பின்பற்றுபவர்கள்

மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மே, 2012

அமெரிக்காவின் பாதுகாப்புக்கான புதிய மூலோபாயத்தில் ஆசியா குவிமையப் படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கான புதிய மூலோபாயத்தில் ஆசியா குவிமையப் படுத்தப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் பாதுகாப்புக்கான புதிய மூலோபாயத்தில் ஆசியா குவிமையப் படுத்தப்பட்டுள்ளது.
 ஆசியப்பிராந்தியத்தில் உருவாகும் புதிய அதிகாரக் கூட்டணிகளை விளங்குவதற்கு கிழ்வரும் மொழிபெயர்ப்புக் கட்டுரை உதவிசெய்யும். இந்த அதிகாரக் கூட்டணிகளுக்கிடையிலான மோதலையும் இவற்றின் இயங்கியலையும் உன்னிப்பாக அவதானித்து விளங்குவது தமிழர்களின் அரசியற்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்.

US New Defense Strategy focuses Asia: Nations tied to China need re-thinking
Daya Gamage – Asian Tribune Foreign News Desk
Washington, DC. 07 January (Asiantribune.com)

ஆசியா மீது தனது முதன்மையானதும் முழுமையானதுமான கவனத்தைத் திருப்பியிருக்கும் அமெரிக்கா சீனாவை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நாடாக இனம் கண்டுள்ள அதேவேளை தனது மூலோபாயத்தில் இந்தியாவுடனான தனது நீண்ட கால உறவுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் சனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இணைந்து வெளியிட்ட அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியை அவதானிக்கும் போது நீண்ட காலப் போக்கில்  அதன் வளர்ச்சியானது அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடையங்களில் பல்வேறு வகைகளில் தாக்கம் செலுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது."
சீனாவை தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எடுத்துக் கொண்டு ஆசியாவை முதன்மைப்படுத்தி பென்ரகன்வகுத்துக் கொண்டுள்ள புதிய பாதுகாப்புக்கான மூலோபாயத்தை  வெளிப்படுத்தும், பென்ரகனுக்கு அரிதான விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஒபாமா அவர்களால் வெளியிடப்பட்ட   ஆவணத்தில்   கீழ்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது தொலைநோக்குக் கொண்ட மூலோபாயத்தில் இந்தியாவைத் தனது நீண்ட கால நண்பனாக வைத்திருப்பதற்கு முக்கியமளித்து செயற்பட்டுவருகிறது.  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார நலன்களின் நங்கூரமாக  இந்தியா விளங்குமென்பதால் அதன் வல்லமைக்கு அமெரிக்கா உதவி அளிக்கும்.மேலும் இந்துசமுத்திரத்தின் கடலோரங்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் நாடாகவும் இந்தியா விளங்கும்"
"அமெரிக்காவின் உலகத் தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளல்: 21ம் நூற்றாண்டில் பாதுகாப்பு திட்டங்களில் முன்னுரிமை பெறுபவை" என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த ஆவணத்தில் நீண்ட காலப் போக்கில் சீனாவை தனது பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக அமெரிக்கா இனம் கண்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலவ வேண்டும் என நாங்கள் இருவரும்(அமெரிக்காவும் சீனாவும்) வலிமையாக விரும்புகிறோம். அத்துடன் கூட்டுறவு அடிப்படையிலான பரஸ்பர உறவை உருவாக்குவதற்கும் விருப்பத்துடன் இருக்கிறோம்.  ஆயினும் சீனாவின் இராணுவ வலிமையின் வளர்ச்சியானது அந்தப் பிராந்தியத்தில் தேவையற்ற இராணுவ முரண்பாடுகளை உரசல்களை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக இருக்கக்கூடாது.  சீனா தனது இராணுவக் கொள்கை வகுப்பில் இந்த உரசல்களை தவிர்க்கும் மூலோபாயத்தையும் கூடவே கொண்டிருக்க வேண்டும் என அந்த ஆவணம் மேலும் தெரிவிக்கிறது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க சனாதிபதி வெளிப்படுத்திய பாதுகாப்புக்கான மூலோபாயத்தில் ஆசியாவில் அமெரிக்க துருப்புக்களின் வலிமையான பிரசன்னத்தையும் வலியுறுத்தி இருந்தார்.

பழுதடைந்து வரும் அமெரிக்காவுடனான உறவுகள் காரணமாகப் பாகிஸ்தான் சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதுடன் சீனாவுடன் தந்திரோபாய ரீதியான உறவுகளை ஏற்படுத்த முனைந்தும் வருகிறது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கான 700 மில்லியன் டொலர் இராணுவ உதவியை கடந்த மாதம் நிறுத்திவிட்டிருந்ததையும் இங்கு நினைவு கூரலாம்.
பாகிஸ்தானின் தலைமை இராணுவத் தளபதி  சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்காகத் தற்போது சீனா சென்றுள்ளார்.
இன்னுமொரு தென்கிழக்காசிய நாடான இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு உதவியதன் காரணமாக சீனாவை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளது.  இந்த விடையத்தில் மேற்குலகும் அமெரிக்காவும் இலங்கைக்கு உதவுவதில் பின்நின்றதும் இதற்கு ஒரு காரணமாகும்.
கடந்த 2009 ஆண்டு மே மாதத்தில் இலங்கை சீனாவினதும் பாகிஸ்தானினதும் உதவியுடன் 26 வருடங்களின் பின்பு விடுதலைப் புலிகளை அழித்தது.

சீனாவுக்கு மிக நெருக்கமாக வந்ததில் இருந்து இலங்கை சீனாவின் உதவியுடன்  பாரிய கட்டுமானத்திட்டங்களைச் செய்துள்ளது. குறிப்பாகத் தென் ஆசியக் கடற்பிராந்தியத்தின் முக்கியமான கடல் வழியில் அமைந்திருக்கும் அம்பாந்தோடடைத் துறைமுகத்தில் ஆழ்கடல் துறைமுகமொன்றை அமைத்ததன் மூலம் சீனா அமெரிக்காவை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
ஆசியா தொடர்பான அமெரிக்கக் கொள்கைகள் மாற்றமடைந்துள்ளதால் சீனாவுடன் நெருக்கமாக உறவுகளைப் பேணிவரும் நாடுகள் சீனாவுடனான தமது உறவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற செய்தியும் அந்த ஆவணத்தில் வளங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2009 இல் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனற்சபையின் குழு அமெரிக்க இராசாங்கத்திணைக்களத்தை இலங்கையை சீனாவை நோக்கி தள்ள வேண்டாம் என எச்சரித்திருந்தது.  ஆசியாவில் பேணப்படவேண்டிய ஒட்டுமொத்தமான அமெரிக்க நலன்களுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை முக்கியமானது என அக்குழு மேலும் எச்சரித்திருந்தது. எட்டுப் பக்கங்களைக் கொண்ட  அந்த ஆவணத்தில் உள்ள  முக்கியமான ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.

மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் தொடங்கி கிழக்கு ஆசியா மற்றும் இந்து சமூத்திரப் பிராந்தியத்தினூடாகத் தென் ஆசியா வரைக்கும் பரவிக் கிடக்கிற ஒரு வளைவினுள் நிகழும் விடையங்களுடன் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ நலன்கள் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.  இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கான சந்தர்ப்பங்களும்  சவால்களும் ஒன்றாக இணைந்து கிடக்கின்றன..
அமெரிக்க இராணுவம் உலகத்தின் பாதுகாப்புக்காக பங்களித்துக் கொண்டிருக்கும் அதே நேரம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தினை மீளச் சமநிலைப்படுத்தும் அவசியத்தை உணர்ந்துள்ளோம். ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் எமது ஆசிய நண்பர்கள் மற்றும் முக்கிய பங்காளிகளுடனான உறவு முக்கியமானதாகும். அதுமட்டுமன்றி எற்கனவே உள்ள எமது கூட்டணிகளையும் நண்பர்களையும் வலுப்படுத்தவும் செய்வோம் என்னெனில் இது ஆசிய பசுபிக் பாதுகாப்புக்கான உயிரோட்டமான அடித்தளத்தைத் தரும்.
மேலும் நாங்கள் எங்களது கூட்டுறவு வலைஅமைப்பை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் புதிதாக மேலெழுந்துவரும் நண்பர்களுக்கும் விஸ்தரிக்க விரும்புகிறோம்.  இதன் மூலம் எங்களுக்கும் அவர்களுக்குமான பொதுவான நலன்களை பேணும் வல்லமையையும் எங்கள் அனைவரினதும் கொள்ளளவையும் அதிகரிக்க முடியும். அதுமட்டுமல்ல அமெரிக்கா தனது தொலைநோக்குக் கொண்ட மூலோபாயத்தில் இந்தியாவைத் தனது நீண்ட கால நண்பனாக வைத்திருப்பதற்கு முக்கியமளித்து செயற்பட்டுவருகிறது.  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார நலன்களின் நங்கூரமாக  இந்தியா விளங்குமென்பதால் அதன் வல்லமைக்கு அமெரிக்கா உதவி அளிக்கும்.மேலும் இந்துசமுத்திரத்தின் கடலோரங்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் நாடாகவும் இந்தியா விளங்கும்
அமைதியைப் பேணுவதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் தடங்கலற்ற வர்த்தகம் என்பவற்றை இந்தப் பிராந்தியத்தில் பேணுவதற்கும் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெல்வாக்கைப் பேணுவதற்கும் அடிப்படையானதாக அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தையும் கொள்ளவையும் இந்தப்பிராந்தியத்தில் சமநிலையுடன் பேணுவது தேவையாக இருக்கிறது.  நீண்ட காலப் போக்கில் இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சி அமெரிக்காவுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகளில் மீது பல்வேறு விதமான தாக்கங்களை உண்டுபண்ணக் கூடியதாக அமைகிறது. கிழக்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலவ வேண்டும் என நாங்கள் இருவரும்(அமெரிக்காவும் சீனாவும்) வலிமையாக விரும்புகிறோம். அத்துடன் கூட்டுறவு அடிப்படையிலான பரஸ்பர உறவை உருவாக்குவதற்கும் விருப்பத்துடன் இருக்கிறோம்.  ஆயினும் சீனாவின் இராணுவ வலிமையின் வளர்ச்சியானது அந்தப் பிராந்தியத்தில் தேவையற்ற இராணுவ முரண்பாடுகளை உரசல்களை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக இருக்கக்கூடாது.  சீனா தனது இராணுவக் கொள்கை வகுப்பில் இந்த உரசல்களை தவிர்க்கும் மூலோபாயத்தையும் கூடவே கொண்டிருக்க வேண்டும்.
பிராந்தியங்களுக்குள் தங்குதடையின்றிப் பிரவேசிக்கவும் அதேவேளை சர்வதேசச் சட்டங்களை மதித்துக்கொண்டு பிரதேச இறையாண்மைக்கு குந்தகம் செய்யாதவாறு செயற்படவும் எங்களுக்குள்ள சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சகல முதலீடுகளையும் நாங்கள் செய்வோம்
எமது பங்காளிகளுடனும் நண்பர்களுடனும் மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்வதன் மூலம் நாங்கள் தெளிவான விதிகளுக்கு உட்பட்ட ஒரு உலக ஓழுங்கை உண்டாக்குவோம்.  இந்த ஒழுங்கு புதிதாக வரும் அதிகாரசக்திகள் அமைதியான முறையில் மேற்கிளம்பும்  அதேவேளை பிராந்தியங்களின் ஸ்திரத்தன்மை பேணப்படுவதையும் உறுதி செய்யும்.  இதன் மூலம் பொருளாதாரம் பன்முகப்படுவதுடன் பாதுகாப்பு தொடர்பான திட்டவட்டமான  பரஸ்பர ஒத்துழைப்பும் ஏற்படுத்தப்படும்.
சைபர் வெளியிலும் விண்வெளியிலும் வினைத்திறனுடன் தொழிற்படுதல்
நவீன இராணுவம் ஒன்று சைபர் வெளியிலும் விண்வெளியிலும் பாதுகாப்பான உள்ளிடலையும் தங்கு தடையற்ற அனுமதியையும்  கொண்டிருக்க வேண்டியதுடன் நம்பகத்தன்மையான தகவல்களையும் தகவற்பரிமாற்ற வலையமைப்பையும் கொண்டிருக்க வேண்டும்.  இல்லாவிடின் நவீன இராணுவத்தினால் வினைத்திறனுடன் செயற்படமுடியாது. இன்றைய விண்வெளித் திட்டம் மற்றும் அதனை பேணும் உள்நாட்டு மற்றும் சர்வ தேசக் கட்டமைப்புக்கள் பல்வேறு விதமான பயமுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.  இந்தத் திட்டங்களை உடைத்தல் இடையீறு செய்தல் அல்லது அழித்தல் போன்ற பயமுறுத்தல்களுக்குச் சாத்தியமுள்ளது.  எனவே அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களம் தனது உள்ளூர் மற்றும் சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து சைபர் வெளியையும் விண்வெளியையும் அதன் வலை அமைப்புக்களையும் பாதுகாப்பதற்கான அதி நவீனமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு முதலீடு செய்யும்.

சைபர் வெளியிலும் விண்வெளியிலும் வினைத்திறனுடன் தொழிற்படுவது என்று கூறுவதன் மூலம் அமெரிக்கா உலகின் ஏனைய பகுதிகளைப் போல ஆசியாவிலும் தனது ஆளில்லாத வேவு விமானங்களைப் பயன்படுத்தி இந்தப் பிராந்தியத்தைக் கண்காணிப்பதை தீவிரப்படுத்தப் போவதை அறிவிகிறது.

இதே வேளையில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து, தங்களுக்கிடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதுடன் தங்களுக்கிடையிலான இராணுவ உறவுகளைப் புதிய ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லப்போவதாக  கடந்த ஜனவரி 5 இல் பாகிஸ்தானின் இராணுவத்தளபதி கயானி (Ashfaq Parvez Kayani) சீனாவிற்கு விஜயம் செய்து சீன உயர்மட்ட இராணுவத் தளபதிகளைச் சந்தித்துப் பேசியதன் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.  இதனை சீன அரசால் நடத்தப்படும் சின்குவா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. 
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வியாங் குவாஸ்லீ(Liang Guanglie) சீனா பாகிஸ்தானுடனான மரபார்ந்த நட்புணர்வைப் பெறுமதியானதாகக் கணிக்கிறது என அவ் அறிக்கையில் கூறி இருந்தார்.  மேலும் சீனா தேசியப் பாதுகாப்பு என்ற தளத்தில் பாகிஸ்தானுடன் நடைமுறைச் சாத்தியமான அதேவேளை வினைத்திறன் மிக்க கூட்டுறவை வளர்க்க விரும்புகிறது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இரண்டு நாடுகளுக்கிடையிலும் நிலவும் இந்த எல்லாக்கால நிலையிலும்(எந்தச் சூழ்நிலையிலும்) நீடிக்கக் கூடிய பரஸ்பர உறவானது இரண்டு நாடுகளினதும் அடிப்படையான நலன்களுக்கு அவசியமானதும் தந்திரோபாய அடிப்படையிலான தெரிவுமாகும் எனச் சீனப் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். 
சீனா பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத் தன்மையையும் பாகிஸ்தானுடன் இணைந்து பாதுகாக்கும் எனவும் இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தருந்தார்.
பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் கயானி (Gen Ashfaq Parvez Kayani) தனது பங்குக்கு சீனாவுடனான உறவில் பாக்கிஸ்தான் பெரும் முக்கியத்துவத்தை இணைத்துக் கொண்டுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் இரு நாடுகளுக்கும்  பொதுவாக பெருமளவான நலன்கள் உள்ளன என்றும்  அவர் கூறியுள்ளார்.
இவற்றுக்கு முன்பதாக பாகிஸ்தானின் இராணுவத்தளபதி  சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் துணைத் தலைவரான ஜெனரல் மா ஷீஒசியான்(Ma Xiaotian)அவர்களுடனும் பேச்சுவார்தைகளை நடாத்தி இருந்தார்.
இரண்டு நாடுகளும் தமக்கிடையில் இராணுவப்பாதுகாப்பு பயிற்சிகள் ஆட்புலப்பயிற்சிகள் புலமைப்பரிமாற்றங்கள் உபகரண உருவாக்கம் மற்றும் கட்டமைப்பு போன்ற விடையங்களிலும் மரபு வழியற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இணைந்து செயற்படப்போவதை வெளிப்படுத்தியுள்ளன.

நன்றி: Asian Tribune
http://www.asiantribune.com/news/2012/01/06/us-new-defense-strategy-focuses-asia-nations-tied-china-need-re-thinking

ராஜபக்ஸ் குடும்பத்தினதும் அவர்களினது கல்வித்தகைமைகளினதும் காதை..




உவிந்து அவர்கள் இக்கட்டுரையில் அலசுகிற விடையங்கள் உதிரியாகச் செய்திகளாக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தச் செய்திகளை ஒருங்கிணைத்து இலங்கையின் அரசியற் சூழலை அவர் ஆராயும் முறையையும் அவர் சுட்டும் விடையங்களையும் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக  இந்தக்கட்டுரை இங்கே மொழிபெயர்க்கப்பட்டுத்தரப்படுகிறது-ஆ-ர்
1999 ம் ஆண்டு ராவய அந்த ஆண்டு நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருந்தது.  அக்கட்டுரையை எழுதியவர் இலங்கையின் இன்றைய சனாதிபதியான மகிந்த ராஜபக்ச எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மறைந்த ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளை ஒருநாள் ராவயவில் வந்த அந்தக் கட்டுரையை யார் எழுதியதென்று என்னிடம் கேட்டார்.  அதனை ராஜபக்சவே எழுதினார் என்று நான் கூறினேன். உடனே அவர் சத்தமிட்டுச் சிரித்தார். அங்கிருந்தவர்கள் அனைவரும் இதனையிட்டு உடனே ஆர்வமடைந்தனர்.  நீங்கள் ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள் என எல்லோரும் அவரிடம் கேட்டனர்.  உடனே அவர் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் இருந்த நடைபாதையில் சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைத்து,  “கவனியுங்கள் கவனியுங்கள்  ராவயவில் வந்த அந்தக்கட்டுரையை மகிந்த அவர்களே எழுதியதாக உவிந்து கூறுகிறார். கேளுங்கள்! சாதாரண தரக்கணிதப் பரீட்சையில் சித்தியடையாத ராஜபக்ச எப்படிப் புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரையை எழுத முடியும்முட்டாள்தனமாக இருக்க வேண்டாம்.  என்னுடன்  அவர் சட்டக் கல்லூரியில் படித்த போதே அவரது கொள்ளளவு என்னவென்று எனக்குத் தெரியும்.  சட்டக் கல்லூரிச் சோதனைகளை அவர் எப்படி எதிர்க்கொண்டு சித்தியடைந்தார் என்பது கூட எனக்குத் தெரியும். கருணாஜீவ அல்லது அனில் பெர்னான்டோ தான் இந்தக் கட்டுரையை அவருக்காக எழுதியிருக்க வேண்டும்”. 
கடந்த கிழமை விக்கிலீக்சை மேற்கோள் காட்டி கொழும்பு ரெலிகிராப், பேர்சி மகிந்த ராஜபக்ச தனது க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சித்தியடையவில்லை என்னுமொரு செய்தியை பிரசுரித்திருந்தது.
இரகசியமானது எனக் குறிப்பிடப்பட்டு அமெரிக்க தூதுவராக இருந்த ஜெவ்ரி ஜே. லுன்ஸ்ரெட் (Jeffrey J. Lunstead.) இனால் 21 நவம்பர் 2005 ல் எழுதப்பட்டிருந்த அந்தக் குறிப்பில் ராஜபக்ஸவை  சாதாரணமா ஒரு நாட்டுப்புறச் சட்டத்தரணி (“JUST A COUNTRY LAWYER”) என விபரித்து மகிந்த ராஜபக்ச தொடர்பான கீழ்வரும் தனிப்பட்ட தகவல்களை ஜெவ்ரி எழுதியிருந்தார்.
 “ராஜபக்ஸ 18 நவம்பர்  1945 ம் ஆண்டு  அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெருக்கட்டிய என்னுமிடத்தில் பிறந்தார்.  இவர்  (சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான டி.ஏ. ராஜபக்சவின் எட்டு மகன்களுள் மூன்றாவதாவார்.  (மூத்த சகோதரரான அமல் ராஜபக்சவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராவார்.  அதேவேளை அமெரிக்காவில் வசித்து வந்த கோதபாயவும் பசிலும் தமது சகோதரரின் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக இலங்கைக்கு திரும்பி இருந்தனர்.) ராஜபக்ச காலிமாவட்டத்தில் றிச் மொண்ட் (Richmond College) கல்லூரியில் படித்தார்.  (அங்கே அவர் படிக்கும் காலத்தில் அவரது சிங்கள மொழி அறிவை வளர்க்கும் முகமாக அவரது தந்தையார் அவருக்க பிரத்தியோகமான சிங்கள மொழி ஆசிரியரை ஒழுங்குசெய்ய வேண்டியும் இருந்தது.) அதற்குப் பிற்பாடு நாலந்தாக் கல்லூரியிலும் தேர்ஸ்ரன் கல்லூரியிலும் ராஜபக்ச தனது கல்வியைத் தொடர்ந்திருந்தார்.  ஆனாலும் அவர் அவரது க.பொ.த உயர்தரக்கல்வித்தரத்தை வெற்றிகரமாக முடித்திருக்கவில்லை.  பின்னர் சிறீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தில் எழுதுவினைஞராக கடமையாற்றிய அவர் 1976ம் ஆண்டு அதனைக் கைவிட்டு மறைந்த தனது தந்தையின் அம்பாந்தோட்டைப் பாராளுமன்ற ஆசனத்திற்காக தேர்தலில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்கு சென்றார்.அக்காலத்தில் போது நீதி அமைச்சரினால் எடுக்கப்பட்ட ஒரு முடிவின்படிக்கு  பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் உரிய தகைமைகளைத் கொண்டிராத போதும் சட்டக்கல்லூரிக்கு சென்று சட்டப் படிப்பைத் தொடங்க முடியும் என்ற சலுகை அளிக்கப்பட்டிருந்தது. ராஜபக்ஸ அச்சலுகையைப்  பயன்படுத்திச் சட்டக் கல்லூரிக்குச் சென்று 1974ம் ஆண்டு தனது சட்டப்பபடிப்பை அங்கே முடித்தார்.
ராஜபக்சவின் கல்வித்தகமை குறித்து வெளிவந்த அந்தக் கட்டுரைக்கு கொழும்பு ரெலிகிராபில் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள வந்திருந்தன.  ராஜபக்சவின் கல்வித்தகமைகள் குறித்து விவாதிப்பது சரி எனவும் பிழை எனவும் இருமுகாம்களாக அவை இருந்தன.
இலங்கையில் ஏராளமான அரசியல்வாதிகளுக்கு முறையான கல்வி அறிவு இல்லை.  இப்படி இருக்கும் போது ராஜபக்சவுக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும் என்பதே ராஜபக்சவின் கல்வித் தகைமை குறித்து விவாதிப்பதை எதிர்த்தவர்களின் பிரதான வாதமாக இருந்தது.
அவரது கல்வித்தகைமை என்னவாக இருந்தாலும் அது பிரச்சினை இல்லை என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் அவரது உண்மையான கல்வித் தகமை என்ன என்பதைப் பொதுமக்கள் அறிவதில் என்ன பிழை இருக்கமுடியும்.  அதுமட்டுமல்ல அவரே அவரது கல்வித் தகமைகளை பகிரங்கப்படுத்தியிருந்தால் அது அவரது நேர்மையையும் புலப்படுத்தியிருக்கும்.  மறுபுறத்தில் ராஜபக்ச போன்ற ஒருவருக்கு நல்ல கல்வி அறிவுள்ள ஆலோசகர்களும் தேவைப்படும்.  ஆனால் அவரது பிரதான சனாதிபதி ஆலோசகரின் தகைமை என்ன?
ஜனாபதியின் பிரதான ஆலோசகரும்  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் அவரது சகோதரருமான பசில் அவர்கள் காலியில் அவரது பாடசாலையில் இருந்து பலதடைவைகள் வெளியேற்றப்பட்டவராவார்.
இன்னும் ஒரு அமெரிக்கத் தூதுவரான றொபேட் ஒ. பிளேக் மே 15, 2007இல் பரிமாறப்பட்ட இரகசியக்குறிப்பொன்றில் பின்வருமாறு எழுதுகிறார்.
“ பசில் தனது குறைவான கல்வித் தகைமைகளையும் சம்பந்தப்பட்ட துறைகளில் தனக்குள்ள  அனுபவக்குறைவுகளையும் கருத்தில் கொள்ளாமல் சனாதிபதி அவர்களுக்குப் பல்வேறு விடையங்களில் ஆலோசனைகளை வழங்குவதாக அமெரிக்கத் தூதரகத்துடன் தொடர்புடையவர்கள்  தெரிவிக்கின்றனர். பசிலும் மாத்தறையிலும் காலியிலும்  கல்வியைத் தொடர்ந்து முடித்துக்கொண்டவராவார்.  காலியில்டித்துக்கொண்டிருந்த போது அவர் பலமுறை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்ததை அவரது நண்பர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.”( இக்குறிப்பை முழுவதுமாகப்பார்ப்பதற்கு கொழும்பு ரெலிகிராபை பார்க்கவும்.)
னாலுமென்ன இவர்கள்தான் நாட்டை ஆள்கிறவர்கள்.
பிளேக் மேலும் எழுதுகிறார்
 “இலங்கைச் சுதந்திரக் கட்சியில் உள்ள பலமானவர்கள் ராஜபக்சவுக்கு விசுவாசமானவர்களாக இல்லாத படியால் கட்சியினுள் உள்ளவர்களை விடவும் தனது சதோதரக்களையே அவர் கடுமையாக நம்ப வேண்டிய நிலமையில் உள்ளார். ஜனாதிபதி பல நேரங்களில் முடிவுகள் எடுப்பதைத் தள்ளி வைப்பதுடன் பல் சந்தர்ப்பங்களில்  முடிவுகளை எடுப்பதும் இல்லை.  அதுமட்டுமன்றி தனது சகோதரர்களிம் அளவுக்கதிகமான பொறுப்புக்களையும் அதிகாரத்தையும் கொடுத்ததற்காவும் பல சந்தர்ப்பங்களில் பிரபலமற்ற முடிவுகளை எடுப்பதாலும் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாகிறார். உலகத்திலேயே மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்ட நாடாக இலங்கை நிகழ்கிறது.  53 அமைச்சர்கள்.  இந்த அமைச்சுக்கள் ஒன்றுடன் ஒன்று செருகப்பட்டவையாகவும் அவற்றின் செயற்பாடுகள் குறித்த தெளிவான வரையறை அற்றவையாகவும் உள்ளன.  ஆனால் இவ்வாறாக அமைச்சுக்களைத் தோற்றுவித்ததன் மூலம் ராஜபக்ச யாவற்றையும் தனக்குக்கீழ் கொண்டு வந்து அதிகாரத்தை மையப்படுத்தி உள்ளார். கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த யாப்பு மாற்றங்கள் மூலம் இலங்கையில் அதிகாரமானது மிகப் பெருமளவுக்குச் சனாதிபதியிடம் வந்து சேர்ந்து விட்டது. இதன் விளைவாக மிக முக்கியமான விடையங்கள் யாவும் சனாதிபதியாலும் அவரது ஆலோசகர்களாலும் மட்டுமே கையாளப்படுகின்றன.  மைச்சர்களுக்கு அங்கு வேலையில்லை. நீதி, பாதுகாப்பு, துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற அமைச்சுக்களை சனாதிபதி தன்னகத்தே வைத்திருக்கிறார்.  இதனால் 100 க்கும் அதிகமான திணைக்களங்களையும் நிர்வாகக் கட்டமைப்புக்களையும் சனாதிபதி தனது நேரடி அதிகாரத்தின் கீழேயே வைத்துக் கண்காணிக்கிறார்  மேலும் சனாதிபதியின் வரவு செலவு  தொடங்கி நாட்டின் தேசிய வரவுசெலவுத் திட்டம்வரை ஏறத்தாள 60% தை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழே வைத்திருக்கிறார்.  சனாதிபதியினது  சகோதரர்கள் 2005ம் ஆண்டு வரையும் வெளிநாட்டிலேயே இருந்துள்ளனர்.  இதனால் அவர்களுக்கு இலங்கைப் பொதுசனங்களின் எண்ணக்கிடக்கையோ தெரியாது. இலங்கையின் உயர் குடியினரின் பரந்துபட்ட தொடர்பும் கிடையாது.  இவர்களுக்கு இலங்கையின் மிகச்சிறிய உயர் குழாத்துடனேயே தொடர்புகள் உள்ளன.  இதனால் தனிமைப்பட்டுள்ள இவர்கள் எல்லா முக்கியமான முடிவுகளையும்  தமக்குள்ளேயே எடுப்பதுடன் இம்முடிவுகள் இந்த நாட்டுமக்களினதோ இலங்கையின் உயர் குழாத்தினதோ அபிலாசைகளை பிரதிபலிப்பதுமில்லை. சனாதிபதி தனது மகனுக்கு அவரது சட்டக்கல்லூரி இறுதிச் சோனைகளை எழுதப் பிரத்தியேகமான குளிரூட்டிய அறையையும் இணைய வசதி கொண்ட கணணியையும் ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம் தனது மகனுக்கும் அபகீர்த்தியைப் ஏற்படுத்தியுள்ளார்.
2009 நவம்பர் 17இல் பரிமாற்றப்பட்ட இன்னுமொரு செய்தியில் அந்நாளய அமெரிக்க தூதுவரான பற்றீசியா புடெனிஸ் பின்வருமாறு எழுதுகிறார்.
இலங்கையில் பொருளாதார ரீதியான முடிவுகளை எடுப்பது என்பது நிதி அமைச்சிலேயே குவியப்படுத்தப்பட்டுள்ளது.  அவ்வாறு முடிவுகளை எடுக்கும்போது பல்வேறு அமைச்சுக்களினதும் தனியார்துறையினதும்  அபிலாசைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டே நிதி அமைச்சு பொருளாதார ரீதியான கொள்கை மாற்றங்களுக்குரிய முடிவுகளை எடுக்கும்.  (இலங்கையானது 100க்கு மேற்பட்ட அமைச்சுக்களை கொண்டிருப்பதுடன் இவற்றுள் பல வெறுமனே அரசியல் ரீதியான காரணங்களுக்காகவே தமது அலுவலகங்களைத் திறந்து வைத்துள்ளன.) ஏதாவது ஒரு அமைச்சு பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வரவிரும்பினால் முதலில் அது நிதி அமைச்சின் தேசிய திட்டமிடல் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறவேண்டும்.  ஆணைக்குழு அந்த மாற்றத்தை அனுமதிக்க விரும்பினால் முறைப்படியான அனுமதியை நிதி அமைச்சில் இருந்து பெறுவதற்கான வேண்டுகோளையும் அதுவே நிதி அமைச்சுக்கு அனுப்பும். இதுவே இலங்கையின் உண்மையான நடைமுறையாகவும் வழமையாகவும் இருக்கையில் இதனைப்புறந்தள்ளி தற்போது இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான முடிவுகள் யாவும் அடிக்கடி சனாதிபதியினாலும் அவரது சகோதரர்களாலும் அவர்கள் நம்புகின்ற ஒரு சில ஆலோசகர்களின் ஆலோசனையின் படிக்கு எடுக்கப்படுகின்றன. அரசுடன் இணைந்திருக்கின்ற சில வர்த்தகத் தலைவர்களும் புத்திஜீவிகளும் அரசின் முடிவெடுக்கும் முறைமை வெளிப்டையானதல்ல என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.   மிக முக்கியமான முடிவுகளை மிகக் சிறிய குழுவே (ராஜபக்சவும் அவரது சகோதரர்களும்) எடுக்கிறது என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
றொபேட் பிளேக் தனது இன்னுமொரு குறிப்பில் பசில் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்
தூதரகத்துக்குள்ள தொடர்புகளின் ஊடாகப்பெற்றுக் கொண்ட தகவல்களின்படி பசிலுக்கு நெருக்கமான ஆலோசகர் என்று யாரும் இல்லை எனவும் இலங்கையில் அவருக்கு நண்பர்களை விட எதிரிகளே அதிகமென்றும் அறியப்படுகிறது.  பசிலின்  மனிதர்களை விலைக்கு வாங்க முனையும் இயல்பு காரணமாகவே இது ஏற்பட்டது எனவும் அறியப்படுகிறது.  பசில் மகாவலி அபிவிருத்தி அமைச்சில் வேலை செய்த போது அங்கு நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு வேலைத் திட்டத்திற்கும் 10 வீதக் கையூட்டை பெற்றுக் கொண்டதால் கனவான் பத்து வீதம்(Mr. Ten Percent) என்ற பட்டப் பேரையும் பெற்றுக்கொண்டுள்ளார்.  பசில் தனது தற்போதைய அமைச்சிலும் இதே வகையான ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
2010 இல் நிகழ்ந்த சனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக தூதரக அதிகாரியான பற்றீசியா புடெனிஸ் பின்வருமாறு எழுதுகிறார்.
“சனாதிபதி ராஜபக்சவின் பிரதான அபிப்பிராயக் கணக்கெடுப்பாளரான சுனில்பெர்னான்டோ எமது தூதரகத்துடன் வேறுவிடையங்களில் நல்ல தொடர்பைப் கொண்டுள்ளவரான இவர்- தான் செய்த சனாதிபதி பற்றிய முதலாவது அபிப்பிராயக் கணக்கெடுப்பை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.  அதன்படிக்கு 85 வீதமானவர்கள் ராஜபக்ச குடும்பத்தை ஊழல் நிறைந்ததாகவும் 80 வீதமானவர்கள் ராஜபக்சவையும் ஊழல் நிறைந்தவராகவும் கருதுவதாகக் கண்டு கொண்டதாகத் தெரிவித்தார்.
இந்த அளவில்தான் உலகளாவிய ரீதியில் எமது நற்பெயர் இருக்கிறது. ஒருவேளை இலங்கையின் சீனத்தூதரத்துடனான தொடர்பாடலையும் விக்கிலீக்ஸ் செய்வது போல இடைவெட்டி எடுக்க முடியுமென்றால் இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்கள் வெளிவரலாம்.
றொபேட் பிளேக் எழுதிய இன்னுமொரு கடிதத்தில் சகோதரர்களுக்கிடையேயான முரண்பாடு என்ற உபதலைப்பில் பின்வருமாறு எழுதுகிறார்
பசிலுக்கும் கோத்தபாயவுக்கும் இடையில் உறவு நன்றாக இல்லை பலர்  இருவரும் இணைந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.  அதுமட்டுமல் இருவரும் சனாதிபதிக்கு முரண்பாடான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.  ஊதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுகக் கட்டுமானம் தொடர்பாக இரு சகோதரர்களும் இருவேறு சீன நிறுவனங்களைச் சனாதிபதிக்கு பரிந்துரை செய்ததாகவும் இறுதியில் இரு சகோதரர்களையும் திருப்தி செய்வதற்காக கட்டுமானப்பணிகளை இரண்டாகப் பிரித்து இரண்டு சீன நிறுவனங்களுக்கும் சனாதிபதி வழங்கியதாகவும் அறியமுடிகிறது.
எனவே இந்த விதமான படிப்பறிவற்ற ஊழல் நிறைந்தவர்களுடன் நாடு எப்படி இணைந்து செல்லமுடியும்
இலங்கையின் முன்னை நாள் சனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கு அருவருப்பானது என்றும் ராஜபக்ச குடும்பத்தைப் படிப்பறிவற்ற பண்பாடற்ற பொறுக்கிகள் எனக் குறிப்பிட்டதாகவும் பறிறீசியா அவர்கள் வோசிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் தெரிவிக்கப்பட்டிருந்நது.  இதனைப் பின்னர் சந்திரிக்கா அவர்கள் தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்துமிருந்தார். சந்திரிக்கா, தனது பதவிக்காலத்தின் பின் இலங்கையின் அரசியற் சூழ்நிலை பயமுறுத்துவதாகவும் பழிவாங்கும் தன்மை மிக்கதாகவும் மாறிவிட்டதாகவும் குறைப்பட்டிருந்தார்.  மேலும் ராஜபக்ச மக்களின் எண்ணங்களிற் சேறடித்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சிலர் சந்திரிக்காவின் இந்த விமர்சனம் அவரது பிரபுத்துவச் சிந்தனையில் இருந்து வருவதாகவும் ராஜபக்ச போன்ற சாதாரணமான ஒருவரின் அரசியற்செல்வாக்கு குறித்த உயர்குடியின் சந்தோசமின்மையில் இருந்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். அப்படியாயின் இவர்கள் கீழ்த்தட்டு வர்க்கத்தில் இருந்து வந்த தலைவரான சோமவன்ச அமரசிங்க போன்றவர்களின் ராஜபக்ச மீதான விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள்?
அமெரிக்கத்தூதரக அதிகாரியான பற்றீசியா இன்னுமொரு கேபிளில் பின்வருமாறு எழுதுகிறார்.
மரசிங்க ராஜபக்ச பற்றி மிகுந்த விமர்சனத்துடன் இருக்கிறார்.  வர் ராஜபக்ச மிகக் குறுகிய பார்வையைக் கொண்டிருப்பதாகவும் ராஜ பக்ஸ இலங்கையின்  அதிகாரம் மிக்க குடும்பமொன்றிலிருந்து வராதபடியால் மிகுந்த தாழ்வுச் சிக்கலைக் கொண்டிருப்பதாகவும் இதனால் அவர் எவரையும் நம்புவதில்லை எனவும் குறிப்பாகப் படித்தவர்களை நம்புவதில்லை எனவும் குறிப்பிடுகிறார்”
பிளேக்கின் இன்னுமொரு குறிப்பொன்றில்
 னாதிபதியின் ஆலோசகர் ஒருவர் எங்களுக்கு பின்வருமாறு கூறினார்.  உயர் அதிகார வர்க்கத்தில் அல்லது பிரபுத்துவ வர்க்கத்தில் இருந்த வராத சனாதிபதி ராஜபக்ச போன்ற ஒருவருக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று ஒரு புரட்சியாளனாக மாறிப் பிரபுத்துவ அதிகார நிலைப்பாட்டை உடைத்து அதிகாரத்ததை மக்கள் மட்டத்திற்கு எடுத்துச் செல்வது  அல்லது அந்த பிரபுக்களுள் ஒருவனாகவே மாறுவது.  ராஜபக்ச இந்த இரண்டாவது தெரிவைச் செய்துள்ளார்.  அவர் தனக்கென ஒரு பிரபுத்துவ வம்சத்தை உருவாக்க முனைகிறார்.  சனாதிபதியினுடைய மூத்தமகனான நாமல் ராஜபக்ச ராஜபக்சவின் வெற்றியினைத் தொர்வார் என அடிக்கடி கூறப்படுகிறது.  ஆனாலும் தூதரகத்தின் பிரத்தியேகமான தொடர்பாளர் ஒருவரின் தகவலின்படி சனாதிபதி இடைத்தேர்தல் ஒன்றை நடாத்துவதற்குப் பின்னடிப்பதற்குக் காரணம் நாமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் ஒரு பதவியை பெற்றுக்கொள்வதற்கு அதன்போது விரும்பியிருப்பதாகும்.”
ஆனால் துரதிஸ்டவசமாக தனது துடிப்பான  மகனும் முடிக்குரிய இளவரசனுமான நாமல் ராசபக்ஸவின் முகத்திலும் கரியைப்பூசுவதில் அவர் வெற்றிகண்டுள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் நாமலின் இறுதியாண்டுச் சட்டக்கல்லூரிச் சோதனைகளின் போது அவருக்கு இணைய வசதி கொண்ட கணணியையும்  குளிரூட்டப்பட்ட தனியான அறையையும் சோதனைக்கு பொறுப்பான அதிகாரிகள் வழங்கி இருந்தமை ஊடகங்களில் மிக முக்கியமான செய்தியாக இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாகக் காவற்துறைக்கும் சட்டக்கல்லூரி அதிபருக்கும் பின்னர் பிரதம நீதித்துறை அதிபருக்கும் நாமலின் சக பரீட்சை எழுதுனனான துசார ஜெயந்த முறைப்பாடுகளைச் செய்திருந்தார்.
இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் இதுபோன்ற விடையங்களைப் பகிரங்கப்படுத்தும் துசார ஜெயந்தவின் துணிவு  மீளவும் நிகழத்தேவையில்லை. ஏனெனில் அவர் தனது துணிவினால் உடல்ரீதியான சித்திரவதைகளை எதிர்கொள்ள நேர்ந்ததுடன் தனது முறைப்பாடுகளுக்கான சரியான நீதியையும் பெற்றுக்கொள்ளவில்லை.
சட்டக்கல்லூரியோ நீதிமன்றமோ அவருக்கு நீதியை வழங்கவில்லை
உயர்நீதிமன்றம் அவரது அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைத் துறைசார்ந்த நுட்பங்களின் பற்றாக்குறையைக் காரணம் காட்டித் தள்ளுபடி செய்துவிட்டது.
எழுதியவர்: உவிந்து குருகுலசூரிய Uvindu Kurukulasuriya
மொழிபெயர்ப்பு: தேவ அபிரா

நான் உரத்துப் பேசாவிடில் எமது தேசம் மௌனமாக்கப்பட்டுவிடும்…



இன்று உலகப்பெண்கள் தினம். ஆசிய நாடுகளில் பெண்களின் சமூக பொருளாதார நிலமைகள் இன்னமும் மோசமாகவே உள்ளன. ஆயினும் இங்கிருந்தும்  உறுதியான புரட்சிகரமான  குரல்களுடன் பெண்கள் எழுந்து வரவே செய்கின்றனர். இங்கே Joshua Barnes என்பவர் sampsoniaway.org என்னும் தளத்தில் எழுதிய கட்டுரை ஒன்றின் மொழிபெயர்ப்பினூடு  அவ்வாறான ஒரு பெண்மணியை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
பிற்போக்குத்தனமான சிங்களப்பெருந்தேசியவாதத்தின் சமூக பொருளாதார கலாசார இராணுவப்பிடிக்குள் தமிழர்கள் படிப்படியாக தமது சனநாயகத்தையும் சுதந்திரத்தையும் இழந்து வருவது போலவே இன்றைக்கு பல வருடங்களின் முன்பே தீபெத் தனது சுதந்திரத்தை சீனாவிடம் இழக்க நேர்ந்தது.
அசுரத்தனமான சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் தீபெத் தனது அனைத்து அடையாளங்களையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில்  என்ன நடக்கக்கூடுமென்பதனைத் தீபெத்தைப் பார்த்துப் புரிந்து  கொள்ளமுடியும்.
நான் விடையங்களை ஆவணப்படுத்தாவிடில் நான் உரத்து பேசாவிடில் எமது தேசம் மௌனமாக்கப்பட்டுவிடும்.வரலாறு மாற்றப்பட்டுவிடும்.புதிய தலைமுறைக்கு இவற்றை அறிந்து கொள்ள முடியாது போய்விடும். உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு இந்தத் தனிமனித ஊடகம் ஒரு ஆயுதமாகும். இதன் முடிவுவரையும் இதனை எடுத்துச் செல்வேன்
என்றும்
எனக்குப்பிரச்சனை வரலாம் ஆனால் அது பற்றி நான் கவலைப்படவில்லை. திபெத்தின் வரலாற்றையும் நிலைமைகளையும் இன்னும் இன்னும் அதிகமானவர்கள் அறிந்து கொள்ளவேண்டும். மாற்றம் இப்போதோ அல்லது காலம் தாழத்தியோ வரலாம் ஆனால் மனம்தளராத முயற்சியே மாற்றத்திற்கான திறவுகோல் "
என்றும் கூறுகிற வூசரின் குரல் எங்களுக்காகவும் கூறப்பட்டது போன்றிருக்கிறதல்லவா?
சீனாவில் சிறுபான்மை இனங்களின் சனநாயக ரீதியான போராட்டங்கள் மிகமோசமான முறையில் ஒடுக்கப்படும் நிலையில் சீனாவினுள் இருந்து கொண்டு தீபெத்தின் மீதான ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுக்கும் சீனமொழி பேசும் ஒரு பெண்மணியைப் பற்றிய அறிமுகமே இது.
-      தேவ அபிரா

தெசெரிங் வூசர்: சீனப்பெருஞ்சுவரின் பின்னாலிருந்து பயமற்ற அறிக்கையிடல்
[Tsering Woeser: Fearless Reporting Behind China’s Great Firewall-
Joshua Barnes]
1966 ம் ஆண்டு பிறந்த வூசர் வலைப்பதிவர்,கவிஞர் கட்டுரையாளர் எனப்பல பரிமாணங்களைக் கொண்டவர். வூசர்அவர்களுடைய இணைய ஊடகத்தொழிற்பாடு அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பல விருதுகளையும்  பெற்றுத் தந்துள்ளது.  அதே வேளை சீன அரசின் தொந்தரவுகளுக்கும் தொடர்ச்சியான கண்காணிப்புக்கும் அவர் உட்பட்டுள்ள சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.  ஆனால் சீன அரசின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களினால் அச்சமடையாது  தடுத்து நிறுத்தப்படமுடியாத மனவிருப்புடன் அவர் தொடர்ந்தும் எழுதி வருகிறார். இன்றைய திபெத்தைப் பற்றிய உண்மைகளை வெளியுலகுக்குக் கொண்டு வருகிறார்.
தன்னைத் தனிமனித இணையச் செய்தி நிலையம் என அழைத்துக் கொள்கின்ற வூசர் அவர்களுடன் 2010 நவம்பரில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன்.  அந்த நேரத்தில் அவர் தனது வசிப்பிடமான பேஜிங் சீனாவில் இருந்து தனது பிறந்த இடமான திபெத்தில் இருக்கின்ற லசாவுக்கு(Lhasa) சென்று கொண்டிருந்தார்.  பலராலும் வாசிக்கப்படுகின்ற இரண்டு வலைப்பூக்களையும், ருவிற்றர் செய்திப் பரிமாற்றத்தையும் நடாத்தி வந்த அவருக்கு Lhasa உண்மையிலும் பாதுகாப்பான இடமல்ல.  ஆயினும் சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தின் பகுதிகளுக்குள் நடக்கும் சீன ஒடுக்குமுறைகளை வெளிக் கொண்டுவருவதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இரண்டு மாதங்களின் பின் எனது மின்னஞ்சல்களை வாசித்தபினர் என்னுடைய அடையாளத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டு நான் அனுப்பியிருந்த  கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தார். 
அவரது வலைத்தளமான கட்புலனாகத் திபெத்(invisible Tibet) நான்கு தடவைகளுக்கு மேலாக இணையத்தளக் குழப்பிகளினால் குறுக்கறுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.  அவரது மின்னஞ்சற்கடிதங்களும் முகநூல் பரிவர்த்தனைகளும் ஒட்டி உளவாடும் சீன இணையஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தன.  மேலும் கணணிக்கு கேடு விளைவிக்கக் கூடிய மின் அஞ்சல்களும் இவருடன் தொடர்புடையவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
சீனாவின் இணையத்தளப்பாவனையையும் பரிவர்த்தனையையும் இறுக்கமாக கண்காணிக்கும் சீன அரசாங்கம் வூசர் அவர்கள் திபெத் ஆதரவு வலைப்பதிவராக இருப்பதால் அவரைச் சீனப் பொது நலனுக்கு எதிரானவராக ஆபத்தானவராக அறிவித்துள்ளது.
சுதந்திர திபெத் எனப்படும் ஒரு திபெத்திய விடுதலை அமைப்பு சீன ஆக்கிரமிப்பாளர்கள் திட்டமிட்ட முறையில் திபெத்தில் மனிதஉரிமைமீறல்களில் ஈடுபட்டுவருவதாகக் குறிப்பிடுகின்றது. திபெத்திய கலாச்சாரம் சமயம் மற்றும் மொழியையும் சிதைக்கும் நோக்கத்துடன் சீனா திட்டமிட்டுச் செயற்பட்டு வருவதாக இந்த அமைப்பு  மேலும் தெரிவிக்கிறது.
2004 ஆண்டில் இருந்து இணையப் பாவனையை இலகுவாகக் கண்காணிப்பதற்காக  சீனப் பொதுவுடமைக்கட்சி இணைய இணைப்பு தேவைப்படுகிற எல்லாத் திபெத்தியர்களையும் இணைய இணைப்பு அட்டைகளைப் பயன்படுத்துமாறு பணித்துள்ளது.  
வூசர் அவர்கள் கடந்த நவம்பரில்(2011)இல்  எதிர் கொண்ட பிரச்சனை அவருக்கு  ஒன்றும் புதியதல்ல.  2004ம் ஆண்டு  அவர்கள் எழுதி வெளியிட்ட " திபெத் பற்றிய குறிப்புகள்"  என்னும் புத்தகம் அரசியல் ரீதியான தவறுகளை உள்ளடக்கி இருப்பதாக சீன அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.  இதனால் அவர் தீபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் இலக்கியக் கூட்டமைப்பின் இதழின் ஆசிரியையாக வகித்து வந்த பதவியை இழக்க நேர்ந்தது.  அடுத்த ஆண்டு அவர் வலைப்பதிவைத் தொடங்கியபோது அது இலத்திரனியல் தாக்ககுதல்களுக்கு உள்ளானது.
2008 இல் அவரது வலைப்பூவின் அகப்பக்கமானது சீனக் கொடியுடன் கூடிய செய்தி ஒன்றினைத் தாங்கியதாக மாற்றப்பட்டது.  அந்தச் செய்தியில் அவரைத் திபெத்தியப் பிரிவினைவாதி என்றும் அவர்மீது வன்முறையை பிரயோகிக்குமாறும் எழுதப்பட்டிருந்தது.
அதே வருடத்தில் தான் பிறந்த இடமான லசாவுக்குத் தனது தாயாரைச் சந்திக்கச் சென்றிருந்த போது சீனக்காவல்துறையினால் அவர்களது வீடு முற்றுகையிடப்பட்டது. அச்சம்பவத்தை அவர் பின்வருமாறு விபரிக்கிறார்: ஒருவன் எனது அறைக்குள் வந்து மூலை முடுக்கெல்லாம் தேடினான்  அவர்கள்... அவர்கள்... அறைக்குள் வந்தவன் ஒரு ஆவணக்கட்டைக் கண்டுபிடித்தான்.  அப்பொழுது அவன் முகத்தில் தோன்றிய பெருமிதத்தைப் பார்க்க வேண்டும்..  ஏதோ புதையலைக் கண்டவன் போல்.  ஆனால் அந்த ஆவணக்கோவை எனது அம்மாவினுடைய வேலைத்தளத்தைச் சேர்ந்தது என்று  அறிந்தபோது அவன் அடைந்த ஏமாற்றத்திற்கு அளவேயில்லை."
வூசர் அதன்பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு எட்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அவமானப்படுத்தப்படும் வகையில் விசாரிக்கப்பட்டார்.  தான் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படாதது  அதிஸ்டமே என்று அந்தச் சம்பவம் பற்றி நினைவு கூரும் போது கூறுகிறார். மேலும் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தான்  நடந்து கொண்ட முறைமைபற்றித் திருப்திப்படாதவராகவும் இருக்கிறார்.
" திரும்பி யோசிக்கும் போது நான் எதிர்ப்புணர்வற்றவளாக இருந்திருக்கிறேனே என  அதிர்ச்சியடைகிறேன்.  என்னை அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல எப்படி அனுமதித்தேன்?  அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஏன் பதிலளித்தேன்? எனது முதலாவது வலைப்பூவை(The maroon map) தொடங்கியதிலிருந்து சீனப் பொதுவுடைமைக்கட்சிக்கெதிரான பாதை கடுமையானதெனத்தெரிந்திருந்தும் நிலமைகள் கடுமையான போது ஏன் இப்படிச் சுயவிமர்சனம் செய்துகொண்டேன் ? எனக் கவலையும் கொண்டிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் வெளிநாடுகளில் இருந்தும் அழுத்தங்கள் வழங்கப்பட்டன.  எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பு உடனடியாகவே சீன அரசாங்கத்தின் பேச்சாளரிடம் இது குறித்துக் கேட்டது.  இதனைத் தொடர்ந்து தாங்கள் புரட்சியாளர்களைக் கைது செய்து வைத்திருப்பதாக முன்வைக்கப்டும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என அந்தப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.  ஆனாலும் அந்தக் காலத்தில் பீஜிங்கில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக சீனா மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியிருந்ததன் காரணமாகத்தான் தான் விடுதலை செய்யப்பட்டிருக்கவேண்டும் என்கிறார் வூசர்.
வூசருடைய ஊடகச் செயற்பாடுகள் அச்சமற்றவை என பலரும் குறிப்பிடுகின்றனர்.  உலகத் திபெத் செய்தி நிறுவனம் உட்பட பலரும் இதனைக் குறிப்பிடுகின்றனர்.  ஒரு திபெத்தியாள் ஆகத் தனக்கு முக்கியமாகப்படுகின்ற அனைத்தையும் ஆவணப்படுத்தும் அவர் அதற்காக குறிப்பிடத்தக்க உயிராபத்தையும் எதிர்கொள்கிறார்.    சீன பொதுவுடமைக் கட்சியினால் தடைசெய்யப்பட்ட ஒரு பௌத்த திருநாளைப்பற்றியதாகவிருக்கலாம் அல்லது 2008 மார்ச்சில் லசா(Lhasa) இல் இடம் பெற்ற சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஒரு பௌத்த பிக்குவுடனான நேர்காணலாக இருக்கலாம் எதனைச் செய்வதற்கும் அவர் தயங்குவதில்லை.
திபெத்தில் 2008 மார்ச்சில் நடைபெற்ற பௌத்த பிக்குகளின் சீன எதிர்ப்பு ஊர்வலத்தைத் தொடர்ந்து 20  மரணமடைந்தும் 4400  கைது செய்யப்பட்டு  தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டும் உள்ளதை இங்கு நினைவு கூரலாம்.
தனது செயற்பாடுகள் காரணமாக தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் கூடத்தண்டிக்கப்படக் கூடிய சூழ்நிலை தோன்றலாம் எனத் தெரிந்திருந்தும் எனது கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை அவர் தந்திருந்தார்.
சீன அரசுடனான அவரது முரண்பாடுகளைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவித்ததுடன் தனது இணையத்தளம் அடிக்கடி முடக்கப்படுவதற்குச் சீனப் பொதுவுடமைக்கட்சியே காரணம் எனவும் குற்றம் சாட்டுகிறார்.
1966ம் ஆண்டு பிறந்த அவர் சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தின் லசா பகுதியில் வளர்ந்தவர்.   வளரும் காலத்திலேயே களமுனையில் நின்று நிலவரங்களை அறிக்கையிடும் ஒரு பத்திரியையாளனாக  வரும் கனவைக் கொண்டிருந்தார்.
நான்கு வயதாக இருந்த போதே  தனது சீனப் பாடசாலை நண்பர்களுக்கு திபெத்தைப்பற்றிய கதைகளைக் கூறத் தலைப்பட்டுள்ளார். இன்றைக்கு இவர்   ஒரு வலைப்பதிவராகத் திபெத்தின் கதைகளை உலகிற்கிற்குக் கூறுவது ஆச்சரியமானதல்ல.
இவரது தந்தை ஒரு அரைத் திபெத்தியனாக இருந்தபோதும் 1950 இல் சீனா திபெத்துக்குள் நுளைந்து அதனைப் பலவந்தமாகத் தன்னுடன் இணைத்த போது சீனப் பொதுவுடமைக் கட்சியின் மக்கள் விடுதலை இராணுவத்தில் அதிகாரியாக இருந்திருக்கிறார். 
தான் சிறுமியாக இருந்த போது தனது தந்தையாரைப் பலவேறு கேள்விகளைக் கேட்டதை இப்போது அவர் நினைவு கூருகிறார்.
" என்னுடைய தந்தையார் எப்போதும் இரண்டு கால்களிலும் நடக்கப்பழக வேண்டும் என்று எனக்குச் சொல்லுவார் ஒரு கால் எனது சொந்த வழியிலும் மற்றது சமூகத்தின் எதிர்பார்ப்புக்களின் வழியிலும் இருக்க வேண்டும் என்று அவர் சொல்லுவார்.  அவருடன் உடன்படாத நான் சிலவேளை ஒரு கால் உடைந்து போனால் என்ன செய்வதென்று அவரிடம் கேட்டேன்  அதற்கு அவர் பதில் எதனையும் கூறவில்லை." என்கிறார்.
அவரது தந்தையுடனான அவரது உறவைப்பற்றிக் கேட்டபோது " இது இலகுவான கேள்வியில்லை.  இதற்கு ஒரு சில வசனங்களின் மூலம் பதிலும் சொல்லவும் முடியாது." என்றார்.
தற்போது அவர் இந்த விடையம் தொடர்பாக ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்.  தனது அனுபவங்களைப் புனையப்பட்ட பாத்திரம் ஒன்றினூடாக வெளிக் கொண்டு வரும் நோக்குடன் வேலை செய்துகொண்டிருக்கிறார்.
தனது ஒழுங்குபடுத்தப்படாத உணர்வுகளை பரிமாறிக் கொள்வதற்கு உண்மையான ஒரு கணத்தின் நெருக்கம் தேவைப்படுகிறது எனக் கூறுகிறார்.
கலாச்சாரப் புரட்சியில் அவரது தந்தை வகித்த பங்கு அவரது மூன்றாவது புத்தகத்திற்குரிய விடயங்களை அளித்துள்ளது.   தடைசெய்யப்பட்ட நினைவுகள்: கலாச்சாரப் புரட்சியின் போதான திபெத் என்பதே  அவரது மூன்றாவது புத்தகம்.
மாவோவின் மீள் கல்வித் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பௌத்த வாசங்களும் புத்தகங்களும் புத்த ஆலையங்களும் அழிக்கப்பட்டன.  இந்த சம்பவங்கள் இன்றைய திபெத்தில் நிலவும் அமைதியின்மையை விளக்குவதற்கு முக்கியமான அடித்தளத்தை தருவன. எப்படி இருப்பினும் இந்தச் சம்பவங்கள் சீனப் பொதுவுடமைக் கட்சியினால் திணிக்கப்பட்ட மௌனம் காரணமாக அழிக்கப்பட்டுவிட்டன.
கல்விமானும் நூலாசிரியருமான வாங் லிக்ஷ¢ஒங்(Wang Lixiong)தடைசெய்யப்பட்ட நினைவுகள் என்னும் இந்த நூலுக்கு எழுதிய முன்னுரையில்    10000க்கும் அதிகமாக கலாச்சாரப் புரட்சி தொடர்பான சேகரிக்கப்பட்ட ஆவணக் கோவைகளில் 8 மட்டுமே திபெத்தைப் பற்றியனவாக எஞ்சி இருக்கின்றன எனக் குறிப்பிடுகிறார்.
வூசரின் தடைசெய்யப்பட்ட நினைவுகள் என்னும் இந்தநூல் கலாச்சாரப் புரட்சியின் வரலாற்றில் உள்ள இடைவெளியை நிரப்புவதாக இருக்கிறது. அவரது இந்தப்புத்தகம் மக்கள் விடுதலை இராணுவத்தில் அவரது தந்தையார் பணிபுரிந்த போது  எடுத்த நூற்றுக்கணக்கான இதுவரை வெளியிடப்படாத படங்களை உள்ளடக்கியிருக்கிறது. மேலும்  வூசர் எழுதிய பல கட்டுரைகள் அவரது தந்தையாரின் வயதை ஒத்த திபெத்தியர்களுடான அவர் செய்த நேர்காணல்கள்(இவற்றை சீன மொழிக்கு மாற்றுவதற்கு அவரது தாயார் உதவி செய்துள்ளார்) என்பனவும் இப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2006 இல் தாய்வானில் இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டது.  இப்புத்தகத்தைத் தொகுப்பதில்  தனது தந்தையாரின் பங்களிப்பைப்பற்றி வூசர் எதுவும் குறிப்பிடவில்லை.
2007 டிசம்பர் 17 இல் நோர்வேயின் கருத்துச் சுதந்திரத்துக்கான எழுத்தாளர் கூட்டமைப்பு அவருக்கு விருதொன்றை வழங்கியது.
சீன அதிகாரிகளுடன் முரண்பட்டபோதும் துணிவுடன் தனது புத்தகத்தை வெளியிட்டமைக்கான விருதாக அது அமைந்தது. 
ஆனால் இந்த விருதை ஏற்பதற்கு சீன அரசாங்கம் அவரை அனுமதிக்கவில்லை.  அவருக்கான கடவுச் சீட்டை தேசியப் பாதுகாப்புக் கருதிசீன அரசாங்கம் வழங்க மறுத்துவிட்டது.
யூலை 2008 ம் ஆண்டு சீன அரசாங்கத்தின் இந்த முடிவுக்கெதிராக சங்குன்(Changchun) பிரதேச இடைநிலை நீதிமன்றத்தில் வழக்கொன்றை வூசர் தாக்கல் செய்தார்.  இந்தப் பிரதேசத்திலேயே இவரது கணவர் நிரந்தரமாக வசித்து வருகிறார்.  ஆனாலும் இவரது வழக்கானது தொடர்ச்சியாகக் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. தான் சீனக்கடவுச்சீட்டொன்றைப்பெறுவதற்கான  சந்தர்ப்பம் மிகக்குறைவே என்கிறார் வூசர்.
சீனாவை விட்டு வெளியேற முடிந்தாலும் அந்தப் பயணம் தற்காலிகமானதாகவே இருக்கும். நான் சீனாவிலேயே இருக்க விரும்புகிறேன்.  ஏனேனில் சீனா திபெத்திற்கு கிட்ட இருக்கிறது. எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புகிறேன்.   சீனாவுக்கு வெளியில் இருப்பவற்றைப் பார்க்க விரும்புகிறேன்.  ஆனால் மீண்டும்
சீனாவுக்கு திரும்புவதையே விரும்புகிறேன்.
திபெத் செய்திகளையும் செய்திக்கண்ணோட்டங்களையும் தாங்கி வரும் Phayul.com என்னும் இணையத்தளம் வூசரின் எழுத்துக்கள் திபெத்தில் நிகழும் விடையங்களுக்கு உறுதியான முக்கியத்துவத்தை தருவதுடன் உடனடித்தன்மையையும் கொன்டிருக்கின்றன மேலும் அவை மக்களுக்கு நெருக்கமானவையாகவும் தனிப்பட்டவையாகவும் இருக்கின்றன. இவை வெளிநாட்டுச் செய்தியாளர்களாலோ அல்லது விற்பன்னர்களினாலோ தரமுடியாத பரிமாணத்தைக்கொண்டிருக்கின்றன. புலம் பெயர்ந்த ஜம்ஜங் நொர்பு போன்ற எழுத்தாளர்களினால் கூட இவ்வாறு தரமுடியாது எனச் சிலாகிக்கிறது.

எவ்வாறு இருப்பினும் வூசர் கூடத் தன்னை ஒரு புலம் பெயர்ந்த எழுத்தாளராகவே காண்கிறார்.  சீனாவில் புலம் பெயர்ந்து வசிக்கும் ஒரு திபெத்தியாளாக சீனாவில் வாழும் ஆயிரமாயிரம் திபெத்தியர்களுள் ஒருவராக அவர் தன்னை இனம் காண்கிறார்.
சீனப் பொதுவுடமைக் கட்சி திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாகவே காண்கிறது. மேலும் திபெத்திய கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதற்கு தடைகளை விதித்து வருவதுடன் தாய் லாமாவை இழிவு படுத்தி சீன தேசப்பற்றை பெருமைப்படுத்தும் கல்விச் செயற்பாடுகளில் கலந்துகொள்ளுமாறு திபெத் பௌத்த பிக்குகளை வற்புறுத்துகிறது என  The Economist சஞ்சிகை தெரிவிக்கிறது.
 திபெத்திய கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முயலும் சீனப்பொதுவுடமைக்கட்சியின் செயற்பாட்டிலிருந்து திபெத்திய கலாசாரத்தை வூசர் பாதுகாக்க முனைகிறார்.
நான் விடையங்களை ஆவணப்படுத்தாவிடில் நான் உரத்து பேசாவிடில் எமது தேசம் மௌனமாக்கப்பட்டுவிடும்.வரலாறு மாற்றப்பட்டுவிடும்.புதிய தலைமுறைக்கு இவற்றை அறிந்து கொள்ள முடியாது போய்விடும். உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு இந்தத் தனிமனித ஊடகம் ஒரு ஆயுதமாகும்.இதன் முடிவுவரையும் இதனை எடுத்துச் செல்வேன் என்கிறார் வூசர்.
அவர் சிறுவயதிற் கனவுகண்டது போல் துப்பாக்கிச்சன்னங்கள் பறக்கும் யுத்தகளத்தில் நின்று அறிக்கையிடவில்லை ஆனால் சீனப் பொதுவுடைமைக்கட்சியின் இடையூறுகளுக்கும் மத்தியில் இணையத்தில் மேற்கொள்ளப்படும் சைபர் தாக்குதல்களையும் எதிர்கொண்டு தனது எழுத்துக்களைப்பரப்பி வருகிறார். அவரது தளங்கள் யாவும் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கின்ற போதும் பல்வேறு சீன மற்றும் திபெத் இணையத்தளங்கள் அவரது எழுத்துக்களை மீள்பிரசுரம் செய்துள்ளன. மேலும் அவரது எழுத்துக்களுக்கென ஒரு ஆங்கில மொழித்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
பயமுறுத்தல்களிலும் விமர்சனங்களிலும் அவரை ஒரு திபெத்திய நாய் என விளிக்கிறார்கள் ஆனால் இவை அவரை அவர் செல்லும் வழியில் இருந்து விலக்கிவைக்கும் வலுவற்றவையாக இருக்கின்றன.
" எனக்குப்பிரச்சனை வரலாம் ஆனால் அது பற்றி நான் கவலைப்படவில்லை. திபெத்தின் வரலாற்றையும் நிலைமைகளையும் அதிகமானவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் மாற்றம் இப்போதோ அல்லது காலம் தாழத்தியோ வரலாம் ஆனால் மனம்தளராத முயற்சியே மாற்றத்திற்கான திறவுகோல் " என்கிறார் வூசர்.

மொழிபெயர்ப்பும் குறிப்பும்: தேவ அபிரா

நன்றி:Joshua Barnes