பின்பற்றுபவர்கள்

2 ஜூன், 2009

மாயையும் யதார்த்தமும்



உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களின் இதயங்கள் கனத்துப் போயுள்ளன! பல்வேறுவிதமான உணர்வலைகளுக்குள்ளும் அவர்கள் சிக்கி உடைந்து போயுள்ளனர். தமிழர்கள் கொடுமையான இழப்பின் துயரினாலும் அவமானத்தினாலும் தலைகுனிந்து நிற்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் இராணுவக் கூட்டமைப்பும் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் சிதைக்கப்பட்டமைக்கான உடனடிக் காரணம் இலங்கை இராணுவத்தின் அதீத பலமே.இதை யாவரும் அறிவர். இந்தப்பலம் வெளியில் இருந்து கிடைத்த உதவிகளினாலேயே ஏற்பட்டதாகும். மேலும் விடுதலைப்பபுலிகளின் உண்மையான பலத்தை அறிந்த கருணாவின் துரோகமும் இதற்கு உதவியது எனலாம். இத்தைகைய பலத்துடன் ஒரு இராணுவம் பாயும் போது அதைத் தடுப்பதற்கு எந்த விடுதலை அமைப்பாலும் முடியாது.

உலக வரலாற்றில் அரசுகள் விடுதலை இயக்கங்களை இதே முறையில் ஒடுக்கி உள்ளதை நாங்கள் இங்கு நினைவிற் கொள்ளலாம்.

பிலிப்பைன்ஸில் NPA இனையும் கொலம்பியாவில் இடது சாரி கொரில்லாக்களையும் அந்தநாட்டு அரசுகள் அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் கணிசமான அளவுக்கு ஒடுக்கியுள்ளன.

கடந்த 30 வருட காலமாக பல்வேறு பரிமாணங்களினூடாக நகர்ந்து வந்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மிக மோசமான முறையில் நசுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நியாயமான அரசியற் கோரிக்கைகள் பதிலளிக்கப்படாது உள்ளன. இவ்வளவு கால இழப்பும் நெருப்பும் சிங்கத்தின் கொடூரமான காலடிக்குள் அவிந்து போய் கிடக்கின்றன.



தமிழர்களின் அரசியல் வரலாற்றில் தோன்றியுள்ள இந்த பாரிய அரசியல் வெற்றிடம் என்னென்ன விளைவுகளைக் கொண்டு வரப்போகிறது என்பது எவருக்கும் தெரியாது.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் இவ்வாறு கொடூரமான முறையில் நசுக்கப்பட்டதற்கு மூல காரணம் சர்வதேசச் சூழ்நிலைகள் தான். இந்து சமூத்திரப் பிராந்தியத்துள் நிலவும் அதிகாரப் போட்டிக்குள் தமிழ் ஈழம் பிரிவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. இந்தியா என்கிற நாசகார பிராந்திய வல்லரசு எமது தலைக்கு மேல் இருக்கும் வரைக்கும் முற்றுமுழுதான சுதந்திர ஈழம் கனவாகவே இருக்கும். வளர்ந்து வரும் சீன வல்லரசு சிங்கள பேரினிவாத அரசை தனது கைக்குள் வரச்செய்வதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறது.

தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளைத் தமிழ்ஈழத்தை அடைவதன் மூலம் மட்டுமே வென்று எடுக்க முடியும் என்ற முடிவில் உறுதியாக நின்றதற்கான விலையை புலிகளும் அவர்களுடன் விரும்பியோ விரும்பாமலோ சக பயணிகளாக இருந்த மக்களும் கொடுத்துள்ளனர்.

எந்த விதமான ஆக்கிரமிப்புக்கும் ஒடுக்கு முறைக்கும் எந்த நிலையிலும் பணிய மாட்டோம் என உறுதியாக நின்று மரணம் அடைந்த ஒவ்வொரு உறுதிப் புலிவீரரினதும் தியாகத்தின் முன் உலகும் சிங்கள சமூகமும் வெட்கித் தலை குனிய வேண்டும்.

