பின்பற்றுபவர்கள்

26 அக்டோபர், 2007

சித்திரவதைகளும் சித்திரவதைக்குள்ளாகிச் சீவித்திருப்போரும்.

நான் இப்பத்தியை 1996 ம் ஆண்டு சரிநிகரில் எழுதியிருந்தேன். இத்தனை வருடங்களின் பின்பும் இப்பத்தி பேசமுற்பட்ட விடையம் கவனிக்கப் படாததாகவே உள்ளது।
கடந்த 10 வருடங்களாக மேலும் மேலும் முனைப்படைந்து வரும் யுத்தத்தினால் மனிதப்பெறுமானங்கள் சிதைவடைந்துவருகின்றன.
அதிகாரத்தைத் தக்க வைக்க அரசாங்கங்களுக்கும் விடுதலைஅமைப்புக்களுக்கும் என்னவெல்லாம் தேவைப்படுகின்றது என்பதை நாங்கள் நடைமுறைக்கூடாக அறிந்து வருகிறோம். அதிலும் இலங்கையின் அரசாங்கம் தனது அதிகாரத்தைத்தக்க வைக்க எவ்வாறெல்லாம் செயற்படுகிறது என்பதை நாம் இன்று கண்கூடாகக்காண்கிறோம்.
மனித விழுமியங்களையும் சனநாயக உரிமைகளையும் காக்கவும் நடைமுறைப்படுதவும் வேண்டிய அரசுகள் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்கின்றன.
புதிய உலக ஒழுங்கில் சனநாயகத்தின்பெயரால் மனித விழுமியங்களையும் சனநாயக உரிமைகளையும் எப்படிச்சிதைப்பதென அமெரிக்கா உலக நாடுகளுக்குச்சொல்லிக்கொடுத்து வருகிற இந்த வேளையில் புதிய அரசொன்றை உருவாக்க விரும்புகிற உருவாக்கிக்கொண்டிருக்கிற விடுதலை அமைப்புக்களும் அதிகாரத்துக்கு வரவிரும்புகிற புரட்சிகர அமைப்புக்களும் மானுட விழுமியங்களையும் சனநாயக உரிமைகளையும் பேணுகிற கலாசாரம் தங்களுக்குள் வளர்வதை பிரக்ஞையுடன் ஊக்குவிக்க வேண்டும் ;உறுதிசெய்யவேண்டும்.
இல்லையெனில் இன்றைய அரசுகள் செய்வதையே எதிர்காலத்தில் இந்த அமைப்புகளும் அதிகாரத்தைப்பேணச் செய்ய வேண்டியிருக்கும்.
இன்னும் குறிப்பாகச் சொல்வதெனின் உலகில் உள்ள எல்லா விடுதலை அமைப்புகளும் மனிதவிழுமியங்களுக்கும் சனநாயகத்திற்கும் எதிரான கலாசாரத்தை வெவ்வேறு அளவுகளில் கொண்டேயுள்ளன.
ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அமைப்புகளும் “அதிகாரத்தைப் பேணுதல்” என்பதில் ஒரே விதமான இயங்கியலைக் கொண்டிருப்பதை எவ்வாறு விளங்குவது?
இப்பத்தி மேற்குறித்த இயங்கியலுக்குள்ளிருக்கும் ஒரு கலாசாரத்தை- சித்திரவதைக்கலாசாரத்தைப் பற்றிப் பேச முற்படுகிறது.

வாசிப்பு உங்களுடையது!

பாகம்-1


இலங்கையின் சகல சமூகங்களும் பல்வேறு விதமானதும் புதியதுமான நெருக்கடிக்களுக்கு முகம் கொடுக்கின்றன..
இதுவரை காலமும் சிந்திக்காத புதிய வாழ்க்கைப் பரிமாணங்களைப் பற்றிச் சிந்திக்கவும் அவை தரும் பிரச்சினைகளுக்குக் கூட்டாகச் சேர்ந்து முகம் கொடுக்கவும் வேண்டிய தேவைகள் உருவாகி உள்ளன.

நான் இங்கு விபரிக்க போகும் நிலைக்கு நீங்களோ உங்கள் உறவினரோ உங்கள் அயலவரோ ஆளாகி வாழ்தல் கூடும். நீங்கள் இந்நிலைக்கு ஆளாகி இருந்திருப்பின் உங்களுக்குள்ளேயே அமுக்கப்பட்டிருந்த உணர்வுகளை இப்பத்தி கிளறி விடக்கூடும்.

சித்திரவதையையும் சித்திரவதைக்குள்ளாகி வாழ்பவர்களையும் பற்றி இப்பத்தி பேசமுற்படுகிறது.

குடும்ப நிலைகளுக்குள் பாவிக்கப்படும் சித்திரவதை என்னும் பதம் தன் முழு அர்த்தபரிமாணத்தையும் புலப்படுத்துவதில்லை.

சித்திரவதை எவ்வளவு கொடூரமானது என்பதை அதை அனுபவித்தவர்களாலும்கூட விபரிக்க முடிவதில்லை.

சித்திரவதைபற்றி நாங்கள் முதலில் அறியத்தொடங்குவது சமயபுராணக் கதைகளில்தான்.
இவ்வுலகத்தில் தீமைபுரிவோர் நரகலோகத்திற் கொதிக்கும் எண்ணைய்க் கொப்பரைகளில் இடப்பட்டுப் பின் ஈட்டி முனைகளில் சொருகி விடப்படடுச் சித்திரவதை செய்யப்படுவார்களென அக் கதைகள் கூறுகின்றன. இந்துக்களின் சைவ சமய பாடக்கதைகளிற் சமயகுரவரான அப்பர் சமணர்களால் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றித்தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சமணர் அதிகாரமிழந்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றியும் அறியக்கிடைக்கிறது.

இயெசுபிரான் தலையிற் முட்கிரீடம் சூட்டப்பட்டுப் பாரச் சிலுவை சுமத்தப்பட்டுப் பின் அதன்மீதே ஆணிகளால் அறையப்பட்டார் என வேதாகமம் சொல்கிறது.

சித்திரவதை என்னும் எண்ணத்தின் தோற்றுவாய் இச் சமயபுராணக் கதைகள்தானோ என ஐயுற வேண்டியுள்ளது.

மனிதரை மனிதர் சித்திரவதை செய்யும் எண்ணம் எவ்வாறு தோன்றுகிறது என்பது துயரமான வியப்பல்லவா?

மனிதர்களின் பரம்பரை இயலை ஆராயந்த மருத்துவர்கள் ஒரு சில மனிதர்கள் பிறக்கும் போதே கொடூரமான இயல்புகளை வெளிப்படுத்துவதற்குரிய நிறமூர்த்தஅலகுச்சேர்க்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறுகிறார்கள்.

ஆனால் சித்திரவதை எனும் செயல்முனைப்பு , புறநடையான தனிமனித இயல்பினாற் மேற்கொள்ளப்படும் ஒரு சிறுநிகழ்வாகக் கருதப்படமுடியாத ஒன்றாகும்.

ஏனெனில் சித்திரவதை என்பது ஒழுங்குமுறைக்குட்பட்ட செயல்வடிவமாகத் தத்தமது நோக்கங்களை அடைவதற்குரிய ஒரு ஆயதமாக கையாளப்பட்டு வருகிறது.
உலக வரலாற்றில், மத்திய காலத்திற் குறிப்பாக 15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிற் சித்திரவதை மிக அதிகளவில் நடைமுறையில் இருந்துள்ளது. பின் அது படிப்படியாக குறைவடைந்து மீண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகப்பரவலாக இடம் பெறத்தொடங்கி இன்றளவும் நீடித்து வருகின்றது.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய அநாகரிகமான வரலாறு எழுதப்பட்டது. ஜேர்மனிய நாசிகளால் யுதர்கள் மீது புரியப்பட்ட சித்திரவதைகளும் கொலைகளும் உலகின் ஆன்மாவை உலுக்கியதை யார் மறப்பர்?
யுத இனம் அடைந்த அவமானங்களும் ஊனங்களும் மரணங்களும் மனித நாகரீகத்திற்கு எதிரிடையானதாகும். யூத நாவலாசிரியரான லியோன் யுரிஸ் தனது நாவலான “எக்ஸ்சொடொஸ்”-Exodus இல் அவ்வவமானத்தையும் அவலத்தையும் எழுதிச் செல்கிறார்.

இவ்விடத்தில் கீழ்வரும் பந்தியையும் வாசியுங்கள்
With mounting evidence that a shadowy group of former Israeli Defense Force and General Security Service (Shin Bet) Arabic-speaking interrogators were hired by the Pentagon under a classified "carve out" sub-contract to brutally interrogate Iraqi prisoners at Baghdad's Abu Ghraib prison, one only needs to examine the record of abuse of Palestinian and Lebanese prisoners in Israel to understand .....
The Israeli Torture Template
Rape, Feces and Urine-Dipped Cloth Sacks
By WAYNE MADSEN



சித்திரவதை யுத்தத்தின் இணைபிரியாத தோழன் என்பதை நாங்களும் இப்பொழுது உணர்கிறோம். சித்திரவதை யுத்தத்தின் போது மட்டுமல்ல பயன்படுத்தப்படுகிறது.
அரசாங்கங்கள், விடுதலைப் போராட்ட ஸ்தாபனங்கள், பலம் பெற்ற முதலாளிகள் யாவரும் தத்தமது கொள்கைகளுக்கும் இருப்புக்கும் தமது அதிகாரத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர்களைச் சித்திரவகை செய்கிறார்கள்.

பொலீஸ் குற்றவாளிகளிடம் இருந்து உண்மைகளைக் “கறப்பதற்கு”,
புரட்சி செய்பவனை அழித்து விடுவதற்குச் சித்திரவதை செய்கிறது.
விடுதலை இயக்கங்களோ அரசுக்கு ஆதரவானவர்களை, சக விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களை, தனக்குள்ளேயே அதிகாரப்போட்டியாளரை சித்திரவதை செய்கிறது. ஆக சித்திரவதை செய்யும் எண்ணம் எல்லாப் புறத்திலும் வேரூன்றி உள்ளது. சித்த்திரவதையை நீயேன் செய்கிறாய் எனக் கேட்டால் தமக்கு தேவைப்பட்ட ஒரு தகவலைப் பெற அல்லது புரிந்த (புரியாத) குற்றம் ஒன்றை ஒப்புக் கொள்ளவைக்கவே என ஒரு பொலிஸ் அதிகாரி விடையளிப்பான். விடுதலைப்போராளியைக் கேட்டாலோ, தேசத்துரோகம் அல்லது ஸ்தாபனத் துரோகம் அல்லது தலைமைத் துரோகம் பற்றி அறிந்து கொள்ளவே சித்திரவதை செய்தோம் என விறைத்த முகத்துடன் கூறுவான்.
ஆனால் சித்திரவதை உண்மையிலும் எதற்காகச் செய்யப்படுகிறது என்பதற்கான விடை அதுவல்ல.
உலகத்திலுள்ள எல்லாவகையான அதிகார சக்திகளும் தமது இருப்பைப் பேணவே சித்திரவதையைச் செய்கின்றன.
சாதாரண குடும்ப உறவுகளில் தொடங்கி அரசாங்கம்-மக்கள் உறவு வரை இதையே அவதானிக்க முடிகிறது. அதிகார அடிப்படையிலான மனித, சமூக உறவுமுறைகளைப் பேணச் சித்திரவதை உதவுகிறது.
தமிழர்களைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டம் தொடங்கிய பின்னர் சித்திரவதை பற்றிய நிதர்சனமான அறிவு தோன்றத் தொடங்கியது.
விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகள் தேடப்பட்டனர்; சுற்றி வளைக்கப்பட்டனர். இலங்கை இராணுவம் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரியத் தொடங்கியது. இளைஞர்கள் கைது செய்யப்படத்தொடங்கினர்.
மக்கள் நாலாம் மாடி பற்றியும், பனாகொடை சிறைச்சாலைபற்றியும், வெலிகடைச் சிறைச்சாலைபற்றியும், பூசா இராணுவ முகாம்பற்றியும் கேள்விப்படத் தொடங்கினர்.
தாங்கமுடியாத சித்திரவதைகளில் அகப்பட்டு இளைஞர்கள் கதறிய குரல் கேட்டு இன்னும் இளைஞர் போராட்டங்களுக்கு எழுந்தனர்.
ஆனால் காலப்போக்கில் அரச வதைக்கூடங்கள் தந்த அதிர்ச்சியையும் அச்சங்களையும் விட மோசமான அதிர்ச்சியை சந்தித்தோம். இளைஞர்கள் தங்களுக்குள்ளும் ஒருவரையொருவர் சித்திரவதை செய்ய ஆரம்பித்திருந்தனர் என அறிய வந்தபோது மக்கள் மத்தியில் போராட்டத்தின் மானுடப்பெறுமதி பற்றிக் கேள்வி பலமாக எழுந்தது.
இந்தியாவில் தமது பயிற்சி முகாமை அமைத்திருந்த புளொட் இயக்கம் தமது உறுப்பினர்களைச் சித்திரவதை செய்ய சித்திரவதைக் கூடங்களை அமைத்திருந்தமை தெரியவந்தது. தலைமையின் பிழையான போக்குகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அந்தச் சித்திரவதைக் கூடங்களில் எழுந்த அவலக் குரல்கள் கோவிந்தனின் “புதியதோர் உலகம்” நாவலில் பிரதிபலிக்கின்றன.
முன்னணி நிலையில் இருந்த விடுதலைத் தாபனங்களான விடுதலைப் புலிகள், புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் ஆகிய யாவும் ஜனநாயக உறவுகளை மழுங்கடிக்கும் விதத்தில் சித்திரவதை என்பதை ஏதோ ஓரளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டிருந்தன. அதிகாரவெறியும் மிருக குணமும் எங்கள் போராட்டத்துடன் இணைந்து வளர்ந்தது. எவ்வாறெனினும் சித்திரவதை என்பது ஒழுங்கு முறைக்கு உட்பட்ட வடிவமாக கையாளப்படத் தொடங்கியது புளொட்டிற்குப் பிற்பாடு புலிகளாலேயாகும்.
விடுதலைப் புலிகளின் துணுக்காய் இராணுவமுகாம் சித்திரவதைகளுக்கு பிற்காலத்தில் பெயர் பெறத்தொடங்கியது. தம்மை இலங்கை இராணுவத்திற்கு காட்டிக்கொடுக்க முனைந்தவர்கள், தமது சிவில் நிர்வாகம் நிலவிய பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட கிரிமினல் கைதிகள், மாற்றுக் கருத்துக் கொண்ட அரசியல் கைதிகள் ஆகியோரை ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதை செய்யும் போக்கை அவர்கள் கடைப்பிடித்தனர்.
87ம் ஆண்டின் முற்பகுதியில் தலைமறைவு அமைப்பாக செயற்ப்பட்டார்கள் எனும் சந்தேகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றில் இருந்த சில இளைஞர்களை புலிகள் கைது செய்தனர் (இந்திய இராணுவம் வருவதற்கு முன்பு). பலமாதச் சித்திரவதைகளின் பின்பு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் விடுவிக்கப்பட்பவர்கள் சித்திரவதையின் விளைவுகளை சுமந்தே வந்தனர். முகம் உப்பி, உடல் வீங்கி, உடல் மூட்டுக்கள் யாவற்றிலும் நோவை சுமந்தே வந்தனர். வீதியில் செல்லும் வாகனங்கள் யாவும் தம்மை கைது செய்பவர்களை சுமந்து வருவதாக எண்ணிக் கலக்கமுற்றனர்.
வாழ்க்கை அவர்களுக்கு வெறுமையாகத் தோன்றியது.

86ம் ஆண்டு காலப்பகுதி என நினைக்கின்றேன், இலங்கை இராணுவத்தினரால் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுப் பூசா இராணுவ முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பாரிய அரசியற் பணபல முயற்சிகளின் பின் விடுதலை செய்யப்பட்ட இளைஞனொருவன் இராணுவத்தின் சித்திரவதைகளால் பாலுறுப்பில் குறைபாடு உடையவனாக வெளிவந்தான். இக்குறைபாடு காரணமாக அவ்விளைஞன் தான் நேசித்த பெண்ணை பிரிந்ததுடன் அவனுக்கு வாழ்க்கையும் வெறுமையானது. ஆண்மைகுறித்த எமது சமூகக் கருத்துக்கள் இவ்வாறானவர்களை ஆண்கள் எனக் கருதுவதற்கு இடமளிப்பதில்லை. ஆணாதிக்க சமூக மதிப்பீடுகள் அவனுக்கு தாழ்வுச்சிக்கல் தோன்றக் காரணமாகின.
எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நீட்சியுட் பெண்களை பாலியற் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது இராணுவங்களால் பிரக்ஞையுடன் செய்யப்படுமொன்றாகியுள்ளது.

இலங்கை இந்திய இராணுவங்களினால் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் , பாலியல் சித்திரவதைக்குள்ளான ஆண்களை விடவும் மோசமான பாதிப்புக்களுக்கு உட்பட்டனர். கற்பு பற்றி நிலவும் கோட்பாடுகள் இப் பெண்களை இன்னும் சித்திரவதை செய்கின்றன. மேலும் இவ்வாறு அறியப்பட்ட பெண்களை தமது பாலியல் இச்சைக்கும் இலகுவாக பயன்படுத்தக் கூடியவர்களாகக் கருதும் போக்கும் எமது சமூகத்தில் நிலவுகின்றது.
87ம் ஆண்டின் பிற்பகுதியில் எங்கள் பிரதேசமெங்கும் கறையான் புற்றுக்கள் போல இந்திய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன। எனது வீட்டிற்கு தெற்குப் புறமாக நூறு யார் தூரத்தில் இந்திய இராணுவ முகாம் ஒன்று இருந்தது. அங்கிருந்து அவ் விராணுவமுகாம் அகலும் வரை ஒவ்வொரு இரவும் இளைஞர்களின் அவலச்சத்தங்களால் நிரம்பியிருந்ததை எப்படி மறப்போம். கையாலாகாத் துயரம் மனதைப் பற்றிக்கொள்ள மௌனமாக இருந்தோம்.

“ஈரல் கருகியது ;
இரத்தம் வற்றியது.”
என்பார்களே அதுவேதான்.
ஏன் இப்படி நிகழ்ந்தது?
ஏன் இப்படி நிகழ்கிறது??
இனிமேலும் இப்படி நிகழுமோ???

இவ்விடத்தில் கீழ்வரும் பந்தியையும் வாசியுங்கள்

"Unfortunately, there appears to be a culture of police torture and brutality, reinforced by widespread impunity of police officials। While some cases of torture and/or death in custody have been investigated, no one has been prosecuted or punished yet। In May 2005 the Supreme Court acquitted all the defendants of the October 2000 mob killing of 27 Tamil detainees at the Bindunuwewa detention facility. The youngest inmate in the camp was twelve years old at the time of his death. Methods of torture included beatings (with sticks, iron bars or hose), electric shock, suspending individuals by the wrists or feet in contorted positions, burning, genital abuse, and near-drowning. Detainees reported broken bones and other serious injuries as a result of their mistreatment, and during the year several deaths occurred in police custody. "

* International Rehabilitation Council for Torture Victims (IRCT)

நான் அறிந்தவைக்கப்பால் இன்னும் இன்னும் நெஞ்சைப்பிழியும் அனுபவங்கள் உங்களுக்குள் உறைந்து போயிருக்கலாம்। அச்சத்தாலும் புரிந்து கொள்ள மனிதர்கள் இல்லாததாலும் அவை உங்களுக்குள் கிடந்து உங்களை சித்திரவதை செய்யக்கூடும். உங்கள் ஆத்ம உயிர்ப்பை அழித்துக்கொண்டிருக்கக்கூடும். நாங்கள் இவற்றுக்கு எதிரான புதிய வாழ்க்கை நிலைமைகளை -மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இனிச் சித்திரவதை என்பது எவ்வாறு ஒழுங்கு முறைக்குட்பட்ட ஒரு வடிவமாக உள்ளது என்பதைக் கவனிப்போம்।

தொடரும்...
படம் : நன்றி tamilnation.

2 கருத்துகள்:

  1. படையினரின் சித்திரவதைக் கொடுமை இலங்கையில் சர்வ சாதாரணமாகிவிட்டது ஐ.நா. விசேட இணைப்பாளர் சாடுகிறார்

    [Tuesday October 30 2007 06:15:14 AM GMT] [யாழினி]


    இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய அளவில் கொடூரங்களை, சித்திரவதைகளைப் புரிந்துவருகின்றனர். அங்கு அவை சர்வசாதாரணமாகி வழமையாகி வருகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு இலங்கை அரசு உடனடியாகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.


    ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸிலின் சித்திரவதைகள் கண்காணிப்புக்கான விசேட இணைப்பாளர் மான்பிறெட் நொவாக் நேற்று விடுத்த அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

    விசேட இணைப்பாளர் மான்பிறெட் இம்மாதம் இரண்டாம் திகதி தொடக்கம் இலங்கையில் ஒருவாரகாலம் தங்கியிருந்து அங்கு நடைபெறும் சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகளை விசாரித்து ஆராய்ந்தார்.

    தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில், இலங்கைப் பாதுகாப்புப் படைகள் கொடூரமான சித்திரவதைகளில் ஈடுபடுகின்றார்கள் என்று அவர் தமது அறிக்கையில் சாடியுள்ளார்.

    அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் சில வருமாறு:

    தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் மற்றும் உத்தியோக பூர்வ அமைப்புகளுக்கும் கிடைத்த சித்திரவதைக் கொடுமைகள் பற்றிய முறைப்பாடுகளை அவதானித்தால், இலங்கையில், தடுப்பாரின்றி மிகத் தாராளமாகச் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெளிவாகப் புலனாகிறது.

    விடுதலைப் புலிகளுடன் அரசு நீண்டகாலமாகப் போரை நடத்திவருவதால் அரசு முகங்கொடுக்கும் சவால்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும் பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்திற்கு (ரி.ஐ.டி.) எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணைகளை மேற்கொள்வது அவசியம்.

    தடுத்துவைக்கப்பட்டிருப்போருக்கு எதிரான சித்திரவதைகளையும் கொடுமைப்படுத்தல்களையும் விசõரிப்பதற்கு உடனடியாக விசேட நீதிமன்றங்கள் நிறுவப்படவேண்டும்.

    தூக்குத்தண்டனை வழங்கும் முறை நிறுத்தப்படவேண்டும். அவை ஆயுள் தண்டனையாக மாற்றப்படவேண்டும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் சித்திரவதைகள் வழமையாகிவருகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாநவம்பர் 22, 2007 12:23 PM

    பெற்றோல் பொதிக்குள் முகம்- கண்ணில் மிளகாய்த் தூள்- விரல் நுனியில் ஆணி- குதிக்காலில் பிரம்படி: மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேர்ந்த அவலம்

    [Thursday November 22 2007 04:01:58 AM GMT] [யாழினி]


    சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்படும் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்ளும் சித்திரவதைக் கொடூரங்கள் குறித்து மட்டக்களப்பு தமிழ் அரசியல் கைதி ஜெயக்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.


    மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் என்ற அரசியல் கைதி மிகுந்த சிரமங்களுக்கும் அச்சுறுத்ததல்களுக்கும் மத்தியில் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் ஒலிபரப்பாகும் செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணல்:

    மட்டக்களப்பு சிறைச்சாலையில் 38 ஆண்களும் இரண்டு பெண்களுமாக மொத்தம் 40 தமிழ் அரசியல் கைதிகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் நாட்டின் பிறபகுதிகளிலும் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவந்து அடைக்கப்பட்டுள்ளனர். வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்ததனால் அங்கிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    நாங்கள் அனைவரும் காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களாகவே இருக்கின்றோம். எங்களில் பலர் வீதியில் சென்றுகொண்டிருந்த போது விசாரணைக்காக இராணுவத்தினர் கைது செய்து இங்கு கொண்டுவந்து அடைத்துள்ளனர். அத்துடன் தொடர்பே இல்லாத குற்றங்களை எம்மீது சுமத்தி ஆண்டுக்கணக்கில் விசாரணைகள் எதுவும் நடத்தப்படாமல் எங்களைத் தடுத்து வைத்துள்ளனர். ஐந்து வருடங்களாக இதே சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர்களும் எங்களுடன் இருக்கின்றனர். அவர்களிடம் இதுவரை எந்தவித விசாரணையும் நடத்தப்படாததுடன் அவர்களைப் பிணையில் விடுதலை செய்யவும் மறுத்து வருகின்றனர்.

    18 வயது சிறுவன் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை இங்கேயுள்ள சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் திருமணம் முடித்தவர்கள். எங்கள் அனைவரையும் புலிகள் என்றே குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் எங்களை சிறைச்சாலைக்குள் இருக்கும் தனியான கட்டடம் ஒன்றில் தடுத்து வைத்துள்னர். இரண்டு பெண் கைதிகளையும் பெண் கைதிகளுக்குரிய கட்டடத்தில் தனியாக தடுத்துவைத்துள்ளனர்.

    ஒரு சிறைக்கூடத்தில் நான்கு பேர் என்ற அடிப்படையில் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம். இந்த சிறைக்கூடத்திற்குள் இருந்து அரை மணிநேரமேனும் எங்களை வெளியே திறந்துவிட மாட்டார்கள். பல வருடங்களாக இதே நிலமைதான். எமது தேவைகளை நிறைவேற்றுவதானாலும் 7 அடி அகலத்தையும் 7 அடி நீளத்தையும் மட்டுமே கொண்ட இந்த சிறைக்கூடத்திற்குள்தான் செய்யவேண்டும்.

    சூரிய ஒளி எங்கள் மேல் பட்டு பல ஆண்டுகளாகின்றன. பகலில் சிறைக்கூடத்திலிருக்கும் சிறிய ஓடுங்கிய ஓடை ஒன்றிற்குள் எங்களை விடுவார்கள். எனினும் அங்கு எந்த சுதந்திரமும் இருக்காது. பத்திரிகைகளை மட்டுமே வாசிக்கலாம்.

    இதனால் எங்களின் மனநிலை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எமது உறவுகளை சந்திக்க முடியாதநிலையில் நாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். மாதத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறையே உறவினர்களை சந்திக்கின்றோம்.

    தொடக்கத்தில் குறிப்பிட்ட சில கைதிகளை மட்டுமே 16 நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்திற்கு கூட்டிச்செல்வர். ஆனால் ஏனையோர் நீதிமன்றத்திற்கு கூட்டிச்செல்லப்படுவதில்லை. சிறிது காலத்தின் பின்னர் ஒட்டுமொத்தமாக எங்கள் அனைவரையும் நீதிமன்றத்திற்கு 16 நாட்களுக்கு ஒருமுறை கூட்டிச்செல்வர். அங்கே நீதிபதி முன் நிறுத்தப்படுவோம். எங்களிடம் எதுவித விசாரணைகளையும் நடத்தமாட்டார்கள். அவர்களே கதைத்துவிட்டு மீண்டும் 16 நாள் விளக்கமறியல் வழக்குப் பதிவு செய்து மீண்டும் சிறைக்கூடத்திற்குள் கொண்டுவந்து தடுத்துவைத்து விடுகின்றனர்.

    நீதிபதி கூட எங்களிடம் எந்தவித கேள்வியையும் கேட்கமாட்டார். நாங்களும் அவருடன் கதைக்க முடியாதவகையில் இருப்போம். இதுதான் பல வருடங்களாக நடைபெறுகின்றது.

    இந்த நிலையில்தான் எங்களைப் பிணையில் விடுதலை செய்யும்படியோ அல்லது எம்மீதான வழக்குகளை விசாரணை செய்யும்படியோ வலியுறுத்தி சாகும் வரையான உண்ணாவிரதத்தில் கடந்த 17 ஆம் நாள் சனிக்கிழமை முதல் ஈடுபட்டோம்.

    அன்றைய நாள் காலைச் சாப்பாட்டுக்காக எங்களது சிறைக்கூடங்கள் திறக்கப்பட்டபோது நாங்கள் சிறைச்சாலை கூரைமீது ஏறி சாகும்வரையான உண்ணாவிரதத்தை தொடங்கினோம். 28 பேர் கூரை மீது ஏறியிருந்த போது ஏனையவர்களை கூரை மீதேற சிறைச்சாலை காவலர்கள் அனுமதிக்கவில்லை. அதனால் அவர்கள் கீழேயே இருந்தவாறு சாகும் வரையான உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.

    கூரை மீதேறியிருந்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டபோது நாம் அனுபவித்த கஸ்டங்கள் ஏராளம். அவற்றை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. சிறைச்சாலை கூரையில் வெப்பம் மிக அதிகமாக காணப்பட்டது. ஒடுகளில் அமர்ந்திருக்க முடியாதளவுக்கு வெப்பம் எங்களை வாட்டியது. வெப்பத்தின் கொடுமையால் தோல்கூட உரிந்துவிட்டது. காலையில் கடும் வெப்பம் என்றால் இரவில் கடும் குளிர் வாட்டும். தாங்கமுடியாத அளவுக்கு குளிர் வாட்டியது.

    இப்படியாக இரண்டு நாள் உண்ணாவிரத்தில் நாம் பட்ட துன்பங்களை எமது உறவுகளுடன் சொல்லி அழக்கூட முடியாத நிலைதான் எங்களுக்கு இருக்கின்றது. உணவின்றி, நீரின்றி, வெப்பமும், குளிரும் வாட்ட நாங்கள் பட்ட வேதனைகள் சொல்லில் அடங்காதவை.

    இரண்டு நாட்களாக தொடந்து உண்ணாவிரத்தில் ஈடுபட்ட ஏழு பேரின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர்களை சிறைச்சாலை மருத்துவக்கூடத்திற்கு கொண்டுசென்றனர். அவர்களில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர் மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை பின்னர் தேறிவிட்டது. எனவே அவரை மீண்டும் இங்கு கொண்டுவந்து தடுத்துவைத்துள்ளனர்.

    எங்களது உண்ணாவிரதப்போராட்டம் குறித்து அறிந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எங்களுக்கு இரண்டு தொலைநகல்கள் (பக்ஸ்) ஊடாக தகவல் அனுப்பியிருந்தனர். அதில் தற்போதைய நாட்டு சூழ்நிலையை கருத்தில்கொண்டு எமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைடும்படியும் எமது விடுதலைக்கு தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தனர். அத்துடன் எமது கோரிக்கையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று எமது விடுதலைக்கு உரிய நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர். அத்துடன் தற்போதைக்கு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டிருந்தனர். அழுத்தம் தந்தனர். அதனால் எமது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கின்றோம்.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போலவே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரும் எமது போராட்டத்தை கைவிடும்படி கோரியிருந்தனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் எம்மை நேரடியாக வந்து சந்தித்தனர். அவர்கள் தந்த உறுதிமொழியில் நம்பிக்கை வைத்துத்தான் கூரையில் இருந்து நாங்கள் கீழே இறங்கினோம்.

    ஆனால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் மீண்டும் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவோம். நாங்கள் ஒரேயொரு கோரிக்கையைத்தான் முன்வைத்திருக்கின்றோம். அதாவது எங்கள் மீது குற்றமிருந்தால் அது என்னவென்று கூறி நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்றுதான் கோரியிருக்கின்றோம்.

    நாங்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதமிருக்கக்கூடாது என்று எங்களை சிறைச்சாலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த எச்சரிக்கையையும் மீறி உண்ணாவிரம் இருந்தால் இராணுவத்தினரைக் கொண்டுவந்து சுற்றிவளைத்து நின்று சுட்டுக்கொலை செய்யப்போவதாகவும் மிரட்டினர். நாங்கள் உண்ணாவிரத்தை கைவிடுவதற்கு இந்த எச்சரிக்கையும் ஒரு காரணமாகும்.

    இந்த உண்ணாவிரத்திற்குப் பின்னர் எங்களை முற்றுமுழுதாக சிறைக்கூடங்களிற்குள்ளேயே அடைத்துவிட்டனர். முன்னர் ஒரிரு மணித்தியாலங்கள் சிறைக்கூடங்களை திறந்து சிறிய- ஓடுங்கிய ஓடைக்குள் எங்களை விடுவர். ஆனால் உண்ணாவிரத்திற்கு பின்னர் அப்படிக்கூட விடுவதில்லை. இதேநிலை தொடருமானால், சில மாதங்களுக்குள் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சிறைக்கூடங்களிற்குள்யே இருந்து மீண்டும் நாங்கள் சாகும்வரையான உண்ணாவிரதத்தை தொடங்குவோம்.

