பின்பற்றுபவர்கள்

6 டிசம்பர், 2009

மூங்கிலாறே முது நாள் நதியே

மூங்கிலாறே முது நாள் நதியே
மூச்சின்றிக்கிடந்தாயோ

காற்றிலாயிரம் கனல்கள் பறந்தன
சேற்றிலாயிரம் பிணங்கள் நெரிந்தன
காட்டின் ஒரு பிடி கருகிச்சரிந்தது
கண்ணீர் மல்கிக் கரைந்துறைந்தோமே
ஆடிய கால்கள் அடங்கிப்போயின
மோதிய விழிகள் மோட்சமடைந்தன
ஆடாக்கடலில் எதிரி படுத்தான்
ஆடையிழ்ந்து அகதியாகி
கூடாக்கனவில் குறுகிப்போனோம்.

சூழவாயிரம் சதிகள் பிறந்தன
காலநதியின் தடங்கள் சிதைந்தன
மூல வழிகள் தெளியாதிருந்தன
முள்ளிவாய்கால் முகிழாதொழிந்தது
நந்திக்கடலுள் நிணமும் நிறைந்தது
ஈழக் கனவை ஞாலம் மிதிக்க
சோழ விழிகள் சோபையிழந்தன.

வாழத்துளிகள் சேர்க்க நினைத்தோம்
நீள நடக்க நெஞ்சம் கொண்டோம்
ஊழித்தீக்கு உயிர்கள் தந்தோம்
காலக்கணக்கை கோட்டை விட்டோம்
மரணப்படுக்கை வளர்ந்து முடிந்தோம்

மூங்கிலாறே முது நாள் நதியே
மூச்சின்றிக்கிடந்தாயோ

தேர்தல்




எல்லாம்வல்ல அரசன்
என்னுன்னை நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்
உனது வளர்ப்புநாய்கள் அகதிகளின் கிழிந்த உள்ளாடைகளை
தெருநீளம் இழுத்துச்செல்கையில்
முட்கம்பிகளில் உன் சிவப்புத்தோள்ச்சால்வை
கிழிந்து தொங்குகையில்
உன்னது மமதையின் ராசாங்கத்தைக் காண்கிறேன்

இரவு பகலாக மதுவருந்திக்கொண்டு
தம்பிகளுக்கெல்லாம் பகிர்ந்து கொடுக்கிற
இரத்தவிறைச்சி தொங்குமான் தசையல்ல.

இரவுகள் கொடூரமான ஒலிகளை எழுப்பின.
காடுகள் வெந்துதணிந்தன.
சிதறிக்கிடந்த மார்புகளைக்
கைவிடப்பட்ட குழந்தைகள் நன்னின.

கருவையும் கருவறையையும்
கல்லறையையும் நசித்துச்சென்றவுன்குறியையும்
அதன் பிணவெடிலையும்
வேட்டிக்குள் மூடி வைக்கிறாய்.
பின் கமண்டலங்களும் கைத்தடியும்
தாங்கிய முனிவர்களை அனுப்புகிறாய்.
வரம்தர வந்தோமென்கிறாய்.

கமண்டலத்துள் இரத்தம்.
கைத்தடியில் என்பிள்ளைகளின் பிடரிமயிர்.

அழகிய கனவை மூன்று தலைமுறைகள் சுமந்தேன்.
வாழ்வின் ஒரு துளிதான் கண்டேன்.
மரணத்தின் பெருவலி பெற்றேன்.
வடகிழக்கு மூலையில் இன்றோடுங்கிப்போனேன்.

நிசப்தம் ‐அரியவரமுனக்கு ஆடு.
இருண்மை‐துயரங்களின் விளைநிலம் எங்களுக்கு.

தத்துவவாதிகள் தாங்கள் அறிந்த புத்தகங்களுக்கு மேல்
தலைகளை உயர்த்தவில்லை.
வியாபாரிகள் இரத்தத்தை வடிகட்டிய நிலத்தை
பங்குபோடுகிறார்கள்.
எஞ்சிய நிலத்தில் கண்ணிவெடியென்கிறாய்.

எனது பிள்ளைகளோ அழுகிறார்கள்
அவர்களின் முன் நீயோ வாக்குப்பெட்டியை வைக்கிறாய்
போடா! துர்க்குறி!!
ஓங்கியழந்தகாலால் என்பெருநிலத்தையறைந்தவன் நீ!!!
என் பிள்ளைகள்
தமது இரத்தத்தைக்குடிக்கும் எல்லாவரசர்களையும்
அறிந்திருக்கிறார்கள்
என்றேன்றைக்கும்.

தேவ அபிரா
05‐12‐2009
நன்றி Global Tamil News