராணுவச் சமநிலையில் எத்தகைய பாரிய மாற்றத்தையும் எற்படுத்திவிடவில்லை. ஆனால், அவரது கொலை மூலமாக ஏற்பட்டிருக்கும் இலங்கை அரசுமீதான நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் ஓரளவு அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது. (ஆயினும் இந்த நம்பிக்கை வெறுமனே யுத்தம் விரைவில் முடியப்போகிறது என்ற மாதிரியான ஒரு குறுகிய கால நம்பிக்கையே என்பது வேறு விடயம். ஆயினும் இப்போது அரசுக்குத் தன்னைத் தானே தேடிக்கொண்ட அரசியல் நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்க அது தேவையாக உள்ளது-குறைந்தபட்சம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் வரைக்குமாவது இது அவசியம்) தமிழ் மக்கள் மத்தியிலோ இது மாபெரும் உணர்வலைகளை ஏற்படுத்திவிட்டுள்ளது. சமாதானத்தை விரும்புகிற ஒவ்வொருவரும் இந்த நடவடிக்கை சமாதான முயற்சியைப் பலவீனப்படுத்தும் ஒன்றாகவே உணர்கின்றனர். அது மட்டுமல்லாமல் அந்த அரசு தமிழ் மக்களையோ அவர்களது அரசியலையோயற்றி எந்த அக்கறையுமற்றது என்னும் கருத்து மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் யுத்தம் மூலம் புலிகளை முற்றாக ஒழித்து விடமுடியும் என்று கருதுகிறது. புலிகளை ஒழிப்பதற்கு மட்டுமே இந்த அரசுக்குத் தாம் ஆதரவளிப்போம் என்று ஜே.வி.பி கூறுகிறது. யுத்தமே இந்த அரசின் இனப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வாகச் சொல்லாமற் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் அரசைப் பொறுத்தவரை புலிகளின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவம் எதுவும் அற்றவர். எனவே அவரது கொலை ஒரு போர்க்கள வெற்றிமட்டுமே. ஆனால், தமிழ் மக்களுக்கோ தமிழ்ச்செல்வன் சமாதானத்திற்கான ஒரு குறியீடு. எனவே அக்கொலை சமாதான முயற்சிகட்கெதிரான ஒரு தாக்குதல்.

புலிகள் இந்தச் செய்தியைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதை அவர்கள் புலிகளின் பொலிஸ் பிரிவுத் தலைவரான நடேசன் அவர்களை அரசியற் பிரிவுத் தலைவராக உடனடியாக நியமித்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இலங்கையில் உடனடியாக இனிவரப்போகும் நாள்கள் சமாதானம் தொடர்பாக அவ்வளவுக்கு நம்பிக்கை தரும் நாள்களாக இருக்கும் என்பதற்கான அடையாளங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. விலைவாசி ஏறும் வேகத்தைப் பார்த்தால், முழு இலங்கையுமே போர்க்களமாக மாறும் அபாயம் நெருங்கிக்கொண்டிருப்பதாகவே கூற முடியும்.

நன்றி காலச்சுவடு

6 டிசம்பர், 2007

உங்களுடனும்.....

உங்களுடனும்
உங்களுள் ஒருத்தியுடனுமான என் காதல்...


காற்றில்லை,
கரையோர நாணல்கள் ஆடவில்லை,
ஆற்றின் கண்ணீர் மெல்லிய கோடாய் வழிகிறது.
நேசத்தை இழந்த குயிலோ நீள் துயரம் பாடுகிறது.
நேற்றுவரை என்னருகில் எத்தனை விழிகள்!
அவளும் இருந்தாள்.
அவளாக இருந்தாள்.
நேசத்தின் உச்சமோ...? நிர்மலமான நாட்களோ...?
சொற்களின் எல்லைக்குள் அடங்காத சுருதியோ...?
உயிர்ப்புறும் ஆத்மா என்றிருந்தேன்.
எத்தனை திங்கள் எத்தகை நிலவு
எங்கள் பாடலில் செம்மண் சுடரச் சேர்ந்து நடந்தோம்...
முற்றிலும் பொய்யோ?
மூச்செறிந்து நடக்கிறேன்.
ஈரமற்ற மணலில் புதையும் கால்கள்.
ஈரமற்ற மடிகளில் புதையுமோ முகம்.

பரவைக்கடல் மீது
படகேறிப் பாடியதோர் நாள்...
இரவுகளிலிருந்து வாதம் புரிந்தது பலநாள்...
ஆழ்தியானப் பயில்வுகளில் எத்தனை நாள்...
கைபற்றிக் கண்ணீர் துடைத்து,
முடிகோதி முத்தமிட்டு,
பொய்யன்றிப் புரிதலின் ஆழமேயென்றிருந்தேன்.
ஐயோ!
அனலெரி நெஞ்சும் ஆற்றொணாத் துயரமும்
புனல்வற்றிப் போயழும் ஆற்றின் கரையில் ஆறுமோ?

பொய்மையின் முகந்தெரியப் போயழ மடியுமில்லை.

சொல்லே விளங்காத மனங்களில் சுருதியுறையுமோ?
வில்லேற்றி நாண் பூட்டி
விரையும் அம்புச் சொற்கள்
அவளும் ஏவினாள்.

நேசமொன்றை நெஞ்சிற் சுமந்ததற்காய்
நீயும் எய்யடி
சாகவே நான்.
அற்றகுளத்தில் அறும் பறவைக் கூட்டம்.
உற்றவிடத்தில் உறையும் விழிகள்.
விரையும் வழியில் நசியும் மனங்களை நானறிவேன்.
ஓருகால் ஆறியிருந்தால்

அழியா மனமொன்று அன்றேனும் இருக்குமென்றால்
அழவும் கூடும் நீங்கள்.

காதல் மறக்கலாம்! கனவுகள் துறக்கலாம்!!
வசையன்றி வேறறியாச் சமூகத்தின் வேர்கள் அறுமென்றால்.
வாழ்தலென்னும் இருப்புக்காய்
வெஞ்சமர் ஒன்றில் மெய்யுமாகுதியாகலாம்.
வேறெந்த வழியிலும் எழும்
விருட்சத்தின் பொய்நிழலில்
போய்ச்சுகம் கொள்ள நான் மாட்டேன்

போங்கள் நீங்கள்.

"நன்றி" உங்கள் சொற்களுக்கும்
நில்லாதலையும் அவள் விழிகளுக்கும்.
நானறியாப் பொழுதில் அவள் சுடர
அவளறியாப் பொழுதில் நான் தளர
இருளிலும் சுடர்ந்த அவள் விழிகள் சாரமிழந்தன.
காலமதன் துயரப்படிவுகளிலொன்றாய்க் கணக்கிடவோ?
நீள் வழியெங்கும் விழிபெருக நான் போன நாட்கள் போயின.

நெஞ்செங்கும் புண்ணென்றும்
நீ மயிலிறகு கொணர்வாயென்றும்
கண்மூடிக் கனவு காணும் முட்டாள்க் கவி,
மென்நெஞ்சு
மன்றாடும் புழுவென்றிருப்பாயோ?
நானறியேன்.
நேசத்தின் முன்னால்
"நெஞ்சத்து மானம்" எதற்கென்று நீயொருகால் உணர்வாய்.
மென்மையும் வன்மையும்
மேன்மைகொள் ஆத்மாவுமாய்
நான் நிமிர்கையில் நீயும் உணர்வாய்.
ஆக,
நான் விடைபெற விரும்புகிறேன் நண்பர்களே!
இறுதிப்பிரிதலுக்கு முத்தங்களோ கைலாகுகளோ வார்த்தைகளோ
தேவையில்லை
கடந்த கால அனுபவங்களே போதும்!

மழையின் நாள்

பூமி ஏங்கித் தவித்துக் கனன்று கொண்டிருந்தது.

வேனிலிலும் மரங்கள்
துளிர்களும் இலைகளுமாய் மதமதர்த்திருந்தன.
ஆழத்து நீரில் வேரோடிய திமிரில் நின்றன.

மண் தன் இறுதி நீரையும் இழந்தது.
ஆத்மாவிலும் துயரம் மிகுகிறது.
அனலைக் காற்று அள்ளி வருகிறது.
முந்திய வருகையில்
அவள் பதித்த ஈரமுத்தத்தடங்கள்
புழுதியாய் உரிந்து பறந்து போயின.
ஆடையவிழ்ந்து வார்த்தைகளற்ற துயரத்தில்
மண் காத்திருந்தது.

வானம் இருளில் அழிய
மரங்கள் எதிர்பாராதவொரு நாளில்
ஆர்ப்பரித்து ஆர்வமுடன்
ஆழியின் நீரெலாம் அள்ளிவந்தாள்.

துளிகள்
காதலாகிக் கண்ணீராக
மோகமாகி முத்தமாகி
ஓவென்ற ஒலியாகி மோதினாள்.

வெள்ளி நீளக்கோடுகளில் ஒளி முறிந்தது.
விசும்பதிர்ந்தது.
மண் தளர்ந்தது.
மரங்கள் விறைத்து நின்றன.

வைகாசி - 1993

நிறைவேறாத காதல்

தனிமை
துயர்தரும்
எனத்தெரிந்திருந்தும்
நீரற்ற ஆற்றின் கரையில் நான்.
வானம் சிவப்பாய் எரிந்தது
மந்தைகளும் இடையனும் மறைந்தனர்.
ஒரு தொலைவுக்கு வெற்று வீதி...
ஒரு நொடியில் இருள்...
எல்லாச் சமாதானங்களின் பின்பும்
பாறை வெடிப்பொன்றினூடு சீறிப்பாயும்
ஊற்று நீர் போல உன் நினைவு.
இக்காதலும் இப்புனிதமும்
இப்படியே வாழட்டும்.

நீயோ நானோ
ஒருவரை ஒருவர் நோக்கி வராதிருப்போம்.
மெளன அழுகை
ஆற்றை நிறைக்கட்டும்.

பங்குனி - 1991

27 அக்டோபர், 2007

சித்திரவதைகளும் சித்திரவதைக்குள்ளாகிச் சீவித்திருப்போரும் II

சித்திரவதை (வரைவிலக்கணம்)

திட்டமிட்ட ரீதியில் தனி ஒருவர் மீதோ அல்லது பலர் மீதோ தனியொருவரோ குழுவோ தானாகவோ அல்லது ஏதாவது ஒரு அதிகார சக்தியின் உத்தரவினாலோ புரியப்படும் உடல் உள நோக்களும் வேதனைகளும் சித்திரவதை எனப்படும். (விரிவான வரைவிலக்கணம் ஆங்கிலத்தில் கீழேயுள்ளது)
Torture, according to international law, is "any act by which severe pain or suffering, whether physical or mental, is intentionally inflicted on a person for such purposes as obtaining from him or a third person information or a confession, punishing him for an act he or a third person has committed or is suspected of having committed, or intimidating or coercing him or a third person, or for any reason based on discrimination of any kind, when such pain or suffering is inflicted by or at the instigation of or with the consent or acquiescence of a public official or other person acting in an official capacity." In addition to state-sponsored torture, individuals or groups may inflict torture on others for similar reasons; however, the motive for torture can also be for the sadistic gratification of the torturer.


சித்திரவதையின் நோக்கம்

சித்திரவதையின் நோக்கங்கள் குற்றத்தை அல்லது செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்தல் , தேவைப்படும் தகவல் ஒன்றைப் பெறுதல், கைது செய்யப்பட்டவரைப் பழிவாங்குதல், தேடப்படுகின்ற ஒருவரின் குடும்பத்தினரை அல்லது நண்பர்களைத் துன்புறுத்துவதற் கூடாகத் தேடப்படுகிறவரைப் பணிய வைத்தல் அல்லது சரணடைய வைத்தல் எனப்பன்முகப்படுகிறது.

குற்றம் ஒன்றை நிரூபிப்பதற்கு வேறுபல வழிகள் இருக்கின்ற போதும், தேவைப்பட்ட தகவலைப் பெற வேறுவழிகள் உள்ளபோதும், அல்லது அத்தகவல்களைப் பெற்றபின்னரும் கூடச் சித்திரவதை மேற்கொள்ளப்படுகிறது.

சாட்சி ஒருவரைச் சித்திரவதைக்குள்ளாக்குவதன் மூலம் அவரது உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் அதாவது அவரது ஆத்ம உறுதியையும் அழித்துவிடச் சித்திரவதை செய்பவர்கள் விரும்புகிறாகள்.
சாட்சி ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை அழிக்கப்படுவது அதிகார சக்திகளுக்கு மிகவும் தேவையானதாகும். ஏனெனில் அரச அமைப்பை எதிர்த்துப் புரட்சி செய்பவர்கள் , பிழையான தலைமையை எதிர்ப்பவர்கள் அவற்றுக்கெதிரான கருத்தியலையும் நடத்தைகளையும் கொண்டிருக்கிறார்கள் அவர்களது கருத்தியலும் நடத்தைகளும் இன்னும் பலரையும் தொற்றிகொள்வது தமது அதிகாரத்தைப் பேணவிரும்புகிற அரசாங்கத்திற்கோ தலைமைக்கோ உவப்பானதல்ல. எனவே இத்தகையவர்களின் மன உறுதியை உடைத்து
விடுவது அதிகார சக்திகளுக்கு அவசியமானதாகும்.





“பொலிஸை எதிர்க்காதே!
அரசாங்கத்தை எதிர்க்காதே!
தலைமையை எதிர்க்காதே!
எங்களை விமர்சிக்காதே!
விமர்சித்தால் என்ன நடக்கும் என்பதைச் சாட்சிக்கும் அவர்சம்பந்தப்பட்டவர்களுக்கும் உணர்ந்தச் சாட்சியை சித்திரவதை செய்து நடைபிணமாக்க வேண்டிய தேவை உள்ளது.
இவ்வாறு சித்திரவதை செய்து நடைப்பிணமாக்கப்பட்டவரைக் காணுகையில் சமூகத்தினரிடையே ஒரு அச்சஉணர்வு பரவுகிறது. இந்த அச்சஉணர்வு அதிகாரத்துக்கு எதிரான சக்திகளுக்கு எச்சரிக்கையாகும்.

சர்வதேசமன்னிப்புச் சபையின் அறிக்கையின் படி உலகின் ஆறில் ஜந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்றுவருகின்றன. உலகம்முழுவதும் அகதிகளாகி உள்ளவர்களில் 10 இல் இருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக்குள்ளானவர்களாகவிருக்கின்றனர்



சித்திரவதை முறைகள்




சித்திரவதையானது உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நடைபெறுகின்றது. உடலியல் ரீதியான சித்திரவதைகளும் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு வழிவகுக்கின்றன.
சித்திரவதையானது இராணுவம் பொலிஸ் முதலாளிகளது அடியாட்கள் அல்லது போராளிகளின் ஆயதக்குழுக்கள் சாட்சியின் வீட்டிற்குள் புகுந்து யாவற்றையும் அடித்து நொருக்கிக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் மீதும் வன்முறையைப் பிரயோகித்துத் தேடப்பட்டவரை முரட்டுத்தனமாக கைதுசெய்வதுடன் ஆரம்பிக்கிறது.
உடலியல் ரீதியான சித்திரவதைகள் பின்வரும் அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ளன.

தாறுமாறான தாக்குதல்

தடி, இடுப்புப்பட்டி, மண்நிரப்பிய எஸ்லோன் குழாய், போன்றவற்றினால் எழுந்தமானமாக உடலெங்கும் தாக்குதல் போன்றவை இதனுள்ளடங்கும்.

திட்டமிட்ட தாக்குதல்:

தடிகளால் பாதங்களில் தாக்குதல் (பாதக்குழிவுகளிலும் பாதக்குதியிலும்), ஒரே நேரத்தில் இரு காதுகளிலும் அறைதல், முழங்கால் மூட்டுச்சில்லுகளில் அடித்தல், கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றில் அடித்தல் மூலம் கருச்சிதைவு ஏற்படுத்தல் போன்றவை இதனுள் அடங்கும்.

மின்சாரச் சித்திரவதை :

மின்சாரம் பாய்ச்சப்படும் போது உடலில் கடும் நோவுடன் கூடிய வலிப்பு தோற்றுவிக்கப்படுகிறது. மின்சாரம் உடல் தசைகளை சடுதியான சுரக்கவிரிவுக்கு உட்படுத்துவதால் கடும் நோவு தோன்றுகின்றது. மேலும் மின்சாரம் பாய்ச்சப்பட்டவர் தானே தனது கன்ன உட்சதைகள் உதடுகள் நாக்கு என்பவற்றை மின்சாரத் தாக்கின் போது கடித்து விடுவார்.
மின்சாரம் பாய்ச்சப்படுவதற்கெனப் பயன்படுத்தப்படும் மின்முனைகள் பென்சிற்கூர்போன்று மிகக் கூர்மையானவையாக உள்ளன. இவை உடலின் மென்மையான ஆனால் உணர்ச்சிச் செறிவான இடங்களில் செருகப்பட்டு மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. காதுகள் (செவிப்பறைமென்சவ்வு), விரல் நுனிகள், காற் பெருவிரல், மார்பக முனைகள், ஆண்குறி, பெண்குறி போன்ற மென்மையான பகுதிகளை சித்திரவதை செய்வோர் தெரிவு செய்கிறார்கள்.

மூச்சுத்திணற வைத்தல்:

இவ்வகையான சித்திரவதைகளின் நோக்கம் சாட்சியை மிகக்கடுமையான திணறலுக்கு உட்படுத்துவதாகும். இதற்கெனப் பாரிய நீர்த்தாங்கிகள் சித்திரவதைக் கூடங்களினுள் உள்ளதாக அறியப்படுகிறது. சாட்சி தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில் தண்ணீரினுள் அமுக்கப்படுவார். சிலவேளைகளில் சிறுநீர், மலம் போன்றவற்றினுள்ளும் சாட்சி அமுக்கப்படுவார். இவ்வகையான சித்திரவதையின் போது மூச்சுத் திணறி மரணமான சிலரின் சுவாசப்பைகளினுள் மலம் காணப்பட்டமையைப் பிரேதபரிசோதனைகள் வெளிச்சப்பபடுத்தின.
இவ்வகைச் சித்திரவதையின் போது சாட்சி மரணமடைந்துவிடாதபடி கைதியின் நாடித் துடிப்பை சித்திரவதைசெய்பவர் கணித்தபடி இருப்பார்.

எரிகாயங்களை உண்டாக்குதல்:

எரிகின்ற சிகரட்டினால் உடலின் மென்மையான பாகங்களில் சுடுதல். தீயில் நன்கு எரிக்கப்பட்ட கம்பிகளால் சுடுதல். வேப்பமேற்றப்பட்ட மின் அழுத்தியினால் முதுகுப் பகுதியில் அழுத்தி தேய்த்தல் போன்றவை இதனுள் அடங்கும்.

கட்டித்தொங்கவிடுதல்

இருகைகளையும் முறுக்கிக் கட்டி தொங்கவிடுதல், இருகால்களையும் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுதல், ஒருகை அல்லது ஒருகாலில் மாத்திரம் கட்டித் தொங்கவிடுதல் போன்றவை இதனுள் அடங்கும்.

ஊடற் பாகங்களைப் பிடுங்குதல்:

தலைமயிர், நகங்கள், நாக்கு, விதைகள், பற்கள் என்பவற்றைப் பிடுங்குதல் அல்லது உடைத்தல் அல்லது நசுக்குதல்.

பாலியல் ரீதியான சித்திரவதைகள்:

பாலியல் ரீதியான சித்திரவதை என்பது உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை உண்டுபண்ணுகிற ஒரு சித்திரவதையாகும்.
காம வக்கிரமான கதைகளைக் கூறுதல், கூறச் செய்தல், பாலியல் நடத்தைகளைச் செய்து காட்டுதல், செய்து காட்டச் செய்தல், வெளியேற்றப்பட்ட விந்தை உண்ணக் கொடுத்தல். சாட்சி மீது சிறுநீர் கழித்தல், ஆண்களின் ஆண்குறி, விதை என்பவற்றைத் தொழிற்பாடு இழக்கச் செய்தல். பெண்களை வன்புணர்தல் . பழக்கப்பட்ட மிருகங்களை கொண்டு பாலுறுப்புக்களில் நோவுண்டாக்குதல் போன்ற முறைகளை அறியப்படுகின்றன.

உளவியல் ரீதியான முறைகள்:

சாட்சியைத் தனிமைப்படுத்தி வெறுமையை உண்டாக்கி மன அழுத்தத்திற்கு உட்படுத்தல்: இதற்கென மிகச்சிறிய அறைகள் உள்ளன. இவற்றினுள் சாட்சி பல நாட்களுக்கு கடும் இருளில் அல்லது கடும் ஒளியில் அடைத்து வைக்கப்படுவார். இவை நிலவறைகளாகவும் இருக்கக்கூடும். மலசலம் கழிப்பதும் அவ்வறைகளிலேயே!
நாள் ஒன்றில் ஒழுங்கற்ற இடைவெளிகளில் உணவு அல்லது நீர் சிறியளவில் வழங்கப்படும். அதைத்தவிரக் காலத்தை உணரக்கூடிய எதனிலும் இருந்தும் சாட்சி பிரித்து வைக்கப்படுவார்.
இதன் காரணமாக அவருக்கு ஒவ்வொரு நிமிடத் துளியும் ஒருயுகம் போலவே தோன்றும். இந்நிலை அவருக்குள சூனிய உணர்வைத் தோற்றுவிக்கும். வெறுமையைத் தோற்றுவிக்கும். மன உறுதியையும் தன்னம்பிக்கையும் அழிந்துவிடும்.

அதீதிமான பயமுறுத்தல்கள்:

பயங்கரமான சித்திரவதை முறைகளை விபரித்தல். சாட்சியின் மனைவியை கணவனை , குழந்தைகளை, சகோதரர்களை, சித்திரவதை செய்யப்போவதாக பயமுறுத்தல். வேறு யாரையாவது சித்திரவதை செய்யும்போது பார்வையிடச்செய்தல் ஆகியன உளவியல் ரீதியானவையாகும்.

இவை யாவற்றின் பின்பும் சாட்சியானவர் சித்திரவதை செய்யப்படவில்லையென மருத்துவரொருவர் சான்றிதழை வழங்குவார். அல்லது சாட்சி தான் சித்திரவதை செய்யப்படவில்லை என ஒப்பதல்வாக்குமூலமொன்றில் கையொப்பமொன்றை அல்லது விரலடையாளமொன்றை இடவேண்டியிருக்கும்.

மேலே விபரிக்கப்பட்டவை சில அடிப்படையாக அறியப்பட்ட சித்திரவதைகளே! இன்று சித்திரவதை என்பது தொழில் முறையாகவும் கலைநுணுக்கம் நிறைந்ததாகவும் நவீன உபகரணங்கள் பாவிக்கப்படுவதாகவும் மாறியுள்ளது. சித்திரவதை செய்வோர் சித்திரவதைக்குள்ளாகி உயிர் வாழ்பவர்களின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து கைதியை மரணமடையச் செய்யாமல் அதே நேரத்தில் எவ்வளவு கடுமையாகச் சித்திரவதைகளைச் செய்யலாம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இதனையும் விட வேதைனையானது கீழ் வரும் காட்சி.

சித்திரவதைக் கூடம் ஒன்றில் சாட்சி சித்திரவதையால் துவண்டு போயிருக்கிறான். சித்திரவதை செய்வோர் மருத்துவர் ஒருவருடன் வருகின்றனர். கைதியின் மனதில் சிறிது நிம்மதி தோன்றுகிறது. கண்களில் ஆவல் வருகிறது. ஏதோ முறையிட விரும்புகிறான். ஆனால் நடப்பது தலைகீழாக. மருத்துவரின் ஆலோசனையுடன் சித்திரவதை கடுமையாகின்றது. முன்பை விட அவன் அலறல் உயர்கிறது.
ஆய்வுகளின் படி உலகளாவிய ரீதியில் கணிசமான அளவு மருத்துவர்களும் தாதிமார்களும் சித்திரவதைகளில் பங்குகொள்கின்றனர் என அறியப்படுகிறது.

இனி சித்திரவதையின் விளைவுகள் என்னவாக இருக்கின்றன எனக் கவனிப்போம். இவ்விளைவுகள் உடனடியானதாகவோ, நீண்டகால போக்கில் தோன்றுவனவாகவோ இருக்கலாம். இவை சிகிச்சை அளிக்கப்படும் போது உடன் நீங்கி விடுபவையாகவோ உடன் நீங்காது மெதுவாக நீங்குபவையாகவோ இருக்கலாம். சிலவேளைகளில் சித்திரவதையின் விளைவுகள் வாழ்க்கை பூராவும் நிலைத்து விடுகின்றன. ஊடல் அங்கவீனம், இனப்பெருக் ஆற்றல் இழப்பு என்பவற்றை நிரந்தர விளைவுகளாக கருதலாம்.
சாட்சியானவருக்கு அவர் கண்டபடி தாக்கப்பட்டதனால் வெளிப்படையான காயங்கள், இரத்தக்கண்டல்காயங்கள், சிறிய பாரிய எலும்பு முறிவுகள் என்பன ஏற்படலாம். பற்கள் உடைதல் பற்கள் இல்லாது போதல் முழுப் பற்களும் காலப்போக்கில் உதிர்தல் போன்றனவும் அவதானிக்கப்படுகிறது. மூட்டுக்களில் நோ, மூட்டுக்கள் வீங்குதல், நீண்ட தூரம் நடக்கமுடியாமை போன்ற தசை, வன்கூட்டுத் தொகுதிகளுடன் தொடர்புடைய விளைவுகளும் ஏற்படலாம்.
மூச்சுத் திணறவைக்கும் சித்திரவதை முறைகள் காரணமமாக சுவாசக்குழாய் அழர்ச்சி, சுவாசப்பையுள் பக்ரீரியாத்தாக்கம் வயிற்றழர்ச்சி போன்ற நோய்கள் தோன்றும் வாய்ப்புக்கள் உள்ளன.
இது தவிர இழைய வீக்கம், தசைத் தொழிற்பாடு மந்தமடைதல் போன்ற நிலைமைகளும் தோன்றுகின்றன. சித்திரவதைக்குள்ளான அனேகமானவர்கள் இருதயம், சுவாசப்பை, உணவுக்கால்வாய் தொகுதி, மூளை ஆகியவற்றுடன் தொடர்புடைய பாதிப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
உடலியல் ரீதியான சித்திரவதையின் விளைவுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படின் அவற்றிலிருந்து ஓரளவுக்காவது மீள முடியும். ஆயினும் சித்திரவதையினால் அடைந்த உளவியல் பாதிப்பை நீக்குவதற்கு செய்யப்படவேண்டிய சிகிச்சையே உடற்சிகிற்சையைவிடவும் முக்கியமானதாகும்.
சித்திரவதை செய்யப்பட்டவர் தான் மாற்றப்பட்டுவிட்டதாக, தனது அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறார். முன்பு உறுதியானவராகவும் பலமுடையவராகவும் இருந்த அவர் இப்பொழுது உறுதியை இழந்தவராக களைப்படைந்தவராக மாறிவிடுகிறார். சுயமதிப்பீடு அவருக்கு சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. சூழ உள்ளவர்களை நம்ப அஞ்சுகிறார். மன அமைதியை இழந்து போகிறார்.
சித்திரவதைக்குள்ளாகி உயிர்வாழும் அரசியல் கைதிகளின் நிலை மிக மோசமானது. ஏனெனில் இவர்கள் தாம் எதற்காககாகத் துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் என்பவற்றைச் சாதாரண வாழ்க்கையின் துயரங்களை நண்பர் ஒருவருடன் உரையாடி மன அமைதி காண்பது போல உரையாட முடியாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் எந்த அரசியல் சமூக வாழ்க்கை முறைகளை புரட்சிகரமானதாக கருதினார்களோ அவற்றைப் புரிந்து கொள்ளும் திறனுள்ள மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அற்றிருக்கிறார்கள்.
பொதுவாகக் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்பட்டவர்கள் தொடர்ச்சியான தலையிடி, ஞாபகமறதி, உறக்கமின்மை என்பவற்றால் அவதியுறுகிறார்கள்.

நாளும்பொழுதும் இவர்களது உடலும் ஆத்மாவும் அடைகிற வேதைளை உங்களால் உணரமுடிகிறதா?
ஏன் இவர்களின் துயரங்கள் பேசப்படுவதில்லை.
ஏன் இவை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என எவர்க்கும் தோன்றவில்லை.
இருண்ட நிலவறைகளுக்குள் இருந்தும்
அடைக்கப்பட்ட கூடுகளுக்குள் இருந்தும்
அவலக்குரல்கள் உங்களுக்கு கேட்பதில்லையா? பகலில்தான் உலகம் இரைச்சலாக இருக்கிறது.
இரவிலுமா கேட்கவில்லை.
யாவும் உறங்கி வழியும் இரவுகளில் காற்றில் கேட்கிறதே அவலக்குரல்கள்.
யுத்தங்கள் புரிவதில் ஆர்வம் உள்ள அளவுக்கு கொலைகளை சித்திரவதைகளை செய்து இன்பமுறும் அளவுக்கு
இவற்றுக்கு எதிரான மானுட விழுமியங்கள் குறித்த அக்கறை ஏன் தோன்றவில்லை.

டேனிஸ் கவிஞர் ஹெல்வ்டான் றாஸ்முஸ்ஸென்(Danish Poet Halfdan asmussen)
கூறுகிறார்:

“சித்திரவதை என்னைப் பயமுறுத்தாது
இவ்வுடலின் இறுதி வீழ்ச்சியும் என்னைப் பயமுறுத்தாது
சுடுகுழலின் கண்களும்
என்னை மூடி உயர்ந்த சுவர்களும் என்னைப் பயமுறுத்தாது
பூமியை மூடுகிற இரவும்
என்மீது வீசப்பட்ட கடும் வேதனையில் மங்கி வரும் கடைசி நட்சத்திரமும் கூட என்னைப் பயமுறுத்தாது
என்னைப் பயமுறுத்துவது எல்லாம்
எதனைப்பற்றியும் அக்கறையற்ற குருட்டுத்ததனத்துடன்
இரக்கமும் உணர்வுகளும் அற்று அசையும் இவ்வுலகுதான்”


நன்றி : Torture Survivors
-A new group of Patients
By Lone lacobsen & Peter Vesti

26 அக்டோபர், 2007

சித்திரவதைகளும் சித்திரவதைக்குள்ளாகிச் சீவித்திருப்போரும்.

நான் இப்பத்தியை 1996 ம் ஆண்டு சரிநிகரில் எழுதியிருந்தேன். இத்தனை வருடங்களின் பின்பும் இப்பத்தி பேசமுற்பட்ட விடையம் கவனிக்கப் படாததாகவே உள்ளது।
கடந்த 10 வருடங்களாக மேலும் மேலும் முனைப்படைந்து வரும் யுத்தத்தினால் மனிதப்பெறுமானங்கள் சிதைவடைந்துவருகின்றன.
அதிகாரத்தைத் தக்க வைக்க அரசாங்கங்களுக்கும் விடுதலைஅமைப்புக்களுக்கும் என்னவெல்லாம் தேவைப்படுகின்றது என்பதை நாங்கள் நடைமுறைக்கூடாக அறிந்து வருகிறோம். அதிலும் இலங்கையின் அரசாங்கம் தனது அதிகாரத்தைத்தக்க வைக்க எவ்வாறெல்லாம் செயற்படுகிறது என்பதை நாம் இன்று கண்கூடாகக்காண்கிறோம்.
மனித விழுமியங்களையும் சனநாயக உரிமைகளையும் காக்கவும் நடைமுறைப்படுதவும் வேண்டிய அரசுகள் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்கின்றன.
புதிய உலக ஒழுங்கில் சனநாயகத்தின்பெயரால் மனித விழுமியங்களையும் சனநாயக உரிமைகளையும் எப்படிச்சிதைப்பதென அமெரிக்கா உலக நாடுகளுக்குச்சொல்லிக்கொடுத்து வருகிற இந்த வேளையில் புதிய அரசொன்றை உருவாக்க விரும்புகிற உருவாக்கிக்கொண்டிருக்கிற விடுதலை அமைப்புக்களும் அதிகாரத்துக்கு வரவிரும்புகிற புரட்சிகர அமைப்புக்களும் மானுட விழுமியங்களையும் சனநாயக உரிமைகளையும் பேணுகிற கலாசாரம் தங்களுக்குள் வளர்வதை பிரக்ஞையுடன் ஊக்குவிக்க வேண்டும் ;உறுதிசெய்யவேண்டும்.
இல்லையெனில் இன்றைய அரசுகள் செய்வதையே எதிர்காலத்தில் இந்த அமைப்புகளும் அதிகாரத்தைப்பேணச் செய்ய வேண்டியிருக்கும்.
இன்னும் குறிப்பாகச் சொல்வதெனின் உலகில் உள்ள எல்லா விடுதலை அமைப்புகளும் மனிதவிழுமியங்களுக்கும் சனநாயகத்திற்கும் எதிரான கலாசாரத்தை வெவ்வேறு அளவுகளில் கொண்டேயுள்ளன.
ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அமைப்புகளும் “அதிகாரத்தைப் பேணுதல்” என்பதில் ஒரே விதமான இயங்கியலைக் கொண்டிருப்பதை எவ்வாறு விளங்குவது?
இப்பத்தி மேற்குறித்த இயங்கியலுக்குள்ளிருக்கும் ஒரு கலாசாரத்தை- சித்திரவதைக்கலாசாரத்தைப் பற்றிப் பேச முற்படுகிறது.

வாசிப்பு உங்களுடையது!

பாகம்-1


இலங்கையின் சகல சமூகங்களும் பல்வேறு விதமானதும் புதியதுமான நெருக்கடிக்களுக்கு முகம் கொடுக்கின்றன..
இதுவரை காலமும் சிந்திக்காத புதிய வாழ்க்கைப் பரிமாணங்களைப் பற்றிச் சிந்திக்கவும் அவை தரும் பிரச்சினைகளுக்குக் கூட்டாகச் சேர்ந்து முகம் கொடுக்கவும் வேண்டிய தேவைகள் உருவாகி உள்ளன.

நான் இங்கு விபரிக்க போகும் நிலைக்கு நீங்களோ உங்கள் உறவினரோ உங்கள் அயலவரோ ஆளாகி வாழ்தல் கூடும். நீங்கள் இந்நிலைக்கு ஆளாகி இருந்திருப்பின் உங்களுக்குள்ளேயே அமுக்கப்பட்டிருந்த உணர்வுகளை இப்பத்தி கிளறி விடக்கூடும்.

சித்திரவதையையும் சித்திரவதைக்குள்ளாகி வாழ்பவர்களையும் பற்றி இப்பத்தி பேசமுற்படுகிறது.

குடும்ப நிலைகளுக்குள் பாவிக்கப்படும் சித்திரவதை என்னும் பதம் தன் முழு அர்த்தபரிமாணத்தையும் புலப்படுத்துவதில்லை.

சித்திரவதை எவ்வளவு கொடூரமானது என்பதை அதை அனுபவித்தவர்களாலும்கூட விபரிக்க முடிவதில்லை.

சித்திரவதைபற்றி நாங்கள் முதலில் அறியத்தொடங்குவது சமயபுராணக் கதைகளில்தான்.
இவ்வுலகத்தில் தீமைபுரிவோர் நரகலோகத்திற் கொதிக்கும் எண்ணைய்க் கொப்பரைகளில் இடப்பட்டுப் பின் ஈட்டி முனைகளில் சொருகி விடப்படடுச் சித்திரவதை செய்யப்படுவார்களென அக் கதைகள் கூறுகின்றன. இந்துக்களின் சைவ சமய பாடக்கதைகளிற் சமயகுரவரான அப்பர் சமணர்களால் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றித்தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சமணர் அதிகாரமிழந்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றியும் அறியக்கிடைக்கிறது.

இயெசுபிரான் தலையிற் முட்கிரீடம் சூட்டப்பட்டுப் பாரச் சிலுவை சுமத்தப்பட்டுப் பின் அதன்மீதே ஆணிகளால் அறையப்பட்டார் என வேதாகமம் சொல்கிறது.

சித்திரவதை என்னும் எண்ணத்தின் தோற்றுவாய் இச் சமயபுராணக் கதைகள்தானோ என ஐயுற வேண்டியுள்ளது.

மனிதரை மனிதர் சித்திரவதை செய்யும் எண்ணம் எவ்வாறு தோன்றுகிறது என்பது துயரமான வியப்பல்லவா?

மனிதர்களின் பரம்பரை இயலை ஆராயந்த மருத்துவர்கள் ஒரு சில மனிதர்கள் பிறக்கும் போதே கொடூரமான இயல்புகளை வெளிப்படுத்துவதற்குரிய நிறமூர்த்தஅலகுச்சேர்க்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறுகிறார்கள்.

ஆனால் சித்திரவதை எனும் செயல்முனைப்பு , புறநடையான தனிமனித இயல்பினாற் மேற்கொள்ளப்படும் ஒரு சிறுநிகழ்வாகக் கருதப்படமுடியாத ஒன்றாகும்.

ஏனெனில் சித்திரவதை என்பது ஒழுங்குமுறைக்குட்பட்ட செயல்வடிவமாகத் தத்தமது நோக்கங்களை அடைவதற்குரிய ஒரு ஆயதமாக கையாளப்பட்டு வருகிறது.
உலக வரலாற்றில், மத்திய காலத்திற் குறிப்பாக 15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிற் சித்திரவதை மிக அதிகளவில் நடைமுறையில் இருந்துள்ளது. பின் அது படிப்படியாக குறைவடைந்து மீண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகப்பரவலாக இடம் பெறத்தொடங்கி இன்றளவும் நீடித்து வருகின்றது.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய அநாகரிகமான வரலாறு எழுதப்பட்டது. ஜேர்மனிய நாசிகளால் யுதர்கள் மீது புரியப்பட்ட சித்திரவதைகளும் கொலைகளும் உலகின் ஆன்மாவை உலுக்கியதை யார் மறப்பர்?
யுத இனம் அடைந்த அவமானங்களும் ஊனங்களும் மரணங்களும் மனித நாகரீகத்திற்கு எதிரிடையானதாகும். யூத நாவலாசிரியரான லியோன் யுரிஸ் தனது நாவலான “எக்ஸ்சொடொஸ்”-Exodus இல் அவ்வவமானத்தையும் அவலத்தையும் எழுதிச் செல்கிறார்.

இவ்விடத்தில் கீழ்வரும் பந்தியையும் வாசியுங்கள்
With mounting evidence that a shadowy group of former Israeli Defense Force and General Security Service (Shin Bet) Arabic-speaking interrogators were hired by the Pentagon under a classified "carve out" sub-contract to brutally interrogate Iraqi prisoners at Baghdad's Abu Ghraib prison, one only needs to examine the record of abuse of Palestinian and Lebanese prisoners in Israel to understand .....
The Israeli Torture Template
Rape, Feces and Urine-Dipped Cloth Sacks
By WAYNE MADSEN



சித்திரவதை யுத்தத்தின் இணைபிரியாத தோழன் என்பதை நாங்களும் இப்பொழுது உணர்கிறோம். சித்திரவதை யுத்தத்தின் போது மட்டுமல்ல பயன்படுத்தப்படுகிறது.
அரசாங்கங்கள், விடுதலைப் போராட்ட ஸ்தாபனங்கள், பலம் பெற்ற முதலாளிகள் யாவரும் தத்தமது கொள்கைகளுக்கும் இருப்புக்கும் தமது அதிகாரத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர்களைச் சித்திரவகை செய்கிறார்கள்.

பொலீஸ் குற்றவாளிகளிடம் இருந்து உண்மைகளைக் “கறப்பதற்கு”,
புரட்சி செய்பவனை அழித்து விடுவதற்குச் சித்திரவதை செய்கிறது.
விடுதலை இயக்கங்களோ அரசுக்கு ஆதரவானவர்களை, சக விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களை, தனக்குள்ளேயே அதிகாரப்போட்டியாளரை சித்திரவதை செய்கிறது. ஆக சித்திரவதை செய்யும் எண்ணம் எல்லாப் புறத்திலும் வேரூன்றி உள்ளது. சித்த்திரவதையை நீயேன் செய்கிறாய் எனக் கேட்டால் தமக்கு தேவைப்பட்ட ஒரு தகவலைப் பெற அல்லது புரிந்த (புரியாத) குற்றம் ஒன்றை ஒப்புக் கொள்ளவைக்கவே என ஒரு பொலிஸ் அதிகாரி விடையளிப்பான். விடுதலைப்போராளியைக் கேட்டாலோ, தேசத்துரோகம் அல்லது ஸ்தாபனத் துரோகம் அல்லது தலைமைத் துரோகம் பற்றி அறிந்து கொள்ளவே சித்திரவதை செய்தோம் என விறைத்த முகத்துடன் கூறுவான்.
ஆனால் சித்திரவதை உண்மையிலும் எதற்காகச் செய்யப்படுகிறது என்பதற்கான விடை அதுவல்ல.
உலகத்திலுள்ள எல்லாவகையான அதிகார சக்திகளும் தமது இருப்பைப் பேணவே சித்திரவதையைச் செய்கின்றன.
சாதாரண குடும்ப உறவுகளில் தொடங்கி அரசாங்கம்-மக்கள் உறவு வரை இதையே அவதானிக்க முடிகிறது. அதிகார அடிப்படையிலான மனித, சமூக உறவுமுறைகளைப் பேணச் சித்திரவதை உதவுகிறது.
தமிழர்களைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டம் தொடங்கிய பின்னர் சித்திரவதை பற்றிய நிதர்சனமான அறிவு தோன்றத் தொடங்கியது.
விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகள் தேடப்பட்டனர்; சுற்றி வளைக்கப்பட்டனர். இலங்கை இராணுவம் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரியத் தொடங்கியது. இளைஞர்கள் கைது செய்யப்படத்தொடங்கினர்.
மக்கள் நாலாம் மாடி பற்றியும், பனாகொடை சிறைச்சாலைபற்றியும், வெலிகடைச் சிறைச்சாலைபற்றியும், பூசா இராணுவ முகாம்பற்றியும் கேள்விப்படத் தொடங்கினர்.
தாங்கமுடியாத சித்திரவதைகளில் அகப்பட்டு இளைஞர்கள் கதறிய குரல் கேட்டு இன்னும் இளைஞர் போராட்டங்களுக்கு எழுந்தனர்.
ஆனால் காலப்போக்கில் அரச வதைக்கூடங்கள் தந்த அதிர்ச்சியையும் அச்சங்களையும் விட மோசமான அதிர்ச்சியை சந்தித்தோம். இளைஞர்கள் தங்களுக்குள்ளும் ஒருவரையொருவர் சித்திரவதை செய்ய ஆரம்பித்திருந்தனர் என அறிய வந்தபோது மக்கள் மத்தியில் போராட்டத்தின் மானுடப்பெறுமதி பற்றிக் கேள்வி பலமாக எழுந்தது.
இந்தியாவில் தமது பயிற்சி முகாமை அமைத்திருந்த புளொட் இயக்கம் தமது உறுப்பினர்களைச் சித்திரவதை செய்ய சித்திரவதைக் கூடங்களை அமைத்திருந்தமை தெரியவந்தது. தலைமையின் பிழையான போக்குகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அந்தச் சித்திரவதைக் கூடங்களில் எழுந்த அவலக் குரல்கள் கோவிந்தனின் “புதியதோர் உலகம்” நாவலில் பிரதிபலிக்கின்றன.
முன்னணி நிலையில் இருந்த விடுதலைத் தாபனங்களான விடுதலைப் புலிகள், புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் ஆகிய யாவும் ஜனநாயக உறவுகளை மழுங்கடிக்கும் விதத்தில் சித்திரவதை என்பதை ஏதோ ஓரளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டிருந்தன. அதிகாரவெறியும் மிருக குணமும் எங்கள் போராட்டத்துடன் இணைந்து வளர்ந்தது. எவ்வாறெனினும் சித்திரவதை என்பது ஒழுங்கு முறைக்கு உட்பட்ட வடிவமாக கையாளப்படத் தொடங்கியது புளொட்டிற்குப் பிற்பாடு புலிகளாலேயாகும்.
விடுதலைப் புலிகளின் துணுக்காய் இராணுவமுகாம் சித்திரவதைகளுக்கு பிற்காலத்தில் பெயர் பெறத்தொடங்கியது. தம்மை இலங்கை இராணுவத்திற்கு காட்டிக்கொடுக்க முனைந்தவர்கள், தமது சிவில் நிர்வாகம் நிலவிய பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட கிரிமினல் கைதிகள், மாற்றுக் கருத்துக் கொண்ட அரசியல் கைதிகள் ஆகியோரை ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதை செய்யும் போக்கை அவர்கள் கடைப்பிடித்தனர்.
87ம் ஆண்டின் முற்பகுதியில் தலைமறைவு அமைப்பாக செயற்ப்பட்டார்கள் எனும் சந்தேகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றில் இருந்த சில இளைஞர்களை புலிகள் கைது செய்தனர் (இந்திய இராணுவம் வருவதற்கு முன்பு). பலமாதச் சித்திரவதைகளின் பின்பு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் விடுவிக்கப்பட்பவர்கள் சித்திரவதையின் விளைவுகளை சுமந்தே வந்தனர். முகம் உப்பி, உடல் வீங்கி, உடல் மூட்டுக்கள் யாவற்றிலும் நோவை சுமந்தே வந்தனர். வீதியில் செல்லும் வாகனங்கள் யாவும் தம்மை கைது செய்பவர்களை சுமந்து வருவதாக எண்ணிக் கலக்கமுற்றனர்.
வாழ்க்கை அவர்களுக்கு வெறுமையாகத் தோன்றியது.

86ம் ஆண்டு காலப்பகுதி என நினைக்கின்றேன், இலங்கை இராணுவத்தினரால் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுப் பூசா இராணுவ முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பாரிய அரசியற் பணபல முயற்சிகளின் பின் விடுதலை செய்யப்பட்ட இளைஞனொருவன் இராணுவத்தின் சித்திரவதைகளால் பாலுறுப்பில் குறைபாடு உடையவனாக வெளிவந்தான். இக்குறைபாடு காரணமாக அவ்விளைஞன் தான் நேசித்த பெண்ணை பிரிந்ததுடன் அவனுக்கு வாழ்க்கையும் வெறுமையானது. ஆண்மைகுறித்த எமது சமூகக் கருத்துக்கள் இவ்வாறானவர்களை ஆண்கள் எனக் கருதுவதற்கு இடமளிப்பதில்லை. ஆணாதிக்க சமூக மதிப்பீடுகள் அவனுக்கு தாழ்வுச்சிக்கல் தோன்றக் காரணமாகின.
எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நீட்சியுட் பெண்களை பாலியற் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது இராணுவங்களால் பிரக்ஞையுடன் செய்யப்படுமொன்றாகியுள்ளது.

இலங்கை இந்திய இராணுவங்களினால் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் , பாலியல் சித்திரவதைக்குள்ளான ஆண்களை விடவும் மோசமான பாதிப்புக்களுக்கு உட்பட்டனர். கற்பு பற்றி நிலவும் கோட்பாடுகள் இப் பெண்களை இன்னும் சித்திரவதை செய்கின்றன. மேலும் இவ்வாறு அறியப்பட்ட பெண்களை தமது பாலியல் இச்சைக்கும் இலகுவாக பயன்படுத்தக் கூடியவர்களாகக் கருதும் போக்கும் எமது சமூகத்தில் நிலவுகின்றது.
87ம் ஆண்டின் பிற்பகுதியில் எங்கள் பிரதேசமெங்கும் கறையான் புற்றுக்கள் போல இந்திய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன। எனது வீட்டிற்கு தெற்குப் புறமாக நூறு யார் தூரத்தில் இந்திய இராணுவ முகாம் ஒன்று இருந்தது. அங்கிருந்து அவ் விராணுவமுகாம் அகலும் வரை ஒவ்வொரு இரவும் இளைஞர்களின் அவலச்சத்தங்களால் நிரம்பியிருந்ததை எப்படி மறப்போம். கையாலாகாத் துயரம் மனதைப் பற்றிக்கொள்ள மௌனமாக இருந்தோம்.

“ஈரல் கருகியது ;
இரத்தம் வற்றியது.”
என்பார்களே அதுவேதான்.
ஏன் இப்படி நிகழ்ந்தது?
ஏன் இப்படி நிகழ்கிறது??
இனிமேலும் இப்படி நிகழுமோ???

இவ்விடத்தில் கீழ்வரும் பந்தியையும் வாசியுங்கள்

"Unfortunately, there appears to be a culture of police torture and brutality, reinforced by widespread impunity of police officials। While some cases of torture and/or death in custody have been investigated, no one has been prosecuted or punished yet। In May 2005 the Supreme Court acquitted all the defendants of the October 2000 mob killing of 27 Tamil detainees at the Bindunuwewa detention facility. The youngest inmate in the camp was twelve years old at the time of his death. Methods of torture included beatings (with sticks, iron bars or hose), electric shock, suspending individuals by the wrists or feet in contorted positions, burning, genital abuse, and near-drowning. Detainees reported broken bones and other serious injuries as a result of their mistreatment, and during the year several deaths occurred in police custody. "

* International Rehabilitation Council for Torture Victims (IRCT)

நான் அறிந்தவைக்கப்பால் இன்னும் இன்னும் நெஞ்சைப்பிழியும் அனுபவங்கள் உங்களுக்குள் உறைந்து போயிருக்கலாம்। அச்சத்தாலும் புரிந்து கொள்ள மனிதர்கள் இல்லாததாலும் அவை உங்களுக்குள் கிடந்து உங்களை சித்திரவதை செய்யக்கூடும். உங்கள் ஆத்ம உயிர்ப்பை அழித்துக்கொண்டிருக்கக்கூடும். நாங்கள் இவற்றுக்கு எதிரான புதிய வாழ்க்கை நிலைமைகளை -மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இனிச் சித்திரவதை என்பது எவ்வாறு ஒழுங்கு முறைக்குட்பட்ட ஒரு வடிவமாக உள்ளது என்பதைக் கவனிப்போம்।

தொடரும்...
படம் : நன்றி tamilnation.

14 அக்டோபர், 2007

"மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி முதலாளித்துவம்"

சனநாயகம்


அண்மையில் பி.பி.சி யும் மெற்றோ நிறுவனமும் இணைந்து "ஏன் சனநாயகம்?"என்னும் தலைப்பில் பல்வேறு ஆவணத்திரைப்படங்களையும் நேர்காணல்களையும் செய்திருந்தன. இவ்வாறு நேர்காணப்பட்டவர்களுள் பொலிவியாவின் சனாதிபதியான எவொ மொராலெஸ்சும் ஒருவராவார்
எவொ மொராலெஸ் பொலிவியாவின் இந்தியப்பழங்குடி மக்களுக்குள்ளிருந்து வந்த முதலாவது சனாதிபதி. இவர் அய்மாரப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். பொலிவியாவின் கொக்கா பயிரிடும்(coca) விவசாயிகளின் சனநாயக முறையிலான எழுச்சிக்குத் தலைமை தாங்கிய இவர் 2005 ம் ஆண்டு பொலிவியாவின் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
தென்னமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொடூரப்பிடிக்குள் தவித்து வருகின்ற அதேவேளை அதற்கெதிரான முனைப்புக்களையும் கொண்டேயுள்ளன. தென்னமெரிக்காவிலுள்ள பல நாடுகள் (கியூபா, பொலிவியா, நிகரகுவா, பெரு, வெனிசுவெலா) அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கெதிராக எழுந்து நிற்கின்றன. வெனிசுவெலாவிலும் பொலிவியாவிலும் பாராளுமன்றத் தேர்தல்களின் மூலம் தேசிய, சோசலிச எண்ணக்கருக்களைக் கொண்ட கட்சிகள் மக்கள் ஆதரவோடு ஆட்சியைக்கைப்பற்றி உள்ளன. உயர்வர்க்கமும் உள்ளூர் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் அதிகாரத்திலிருந்து கீழிறக்கப்பட்டுள்ளனர் . அமெரிக்காவும் ஐரோப்பாவும் இப்புதிய போக்கை-சோசலிச அரசுகளை ஜனநாயகத்திற்கெதிரானவை எனவும் சர்வாதிகாரமானவை எனவும் கூறுகின்றன.
நடுநிலையாளர்கள் இவ்வரசுகளை ஜனநாயகமானவை எனக் கூறாவிடினும், தென்அமெரிக்காவில் நிகழும் இம்மாற்றத்திற்கான காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடித் தனத்திற்கெதிரான அடித்தட்டு மக்களின் எழுற்சியே என்கின்றனர். வெனிசுவெலாவில் புதிய சோசலிச - சனநாயக அரசு, கல்வி மற்றும் சுகாதார சேவைகளை இலவசமாக்கியுள்ளதுடன் எண்ணை எற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தை மிகப்பெருமளவில் சமூக நல அபிவிருத்தித்திட்டங்களில் முதலிடுவதன் மூலம் அடித்தட்டு மக்களை அசைவியக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்கின்றனர். ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் மற்றும் உயர்குடியினர் சம்பந்தப்பட்ட வரையில் சர்வாதிகாரப்போக்கைக் கடைப்பிடிக்கும் இவ்வரசுகள் பலவேளைகளில் தமக்கெதிரான போராட்டங்களை சனநாயகமற்ற முறையில் ஓடுக்குவதாகவும் குறிப்பிடுகிறார்கள். இவ்வசைவியக்கத்தின் மூலம் வெனிசுவெலாவின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கைத்தரமும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமடைந்துள்ளதாகப் பக்கம் சாராதவர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வுதாரணங்களைப்பின்பற்றி பொலிவியா, நிகரகுவா, பேரு ஆகிய நாடுகளும் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றன. வெனிசுவெலா சர்வதேச நாணயநிதியம் போன்றவொரு நிதியமொன்றை தென்னமெரிக்க நாடுகளுக்கென உருவாக்கவும் முயற்சிக்கிறது.
இப்பின்ணணியில் பொலிவியாவின் புதிய சனாதிபதியின் (எவொ மொராலிஸ்சின்) பேட்டி கவனத்துக்குரியது.
மக்களினுடைய எழுச்சிகளுக்குத் தலைமை தாங்குபவர்களின் கருதியல்களும் நடத்தையும் கவனமாக அவதானிக்கப்பட வேண்டியதொன்றாகும். என்னெனில் இவர்களது கருதியல்களும் நடத்தைகளும் இவர்களால் வழிநடத்தப்படும் அரசுகளிலும் அமைப்புக்களிலும் பிரதிபலிக்கும் . மக்களை வழிநடத்த விரும்புகிற தலைவர்கள் தங்களுடைய கருத்தியல்களை சனநாயக அடிப்படையிலானதாக ஆனால் அடக்குமுறைக்கெதிரான நடத்தைகளாக வெளிப்படுத்தும் போது அவர்களால் பெருமளவான மக்களை அசைவியக்கத்திற்குள்ளாக்க முடிகிறது. அமெரிக்க அசுரனின் காலடியில் நசுங்கிக்கிடக்கும் அந்நாடுகளின் தலைவர்களுக்கு அதுவொரு சவால். வெளியில் நின்று பார்ப்பவர்களுக்கு இதுவொரு படிப்பினை.

எவொ மொறலிஸ் பி.பி.சி இன் பத்திரிகையாளருக்கு வழங்கிய பேட்டியின் தமிழ் வடிவம் :

"மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி முதலாளித்துவம்"
- எவொ மொறாலெஸ்


இவ்வுலகின் மிகச்சிறந்த தலைவராக யாரைக்கருதுகிறீர்கள்?






பிடல் காஸ்ரோ



பயங்கரவாதம் சனநாயகத்தை அழித்து விடுமா?

பயங்கரவாதம் சனநாயகத்தை ஒரு போதும் அழித்து விட முடியாது. எந்தநிலையிலையிலும் தென் அமெரிக்காவில் இது சாத்தியமில்லை.
சனநாயகம் பற்றிய எங்கள் உணர்வுகள் மிகவும் ஆழமானவை. சனநாயகம் என்னும் கட்டமைப்பை நாங்கள் மிகவும் கவனமானமுறையில் அணுகவேண்டும்.
பொலிவியாவில் சுதந்திரமான தேர்தல் முதன் முதலில் 1952ல் வந்தது. அதற்கு முன்னர் பெருமளவான மக்கள் கொல்லப்பட்ட சூழ்நிலையே காணப்பட்டது. சர்வசனவாக்கெடுப்பு என்னும் சனநாயக வடிவம் 2003 இலேதான் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது. இவை யாவும் சனநாயகத்தின் வருகையுடன் சம்பந்தப்பட்டவை. ஆனால் சனநாயகம் என்பது-மிக எளிமைப்படுத்தப்பட்டு - "வாக்களிப்பது" என்பதாக மட்டும் ஆகிவிடக்கூடாது. சனநாயகம் என்பதை அதன் முழுக்கருத்துருவத்துடனும் புரிந்துகொள்ளவேண்டும்.

சனநாயகத்தின் பலவீனமான அம்சங்கள் எவை?

சனநாயகத்தின் மிகப்பெரியகுறைபாடு அதில் பெரும்பான்மை சிறுபான்மை என்கிற பிரிவினை இருப்பதாகும்.பெரும்பாலான சந்தர்ப்பங்களிற் பெரும்பான்மையினரின் முடிவுகளைச் சிறுபான்மையினரால் ஏற்க முடிவதில்லை.
எங்களது கலாசாரத்தில்(இந்தியப்பழங்குடி மக்களிடையே) இப்பிரிவினை இல்லை. மேற்கத்தியர்களே இதனை கொண்டுவந்தார்கள்.
நாங்கள் நடைமுறையிலிருந்து மேலெழுந்துவரும் கொள்கைகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறோம். சிறிய குழுவொன்றின் நலன்களுக்காக நீங்கள் எழுச்சிகொள்வதென்றால் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.

சனநாயகத்தைக்கட்டியெழுப்புவதற்கு சுதந்திரமான தேர்தல்கள் மட்டுமே போதுமானவையா?

இல்லை.
மிகவும் முக்கியமானது என்னவென்றால் அதிகாரம் மக்களிடம் வரவேண்டுமென்பதாகும்.அதிகாரமானது அரசர்கள் பிரபுக்கள் தேவாலையம் எனக்கைமாறி இறுதியில் எண்ணைமுதலாளிகளிடம் வந்துநின்றது.
அதிகாரம் இனித் தங்களைத்தாங்களே ஆழ்கிற மக்களிடம் வரவேண்டும்.

பெண்கள் ஆண்களை விட ஜனநாயகவுணர்வு கொண்டவர்களா?

ஆணும் பெண்ணும் மனிதத்துவம் என்னும் எண்ணக்கருவுள் ஒருவரை ஒருவர் நிரப்புபவர்கள்.
தற்போது இந்தச்சிந்தனை பின்தள்ளப்பட்டுள்ளது.இது மனிதத்துவத்திற்கு எதிர்மறையான முன்னேற்றமாகும்.

சனநாயகம் நல்லதொரு அரசவடிவமா?


ஆம்.
சர்வாதிகாரம் ஒருபோதும் நல்லதல்ல.

சனநாயகத்தின் பலன்களை எவ்வாறு எல்லோரும் அனுபவிக்கமுடியும்?

வளங்களையும் பணத்தையும் நியாயமானமுறையில் எல்லோருக்குமிடையில் பகிர்வதன் மூலமே எல்லோரும் சனநாயகத்தை அனுபவிக்க முடியும். மேலும் சனநாயகத்தில் எல்லோருக்கும் சமமான உரிமைகளும் கடமைகளும் இருக்க வேண்டும். வெறுப்புணர்வும் பாரபட்சம் செலுத்துவதும் நடைமுறையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.குறிப்பாக இந்தியப்பழங்குடி மக்களுக்கெதிரான பாரபட்சம் ஒழிக்கப்படவேண்டும்.

புரட்சியொன்றைத்தொடங்குவதற்கான உங்கள்
தேவையென்ன?


பொலிவியாவில் நாங்கள் எற்கனவே ஒரு
புரட்சியைத் தொடங்கியுள்ளோம்.எங்கள் புரட்சி அமைதியான சனநாயக நடைமுறையினூடான உருவ உள்ளடக்க மாற்றமாகும். முக்கியமானது என்னவெனில் மக்களைத் தங்களது பொருளாதார சமூக அரசியல் கலாசார நிலைமைகளுக்குத் தாங்களே பொறுப்பானவர்களாக மாற்றுவததாகும். இம் மாற்றத்தை சனநாயகக்கட்டமைப்புக்குள்ளேயே வேகமாக அமூல்படுத்தவேண்டியுள்ளது.

சர்வாதிகாரம் ஒருவேளை நல்லதாகவிருக்குமா?

ஒருபோதுமிலை

சனநாயகக்கட்டமைப்பு சூழலியல் மாற்றங்களால் எற்படும் பிரச்சனைகளைத்தீர்க்க உதவுமா?

கட்டாயமாக!.
இந்தியப்பழங்குடிமக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து அமைதியாக வாழ்பவர்கள் மட்டுமல்ல இயற்கையோடும் இணைந்து வாழ்பவர்கள்.எங்களது வாழ்கை முறைமைகளும் சனநாயகம் என்கிற கட்டமைப்பும் ஒன்றிணைவது சூழலியல் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கமுடியும்.
நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்குக்கற்றுக்கொள்ள வேண்டும்। நல்லமுறையில் வாழ்வதென்பது வசதியாக வாழ்வதென அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.வசதியா வாழ்தல் என்பது மறுபுறத்தில் வசதியற்று வாழ்பவர்களையும் உள்ளடக்குகிறது.சமூகமாக நல்லமுறையில் சேர்ந்து வாழ்வதன் மூலம் நாங்கள் சனநாயகத்தை வளப்படுத்தமுடியும்.


தென் அமெரிக்காவில் வாசிக்கத்தெரியாதவர்களை அல்லது அதிகம் வாசிக்காதவர்களை முட்டாள்கள் எனக்கருதுகிறார்கள். வாய்வழியாகக் கையளிக்கப்பட்டு வந்த மரபுகளையும் பெறுமானங்களையும் யாரும் கண்டுகொள்வதில்லை.
நல்ல முறையில் ஒருங்கிணைந்து வாழ்வதில் நாங்கள் எங்கள் கவனத்தைச்செலுத்தினால் அது சூழலியல் பிரச்சனைகளைத்தீர்பதற்குதவியாகவிருக்கும். இதற்கு அடிப்படையாக பொருளாதரக்கட்டமைப்பில் மாற்றங்களை எற்படுத்தவேண்டும்.
முதலாளித்துவம் வாழ்க்கையினதும் மனிதகுலத்தினதும் முதல் எதிரியாகும்.
*******


குறிப்பும் மொழிபெயர்ப்பும்
தேவஅபிரா
14-10-2007

11 அக்டோபர், 2007

நான்கு நகரங்கள்

நகரம் – 1

புகையிலைக்குடிலின் புகையும்
மூசிப்பெய்யும் மாசிப்பனியும் கவியும்
காலையில் இந்நகரத்தில் பிறந்தேன்.
மாடப்புறாக்கள் கிசுகிசுக்கும்
கோபுரக்கோவில்களின் மணியோசை
என்னை எழுப்பியது.
சப்பறச்சிற்பங்களில் முதிர்ந்தேன்.
ஆழங்களும் மாயங்களும்
நிறைந்ததிந்தநகரமென்றிருந்தகாலை
காயங்களும் நிகழ்ந்தன.
தொப்புள்கொடியும்
அறுந்து அவர்கள் செல்லச்செல்ல
“அல்லாவே”
என்ன செய்ததிந்த நகரம்?
இன்றோ
எவருக்கும் தெரியாமல் நடப்பவைகளும்
எல்லோருக்கும் தெரிய நடப்பவைகளும்
நகரத்தின் மடைமைக்குக் கிடைத்த பரிசு!
முன்னொருகாற் புகையிலை வியாபரம் செய்தவிந்நகரம்
ஒடுங்கியவர்களிடம் தோள்த் துண்டைப்பறித்தது
ஓங்கியவர்களிடம் சேவகம் செய்தது.
இந்நகரத்திற்கெனவொரு நதி இருந்திருப்பின்
அப்பாவிகள் துன்பத்தைக்கழுவியிருப்பர்
பாவிகள் சாபங்களைக் கழுவியிருப்பர்
அரசர்கள் வாள்களைக்கழுவியிருப்பர்
மதகுருமார்களின் புனிததீர்த்தமாகவுமது
நகரத்திற்குச் சாந்தியையழித்திருக்கும்.
எதுவுமில்லாதிது ஏனடிமையானது.

இரவையும் உசுப்பி நடந்த மனிதர்கள்
மறைந்து போனபின்
நம்பிக்கை
கைவிடப்பட்ட இராச்சியத்தின்
சிதிலமடைந்த சுவரானது

நகரம்- 2

சூரியன் உதிக்குமிந்த நகரத்தில்
நான் பிறக்கவுமிலை வாழவுமில்லை.
நடந்து கடந்த நாளொன்றில்
கட்டவிழ்ந்து அலையும் படகுகள் வாவியில்,
மானுடம் கையேந்தி அலையும் வீதியில்,
திசையறியாது சீவியம் சிதைந்தது பீதியில்.
எண்ணங்களையும் வார்த்தைகளையும்
ஒருங்கிணைக்கத்தெரியாத கவிஞன்போல்
அழுந்திக்கிடந்தது அந்நகரம்.

நகரம்-3

கோணங்களாகவும் குடாவாகவும்
இந்துமகா ஆழியுள் நெளிந்தது இந்நகரம்
பாறையாகிய முதுகில் மனிதர் வாழ்ந்தனர்
இரவின் தூக்கத்தைக் கடல் மென்றது
இருளின் வனப்பை அலை கொண்டது
மதுவின் சுவையைக் கரை தந்தது.
மனங்கள் மணற்றுகளுள் கரைந்தன.
நம்பிக்கைகளைத் தொங்கவிட்ட மரம்
நூற்றாண்டுகாலப் பூர்வீகக்கதைகளை நம்பியபடி
ஆழியின் மேற்றொங்கியது..
எதற்கும்மடங்காது வீசுகிற காற்றும் வெப்பமும்
மரண வாடையை மறைக்குமென்று
எண்ணுகிறவர்கள்கையில்
அந்நகரம் விழுகின்றபோதெல்லாம்
உப்பும் வெப்பமும் நிறைந்த கண்ணீரோடு மக்கள்
பிணங்களை எரிக்கிறார்கள்; புதைக்கிறார்கள்.
நான்கு மதங்களின் மயானமாகிக் கிடக்கும்
இந்நகரம்.

நகரம்-4

மாயங்கள் குழைந்தன
மின்னொளி இழைந்தது
இரவின்நகரத்தில்.
மாநகரின் நடைபாதை,
நாதியற்றவர்களின் இரவுப்புகலிடம்.
கொத்து ரொட்டிக்காரன் கடை வாசலில் பரதேசி,
பரதேசி வாயில் நகரின்பாடல்.
விழித்தபின்
விற்பதற்கும்
வாங்குவதற்குமான நெரிசலில் பகல்.
காற்றும் வெப்பமும் குமைந்தன.
அரச இயந்திரம் பாடாவதியாகிக் கக்கிய புகையில்
கருத்தது சூரியன்.
சொர்க்கத்தில் உழல்பவர்கள்
கட்டிய பன்சாலைகளில்
நரகத்தில் உழல்பவர்கள் அழுதார்கள்.
முன்னின்ற அலரிமலர்க்கொத்துக்களையோர்கணம் முகர்ந்தேன்.
“பாவம் அவைகள் என்ன செய்யும்”.
நீண்ட காலத்தின் பின்
இதயத்துக்குள் இருந்த நண்பர்களுடன் மதுவருந்திய
அவ்விரவிற் காவற்துறை என்னைக் கடத்திச்சென்றது
நான்கு நகரங்கள் பற்றிய என் கவிதை,
நான்கு வரிகளோடு முடிந்து போகுமென்று அவர்களறிவர்
நீங்கள்?
குண்டுகள் துளைத்த கட்குழியிலிருந்து
உதிர்ந்த கண்கள் அண்ணாந்து பார்க்கின்றன.
யார் பேசினாலும் மௌனம் இருண்மையுடன் கொண்ட உறவு
கலையவில்லை.
நீதியை பேசும் எந்நாக்குமறுமென்று யாருணர்ந்திருந்தார்.

நீடூழி வாழ்கவென் பொன்நகரங்கள்.


தேவ அபிரா
05-10-2007

25 செப்டம்பர், 2007

வசந்தம்

பூமியின் ஆழத்திலிருந்து காதல்
நெடுமரங்களின் வேர்களுட் புகுந்து மேலெழுந்து
வசந்தத் துளிர்களின் நடுவில் மலர்களாகிறது.
வேனிலின் அசைவற்ற மெளனத்தில்,
வெம்மையில்
ஒவ்வொன்றாக விழுகின்றன மலர்கள்.
நிலம் மறைகிறது.
ஏக்கம் கடலில் ஆவியாகி
விசும்பின் உயரத்தில் திரண்டு
விம்மி வெடிக்கிறது துயரமாக.
நெடுமூச்செறிந்து ஆவிபடரும் மண்ணின்
ஆன்மா அடங்குமோ!

துளிகள் சொட்டும் காலையில்
ஒற்றைக் குயிலின்
தீராக் குரலிலும் சிதைகிறது
வசந்தம்.

சித்திரை - 1995

விசாரம்

வேர்களில் பரவி
இலைகள் செறிந்து
நிலவுக்கு நிமிர்ந்த
மரங்களின் கீழே நகர்ந்தது அருவி.
இருண்ட காட்டின் நறுமணமும் கமழ்ந்தது.
நீரலையைத் தழுவும் பாறையை மருவிக்கிடக்கையில்
வாவென இழுத்துத் தேகம் ஆட்டும்
அருவியைக் கேட்டேன்:
"மானிட ஆத்மாக்களின் துயரம் ஊற்றெடுப்பது எங்கிருந்து ...?
கனவின் வண்ணங்களுடன் வரும் இதய ஆழத்தின் குமிழிகள்
பூமியில் உடைவதேன்...?
காலத்தின் மெளனத்தில் புதைந்திருப்பது என்ன...?"
அருவி போய்க் கொண்டிருந்தது.

மார்கழி - 1994

சமூக ஒழுங்கு

நள்ளிரவில் வீடு திரும்பிய அக்காவுக்கு அத்தான் கூறியது:
"இரவில் உலாவுவது பேய்கள் மட்டுமே"

அப்பா நீண்ட புகையிலையின்
நரம்புகளை நீக்கத் தொடங்குகையில்
புன்னகை ஒன்றை அத்தானுக்குப் பரிசளித்தார்.

அம்மா மன நிம்மதியுடன் அடுக்களைக்குப் போனார்.

அப்பா புகையிலைத் துகள்களை சேர்க்கையில்
அக்கா முகம் சுழித்தாள்.
அவளுக்கு புகையிலையின் மணமும் பிடிப்பதில்லை.
"ஒழுங்கான குடும்பத்தில்
யாரெண்டாலும் வீட்டுக்கு இருட்டுக்கு முன்னம் வரவேணும்"
தனது அறிவு தெளிந்த நாளில் இருந்தே
புகைப்பவரான அப்பா சொன்னார்.

"நகரத்தின் இரைச்சல் அடங்குவது;
காற்று மனம் விட்டு மரங்களுடன் பேசுவது;
நட்சத்திரங்கள் விசும்புடன் குழைவது;
ஆத்மாவின் தனிமை கீதம் இழைவது;
யாவும் இரவிலன்றோ?"

அக்காவோ இரவுவானத்தில் கனவுகளை எழுதுபவள்
அக்கா அத்தானிடம் இது பற்றி
அவ்விரவின் காமத்தின் முன்னரோ பின்னரோ
துணிய(க்)கூடுமோ...

தீக்குச்சியை பெட்டியில் உரோஞ்சி
சுருட்டில் பிடித்து
தீ பரவும் முகத்துடன் அப்பா கூறினார்:
"அதிலும் பெண்கள் வீட்டுக்கு வரவேணும்
இருட்டுக்கு முன்னம்"

அப்பாவின் புகையும்
அத்தானின் இரவும் நீள்கின்றன...

மாசி - 1995

(அ)காலத்தின் சொற்கள்

தடிமனும் சளியும் சற்று அதிகமாக இருப்பதாலும்
சமாதான ஒப்பந்தம் முறியப் போவது பற்றித் தன்
மூக்கு நுனி வியர்ப்பதில் இருந்து முன்னுணர்வதாகவும்
என் நண்பன் கூறியதால்
அக்கடைசி இரவை வீணாக்காமல் இருக்க மட்டுமே
நாங்கள் மதுவருந்தப் போனோம்.

அன்றிரவு எந்த இலக்கியவாதியும்
என் நண்பனின் வசவுக்குத் தப்பவில்லை.
இலக்கியத்தின் உச்சாணிக் கொப்பில் நின்று
தன் சளி அவ்வளவையும் காறித் துப்பினான்.

"அட இலக்கியவாதியே
என் கேள்விகளுக்கு நீ மட்டும் பதில் சொன்னால்
இன்னுமொரு போத்தல் மதுவினால்
உச்சாணிக் கொப்புக்கு மேல் உனக்கொரு சொர்க்கம்
உருவாக்கித் தருகிறேன்" - என்றேன்
பொரி கடலையும் பற்களும் நொ¢பட
விழியுருட்டிக் "கேள்" - என்றான்
"இடியும் மின்னலும் மழையும் மிகைபடப் பொழியும்
இரவில் உன் மடியுள் முடங்கும் பிள்ளையின் முகத்தில் தெரிவது...?"
"அச்சம்"
"வீசும் பிரம்பொடு மூசும் குருவின் முன்னே
விதிர்க்கும் சிறுவன் மூக்கில்
உதிர்வது?"
"வியர்வை"
"உன் காலுக்கிடையில் சிக்கிய எறும்பின் வாழ்வு"
"அவலம்"
"மனிதனை மெளனமாக்குவது?"
"மரணம்"
"உச்சாணிக் கொப்பில் இருந்து நீ சொர்க்கத்திற்குப் பாய
இன்னும் ஒரேயொரு கேள்வியே உள்ளது"
"சொல்லிவை மதுவுக்கு"

"உன் எல்லாச் சொற்களும் ஒரேயொரு அர்த்தத்தை மட்டுமே
கொள்ளும் காலம் எது?"

"என்ன!
ஒரு சொல்லுக்குப் பல பொருளும்
பல சொல்லுக்கொரு பொருளும்
உண்டென் மொழியில் - உண்மை
ஆனால் மேற்சொன்ன சொற்களில்
ஒன்றேனும் ஒன்றுக்கும்
எக்காலமும் பொருந்தாதே!
என்னடா!!
முட்டாள் கவிஞன் ஒருவன் தன் புலம்பல் தொகுப்புக்கு
வைத்த தலைப்போ உன் கேள்வி
போடா உன் மதுவும் சொர்க்கமும்!"

இரவு தள்ளாடிப் போக
நாங்கள் கலைந்தோம்.

அதிகாலை என் தொலைபேசி ஒலித்தது
கலங்கித் தழும்பி உடையும் குரலில் நண்பன்:
"எல்லாச் சொற்களும் ஒரேயொரு அர்த்தத்தை மட்டுமே கொண்ட
காலத்தை நேற்றிரவு பெற்றேனப்பா!
நேற்றிரவு
விசேட அதிரடிப்படை என் பிள்ளையை..."

அச்சம் வியர்வை அவலம் மரணம்...

வைகாசி - 1995

23 செப்டம்பர், 2007

அரளிப் பூவும் தரங்காவும்...

மழலையின் விரல்கள் வருடச் சிலிர்க்கும்
மானுட முகம் போல்
மென்சிறு இலைகளின் வசந்த உயிர்ப்பு
ஒளிரும் காலைப் பொழுதில்
உன் காதலின் அழைப்பில்
ஏக்கமுறும் என் இதயம்
உன் செவ்விதழ்களில்
என் காதலைத்தரக் காலம் இல்லையே!
இதய ஆழத்திருந்து எழுந்து
வாழைக்குருத்தென விரியக்
கடும்காற்றில் கிழிந்த கனவுகளோடு
ஆறாத இரணங்களின் பிணமானேன்
அதுவொரு காலம்.
மீண்டும்...
வெண் அரளிப் பூக்களின் கொத்தைப் பறித்தெடுத்தேன்.
பூவிரண்டு தா
பூஜைக்கென்றாய்
மானுடர்க்கே அன்றிப் பூஜைக்கல்ல என்றேன் முகர்ந்தபடி.
செம்மை தீண்டப் பிடிவாதமுடன் சொல்கிறாய் "பூஜைக்கே"
மென்நய மெளனத்தில்
அரளிப்பூவின் விளிம்போரம் படரும்
செம்மையைப் பார்த்தேன் - உதடுகள்.
சூழவுள்ள விழிகளைத் தப்பி
மொழிகளையும் தப்பி
நீ எதையோ தேடுவதை
நான் மட்டும் உணர்வதேன்?
அந்தி மாலையில்
நித்திய கல்யாணிப் பூக்களை
என் முன்றலில் நீயேன் கொய்து கோர்க்கிறாய்?
விலகிச் செல்லும் என் ஆத்மாவின் சுனையில்
ஊற்றின் குமிழியொன்று
எழஎழப் பெரிதாகும் உணர்வில் துடிக்கிறேன்.
தீபாணி தரங்கா
பிரியும் நாளில்
நானும் அழுவேன்.

ஆனி - 1995

மாயச்சுனை

நெஞ்சச் சிறுகுழியின் உள்ளிருந்து பின்னுகிறது ஏக்கம்
என் துயரம் எப்பொழுதும் வாழுமோ
என் கவிதையைப் போலே.
வெறுவான நுனியில் தலைநிமிர்த்திய
புளிய மரத்தின் சிற்றிலையின் அளவேயான என் கனவுகள்
அறைக் காற்றாடியின் அலகுகளில்
கறுப்பாகிப் படிந்துள்ளன.

சில நாட்களின் முன் எழுதிய
என் கவிதை இப்படி இருந்தது:
(ஓர் காதல் கவிதைக்குரிய தொடக்கம் இருப்பதாக
நீங்கள் நம்பத் தொடங்குமுன் வாசியுங்கள்...)

"வெறுமை மெல்ல மெல்ல அழிந்து போனது
மண்ணுடன் புரண்ட அலைகளில் குமுறல் இல்லை.
பெளர்ணமி நிலவோடு
காற்றோ விசும்பின் கதைகள் ஆனது.
தெப்பக்குளத்தில் மெல்லென விழுந்த பூவெனக்காதல்
என்னுள் ஆடுகிறது.
ஆத்மாவினுள் பிறந்து விழிகளில் பரிதவித்து
உன்னைத்தேடி ஏங்குகிறது காதல்
அந்திமாலை வேளைகளில்"
(என்ன
கரைகளை ஈரப்படுத்தும் துயரம் இருக்கவே செய்யும்
என்று உணர்கிறீர்களோ)
உன் ஆத்மாவை மூன்றாம் மனித வார்த்தைகளுக்குள் காணுவது
முடியாதென்பதைப் போலவே
விழியும் விழியுள் ஒளிரும் காதலும்
சாஸ்வதமாயிருக்கும் எனவும்
அது எவ்வார்த்தைகளுக்கும் அஞ்சாதிருக்கும் எனவும்
நான் நம்பேன்
என் காதல் இனியொருமுறை கெஞ்சாது

இளவேனில் காலத்தளிர் போலும் உதடுகளைக் கவ்வி
வசந்தகால ஊர்க்குருவியின்
உயர்வானச் சறுக்கல் போல
காதலின் ஆழியுள் ஓர்நாள் போவேன்.
உன் ஆத்மா எனக்குப் பொய் சொல்லாது என்றால்
இன்னொரு வசந்தத்திற்கு இந்த வேனிலில் வாடியிரு!

நானே என் நெஞ்சத்தில் அகழ்ந்த மாயச்சுனையில்
நீர்மொண்டு அருந்த முயன்று மாய்ந்தேன் என்றால்
நோவதற்கும் நொந்தழுது பாடுதற்கும் பின்
வாழ்வதற்கும் நானேயானேன்.

ஆவணி - 1995

மழையெல்லோரெம்பாவாய்...

இங்கு பொழிகிறது மழை.
அங்கென் மண்ணிலும்
கையேந்தா மனிதரின் கனவுகள்
உலர்ந்த காலத்திலும்
மழையின்றி நிமிராவெப்பயிரிலும்
பெய்யுமோ?
வேரறுந்து விலகிய மனிதரின் விளைநிலம்
சுவடிழந்து அழுகிறது.
தேரசைந்த திருக்கோவிற் கனவுகளை
பாழடைந்த கோபுரம் பாடும் பாடலை
பாடும் கிழவனின் கைத்தடியும்
வழுவி நனையுமோ?
ஊர் முடிந்த வெளியில்
பொன்னிற மாலையில்
மஞ்சள் குளிக்கும்
என் தனியொரு வீடும் வேம்பும் நனையுமோ?

ஏக்கம் மீதுற விண்ணின் துளிகள்
பின்னிப் பெருமழையெனப் பொழிய
என் சகியின் விழிகளை மருவி
இதழ்களைத் தழுவும்
சாளரக் கரையின் சயனத்துடலில்
படுமோ தூவானம்?
மூசிப் பெய்தும்
முழுநிலமும் கரையவோடியும்
பின்னும் பெயரின்றி
ஆழக்கடலில் கலந்து அழியும் மழையே!
தேடிப் பெய் என் தேசத்தை.

ஏங்கித் தளர்ந்து இனிப்புகலேயில்லை
எனத்தளம்பும் மனிதரை,
நெடுமரமடியின் நனையாக் குடிலில் இருத்திப் பின் பெய்.
'இம்மழை,
மண்ணில்
மரத்தில்
மனதிலும் பெய்தது'
என்றுனக்கழியாப் புகழ் தருவேன்.

கார்த்திகை - 1996

16 செப்டம்பர், 2007

முடிந்துபோன ஆண்டு

ஆவணி

தேமா மலரின் திரள்கள்
காற்றிற் கிளர்ந்து கடலின் திரையென உயரத்தாழ
விசையுறும் உள்ளம்.
மாலைப் பொழுது...
ஆழக்கடலின் மோகத்துளிகள் மோதிச்சிதறும் கரையில்
தனியக் கிடந்தேன்.

கடலின் மடியில் நிலவின் தடமும் அழியும் முகிலின் திரளில்.
பின்னிரவில் பேய்க்காற்றிற் பேதலித்தலையும் மரங்கள்.
மென்முலையோடணையா மழலைக்குரலோ அழுகிறது.

புரட்டாதி

அன்றோ
காற்றடங்கிய பகலில் மே மலர்களில் தீ எ¡¢ந்தது.
இன்றோ
ஓங்கார ஓலமிட்டு உலகத்தின் உதிர்வெல்லாம்
அள்ளி வந்தது சோளகம்.
இரவிலோ
நெடிதுயர்ந்த ஆலமரத்தின் கீழ்
நிலவில் பாடும் பைத்தியக்காரனுடன் தனித்திருந்தேன்.

ஐப்பசி

இரவினில் எங்கிருந்தோவரும் இசையுள் மூழ்குதல்...
கனவினுள் அமிழ்ந்து கடலுடன் பேசுதல்...
இல்லையெனில்
கண்ணீர் வழியத்
தேமாமரங்களுடன் தேம்புதல்...

கார்த்திகை

இரவின் மீது இரைகிற காற்றில்
விருட்சங்களின் இலைகள் பேசுகின்றன.
நிலவைத் தழுவ எழும்பும் கடலின் அலைகள்
ஏங்கி விழுகின்றன.

முன் மார்கழி

மானுட ஆன்மாவின் புன்னகையைத் தேடி நடந்த
காலத்திடலின் நடுவில்
புல் தேய்ந்தழிந்த தடமோ நீள்கிறது.
மழையில் நனைந்து
நிலவில் தனித்த பூக்கள் உதிரும்.

நடு மார்கழி

மாரிகால இரவிற் புதைந்து
மண்ணெது விண்ணெது
கடலெது கரையெது
என்றறியா இருளிலும்
ஆழியின் இசையெனத் திரள்வது எதுவோ?

பின் மார்கழி

நீள் தெருவெங்கும் நிராசை சிந்திப் பின்
அதிகாலைக் கடலில் ஆடும் படகில் வாழ்க்கை,
தீராக்காதலைத் தேடி
ஆறாத இன்பமருளும் மாயக் குகையுட் போனதென்றார்.
நாளை நதிமுகக் கலப்பில் இன்பம் நுரைக்கையில்
நறுமலர்ப் பொய்கையின் பொன்தாது கொண்டு வருமென்றார்.

போரும் பொய்மையின் பாதையில் போயழிந்த காலமும்
போற்றிப்பாடும் புலவரைப் பொரிந்து போனதென்றால்
பொய்யாம்!
அச்சமும்
அச்சத்தின் கனவுகளும் பற்றிப்பிடித்தலைக்க
ஆதரவற்ற காலத்தில் அணைந்து கொள்ள
ஆருமற்றுப் போனதடி வாழ்வு.

வாழ்வென்று எவர் சொன்ன வாழ்வும் வாழ்வல்ல
என்றறைகிறது ஆழி.

எல்லாம் மூடிய இருளிலும்
வெள்ளி அலைவீசி விண்ணின் ஒளி வீழ்த்தும்
என் இனிய கடலே!
ஆழத்தின் ஆழத்தில் உறையும்
உன் மெளன வர்மத்தின் துளி பருகி
உயிர் நிறைந்து
உயர்ந்து வரும் என் வாழ்க்கை
என்றுன் கரையில்
மணலின் துகள்கள் எண்ணிக் காத்திருப்பேன்.

மார்கழி - 1996

காதல்

கடலோங்கிக் கரைதழுவப் பார்த்து
உடலுள்ளிருந்து தவித்தெழுந்தாத்மா
மெய்யிறங்கியுன் விழி தேடி வருகிறது.
பொய்யெது மெய்யெது
போதிமாதவச் சிரிப்பெதுவென்றறியா
மென்மயிர்ப் பூனைபோலேங்கி நடந்தவென்னிதயம்
உன்மார்பிலணைகிறது.
முலைதழுவி முன்னெற்றி மயிரொதுக்கி
முத்தமிட்டுன் நறுவுதட்டுச் சாரலையும் தாவென்று தவித்து
ஆண்மையும் பெண்மையும் பெயரழியும்
காலத்துள் போய்வரவாவென்று கேட்பேன்.
கேசம் கலைந்து கிடந்தவுன் கழுத்தில்
புதைந்து புதைந்து
நீலம் படர்ந்த நெடுவான முடிவுக்கும் போவேன்.
மெய்யும் காதலும் ஒன்றென்றுயிர் சுடர்கிறது.

ஆடி - 1997

கவிஞனுடன் மதுவருந்தல்

சிறுமேசை
செந்நிற விரிப்பு
சிம்னி ஒளி இறங்கித் தவழ்கிறது.
பொன்னிறத்தில் நுரைக்கிறது மென்மது.

"குற்றவுணர்வுகளின் குறைந்த பட்ச ஆயுட்காலம் எவ்வளவு?
கோடைப் பொழுதின் குளிர் கள் பருக எத்தனை பேருக்கு அஞ்ச வேண்டியுள்ளது
பெண்களுக்கான ஏக்கத்தில் குறி புடைக்கிறது.
உலர் காற்றில் ஆடும் அவள் உள்ளாடைகளில்
என் காமம் காய்கிறதே!
சட்டைப்பையிற் கனக்கிறது இரவல் காசு
இறந்தவர் நினைவிற் கல்லாகிறது இரவு
நீ ஏன் உரையாடுகிறாய் இல்லை" - அவன் கேட்கிறான்.
"முட்டை வட்டப் பொரியலைத் தின்று தீர்க்காதே
உரையாட வேண்டும் இவ்விரவு முழுவதும்"- சினக்கிறான்.

மதுக்கடை நிறைகிறது
உரையாடல்கள் உயர்கின்றன.

"கருத்தரங்கொன்றில் தேநீர் பரிமாறிய பெண்ணைத்
தன் மடியில் அமரக் கெஞ்சிய கவிஞனைப் பற்றியாவது
பேசுவோமா" என்கிறான்.
"எஞ்சிய மதுவை
ஊற்றிக் கொள்" - என்றேன்.
இன்னும் ஏதேதோ சொல்ல உன்னுகிறான்
என் நட்பார்ந்த கவிஞன்.

எழுந்து வருகிறோம் வெளியே
கடற்காற்றில் போதை வலுக்கிறது.
கரையைப் பிரிந்த கலங்கள் தூரக்கடலில்...
முற்றுப் பெறாத உரையாடலொடு
முடிவுறாத இரவு நீள்கிறது.

வைகாசி - 1998

9 செப்டம்பர், 2007

வனமழிந்த காலம்

மகிழ்ச்சி பூமியை வனமாக மூடியிருந்த காலமொன்றிருந்தது.
வனம் பூமியை மகிழ்ச்சியாக மூடியிருந்த காலமுமதுதான்.
ஆறுகளின் மேனியில்
வனங்கள் கிறங்கிக் கவிந்த காலங்கள்...
துயரம் நிரம்பிய இதயத்தில்
சொற்கள் சிதறுண்ட நேரத்தில்
உருப்பெறாத கவிதைகளுடன் கானகம் புகுந்தனர் கவிஞர்கள்,
அற்புதமான கவிதைகளுடன் திரும்பி வந்தனர்.
நீங்களோ நானோ கண்டிராத அக்காலத்தைத் தேடிப் பயணப்பட்டேன்.
வேரடி மண்ணைப் பிரிய மனமில்லாத பட்ட மரங்களில்
பறவைகள் ஓலமிடுகையில்
பொட்டல் வெளிகளில்
வனமிருந்த பள்ளத்தில் துளிர்விடப் புல்லும் இல்லை.
புழுதியுரிந்து சிவப்பெனப் புயல் எழுகிறது.
காடுகளைத் தூர்த்த காலத்தின் காற்றில் அள்ளுப்படச் சருகுகளும் இல்லை.
அடவியின் இதய நீளத்தில் அரண் செல்கிறது.
துன்பம் நிறைந்த கவிதையின் சொற்களைத் தேடி
உலகத்தின் மிக அற்புதமான கவிஞன்
ஆத்மாவின் உள்ளெங்கும் பயணம் செய்வதைப் போல
இலைகள் அடர்ந்த அடவியைத் தேடிப் பயணம் செய்தேன்.
வனங்களைத் தின்னும் இராணுவம்
அரண்களில் கண்தூங்கிக் காவல் புரிகிறது.
எஞ்சிய மரங்களின் கீழே
முகங்கள் கோணிய மனிதர்கள்
வியர்வையை வழித்தெறிந்து புறுபுறுக்கிறார்கள்.
இன்னும் ஏதோ எஞ்சியிருப்பதாக நீண்ட தொலைவுக்குப் பார்க்கிறார்கள்.
தனித்துச் சிதறிய மரங்களோ
எதைச் சொல்லவல்ல நிலையிலுமில்லை.

ஆனி - 1998

தலைப்பிட முடியாவொரு கவிதை

புரியாமையில் ஒளி இழந்த உன் விழிகளைத் துயரம் படுத்துகிறது.
போர் நிலத்தின் அனுபவத்தில்
இருண்டு போன மனங்களில்
வன்மம் ஒரு பெரும் சுழியாய் எழுகிறது.
நீ போய் வா!
விகாரமான முகங்களுள் உறவுகள்
புதையுண்டு போயின.
வனங்களின் மர்மம் பிடிபடாது
போர் உன்மத்தம் பிடித்து அலைகிறது.
அலை அடங்கிய ஆடாத கடலின் மெளனம்
தேடுவாரற்றுக் கிடக்கிறது.
இலையுதிர்ந்து உணர்வுகளின் சுழிப்பென
கிளைதிரிந்து பாதையெங்கும் தவமியற்றும்
மரங்களில் தளிர்களை எண்ணப் பிடிக்குமோர் காலத்தில்
திரும்பி வா!


கல்லறைக்கு வர்ணம் பூசும் சவக்காலைத் தெருவில்
நான் ஓடிக் கொண்டிருப்பேன்.

ஆடி - 1999

3 செப்டம்பர், 2007

தேடல்

இதயத்துள்ளிருந்து கவிதை வருவதை
ஏதோவொன்று அடைத்துக் கொண்டிருக்கிறது.
அகவெளியின் சஞ்சாரம் அற்றிருக்கிறேன்
பழைய நண்பர்களைச் சந்திக்கையில்
திரி தீண்டிய விளக்கொளி நெஞ்சத்தில்.
ஆத்மாவுக்கருகில் ஒலித்த குரல்கள்
தொலைதூரங்களுக்குச் சிதறுண்டு போனபின்
வாழ்க்கைக்கு மரணம் என்றொரு அர்த்தம் உள்ளதை உணர்கிறேன்.
தனித்து விடப்பட்ட மனிதர்களின் கண்கள் ஒளி மங்கிப் பஞ்சடைந்து வருகின்றன.
துன்பம் பிரபஞ்சமயமாகி வருகிறது.
பெரும் வனங்களும் சரிகின்றன.
வெட்டுக்கட்டைகளின் மீதான வட்டவரிகளில்
காட்டுப்பறவையின் ஏகாந்தம் எஞ்சியுள்ளது.
விடுதலையைப் பாடும் எண்ணுக்கணக்கற்ற கவிஞர்களின்
குரல்களுக்கிடையிலுள்ள இடைவெளியை நிரப்பிச்செல்லும்
சத்தியநதியின் ஊற்று மூலத்தை அடைத்திருப்பது எது?

ஐப்பசி - 1999

இலையுதிர்காலம்

இலையுதிர் காலத்தின் குளிருக்கே நடுங்குகிறாய்...
உன்னையெது இங்கு கொண்டுவந்தது?
காற்றா... கடலா...கனவா
*காட்டமான மதுவின் வெறியா*... கானல் நீரா...?
போடா முட்டாள்!
நெடிதுயர்ந்த மரங்கள்
இலைகளை இழக்கையில் பேசிக்கொண்டவைகளை
காற்றோ அள்ளிச்செல்கிறது.
நீயோ அவற்றையெட்டிப்பிடித்து
கவிதையாக்கலாமென்று
ஓடிக்கொண்டிருக்கிறாய்!

மார்கழி 2000
*-* கலீல் கிப்ரானின் வரி.

நதி

நான் பிறந்தபோது என்னுள்ளொரு நதியும் பிறந்தது.
பருவங்களின் புத்தம்புதுவூற்றுக்கள்
வெடித்துப்பீறிடும் உணர்வுகளில்
ஆழமும் அகலமும் கொண்டென் நதி
அணைகடந்தது.
வாழ்க்கையும் படிமமாகிச் செறிந்தது என்னுள்.
கைகளிலும் மனங்களிலும் இரத்தமும்
வார்த்தைகளில் மாய்மாலமும் நிறைந்த நாட்டில் இப்படியொருநதி என்னுள்!
உலகம் தூங்கும் போது கூட அதனுடன் பேசிக் கொண்டிருப்பேன்.
எத்துணை துயரமான காலங்களைக் கடந்தபோதுமது
என்னிதயச் சொற்களைத் தனதாழத்தின் கவிதையாக்கித் தந்தது.
திணறியதென் நன்றியுணர்வு.
எனக்கே தெரியாதவெனதும் உனதும் ஆழத்தை
அழியாவரமாக்கும் என் வாழ்க்கை என்றுரைத்திருந்தேன்.
எமக்கொரு மகன் பிறந்தபோது இதுவுன் குஞ்சுநதியென்றேன்.
தனக்குள் ஒரு நதியைக் கொண்டிருக்கிற எவரும்
தலைநிமிர்ந்தே வாழ்வர்.
காலத்தின் தடத்தில்
தன்னிதயத்தின் நதி பல்கிப்பெருகுதல் காண்பதே
வாழ்வென்று பாலியாறு சொன்னதே!
ஆனால்
என்தேசவெல்லையைக் கடந்தவன்று
என் நதி நடுங்கியதோ?
விமான இரைச்சலில் இழந்ததுவதன் குரலோ?
நதியைக் கேட்காது பெயர்ந்த கால்களில்
இலையுதிர் காலத்தின் சருகுகள் மோதிப் போயின.
பெயர்ந்து விழுந்தவை போவது காற்றோடுதானா?
பெரும்பனி வீழுமிப் பெரும்வெளியில்
தனித்தவென்னுள்
உறைந்துபோனது என்நதி.


என்றாவது ஒருநாள் "என்னை நீயேன் அகதியாக்கினாய் அப்பா"
என்றென் மகன் கேட்கையில்
இறந்தேபோகும் என்நதி.

மாசி - 2001

நான் எப்பொழுது இறந்தேன்

கனவின் பசிய இலைகள் உரசும்
காலம் நிறையும்
வேரடி மண்ணின் வாழ்வும்
பெயர்ந்தது.
குறுகியது இதயம்
தடக்கின வார்த்தைகள்
உதிர்தலும் குளிர்தலும் தாங்கி
துளிர்க்கும் துணிவைப் பெற்றன மரங்கள் மட்டும்.
காற்றும் மரமும் கலந்து பாட
கையேடும் கோலும் கொண்டு
கவிதை பெற்ற காலம்
கண்முன் சிரிக்கிறது.
ஓவென்றிரைந்த கடல்வழித் தெருவில்
என் காலடியோசை
மறைந்த நாளிலேதான்
நான் இறந்து இருக்க வேண்டும்.
பனியுறையும் இம்முகாமிலல்ல.

வைகாசி - 2002

அறியாததும் உணராததும்

ஒன்றுமறியாக் கன்றெனத் துள்ளும் காலத்தை
பள்ளியில்;
ஒன்றா இரண்டா காதல்
உள்ளச் சலனத்தின் கொதிப்பில் அழிந்த இரவுகளை
பெறுபேற்றுப் புள்ளியில்;
பாடவும் பின் இருந்து பகிரவும் ஆகிய
பன்னெடும் காலத்தோழமை பிரிய
பின்னிரவின் பழுவை
அன்றெழுந்த நிலவில்;
வாழ்க்கையைத்
தாரழிந்து தடம் சிதறிய வழியெங்கும்
உருக்குலைந்தோடும் மனிதரில்;
காணாமல் போனவர்களைக்
காலத்தின் மேனியில் கதியற்றுச் சிதைந்தவர்களைக்
கதையற்றுக் கண்ணீரையும் விழுங்கி
இறுகிய விழிகளில்;
நீதியற்ற காலத்தின் நாசத்தை
போரில்;
போரைப் போய் வெடிக்கும்
பிஞ்சுகளில்;
உணர்ந்துகொண்டேன்

உண்மைகளின் வலியையோ
இப்பெரு வெளியிலே தனித்தபோது உணர்ந்துகொண்டேன்.
இன்னும் அறியாததும் உணராததும் எதேனுமிருக்குமென்றால்

அதுவே...

யாரொடு நோகவென்றும் யார்க்கெடுத்துரைக்கவென்றும்...

புரட்டாதி 2003

2 செப்டம்பர், 2007

வாழ்வில்லாப் போர்!

நினைவறிந்து
நெஞ்சம் கிளர்ந்து
தெரிந்த உலகமோவிது?
வாழ்வு புரிந்து
வலியையுணர்ந்து
யாரடைந்தார் ஞானம்?

புரிந்த போர்..
புரியாப் போர்..
களங்கொண்ட மெளனம்...
கையாலாகாத அமைதி...
கண்தெரியாச் சடுகுடுவாட்டம்...

அதிகாரமும் ஆணவமும் பேசும் வார்த்தைகளின்
உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் யாரறிவர்?

கண்ணீரும் கம்பலையுமாகி
மண்ணள்ளித்திட்டி மார்பிலடித்து
ஓலமிட்டு ஒப்பாரிவைத்தும்மாறாதரணங்களின் மீது
காலாதிகாலமாக இராசதந்திரமும் நடக்கிறது.

கைதொழுதேற்றும் காலடிகள் நீளும்.
கங்கை தின்ற சடையும்
காவி மூடிய தாது கோபுரமும்
கர்த்தரும்
பாங்கொலியும் பகரா விடைகள் மீது
பாவிகளின் கேள்விகள்...

காலத் தடத்திலும் உண்டே கையறு நிலை.

ஊழி கொண்ட ஆழியோ
உன்மத்தமான கோடையோ
அலையுமாயிரம் இலைகளில்
அழியுமிரவின் அமைதியோ
அன்பேயென்று என்னுள் உறங்கும் காதலோ
கூடவறியாத ஆயிரங்கணங்களின் கனத்தை
எப்பாயிரத்திலிறக்கி வைப்பேன்;
எப்போது வாழுவேன்?

ஆடி 2005

சுடுதல்

திருக்கோவில் தெப்பக்குளம் போலவும்
தெருக்கோவிற் பிள்ளையார் போலவும்
சூடு சுறணையற்றிருந்தது வாழ்க்கை.
பால பருவமது
பாலப்பம் பகோடா
தோசை வடை சுடுதல் நடந்தகாலம்

பள்ளிக் காலப் பொல்லாக் காதலோ
தீயினால் சுட்டவடு ஆறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடுவென்றறைந்தது.
பின்
சுட்டமண்;
சுட்டபழம்;
சுடாத பழமுமறிந்தேன்.

தன்வினை தன்னைச்சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடுமென்று
உள்ளுறைந்த போதம் பயம் காட்டும்
அறிவறிந்த காலத்திலும்.

ஆயினும்
சூடடைந்து சுறணை கொண்டதுவாழ்வொருநாள்
சுடுவதற்கான சுதந்திரம்
சுதந்திரத்திற்கான சுடுகள்
எனப்பலபரிமாணங்களிற்
சூடுகளை நானப்பொழுது கேட்கத்தொடங்கினேன்

சுடுதலின் சுகத்தை நானறியேன்
(அறிய விரும்பவும் இல்லை)
சுடப்படும் துயரம் நானறியாவரம் வேண்டும்.
சுடுவதற்கும்
சுடப்படுவதற்கும் இடையில் அகப்பட்ட
ஆயிரம் கணங்கள் அடியேன் தன்வினையைச் சாருமோ?
நானறியேன்!

சுடுபவர்க்குத் தெரியாது
எதைச் சுடுகிறோமென்று!
சுடப்பட்டவர்க்குத் தெரியாது
எது சுடுகிறதென்று!!
சுடச் சொன்னவர்க்குச் சுடப்படுபவைகள் பற்றிக்
கவலைகள் இல்லை!

சுடுவதற்கும்
சுடப்படின் ஆறுவதற்கும்
ஆனதத்துவங்கள் எங்கள் வேர்களுக்குள் உள்ள போது
சுட்டவர்களையும் சூடுபட்டவர்களையும்
சொல்லிப் பெயரிடின் இது
கவிதையல்ல!
சூடுகள் பற்றி எவருமே எதுவுமே
அறியாக் காலமென்றொன்று
இருந்திருக்குமோவென்று
மாய்ந்தேன்

சுடுதல் சூடிக் கொண்ட நாடு!

நல்ல மாட்டுக்கோர் சூடு போதுமென்பார்
நன் மிருகங்களைநலமடித்துச் சூடு வைத்து மேய்த்தவகையில்.

நாமறிந்த மாடுகளைக் கவிதையும் சுடுவதில்லை!

மாடுகள் மனிதர்க்காகி வந்தமைக்கு
மாடுகள் என்னை மன்னிக்க!

ஆவணி 2005

போரின் விலை!

போரின் விலையைப் பற்றி 'நீ ' பேசுகிறாய்!
அமைதியிழந்த இத்தீவில்
நாங்கள் கேட்க வேண்டிய அக்கேள்வியையும்
நீயே கேட்கிறாய்.
நீயே பதிலும் சொல்கிறாய்.

அமைதிக்காக நீ எங்கும் நுளைக்கும் *பாதைகளின்
வரைபடங்கள்* பற்றியும் நாமறிவோம்

அமைதியை ஆக்குமுன் கருத்தியல் தெளிவாகவுள்ளது.
சாக மறுப்பின் கும்பிடு.
கும்பிட மறுப்பின் குறுகு.
குறுக மறுப்பின் குனி.
குனிய மறுப்பின் அடங்கு.
அடங்க மறுப்பின் சா.
அமைதி வரும்!
அடக்குபவர்க்குப் பால் கொடு
அடங்குபவர்க்கு பாய் கொடு
பாலைக் குடித்தவன்
முலையைக் கடிப்பான்
யோனியைத் தின்பான்
சாத்வீகச் சிலைகளின் கீழே சடலங்களும் விரிப்பான்.
போரின் விலையைப்பற்றி எங்களுக்கே விடுகிறாய் சரடு.
போர் மரணத்தின் வார்த்தை
மரணமோ விடுதலையின் வார்த்தையல்ல
அதையும் நாமறிவோம்.

'அமைதி ' உன்னால் எல்லா மொழிகளிலும் அழிந்தவார்த்தை!

அமைதி பொங்கி வெடிக்கிறது
அமைதி கொழுந்துவிட்டெரிகிறது.

ஆடி அடங்கிய ஆழியின் கரையில்
அமைதியின் விலையையும்
நாங்களே தீர்மானிப்போம்!
அதனை
'நீ '
பேசாதே!!!

தை 2006
*-* socalled roadmap.
1 “US wants cost of return to war to be high”
2 “they will face a "stronger, more ca-pable and more determined" Sri Lankan military”
3 “Now you may be asking, why is the American Ambassador using such blunt language at a gathering of the business elite? What has this got to do with our businesses or our interests?" - US Am-bassador to Sri Lanka and Maldives Jef-frey J. Lunstead

போதையும் கவிதையும்

நான் இன்று மது அருந்தினேன்.

நிறைந்த போதையில் கவிஞர்களுக்கு
தள்ளாட மட்டுமே முடியுமென்பீர்களோ?

இவ்விரவில் நிறைவடைந்த
காதலும் காமமும் மட்டுமே
என் வார்த்தைகளுக்குள் சிக்காதவை.
வார்த்தைகளுக்குள்ளவை சிக்குவதும் இல்லை!

வாழ்வின் ஆழம் தெரியாவிடின்
கவிதையாகவது வடிவதில்லை.
கண்ணுக்குத் தெரியும் விம்பங்களைக்
கவிதை நம்புவதுமில்லை.
கடுகிச் செல்லும் உலகின் மொழி
கவிதைகளின்றி வரண்டு போகிறது...
உலகின் துயரத்தைப் பேசும் வார்த்தைகள்
கவனிப்பாரற்றுச் சிதறிக் கிடக்கின்றன...

சிதறாத எண்ணங்களுடன்
என் கையெழுத்தோ தள்ளாடுகிறது.
போதை காற்றானால்
நானுமென்னெழுத்தும் ஏனாடக்கூடாது?

எல்லாவற்றையும் விற்கவும் வாங்கவும்
கற்பிற்கும் உலகில்
எவரும் விற்கவோ வாங்கவோ முடியாதது
நான் போதையில் எழுதிய இக்கவிதை!

மாசி 2006

நகரம்

மர்மங்களின் முடிச்சவிழ்க்கும் பெருந்தாடிக்கிழவனின் கைத்தடிபோல்
அறைச்சுவரில் தொங்கிக் கொண்டிருக்காமல்
நானின்றிறங்கி நகரத் தெருவுள் விழுந்தேன்.

அடர்ந்த கானகம் போலல்லாது
நகரம் எல்லாரையும் பார்த்துப் பல்லிளித்தது.

வாழ்வுச் சட்டியின் வெறுமைக்குள் வரண்டவர்கள்
வர்ணங்களின் மாயத்தில்
அகப்பட்டுச் சுழல்கின்றார்கள்.
உண்டியல்கள் உடைந்த கண்ணில் போதையின் கோணல்...

இரண்டாம் சாமத்தின்
கண்ணாடிச் சாளரத்தினுள்
அடக்க முடியாத விரகத்தில் எரியும் கண்கள் படையெடுக்கின்றன.
நெளிந்து நசிகிறது பெண்மை.

புட்டிகளும் கிண்ணங்களும் வெறுமையாகும் மதுச்சாலைத் தரையில்
நிலக்கடலைக்கோது நரிபடுகிறது
எள்ளிலும் சிறிய எண்ணங்களின் விகசிப்பில்
சொல் விளம்புமோ மது?
செல்லப்பிராணிகள் பற்றியும்
விலையுயர்ந்த காலணியை அணியக் கூடிய விருந்துகள் பற்றியும்
அவர்கள் நற நறக்கும் ஒலியில்
நள்ளிரவுத்தேவாலய மணி அறுந்து போகிறது

சில நூறு ஆண்டுகளின் முன்பு
எமது கிராமங்களில் அள்ளி வந்த
பொற்கழஞ்சுகள் சிதறச் சிதற சீமான்களும் சீமாட்டிகளும் ஆடிய நடனத்தின் ஒலி இன்னும்
அடங்காது திரிகிறது.
நானோ,
கனவுகள் வெடித்த காலக்கிழவியின் நெற்றியெனக் கற்கள் நெருங்கி
புல்லும்கருக மருந்தடித்த இரவுவீதியில்
திமிறிக்கிடந்த வரலாற்று வேர்களில் தடக்கி
புலத்தைப்பாடும் துருக்கிக்காரன் இரவுப்பாட்டில் சில்லறையென விழுந்தேன்.
இலையுதிர் காலத்தின் மழை நகரத்தை மூடுகையில்
விசும்பின் தொன்மையின்கீழ்
நானும் அவனும் தனித்து நடுங்கிக்கொண்டிருந்தோம்...

மாசி 2006

விடுதலை

முன்னோர் விட்டுச்சென்ற கவிதைகளிலன்று
விடுதலையையுணர்ந்தோம்.
இன்று இருண்மையுட் தனித்துப் போனோம்...
அடர்ந்த வனங்களுள்
நடந்தபோதுமில்லாதவுணர்வு.
அற்புதமான கனவுகளுடன் பிள்ளைகள்
பிறக்கிறபோதும்
வாழ்வேனற்பமாகிறது?
இரத்தத்தில் தொட்டெழுதும் அரிச்சுவடி..
எண் சட்டத்தில் தலைகள்..
வாழ்வு சொற்பமாகிறது.
வடக்குகிழக்கைத் திராட்சைத்தோட்டமாக்கி
அரசருந்துகிறது மது.
அதிகாரிகளுக்கோ
போர் புரிகையில் மனம் சமாதானமாயிருக்கிறது.
மக்களுக்கோ கீதையும் மஹாவம்சமும் துணையிருக்கிறது.
பாலைமரக்காலடியின்கண்ணியில்
காலிழந்தது கூழைக்கடா.
கார்த்திகைப்பூக்களின் வெறுமையில்
இறுகியது நதி.
மறுகியது
பல்லாண்டுகாலப்படிவுகளில் நிமிர்ந்த வனம்.
பட்டறிவு புழுதியாகிறது
சிந்தனையின் மடிப்புகளற்ற
மூளைகளுக்குள் யுத்தம்
விளைகிறது.
நாங்களறியா ஆழத்துள் வேரோடிய திமிரில்
போர் கைகொட்டிச்சிரிக்கிறது
புல்லாகிப் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப்
பறவையாய்ப் பாம்பாகி எல்லாமுமாகி
வினை கழிந்தும் பின்
மனிதராய் பிறந்தாரென்றால்
அந்தரிக்கவோ இன்னும் ஐயா?

வாழ்வின் முடிவே மரணம்
பற்றிக்கொள்ளத் தத்துவமல்ல.
விடுதலை,
கவிதைகளிலுமில்லையென்றால்
பிரபஞ்சமுமற்பமாகும்.

ஐப்பசி 2006

நான்கு சாமங்கள்

நகரம் எரிக்கும்
மாய விளக்குகள்தெறிக்கும்
கண்ணாடி அறைக்குள்
நான் நெளிந்தேன்.

இரண்டு சாமங்களின் பின்
வேண்டப்படாத வெப்பத்தின் பிசு பிசுப்பில்
என் ரத்தத்துள் புழுக்கள் நெளிந்தன.

ஆத்மாக்கள் இல்லாது
பெண்களின் மீது விழும் உடல்களின்
கனத்தில் இரவு நசியும் போது
மூன்றாம் சாமத்தில்
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
கை விடப்பட்ட அச்சியந்திரமாகி
மை வடிந்துகிடந்தேன்.

கழிவுக்கூடைக்குள் என் குறியைக் கழற்றி வீசியபின்
ஆடைகளையும் கழுத்துப்பட்டிகளையும் அணிந்து அவர்கள் செல்லுமொலி
என் கபாலத்துட் குடைகிறது.

அறுவடை முடிந்த இரவின்
அரிய கந்தத்திற் கிளர்ந்தவென் காதலும்
முதற் புணர்வுமிந்தநகரத்தில் என்றோ முடிவடைந்தன.

என்னை விற்றவனும் வாங்குபவனும்
விரித்துவைத்த வானத்தின் கீழ்
கருத்தடை மாத்திரைகளும் ஆணுறைகளும்
நிறைந்த குட்டியறைகுள்
நான்காம் சாமத்தில் உறங்கிப்போனேன்.

ஆவணி 2007

பிரபஞ்சநதி

பிரபஞ்சநதியின் கரையில்
உனது மணம் பரந்திருந்தது.

நாடோடிப்பெண்ணின் சுதந்திரமான
கூந்தல் படர்ந்திருந்தது.

யுகங்களின் வெளியை நிரப்பும்
உன் நரம்பு வாத்தியத்தின் இசை போன்ற
உன் கண்களுக்குள்
இரவு மெளனமாக அடங்கிக் கிடந்தது.

நிலவு வனங்களின் மீது படர்ந்த போது
உணர்வுகள் பிரளயமாயின.

வானத்திற்கும்
ஈரித்திருந்த மண்ணுக்குமிடையில்
என் இதயம் மிதந்து சென்றது.

வாழ்க்கை உணரப்பட முடியாத
அதிர்வுகளின் சுருதியாயிற்று.

இருளும் மெளனமும் கலந்துயிர்கொண்டு
சிறுவெண்கூர்களாயிரம் சிறந்திருந்த
வான்நோக்கி எழுந்தன.

யாரும் நடந்திராத நதியின் கரையை
உனது நிர்வாணமும்
உனது வெப்பமும்
வியாபித்தன.

உன் காலடி நீண்டு செல்கிறது

நானோ
நீ விட்டுச் சென்றவொரு
மயிர் முடியிற் சிக்கிக்கிடந்தேன்.

ஆவணி 2007

எனது தேசத்தில் ஏழு நாட்கள்

திங்கட்கிழமை

இரத்தம் மண்ணுள்.
ஓலம் காற்றுள்.
இருண்டநீரின் பெருக்கில் அள்ளுண்டன
கொலையுண்ட பிணங்கள்.
வனங்களுக்கப்பால் பெருவெளியில்
கை விடப்பட்டனர் மக்கள்.

பெரிய அலைகளின் ஓசையில்
இரவு மெளனமாகிறது.
மௌனத்தை உள்வாங்கி மனவெளி எரிகிறது.
மனித ஓலங்களின் அதிர்வெண்ணை
உள்நின்று பீறிடெழும் இரத்தத்தை
உணரும்
ஆத்மாக்களை நாமென்றோவிழந்தோம்.

செவ்வாய்க்கிழமை

மானுடவான்மாவைப் பீடிக்கிற
எல்லாச் சாபங்களும் வலுவோடிருக்கின்றன.
தனிமனித இயலாமை
நெருப்பெரியும் தணலின் மீது கொதிக்கும்
கலசநீர் போலொலிக்கிறது.
கண்ணீரை விடவும் துயரமானவற்றை
விழிகளிற் காண்கிறேன்

புதன்கிழமை

நான் உங்களை நேசிக்கிறேனென்பதை
நீங்கள் உணர
நானென்ன செய்ய வேண்டும்?
கை குலுக்கல்...
தழுவிக்கொள்ளல்...
முத்தமிடல்...
இவ்வையெல்லாமும்...

நடைப்பிணங்களின் மரக்கட்டை
உதடுகளிலும்
விழிகளிலும்
எனது காலை இறந்தது.

வியாழக்கிழமை

இன்னொரு சீவனை அச்சுறுத்தும்
முகமென்னிடமுள்ளதென்றாள்.
என்னுணர்வுகளுக்குள் தோய்ந்தெழுந்த போது
என் மனமும் விகாரமென்றாள்.
கண்ணீர் விடக்கூடிய இதயத்தை
காலமென்னிடமிருந்தும் பறித்து விட்டதென்றாள்.

இருப்பினிற் பயம் கொண்டோமோ
இனியொரு கணத்திற் பிரிவோமென்றறிந்தோமோ
இதயங்களின் இலயம் உடைந்தது.
கணங்களின் வெப்பத்தில்
வார்த்தைகள் ஆவியாகிச் சூல் கொண்டன.
வாழ்வென்னும் முரண்பாட்டிடைவெளியுள்ளவை
மழையாய்ப்பொழிந்தன.

அந்நாளில் அவளும் நீங்கினாள்.

வெள்ளிக்கிழமை

"இதயம் எப்படியெல்லாம் சுடரக்கூடும்?"
முன்னொரு காலம் கனவு கண்டிருந்தேன்.
இன்றோ
மூளை கொதித்து
மனம் கோடைகாலமானது.

சனிக்கிழமை

ஊடுபத்தப்போகுமொரு விளக்குப்போல் நடுங்கும்
இதயத்தைப் பற்றியபடி
நான் மண்டியிட்டேன் வாழ்வின் முன்.
மானுடம் நடந்த பாதைகள் தோறும்
இழுபட்டது போலவும்
எல்லா வகையான அச்சங்களையும் மரணங்களையும்
தரிசித்தது போலவும் உணர்ந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை

ஆதரவற்ற விழிகளோடு
யாவற்றிலும் தனியனாக
காலத்தின் துயரங்களுக்கும்
மௌனச்சாட்சியாக
இருக்கப்பணிக்கப்பட்டேன்.

ஆவணி 2007