தமிழ் ஈழம் என்கிற ஒரே நோக்கில் மட்டும் உறுதியாக இருந்த விடுதலைப் புலிகளின் தலைமை கணக்கெடுக்கத்தவறிய பல முக்கியமான விடையங்கள் அரசியல் தளத்தில் அவர்களின் மீது திரும்பிப் பாய்ந்துள்ளன.

தமிழ் ஈழம் தவிர்ந்த வேறு ஒரு தீர்வை வலியுறுத்தக் கூடிய பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் விடுதலைப்புலிகள் அதனை புறக்கணித்திருந்தனர். தம்மைச் சூழ உள்ள புற அரசியல் சூழ்நிலைகள் பற்றிய சரியான கணிப்பீடு இருந்திருப்பின் இந்தப் புறக்கணிப்புக்களை அவர்கள் செய்திருக்கத் தேவையில்லை.

உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகின்றவர்களுக்கு ஆரதவு தருவதற்கு எவரும் முனைவதில்லை. எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஒடுக்கப்படுகிறவர்களைச் சமரசத்திற்கு நிர்பந்திக்கின்ற சூழ்நிலையே உள்ளது.

இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் தமது நலன்களைப் பேணுவதற்கு விடுதலைப்பலிகள் என்கிற அமைப்பு எந்த வல்லரசுக்கும் தேவையானதாக இருக்கவில்லை. கிழக்குத் தீமோர் மற்றும் கொசோவோ போன்ற நாடுகள் விடுதலை அடைந்ததற்கு அந்த பிராந்தியத்தில் நிலவிய சாதகமான அரசியல் சூழ்நிலைகளே காரணம்.

இலங்கை மோசமான படையெடுப்பொன்றை நடத்தியபோது விடுதலைப் புலிகளின் அழிப்பைத் தடுப்பதற்கு உலக நாடுகள் முன்வரவில்லை. விடுதலைப்புலிகளின் தீவிரமான ஜனநாயக மறுப்பையும் அரசியற் கொலைகளையும் காரணம் காட்டி மக்களைப்பற்றி மட்டும் கவலைப்படுவதாக அறிக்கைகளை விடுவதுடன் ஒதுங்கி நின்று கொண்டது. ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களின் மீதும் உடல்களின் மீதும் இராணுவத்தின் வாகனங்கள் ஏறிச் செல்ல அவர்கள் அலறிய போதும் கண்டு கொள்ளாத உலக நாடுகள் தத்தமது நலன்களை பேணுவதற்காக தற்போது மனித உரிமைமீறல் போர்க்குற்றம் போன்ற விடையங்களை மேற்கொண்டுவர முயற்சிக்கின்றன. இலங்கையின் சீனச்சார்பு நிலை அமெரிக்காவையும் ஜரோப்பாவையும் அச்சத்திற்கும் எரிச்சலுக்கும் உள்ளாக்குகிறது.

இலங்கை அரசு தமிழர்களுக்கான சனநாயக உரிமைகளை மறுத்த போது விடுதலைப் புலிகள் தழிழர்களுக்குள் இருக்க கூடிய மாறுபட்ட கருத்துக்களுக்கு மதிப்பளிக்கத் தவறி இருந்ததுடன் அவற்றைக் கடுமையாக ஒடுக்கியும் வந்துள்ளனர். இது அவர்களைச் சூழ எதிரிகளையே இன்னும் உருவாக்கியிருந்தது. அரசியற் கொலைகள் தூரநோக்கில் எந்த விதமான சாதகமான விளைவுகளையும் தந்திருக்கவில்லை.

அண்மைக் காலங்களில் தமிழ்ச்;சமூக அசைவியக்கத்தில் ஏற்பட்டிருந்த முக்கியமான ஒரு அம்சத்தை விடுதலைப்புலிகள் கணக்கெடுக்கத் தவறி இருந்தனர்.சுய விருப்பிலான மக்களின் போர்ப் பங்கேற்பு வீதம் குறையத் தொடங்கியிருந்ததே அது.

இதனை விடுதலைப் புலிகள் உணர்ந்து மதிப்பளித்திருந்திருப்பின் அவர்கள் இராணுவ ரீதியான வெற்றியில் நம்பிக்கை வைத்திருந்திருக்க மாட்டார்கள். மக்களைப் பலவந்தமாக போரில் பங்கேற்கச் செய்வது மிகப் பாதகமான விளைவுகளையே கொண்டுவரும். புலிகள் கடைசி காலங்களில் மக்களை பலவந்தமாக போரில் பங்கேற்கச் செய்ய முயற்;சித்திருந்தனர்.

மாறிவரும் உலக சூழ்நிலையில் தகவற் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகக் கலாச்சாரத்தை குக்கிராமங்கள் வரையும் கொண்டு வருகிறது. மக்கள் வர்த்;தகமயப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் மக்கள் யுத்தத்தில் தன்னெழுச்சியாகப் பங்கேற்பது சாத்தியமற்றதாகி வருகிறது. விடுதலை அமைப்பொன்று மரபு வழி இராணுவமாக மாற்றம் அடைவதற்கு சுய விருப்பிலான மக்களின் யுத்தப் பங்கேற்பு வீதம் அதிகமாக இருக்க வேண்டும். அது இல்லை என்கிறபோதே விடுதலைப் புலிகள் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். உலகம் பூராகவும் உள்ள தமிழர்களில் மிக பெரும்பான்மையானவர்கள்; தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் இவர்களில் எத்தனை வீதமானவர்கள் சுயவிருப்பின் பேரில் நேரடி யுத்தத்தில் பங்கேற்கத் தயாராக இருந்தனர்?

விடுதலைப் புலிகள் இன்றைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் முடிவை சில ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் பேரம்பேசக்கூடிய நிலையில் இருந்த போதே எடுத்திருக்க முடியும்.



இந்தோனேசியாவின் ஆச்சே மாநில விடுதலைப் போராளிகளும் நேபாளத்தின் இடது சாரி போராளிகளும் மாறி வந்த சர்வதேசச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே சமரசத்திற்கு இறங்கி சென்றார்கள். ஈராக்கில் குர்திஸ்தான் விடுதலைப் போராளிகள் அமெரிக்க ஒடுக்குமுறையுடன் கணிசமான அளவு சமரசங்களுக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் தமது பிராந்தியத்தில் கணிசமான சுயாட்சித் தன்மைகளைப் பெற்றிருந்தனர். நிக்கரகூவாவில் தொடர்ந்த ஆயுத போராட்டம் தேக்க நிலையை அடைந்த போது அவர்களின் தலைவரான டானியல் ஒட்டேகா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததாக கூறி அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்தார்.

மேற்குறித்த உதாரணங்கள் ஒடுக்கப்படுகிற மக்கள் பூரணமான அரசியல் உரிமைகளை வென்றுவிட்டதை குறிக்காவிடினும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தமது முடிவுகளை மாற்றிக்கொண்டதையே குறிக்கின்றன. இது ஒரு வகையில் சமரசம். ஆனால் சர்வதேச சூழ்நிலைகளைச் சரியாக எடைபோடுகிற ஒரு அரசியல் இயக்கம் தனது தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்வது தவறானது அல்ல.

ஒரு சமூகத்தின் இயக்கத்தை தனது கைகளில் எடுத்துக் கொள்கிற தலைமை தானும் தனது அமைப்பும் சமூக இயக்கவியலில் என்னென்ன தாக்கங்களை உண்டு பண்ணுகிறோம் எனவும் சமூக இயக்கவியல் தமது அமைப்புக்குள் என்னென்ன மாற்றங்களைக் கோருகிறது எனவும் நின்று அவதானிக்க வேண்டும்.

முடிவுகள் வெறும் சுயநம்பிக்கையில் புறநிலையான காரணிகளைக் கணக்கெடுக்காது மேற்கொள்ளப்படும் போது மோசமான தோல்விகளையும் சந்திக்கநேரும். தமது முடிவுகளுக்கு அமைப்பும் தலைமையும் மட்டுமல்ல சக பயணிகளாக இருக்கின்ற மக்களும் மிகக் கொடுமையான விலைகளைக் கொடுக்கவேண்டியிருக்கும்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தத்துள் அகப்பட்டுச் சிதைந்த நான்கு லட்சம் மக்களின் இழப்புக்களுக்கும் துயரங்களுக்கும் காட்டுமிராண்டித்தனமான சிங்கள் அரசு மட்டுமல்ல விடுதலைப் போராளிகளான புலிகளும் பதில் சொல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகளின் அழிக்கப்படாத தலைமைகள் மீண்டும் திரண்டு போராட முற்படலாம். அது இனி தொடரப் போகும் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தது. இலங்கை அரசு தனது அரசியலமைப்பை மாற்றிச் சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை உரிமைகளை பாதுகாக்கும் சனநாயகரீதியான நீதி நிர்வாகக் கட்டமைப்புக்களை உருவாக்காத வரை மீண்டும் விடுதலைப்புலிகள் போராடுவதற்கான சூழ்நிலைகள் தோன்றவே செய்யும்.

வடக்கு கிழக்கை கடுமையான இராணுவ பிடியில் தொடர்ந்தும் அரசு வைத்திருக்குமமெனில் மீண்டும் போர் தொடரவே செய்யும்.

ஒடுக்குமுறையாளனையும் ஒடுக்கப்படுகிறவர்களுக்குத் தலைமைதாங்குபவர்களையும் வேறுபடுத்தும் முக்கியமான பண்பு ஒடுக்கப்படுகிற மக்களின் தலைமை தனது மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிப்பதாகும்.

மேலும் விடுதலைப்புலிகளின் நோக்கம் அதிகாரமாற்றமாகும். முழுமையான அதிகாரத்தை அடைவதற்கான போராட்டத்தை அதிகப்பட்ச அதிகாரங்களை அடைவதற்கான போராட்டமாக மாற்றக்கூடிய தந்திரோபாய நிலையை விடுதலைப் புலிகள் எடுத்திருப்பின் அது தமிழினத்திற்குச் செய்யப்ட்ட துரோகமாக கருதப்படதேவையில்லை என்பதை இன்றைய இழப்பு சொல்லி நிற்கிறது.

நடைமுறையில் உள்ள அரசாங்கத்தின் குணாம்சங்களை அவதானிக்கும் போது விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவது சாத்தியமாகவே தோன்றுகிறது. ஆனால் முன்பு இருந்தது போன்ற பேரம் பேசும் நிலைமைக்கு வளரமுடியுமா என்பது கேள்விக்குறி.
வடக்குகிழக்கு பகுதிகளில் வாழ்கிற சகல மக்களும் யுத்தத்தின் கொடூரத்திற்கு பல்வேறுபட்ட காலங்களில் முகம் கொடுத்திருந்தனர். இவர்கள் மீண்டும் யுத்தத்திற்கு தயாராவார்களா?

நாங்கள் அடைந்த தோல்விக்கான காரணங்களை அலசாவிடின் இழப்பில் இருந்து மீண்டு வர முடியாது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் எற்பட்டுள்ள வெற்றிடம் காலகதியில் சூன்யமாக மாறிவிடும்.

ஒரு தலைமை தனது இலட்சியம் எவ்வளவு உன்னதமானதாக இருப்பினும் மக்களின் மீது அதனை திணிக்கமுடியாது. மக்களைத் தொடர்ச்சியான கருத்தாடல்களின் மூலம் சனநாயக வழியில் அணிதிரட்டுவது மெதுவாதாக இருப்பினும் வலிமையானதாக இருக்கும்.

எந்த அரசியற்போராட்டத்திலும் பிம்பங்களைக் கட்டி எழுப்புவதை விட மக்களின் உணர்வுகளை எடைபோடுவதும் அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதும் முக்கியமானது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தற்போது மேலெழுந்து வரும் முக்கியமானதொரு பண்பை இங்கு கவனிக்கலாம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரப்பிடிக்குள் சிக்கிக் கிடக்கும் இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்களை இராணுவரீதியாக அணிதிரட்டுவதை விடுத்து அரசியல்ரீதியாக அணிதிரட்டி பாராளுமன்றத்தினூடாக அதிகாரத்தை கைப்பற்றி மக்கள் நலன் புரியும் அரசுகளை நிறுவும் முயற்சியில் சில தலைவர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

மிகக் கொடூரமான யுத்தத்தில் உயிர்களும் வளங்களும் அழிவதேயன்றி வேறெதுவும் நிகழ்வதில்லை.

இலங்கை அரசு விடுதலைப்புலிகளை வெல்வதற்காக உலக ஒழுங்கில் மிகத் தெளிவான மேற்குலக எதிர்ப்பு நிலையை எடுத்துக் கொண்டது.

இலங்கை அரசாங்கம் பல்லாண்டு காலமாக சிங்கள மக்களின் மனதுக்குள் ஊறி இருக்கும் சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்திற்கு தீனி போடுவதன் மூலம் மிக இலகுவாக எந்தவித சனநாயக மற்றும் பொருளாதாரச் சிந்தனை அற்ற அதிகார அமைப்பொன்றைப் இலங்கையில் பேணமுடியம் எனக் கண்டுகொண்டது. இலங்கை அரசாங்கத்தின் இயங்கியல் சிம்பாவே மற்றும் பர்மா போன்றதொரு அதிகார கலாச்சாரத்தை நோக்கி செல்வதைக் காணமுடிகிறது.

இலங்கையில் பாராளுமன்றப் பாதையினூடாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாதபடிக்கு இலங்கையின் அரசியல் அமைப்பு உள்ளது. ஆனாலும் உலகெங்கிலுமுள்ள ஏனைய விடுதலை இயக்கங்களுக்கு இல்லாத விடுதலைப்புலிகளுக்கு இருந்த சிறப்பான நிலமை என்னவெனில் அவர்களிடம் அன்றிருந்த இராணுவச் சமநிலையும் அதிகளவான பேரம் பேசும் சக்தியும் தான்.

புலிகள் பலமாக இருந்த நிலையில் சர்வதேசத்தின் அனுசரணையுடன் இலங்கை அரசக்கு நிர்பந்தங்களை உருவாக்கும் படியான சூழ்நிலைகளை, அரசியல் அமைப்பை மாற்றக்கூடிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தக்கூடிய தந்திரோபாய நிலையை ஏன் எடுக்கவில்லை?


புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் வழங்காமல் விடுவதுடன் இன்னும் இருக்கிற உரிமைகளையும் பறிக்க கூடிய வலுவான நிலமையை அடைந்துள்ளது.

தமது பிராந்திய நலன்களைப் பேணுவதற்காக ஜரோப்பாவும் அமெரிக்காவும் கொடுக்கப்போகின்ற நிர்ப்பந்தங்களுக்கு இலங்கை அடிபணியப் போவதில்லை. ஏனெனில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள அதிகாரப் போட்டிக்குள் சார்ந்து கொண்டு தனது அதிகாரத்தைப் பேணுவதற்கு இலங்கைக்கு போதுமான அணிகள் உள்ளன.

தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் இயக்கவியல் சரியான முறையில் புரிந்துகொள்ளப்பட்டு கையாளப்பட்டதா என்ற கேள்விக்கு நாம் பதிலைத் தேடவேண்டும். ஏனெனில் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் எதை விரும்பியதோ அதை அடையாமல் எதை விரும்பவில்லையோ அதை அடைந்திருக்கிறது.

பிரபாகரன் மீண்டும் வருவாரானால் அவர் மேற்குறித்த கேள்விக்கான விடையுடனேயே வரவேண்டும். ஏனெனில் மேற்குறித்த கேள்வி மக்களைப் பிரதிநிதிப்படுத்த விரும்புகிற எல்லா தலைமைகளிடமும் கேட்கப்படுகிற கேள்வியாகும்.

நன்றி
global tamil news.

1 கருத்து:

  1. அற்புதமான அலசல்.எந்த விடயத்தையும் துளி விடாமல் அலசியுள்ளீர்கள்.
    உணர்ச்சிபூர்வமாக இதை பேசுவதை விடவும் அறிவு பூர்வமாக சிந்திப்பதே மேற்கொண்டு அடியெடுத்து வைக்க உதவும்.
    ஆனாலும் இலங்கை விடயத்தில் ஒரு மாபெரும் வெற்றிடம் நிலவுவதை யாராலும் மறுக்கவியலாது என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு