பின்பற்றுபவர்கள்

கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஆகஸ்ட், 2015

தேசியமும் தேர்தலின் விலையும்



தேசியப்பெடியும் பெருங்காயப்பெட்டியும் - தேவ அபிரா - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக:-

நடந்து  முடிந்த  தேர்தல் ஊழல்களற்றுச் சுதந்திரமாக நடைபெற்றதென்பது மிக முக்கியமானதொரு அம்சம். ஒரு புள்ளடியை இடுவதன் மூலம்  மக்கள் சொல்லும் செய்திகள் பன்முகமானவை. அது மட்டுமல்ல மக்கள் எனப்படுபவர்கள் ஒருமைத்தன்மையான கூட்டமுமல்ல. எனவே வாக்களிப்பு முடிவுகளும் பலவிதமாக வியாக்கியானப்படுத்தப்படவும்  கூடியவை.

இத்தேர்தல்களின் மூலம்  கண்மூடித்தனமான இனவாதப்போக்கைக் கொண்டவர்களே பெரும்பான்மையானவர்கள் என்ற போக்குச் சற்று மாறியிருக்கிறது. நாட்டின்  சமூக பொருளாதார சூழலியற்  கட்டமைப்புகளை மோசமான முறையில் அழிக்கக் கூடிய ஊழல் நிறைந்த குடும்ப அதிகாரத்தை இலங்கை தழுவி அனேகமானவர்கள்  நிராகரித்திருக்கிறார்கள். மேலும்  குறிப்பிடக்கூடிய ஒரு அம்சம் இத்தேர்தலில் இடதுசாரிகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றமையாகும்.

அமைக்கப்படப்போகிற ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கம் சிறுபான்மை இனங்களை எப்படி  அணுகப்போகிறது என்பதை இப்பொழுதே எதிர்வுகூற முடியாது. ஆயினும் வரப்போகும்  அரசாங்கத்திற்கு  இலங்கையில் நிலவும் இனப்பிரச்சனைக்கு தீர்வை- சிறுபான்மையினங்கள்  திருப்திப்படக்கூடிய ஒரு தீர்வை வழங்க வேண்டிய  கடப்பாடு  உள்ளது.

இங்கே நான்  நியாயமான தீர்வு என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. நியாயங்கள்  இவ்வுலகில் கிடைப்பதில்லை. அவை எடுத்துக் கொள்ளப்படவேண்டியவை; போராடிப்பெறப்படவேண்டியவை. நியாயத்தை  எடுத்துக்கொள்வதற்கான வலு வரும் போதுதான்  அதனை எடுத்துக்கொள்ள முடியும். இவ்வலு ஒரு மக்கள்  கூட்டத்தின் அகபுறச்சூழ்நிலைகளிற் தங்கிய  விடையம். இப்பொழுது வலுவற்றிருக்கிறோம்  என்பதை ஒத்துக்கொள்வது  உண்மையிலும் ஒரு மக்கள்  கூட்டம் தனக்குக் கிடைக்க வேண்டியவை கிடைக்கவில்லை  என்பதை  மறந்ததாக  ஆகாது.

தமிழ்மக்கள் இத் தேர்தலிற்  சொன்ன முக்கியமான செய்தி எங்களை   எங்கள்பாட்டிற்  சீவிக்க விடுங்கோ என்பதுதான்.

சுதந்திரத்தின் பின்னர் தமிழர்கள் வன்முறை நிறைந்த போராட்டவழியைச் தெரிவு  செய்வதற்கு 3 தசாப்தங்கள் எடுத்தது. இதுவும் அகப்புறச் சூழ்நிலைகள் கூறிப்பாகப் புறச் சூழ்நிலைகள் சாதகமாக இருந்ததாலேயே சாதகமானது. ஆயினும்  அவ்வழியும் மிகமிகக் கொடூரமான முறையிற் நசுக்கப்பட்டபோது எமது இனத்தின் ஆன்ம வலுவும் சேர்ந்துதான் நசுங்கியது. இவ்விடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  2000 ஆண்டின் தொடக்கத்திலேயே மக்களின் போர்ப்பங்கேற்பு வீதம் வெகுவாகக் குறைந்து விட்டது( இது குறித்து சிவராம் அவர்கள் தனது ஒரு கட்டுரையிற் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். நீண்ட பேச்சுவார்த்தைகள் மக்களின் போர்ப்பங்கேற்பு வீதத்தைக் குறைக்கும் என்ற அர்த்தத்தில் அவர் அப்பொழுது எழுதியிருந்தார்.)  அப்போழுதே புலிகளுக்கு மக்கள் தமது செய்தியைச் சொல்லி விட்டார்கள். ஆனால்  புலிகள் அச்செய்தியையும்  மீறிப் பேச்சுவார்த்தைகளைக்  கனதியாகக் கையாளாமல்  யுத்தத்தை நோக்கிச் சென்றார்கள். அது மட்டுமல்ல மக்களையும்  பலவந்தமாகப் போரிற் பங்கேற்கச்  செய்தார்கள். தாம் யாருக்கப்போராடுகிறோமோ அவர்கள் தருகிற செய்தியை அவர்களுக்காகப் போராடுகிற அமைப்போ கட்சியோ புரிந்து கொள்ள வேண்டும். (நிக்கராகுவாவில் 90களில் டானியல் ஒட்டேகா மக்கள் ஆதரவு குறைந்த போது. ஆயுதப்போராட்டத்தை விட்டு நாடாளுமன்ற வழிக்குத் திரும்பியிருந்தார்)

கடந்த தேர்தலில் மகிந்தவையும் இத் தேர்தலில்  ஒரு வகையில் புலிகளின் அணுகுமுறை போன்ற ஒன்றையும் தமிழ்மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அதேவேளை விடுதலைக்காக உண்மையாக  மடிந்தவர்களை விற்றுப் போலி அரசியல் செய்பவர்களையும் அவர்கள் நிராகரித்திருக்கிறார்கள்.  எனவே ஒரு இனம் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்க முனைவது பிழையான பிற்போக்குத்தனமா அரசியல்  அறிவீனமா? இல்லை. தமிழ்ச்  சமூகம் கடந்த 3 தசாபதங்களாகக்  கடந்து வந்த பாதையைப் பார்த்தோமென்றால் அவர்களின் இம்முடிவு முற்றிலும்  அரசியல்ரீதியானது என்பது புரியும்.

எனவே இச்  செய்தியைச்  சொல்வதற்கு  அவர்களுக்குத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடால் யார் கிடைப்பார்? தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு முன்வைத்து முழங்கிய சம்ஸ்டி கூடக் கிடைக்கக்  கூடிய ஒன்றல்ல என்பது தமிழர்களுக்குத்  தெரியும். ஆனால்  முக்கியமானது என்னவென்றால் தமிழ்தேசியக்கூட்டமைப்பைத் தெரிவு செய்தால் தீர்க்க  முடியாத முரண்பாடுகளுக்குள்ளும் இராணுவம் மற்றும் புலனாய்வுக் கெடுபிடிகளுக்குள்ளும் தாங்கள் சிக்க வேண்டி வராது என்பதை அவர்கள்  அறிந்திருக்கிறார்கள். தேர்தல் முடியத் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தமிழ் மக்களோடு  ஒரு சோலிக்கும்  போகாது. அவர்கள் தங்களுடைய சோலியைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தங்களுடைய சட்டைப்பையை நிரப்புகிற வழியைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். தீவிரமான அரசியற்கோரிக்கைகள் அரசியல் ஆர்பாட்டங்கள் எதுவுமிருக்காது. தனிப்பட்டவர்களின் தேவைகள் அவரை இவரைப் பிடித்துப் பின்கதவால் நிறைவேற்றப்பட்டுவிடும்.

நவீன உலகில் மக்களின்   சிந்தனை மற்றும் பொதுப்புத்தி என்பன தனியே உள்நாட்டு நிலைமைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. இவை உலகளாவிய நிலமைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. மக்களின் பொதுப்புத்தியும்  இளைய தலைமுறைகளின் சிந்தனையும் நுகர்வுக்கலாசாரத்தை நோக்கி வழி நடத்தப்படுகின்றன. உலகாளாவிய இடது சாரிகளின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒருகாரணம். நாடுகளை அகலத் திறந்து  வீடுகளை அகலத்திறந்து மக்களை இனம் மதம் மொழி பேதமற்ற நுகர்வுக்கலாசாரத்தின் ஒரு பகுதியாக்கவே உலகளாவிய முதலாளித்துவ கலாசாரம் விரும்புகிறது. அதனைச் சாதிக்கக் கூடிய அரசாங்கங்களையே இக்கலாசாரம் வரவேற்கின்றது; ஊக்குவிக்கிறது; பாதுகாக்கிறது (ஒரு நாடு சீன ரஸ்சிய அமெர்க்க சார்பு நிலைகளில் எதனை எடுத்துக் கொண்டாலும் அடிப்படையில் அவை முதலாளித்துவ நலன் பேணும் அமைப்புக்களே)  இந்த நூற்றாண்டில் இவ்வணுகு முறையில் உலகளாவிய முதலாளித்துவம் வெற்றியும் அடைந்துள்ளது. வடகொரியாவையும்  கியூபாவையும் தவிர உலகின் அனைத்து நாடுகளும் இக் கட்டமைப்புக்குள் தான் இருக்கின்றன; இயங்குகின்றன. (அண்மையில் கியூபாவிலும் அமெரிக்கா தனது தூதரகத்தைத் திறந்து விட்டது.) தொலைத்தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள், மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக உருவாக்கப்பட்டுள்ள உலகக்கிராமத்தில்  பாறைகளில்  முட்டிக் கொள்ளக் கூடிய, தீயுக்குள் பாயக்கூடிய பிள்ளைகள் உருவாக்கப்படுவது  தடுக்கப்படுகிறது. தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.

உலகை வழி நடத்தும் நுகர்வுக்கலாசாரத்தின் ஒரு பகுதியாக வாருங்கள் எனப்  புலிகளுக்கு வேண்டுகோளும் அச்சுறுத்தலும் வைக்கப்பட்டது .புலிகள் அதனை புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இருக்கவில்லை. ஆனால் தமிழ் மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இனிமேற் கடவுள் கேட்டாலும் அவர்கள் திரும்பமாட்டார்கள். ரணிலின் தலைமையின் கீழ் வடக்கு கிழக்கு முழுமையாக உலக முதலீட்டுக்குத் திறந்து விடப்படுமென்றே எதிர்பார்கிறேன். இது மக்களின் அரசியற் சிந்தனையில் மாற்றங்களைக் கொண்டு வரும். மேலும் இதன் மூலம் ஒரு வகையில் தமிழர்கள் தமக்கான மூலதனத்தை அரசியற் பிரக்ஞையுடன் உருவாக்கவும் சாத்தியங்கள் தோன்றலாம் ஆனால் இது பிரிவினைக்கான சாத்தியங்களைத் தோற்றுவிக்காது. 

இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது தமிழர்களது நியாயமான அரசியற்கோரிக்கைகளை அடைவதற்கான அரசியற்தளம் முற்றிலும் வேறுபட்டதாகி விட்டது என்பது புரியும். இதன் வழி   நாடாளுமன்ற அரசியலை மையப்படுத்திய கட்சி அரசியல் தமிழர்களின் அரசியற்பயணத்தின் தவிர்க்க முடியாத பகுதியாகிறது.

ஈழம் சுயநிர்ணய உரிமை சுயாட்சிப்பிரதேசம்  சமஸ்டி உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வு போன்றவை இலட்சிய நிலமைகளாக மாறியுள்ளன. இலட்சியத்தை அடைய ஒவ்வொருவருக்கும் உரிமையுள்ளது ஆனால் இவை மிக நீண்டதூர இலக்குகள். இவற்றைக் கைவிட வேண்டியதில்லை. அதே நேரத்தில் இலங்கை என்னும் ஒருமையான அலகுள் இயங்கவும் வேண்டும். இந்த இயக்கம் இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று நாடாளுமன்றக் கட்சி அரசியல். மற்றையது நாடாளுமன்றத்திற்கு வெளியிலான அரசியல்.

கட்சி அரசியல் என்று வரும் போது சிறுபான்மை இனக்கட்சிகள் தம்மைச் சனநாயகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கட்சியும் முறையான யாப்புடன் கூடியதாகவும் பெருந்தொகையான பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டதாகவும் இருப்பது சனநாயகத்திற்கு அவசியமானது.  கட்சியின் உறுப்பினர்களும்  தலைவர்களும் குறித்த கால இடைவெளிகளிற் உறுப்பினர்களால் சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட வேண்டும். கட்சியின் கருத்தியல் நடத்தை மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளைக்  கண்காணிக்கும் சுயாதீனமான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். கட்சிகள்  கிராம மட்டங்கள் வரை தமது செயற்பாடுகளை விரிக்க வேண்டும். கட்சிகள் மக்களின் தேவைகள் மற்றும் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும். கட்சிகளின்  உறுப்பினர்களும் தலைவர்களும் அவர்களது வேலை நேரங்களில் மக்களால் அணுகப்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இவை சாத்தியமற்ற விடையங்கள் அல்ல.

கட்சிக்கு வெளியிலான அரசியல் என்பது  நாங்கள் எங்களுக்குள் நிலவும் உள்முரண்பாடுகள் ஒடுக்குமுறைகள் கலாசாரச்  சீரழிவுகள் பிற்போக்கான அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை அடைவதைக் குறிக்கிறது.  இந்த விழிப்புணர்வின்  மூலம்தான் எங்களது  கூட்டு  ஆன்மா வலுவடைவதற்கான வழியைக் கண்டடையமுடியும். நாங்கள் ஒரு தேசிய இனம் எனவே எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும்   எனக் கூறுவது அடிப்படையிலே பிழையானது. ஒற்றுமை என்ற சொல்லே ஒடுக்குமுறைக்கான முதற்படிதான். ஒரு இனத்தினுள் உள்ள பல்வேறு  கூறுகளும் ஒற்றுமையுடன் இருக்க முடியாது. பதிலாக அக்கூறுகள் ஒவ்வொன்றும் தமக்கான சரியான பிரதிநிதித்துவத்துடன் ஒடுக்குமுறையற்ற நோக்கங்களுக்காக சேர்ந்து வேலை செய்ய முடியும். இதற்கான சிந்தனை வலுவைத்தான் நாங்கள் உருவாக்க முனைய வேண்டும்.

ஊழலற்ற செயற் திறன் கொண்ட சனநாயக் சிந்தனையுள்ள கட்சிகள்- பொது நோக்கங்களுக்காக இணைந்து வேலை செய்யும் வலுவுடைய கட்சிகள் உருவாகிச் சமூகத்துள் நிலவும் பிற்போக்கான அம்சங்களைக் களைவதற்கான உரையாடலும்  ஆரம்பிக்கப்படும் போதுதான் நாங்கள் வலுவடைவோம். அதுவரையிற் கூட்டமைப்பு ஐந்து வருடங்களுக்குத் தன்பாட்டுக்குப் போகும்.நாங்கள் எங்கள் பாட்டுக்குப்போவோம்.

இன்னுமொரு விடையத்தையும் சொல்லித்தான் இப்பத்தியை முடிக்கவேண்டும். திரு. கஜேந்திரகுமாரைத் தமிழ் மக்கள்  நிராகரித்தார்கள். சரி. ஆனால் அதே அளவுக்குத் பேசிய தேசியப்பெடி சிறீதரன் அவர்கள் எவ்வாறு அதிக விருப்ப வாக்குகளைப் பெற்றார் என்று யாழ்பாணத்தில் உள்ள ஒரு நண்பரைக் கேட்டேன். அவர் கூறினார்: “என்ன விசர்க்கதை கதைகிறாய் அந்தாள்  கோடிக்கணக்காய் பணம் செலவளிச்சதெண்டு கேள்வி.”

இது உண்மையென்றால் ஊடகக்காரரே கண்ணுக்குள் எண்ணை விட்டுப் பார்த்திருங்கள். என்னெனில் அரசியல்வாதிகள் வைத்திருப்பது பெருங்காயப்பெட்டி அல்ல.
தேவ அபிரா
19-8-2015
 
அனுப்புக HomeSrilankan News
அபிப்பிராயங்கள்
(1) அபிப்பிராயங்கள்
20-08-2015, 16:30
 - Posted by Anonymous
அன்பரே
பல விடயங்களை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். இவை சாதாரண மக்களால் புரியப்படுதல் நன்று.
கடைசிப் பந்தியில் குறிப்பிடப்பட்ட விடயம் பற்றியது, தலைவர் வழியை பின்பற்றப்போவதாகவும் அவர் கூறியதாக 19ம் திகதி வலம்புரி பத்திரிகை செய்தி காணப்பட்டது. TNA யின் வெற்றி குறித்துப் பெருமைப்பட்ட ஓர் அன்பரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அவர் புருவம் வியப்பால் விரிந்தது.

பொதுவாகவே வடக்கு கிழக்கு தமிழர் அரசியல் ஓர் வியப்பான நிலையிலேயே காணப்படுகிறது. மலையகத்தில் பல்வேறுபட்ட கொள்கைகளை முன்வைக்கும் தலைமைகள் மக்களால் அங்கீகரிக்கப்படுகின்றன. அதேபோன்றே முஸ்லிம் மக்களிடத்திலும். சிங்கள மக்களோ எல்லாளனை வென்ற துட்டகைமுனு என வர்ணிக்கப்பட்ட மஹிந்தரையே ஓர் எல்லைக்கு அப்பால் அனுமதிக்கவில்லை.
மாறாக எம்மிடமோ ஆயுத தலைமையிலும்சரி மிதவாதத் தலைமையிலும்சரி ஏகத் தலைமைத்துவமே கட்டிக்காக்கப்படுகிறது. இது எமது இனத்தின் பலமாக இருப்பின் நாம் இன்றுவரை ஆளப்படும் இனமாக இருப்பது ஏனோ? அதற்கு எட்டப்பர்களும் காக்கை வன்னியர்களும்தான் காரணமோ? அப்படியாயின் மற்றைய இனங்களில் அவ்வாறானவர்கள் பிறப்பதில்லையாயின் இது எமது இனத்திற்கேயான இயல்பா?

தேர்தலை வேன்றாகிவிட்டது. அடுத்து TNA என்ன செய்யப்போகிறது என அதன் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டேன். ஒன்றும் பெரிதாக நடக்கப்போவதில்லை என்றார். அப்போ எதற்காக TNA இற்கு ஆதரவு அளித்தீர்கள் என்றேன். தமிழர்கள் TNA இற்கு ஆதரவளிப்பதே அவர்கள் கடமை என்கிறார்கள்.

TNA தலைவர்களோ ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள், நாங்களே உங்கள் பிரதிநிதிகள் என உலகுக்கு காட்டுங்கள் அவர்கள் மூலம் உங்கள் உரிமையைப் பெற்றுத் தருவோம் என உள்ளூராட்சிசபைத் தேர்தல் தொடங்கி ஜனாதிபதி தேர்தல் வரை எல்லாவற்றிலும் கூறுகிறார்கள்.

அன்பர்கள் சிலரிடம் அவர்களது ஆதரவுக்கான நியாயம் பற்றிவினவும் போது ஒர் கட்சியை புலிகளின் கட்சி என்பதால் நிராகரிபதாகக் கூறுகிறார்கள். மற்றைய கட்சியை ஆயுதக்குழு என்பதால் நிராகரிபதாகக் கூறுகிறார்கள். இன்னோர் கட்சியை பேரினவாதக்கட்சி எனக் கூறுகிறார்கள். வேறோர் கட்சியை சிங்கள அரசோடு சேர்ந்து இயங்கிய கட்சி என்கிறார்கள்.

TNAஐ தெரிவு செய்தால் அனைவரையும் தெரிவு செய்ததாக இருக்கும் என எண்ணுகிறார்கள் போலும்.

சூரியன்

29 ஜூன், 2012

ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம். முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் சில குறிப்புக்கள் - பகுதி 3


ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கம். முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் சில குறிப்புக்கள் - பகுதி 3


ஈழத்தில் வாழ்ந்து அந்த அனுபவங்களையும் துயரங்களையும் மூட்டையாக முதுகில் சுமந்து கொண்டு புலம் பெயர்ந்த படைப்பாளிகள் புலம் பெயர்ந்த சூழலில் தமது கடந்த கால அனுபவங்களை  நின்று நிதானித்துப் புறநிலையாகப் புரிந்து கொள்ளக் கூடிய சாத்தியம் ஏற்படுகிறது. உலகம் இவர்களுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பு வேறுபட்ட கலாசாரங்களுடனான இடைத்தாக்கம் என்பனவும் இங்கு இவர்களது  ஆளுமையை வளர உதவி செய்கின்றன.  
புலம் பெயர்ந்த தமிழர்களின் சிந்தனையும் வாழ்வியல் தளமும் புதிய கலாசார அதிர்வுகளை எதிர்கொள்கின்றன  இந்தவகையில் ஈழத்துக் கலை இலக்கியவாதிகளுக்கு இல்லாத உலகம் ஒன்று புலம்பெயர்தமிழர்களுக்கு திறந்துள்ளது. அனேகமான புலம் பெயர்தமிழர்கள் முதலாளித்துவ கலாச்சாரத்துடன் பிணைந்துள்ள ஐரோப்பிய கலாச்சாரத்துள் அல்லது அமெரிக்க கலாசாரத்துள் (பொதுவில் மேற்கத்தைய கலாசாரத்துள்) வாழ்கிறார்கள். இலங்கை போன்ற அரைக்காலனித்துவ அரைப்பிரபுத்துவ நாடுகளில் இல்லாத சனநாயகத்தைப் புலம்பெயர்ந்த நாடுகள் கொண்டிருக்கிறன. இது முதலாளித்துவ சனநாயகம் எனப்படுகிறது. ஒரு அமைப்பு(system) பொருளாதார ரீதியிலும் கலாசாரரீதியிலும் நன்றாக ஆழமாக வேரூன்றி இருக்கிற போது அதனை இலகுவாக அசைக்க முடியாதென்கிற நம்பிக்கை வரும்போது வழங்கப்படுகிற சுதந்திரம் என இதனைப்பார்க்கலாம். ஆனால் இந்த முதலாளித்துவ அமைப்பும் கலாசாரமும் இன்றைக்கு நிலவுகிற உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதன் காரணமாக தமது வேர்கள் ஆட்டம் காணுவதைக் கண்டு அச்சம் மொண்டு தமது உண்மையான கோர முகத்தை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். ஆனாலும் இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு சுதந்திரம் நிலவுகிறதென்பதை உணரமுடியும்.
மேலைத்தேச நாடுகள் எதிர்கொள்கிற தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை வெளிநாட்டவர்களுக்கு எதிரான தேசிய உணர்வை ஐரோப்பியநாடுகளில் வளர்க்கிற அதே நேரம் முதலாளித்துவத்தின் எதிர்மறையான பக்கங்களையும் கொடூரமான சுரண்டலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
புலம் பெயர் தேசத்திலேயே பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறை கலை இலக்கியகர்த்தாக்கள் இந்தத் தளத்தில் நின்றுதான் தங்கள் அனுபவங்களை மீள்வாசிப்புச் செய்கிறார்கள்.
தனிமனித விழுமியங்கள் பற்றிய நுண்ணுணர்வு, குடும்பத்தில் பெண்ணின் பாத்திரம், இளம்பராயத்தினருக்கிருக்கிற உணர்வுகள் மற்றும் தெரிவுகள் பற்றிய புரிதல்கள் பல்கலாச்சாரக்கலப்புக்கள் பற்றிய புரிதல்கள், கணவனில்லாத தனித்தாய் குடும்பம் போன்ற விடையங்கள் புதிதாக வரும் படைப்பாளிகளின் படைப்புகளின் கருப்பொருளாவதைக்காண்கிறோம். இந்தப்படைப்புகளின் இலக்கிய அல்லது கலைத்தரம் வளர்ச்சிக்கு உட்படவேண்டியதெனினும் மாற்றங்கள் நிகழ்த்தொடங்கியிருக்கின்றன.
முள்ளி வாய்க்காலின் பின்பு ஒருமையான தேசியவாதம் ஏற்படுத்தியிருந்த இறுக்கமான ஒருமுகமான சூழ்நிலை தமிழ்ச் சமூகத்தின் புறவெளியிலும் படைப்பாளிகளின் அகவெளியிலும் அற்றுப்போகிறது. அதே நேரம் தமிழீழப்பிரதேசங்கள் எனச் சொல்லப்படுகிற  பிரதேசங்களுக்கு வெளியே  குறைந்தது கடந்த இருபது வருடங்களுக்கு நின்றிருந்த  இலங்கை அரசின் இராணுவ அரசியல் மற்றும் சமூக கலாசார ஒடுக்குமுறைகள் முன்பை விடவும் வலிமையானதாக எமது புறவெளியினுள் வந்து நிற்கின்றன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மண்விடுதலையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சனநாயகமற்ற வெளி அகன்றபோது படைப்பாளிகளைக் கட்டிப்போட்டிருந்த  மன இறுக்கமும் அகன்று போகிறது. எனவே தமிழீழவிடுதலைப்போராட்டம் குறித்த விமர்சனங்களைத் தாங்கிய படைப்புக்கள் வெளிவரத் தொடங்குகின்றன. குறிப்பாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாக அல்லது ஆதரவாளர்களாக அல்லது சக பயணிகளாக இருந்தவர்களின் படைப்புக்கள் வெளிவரத் தொடங்குகின்றன. ஆனால் இந்த அதிஸ்டம் ஒரு சிலருக்கே வாய்த்திருக்கிறது. பல விடுதலைப்புலிப்படைப்பாளிகள் போரில் மடிந்து போனார்கள் அல்லது அரசின் வதைமுகாம்களுக்குள் சிதைந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கே நடந்து முடிந்த தேசிய விடுதலைப்போராட்டத்தின் மீதான விமர்சனங்களைத்தாங்கி வருகிற எங்களை வாசிக்கத் தூண்டுகிற மொழியை கொண்டிருக்கிற படைப்புகளின் முக்கியமான ஒரு பண்பாக அங்கதம் இருப்பதைக்காண்கிறோம்.
சிறுபான்மையினத்தின் மீதான அரச ஒடுக்குமுறை இருக்கும் வரை  சிறுபான்மை இனங்களின் எதிர்ப்போராட்டத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்ளும் ஒரு படைப்பாளி ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமல் அதேவேளை எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் வகையில் விமர்சனங்களைச் செய்வதற்கு அங்கதம் உதவும். ஆனால் இதே அங்கதத்தினை அரசியல் இலக்கற்ற அல்லது சமூகப்பிரக்ஞை அற்ற நையாண்டியாகவும் கையாள முடியும். அங்கதத்தைக் கையில் எடுத்துக்கொண்ட படைப்பாளிகளின் படைப்புகளுள் இந்த அம்சங்களையும் இனம் காண முடியும்.
தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் செய்த தவறுகளைப் புரிந்து கொண்டாலும் இலங்கை அரசின் படு மோசமான அரசியல் இராணுவ கலாசார ஒடுக்கு முறையினை இன்னமும் அகவெளியிலும் புறவெளியிலும் எதிர்கொள்பவர்கள் அதனையே உயர்த்திப்பிடிக்கும் படைப்புக்களையும் கொண்டு வருகிறார்கள். அதுவே முக்கியமானதென்றும் நினைக்கிறார்கள்.
இலங்கையின்  வடக்கு கிழக்கில் நிலவும் சமூக பொருளாதார அரசியற் சூழ்நிலைகளின்  யதார்த்தம் இவர்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறது.
முள்ளிவாய்க்காலின் பின்பு ஈழத்தில் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகள் நிகழ்கின்றன. இலங்கை அரசின் அரசியல் மற்றும் இராணுவப் பிரசன்னங்களை சிங்கள மேலாதிக அரசின் ஒடுக்குமுறை அம்சங்களை வெளிப்படையாக விமர்சிக்கும் எதிர்க்கும் கலை இலக்கியப் படைப்புகள் இலங்கையில் தமிழ்ச் சமுகத்தை இயக்கமடையச் செய்யும் நிலையை நோக்கி நகர முடியாது. அதற்கு தற்போது சாத்தியமுமில்லை. அந்தளவுக்கு சனநாயக வெளியொன்று இருப்பதாகவும் தெரியவில்லை. (அவ்வாறான சனநாயக வெளி ஒன்று இருக்குமென்றால் தமிழீழத்திற்கான தேவையும் இருக்காது.) தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில் தொழிற்பட்ட முறைமையில் படைப்பாளிகள் இலங்கையில் தொழிற்படமுடியாது. அவ்வாறு செயற்பட விரும்புபவர்கள் அரச இராணுவப் புலனாய்வுக்குழுவினரின் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால் மக்களின் தனிப்பட்ட நுகர்வுக்கான கலை இலக்கிய வெளி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நுகர்வு வெளியில் பல படைப்பாளிகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். இங்கே விடுதலைப்போராட்ட காலத்தில்  சகபயணிகளாக இருந்தவர்களும் புதியவர்களும் வெளிப்படுகிறார்கள். இங்கே படைப்புக்களை வெளிப்படுத்தல் தம்மை வெளிப்படுத்தல் வாசகர்களை அல்லது இரசிகர்களை நுகரத் தூண்டுதல் என்பதே பிரதானமான  நோக்கமாகிறது.  கலை இலக்கியத்தளத்தில் ஏற்கனவே அறியப்பட்ட அல்லது இயங்கிக் கொண்டிருக்கிற படைப்பாளிகளின் உள்ளார்ந்த நோக்கமாகக் கலந்துரையாடல் அனுபவங்களை இரைமீடல் விமர்சனம் செய்தல் சுய விமர்சனம் செய்தல் பரஸ்பரக் கல்வியூட்டல் போன்றவை இருக்கின்ற போதும் அவை பிரதான நீரோட்டத்துக்குள் இறங்கிப் பரந்து பட்ட மக்களைச் சென்றடைவதற்குச் சந்தைப்படுத்தல் என்கிற ஒரு வழிமட்டுமே இருக்கிறது. இந்தப்படைப்பாளிகள்  தங்களைச் திறந்த பொருளாதாரத்தின் சந்தைக்குள் இறக்கிக்கொள்ளவேண்டி இருக்கிறது.
அது மட்டுமல்ல ஒரு சமூகத்தினுள் இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு சக்திகளும் கூறுகளும் தங்களுக்கான தங்களது கலை இலக்கியப்படைப்புக்களை உருவாக்கவும் சந்தைப்படுத்தவும் முனையும்.  முனைகின்றன. தமிழ்ச் சங்கம் கம்பன்கழகம் திருமறைக்கலாமன்றம் போன்ற அறியப்பட்ட நிறுவனங்கள் தொடங்கி அறியப்படாத எண்ணுக்கணக்கற்ற  சக்திகள் வரை தமது கலை இலக்கியப்படைப்புக்களை வெளிக்கொண்டுவர முனையும். இங்கு இன்னுமொரு முக்கியமான அம்சத்தையும் கவனிக்க வேண்டும் இலங்கையில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும்  பெருமெடுப்பிலான கலை இலக்கிய நிகழ்வுகள் குறித்து அனேகமாக எதிரான கருத்துக்களே முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் நிகழ்வதனால் மட்டுமே ஒரு நிகழ்வை எதிர்த்தல் என்னும் போக்கு ஆரோக்கியமானதல்ல ஆனால் இந்த நிகழ்வுகளின் உள்ளடக்கம் இவற்றின் நோக்கம்  போன்றவற்றை நன்கு ஆராய்ந்த பின்பு  விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் முன்வைக்கவேண்டும்
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான  சூழ்நிலையில் அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிற கலை இலக்கிய நிகழ்வுகளில் இன நல்லிணக்கம் என்னும் போர்வையில் இலங்கைத் தமிழர்களின் கலைகள் என்ற அடையாளம்  நீக்கப்பட்டு இலங்கைக்கலைகள் என்னும் அடையாளம் ஏற்படுத்தப்படவேண்டும் என்னும் கருத்தியல் உருவாக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் ஈழத்தமிழர்களாக இருக்க விரும்பினோம் அது இல்லை என்கிறபோது குறைந்த பட்சம் இலங்கைத்தமிழர்களாகவாவது இருப்போம் எனப் போரில் நொந்த ஈழத்தமிழர்கள் நினைக்கும் போது  இந்த இன நல்லிணக்கம் என்கிற சமூக ஆக்கிரமிப்புப் போர்வை வருகிறது.
போர் ஓய்ந்து இனங்களுக்கிடையிலான ஊடாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பரஸ்பர அங்கீகாரமும் மரியாதையும் மிக்க கலை இலக்கிய ஊடாட்டம் இனங்களுக்கிடையில் மிகவும் அவசியமானது.
ஆனால் ஒரு இனத்தின் அடையாளங்களை மட்டும் அழித்து விட முனையும் போக்கின் பெயர் இன நல்லிணக்கம் அல்ல. உண்மையான சனநாயகம் இல்லாத பல்லினச் சமூகங்கள் வாழும் நாட்டில் சிறுபான்மை இனங்கள் தமது  அடையாளங்களை இழந்து வருகின்றன. துரதிருஸ்ட வசமாக நாங்களும் அத்தகைய இனமாகி விட்டோம்.
இதேவெளியில்  இந்திய மற்றும் மேற்குலக கலாசாரத்தின் தாக்கங்களைக் கொண்ட ஈழத்துப் பொழுது போக்கு கலை இலக்கியக்கியங்களின் வளர்ச்சியும் அவதானிக்கப்படுகிறது.  குறும்படத்தயாரிப்புகள் இசைத் தட்டுருவாக்கங்கள் என்பன நிகழ்ந்து வருகின்றன. இன்னும் சில வருடங்களுக்குள் இவை ஈழத்தமிழ்ச் சமூகத்தின் நுகர்வுக்கலாசாரத்தின் ஒருபகுதியாகிவிடும். ஆனால்  இவை தென் இந்திய அல்லது மேற்கத்திய அசுரப் பொழுது போக்கு கலை இலக்கியத்தின் ஆதிக்கத்துடன் போட்டி போடுமளவுக்கு வளர்ந்து கொள்ள முடியுமோ என்பது கேள்வி?
தொண்ணூறுகளில் உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய  இணையம் முள்ளி வாய்க்காலுக்கு பின்பு மிக வேகமாக ஈழத்துக் கலை இலக்கிய அசைவியக்கத்தின் தவிக்க முடியாத ஒரு பகுதியாகிவருகிறது. ஆனாலும் மேற்குலகைச் சேர்ந்த சமூகங்களளவுக்குத் தமிழ்ச் சமூகம் இலத்திரனியல் மயப்படவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளங்கள் வலைப்பூக்கள் ருவிற்றர் போன்றவை படைப்பாளிகள் தங்களை வெளிப்படுத்தும் களங்களாக மாறி வருகின்றன. நுகர்தல் ஒருமித்த கருத்துக்களைக் கொண்டவர்கள் குழுக்களாகச் சைபர் வெளியில் இணைதல் உரையாடுதல் என்பதுடன் இந்த அசைவியக்கம் எங்கள் சூழலில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கலின் பின்பு  ஈழத்துக்கலை இலக்கிய அசைவியக்கத்திற்கு பன்முகமான ஒரு வெளி கிடைத்திருக்கிறது. இது இலங்கையின் பிற்போக்குப் பேரினவாத அரசு தந்துள்ள வெளி அல்ல பதிலாக ஒரு முகமான தமிழ்த்தேசியவாதம் மறுத்திருந்த வெளி. இந்த வெளி மண் விடுதலை என்ற ஒற்றைப்பரிமாணத்துள் மறைந்திருந்தது. ஆனால் இதே வெளியை இலங்கையின் பிற்போக்குப்பேரினவாத அரசு இன நல்லிணக்கம் என்னும் போர்வையால் மூட முயற்சிக்கிறது.
இந்தப்பன்முகமான வெளியை நாங்கள் எந்தக்காரணம் கொண்டும் இழக்கக்கூடாது. ஏனைய இனங்களின் முற்போக்கு சக்திகளுடனா ஊடாட்டம் எமக்குள் நிலவும் பிற்போக்குத்தனங்களுக்கெதிரான போராட்டம் எமது விடுதலைக்கான போராட்டம் என யாவும் இந்த வெளியிலேயேதான் நிகழ வேண்டும்.
வலிகளைத் தாங்கிக்கொண்டும் அடக்கு முறையை எதிர்த்துப் போராடிக்கொண்டும் சுயவிமர்சனத்துடனும் இந்த வெளியில் நாங்கள் இருத்தல் வேண்டும் இந்த வெளியை இனிவரும் கால ஈழத்து கலை இலக்கிய அசைவியக்கம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வெளி வெறும் அதிகார வெளி அல்லஒடுக்கப்படுபவர்களுக்கான ஒளியின் வெளி
தேவ அபிரா