    எப்படியாவது எங்களின் உறவுகளுடன் சேர்ந்துவிட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். நாங்கள் எமது தனிப்பட்ட முயற்சியின் பலனாகவே ஊடகங்களில் வெளிவருவதை அறிந்து வருகின்றோம். நாங்கள் ஊடகங்களுடன் தொடர்புகொண்டு எமது நிலையை தெரிவித்திருந்தோம். அவர்கள் சில விடயங்களை பிரசுரித்திருந்தார்கள். ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுமளவுக்கு பாதிக்கப்பட்டிருந்த செய்தியை அவர்கள் போடவில்லை. அதை தணிக்கை செய்தேனும் எமது பிரச்சினைகளை கொழும்பில் உள்ள ஊடகங்கள் பிரசாரப்படுத்தியிருந்தன. இருந்தாலும் புலம்பெயர் உறவுகளும் எமக்கு நிறைய உதவி செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

    எங்களுக்காக எமது தாயகத்திற்காக புலம்பெயர் உறவுகள் செய்துவரும் உதவிகளை நாங்கள் அறிந்துகொண்டுதான் இருக்கிறோம். அந்த உதவிகளை தொடர்ந்து செய்யுமாறு நாம் கோருகின்றோம்.

    நாங்கள் இங்கே தொடர்ந்தும் இருக்க முடியாது. எங்களுடைய உணவில் புழுக்களும் கல், மண் போன்றனவும் சேர்ந்து இருக்கின்றன. தண்ணிக்குள் மரக்கறியை போட்டு அவித்து அதையே தருவார்கள் எமக்கு உணவாக. இவைதான் இங்கு எமக்கு தரப்படும். இதையே நாங்களும் உண்ணவேண்டிய நிலை.

    மருத்துவ வசதிகளிலும் அசட்டையாக இருக்கின்றனர். உதாரணமாக ஒருவருக்கு அவசரம் (சீரியஸ்) என்று நாங்கள் சொன்னால் அவரை அடுத்த நாள்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்வர். அரசியல் கைதி அல்லாத ஒருவர் நோயால் இறந்த சம்பவமும் இங்கு இடம்பெற்றுள்ளது.

    எங்களைப் பார்வையிட வரும் உறவினர்களுக்கு கடும் நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் கொடுக்கப்படும். அதனால் எம்மை பார்வையிட வருவதற்கே எமது உறவினர்கள் தயங்குகின்றனர். இதைவிட சிறைச்சாலைக்குள் இருக்கும் குழுவினர்களாலும் எமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

    தமிழர்கள் என்றாலே பயங்கரவாதிகள்தான் என்ற எண்ணம் சிறிலங்கா அரசிடமும் இராணுவத்திடமும் இருக்கிறது. எனவே அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் இந்த விடயத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்க்கைதிகளின் சார்பாகவும் இந்த கோரிக்கையை விடுக்கின்றோம்.

    சிறைச்சாலைகளில் நாம் அனுபவிக்கும் சித்திரவதைகள் ஏராளம். எங்களை இராணுவத்தினர் கைது செய்துகொண்டு போய் பெற்றோல் பொதிக்குள் எமது முகத்தை வைத்து கட்டி, மிளகாய்த்தூளை பூசி, குதிக்காலில் ஆணி அடித்து சித்திரவதை செய்வார்கள். சிலரை சுமார் ஒருமாதம் வரையிலும் தமது காவலில் வைத்திருந்து உயிர் போகுமளவுக்கு சித்திரவதை செய்வார்கள். இருட்டு அறைக்குள் பூட்டிவைத்து மிளகாய்த்தூளை எறிவார்கள். ஆணியை விரல்நகத்திற்குள் ஏற்றவார்கள். குதிக்காலில் பிரம்பால் அடிப்பார்கள்.

    இதைவிட சொல்ல முடியாதளவுக்கு மேலும் பல சித்திரவதைகளையும் அனுபவித்திருக்கிறோம் எம்மால் முடியாத கட்டம்வரை அடித்து நாங்களே அடிதாங்க முடியாமல் அவர்கள் கூறும் பொய்யை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எம்மை சித்திரவதைப்படுத்தினார்கள்.

    அதாவது நாங்கள் ஆயுதம் வைத்திருந்தோம் என்பதை ஓப்புக்கொள்ளுமாறு பொய்க்குற்றச்சாட்டு ஒன்றைக்கூறி அதை நாம் ஏற்கும்வரை கடும்சித்திரவதைக்கு உள்ளாக்குவர்.

    அதற்குப் பின்னரே சிறைச்சாலைக்கு கொண்டு சென்று சிறைக்காவலர்களிடம் எங்களை ஒப்படைப்பார்கள்.

    இந்த சித்திரவதைகள் குறித்து மனித உரிமை அமைப்புக்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உலக நாடுகளிலேயே வன்முறையான நாடு என்ற ரீதியில் இலங்கை முதலிடத்தில் இருக்கிறது. இது குறித்து எல்லாம் மனித உரிமை அமைப்புகள் சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார் ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு