பின்பற்றுபவர்கள்

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 அக்டோபர், 2011

நகரங்கள்


இலையுதிர்காலத்தின் எதிர்பாராத வெப்பம் தவழ்கையில்
இந்த நகரத்தை வந்தடைந்தேன்.
நகரத்தின் காலடியில் நகர்கிறது நதி.

கரையோர உணவகங்களில் நடுகுடைகள் விரிந்துள்ளன.
முறுகச்சுட்ட பாணில் உருகி வழியும் பாலாடைக் கட்டிகளுக்கருகில்
மென் பொன் மதுக்குவளையை இருத்தி
நங்கைகள் விரைந்து பரிமாறுகிறார்கள்.
பங்குச்சந்தை காய்கிறது.
வங்கிகள் சரிகின்றன.
ஆயினும் கொழுத்த முகங்களின் எண்ணைப்படிவுகளில்
இலையுதிகாலச்சூரியன் பளபளக்கிறது.

மிதவைப்படகின் தோசைக்கடைகளில் சிறுவர்கள் காத்திருக்கிறார்கள்.
நூற்றாண்டுகளாக நகரும் ஆற்றின் ஈரத்தைத்
தன்காதலியின் உதடுகளுக்குள் விட்டுக்கொண்டிருந்தான் ஒருவன்.
இலையுதிர்காலத்தின் வெப்பம் தவற விடக்கூடியதா என்ன?

நான்கு தசாப்தங்களின் முன்பு
இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான்.
விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன.
நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன அந்தக்காலத்தின் கல்லறையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது
"இது எமது நகரம்"

என் வாழ்வின் நினைவுத் தடத்தில்
உறங்கிக்கிடந்தவென் நகரங்கள் விழித்தன...
உறையாதே நடந்து போவென்றன..
காலத்தினூடே பயணம் செய்யும் * நியூற்றினோக்களைத் தேடி
குறுகலான சந்துகளினூடே நடந்தேன்.
நூற்றாண்டுகள் கடந்தும்
கடல் கடந்து அள்ளிவந்த செல்வங்கள்
இன்னும் சிதறிக்கிடந்தன.
தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக் கிடந்த பூங்காவெளியில்
கண்கள் படாமலும் காமம் சுடாமலும்
பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது.
என் நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி
ஒடுங்கிய பெண்களின் சாபத்தில்
இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன்.

நினைவுகளின் தகிப்புத்தாளாது
நிமிர்ந்து நின்ற நினைவுசின்னத்தின் அடியில் அமர்ந்தேன்.
அதன் வேர்கள் எத்தனை ஆண்டுகள் நீண்டிருந்தவென்றறியேன்.
ஆனாலும் அதன் மடியில் இருந்தது ஒரு கவிதை:

"இந்த நகரத்தில் அதிக நாள் நான் வாழவில்லை
ஆயினும் எனது இளமைக்காலம் இங்கேயிருந்தது
நான் எங்கு சென்றபோதும் என்னருகில் இருப்பதும் இந்த நகரமே".*

ஓலங்கள் மட்டும் மௌனமாக அலையும்
எனது நகரங்களில் என்றாவது ஓர் நாள்
நானும் நினவுச்சின்னமொன்றை எழுப்புவேன்.
ஏனேனில் யுகங்களைக்கடந்து செல்ல விரும்பும்
அற்ப மனிதன் நான்.

மனிதர்களற்ற வெளியில் நுழையும்;
சூரியன் விழுந்து சிவப்பாகும் இரவு நதிப்படுக்கையில்
நான் சரிந்தபோது,
என் காதருகில் கேட்கிறது
என் நகரத்தின் ஆழியின் ஓங்காரம்.

28-10-2011
தேவ அபிரா.





6 டிசம்பர், 2009

தேர்தல்




எல்லாம்வல்ல அரசன்
என்னுன்னை நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்
உனது வளர்ப்புநாய்கள் அகதிகளின் கிழிந்த உள்ளாடைகளை
தெருநீளம் இழுத்துச்செல்கையில்
முட்கம்பிகளில் உன் சிவப்புத்தோள்ச்சால்வை
கிழிந்து தொங்குகையில்
உன்னது மமதையின் ராசாங்கத்தைக் காண்கிறேன்

இரவு பகலாக மதுவருந்திக்கொண்டு
தம்பிகளுக்கெல்லாம் பகிர்ந்து கொடுக்கிற
இரத்தவிறைச்சி தொங்குமான் தசையல்ல.

இரவுகள் கொடூரமான ஒலிகளை எழுப்பின.
காடுகள் வெந்துதணிந்தன.
சிதறிக்கிடந்த மார்புகளைக்
கைவிடப்பட்ட குழந்தைகள் நன்னின.

கருவையும் கருவறையையும்
கல்லறையையும் நசித்துச்சென்றவுன்குறியையும்
அதன் பிணவெடிலையும்
வேட்டிக்குள் மூடி வைக்கிறாய்.
பின் கமண்டலங்களும் கைத்தடியும்
தாங்கிய முனிவர்களை அனுப்புகிறாய்.
வரம்தர வந்தோமென்கிறாய்.

கமண்டலத்துள் இரத்தம்.
கைத்தடியில் என்பிள்ளைகளின் பிடரிமயிர்.

அழகிய கனவை மூன்று தலைமுறைகள் சுமந்தேன்.
வாழ்வின் ஒரு துளிதான் கண்டேன்.
மரணத்தின் பெருவலி பெற்றேன்.
வடகிழக்கு மூலையில் இன்றோடுங்கிப்போனேன்.

நிசப்தம் ‐அரியவரமுனக்கு ஆடு.
இருண்மை‐துயரங்களின் விளைநிலம் எங்களுக்கு.

தத்துவவாதிகள் தாங்கள் அறிந்த புத்தகங்களுக்கு மேல்
தலைகளை உயர்த்தவில்லை.
வியாபாரிகள் இரத்தத்தை வடிகட்டிய நிலத்தை
பங்குபோடுகிறார்கள்.
எஞ்சிய நிலத்தில் கண்ணிவெடியென்கிறாய்.

எனது பிள்ளைகளோ அழுகிறார்கள்
அவர்களின் முன் நீயோ வாக்குப்பெட்டியை வைக்கிறாய்
போடா! துர்க்குறி!!
ஓங்கியழந்தகாலால் என்பெருநிலத்தையறைந்தவன் நீ!!!
என் பிள்ளைகள்
தமது இரத்தத்தைக்குடிக்கும் எல்லாவரசர்களையும்
அறிந்திருக்கிறார்கள்
என்றேன்றைக்கும்.

தேவ அபிரா
05‐12‐2009
நன்றி Global Tamil News

29 மார்ச், 2009

அதர்மச்சக்கரம்

மரண வீட்டின் ஒப்பாரிக்கும்
இடுகாட்டின் மௌனத்திற்குமிடையே
என் சொற்கள் சிக்கிக்கொண்டன.

தரையில் பதிந்த இராட்சதக்காலடிகளைக்
கண்டேங்கிப்போனேன்.
ஓரிலையோடெனினும் ஒருமரப்பொந்திருப்பின்
என் பிள்ளைகளை ஒழித்து வைப்பேன்
இல்லையே! எங்கே போயின வனங்கள்?

இருண்ட குழியுள் இரவும் பகலும் சிக்கிக்கொண்டன
மருண்ட கண்ணைக்கருநாகம் கொத்தியது.

எனது காவலர்களோ உன்மத்தமாயிருக்கிறார்கள்
அவர்களின் இதயம் கல்லாயிருக்கிறது
மலையே வரினும் தலையே சுமவென்னும்
காலத்தைத் தாங்குவாய் வாழி!
நம்பிகைகளைச் சுமந்தவர் முதுகில்
கூன் விழாதிருக்கக் கடவது.

கணங்கள் யுகங்களாகின்றன.
இரக்கமற்ற கண்களைக் காண விரும்பாதவர்
எங்கென்றாலும் தனித்தேயிருப்பர்.
இயலாமைக்கும்
எதிலிமைக்கும்
நடுவிலோர் இடைத்தங்கல் முகாமெதற்கு?

ஊழித்தாண்டவமாடும் தர்மச்சக்கரம்
என்தலையிற்புரிவிட்டுச் சுழல்கிறது.
வங்காள விரிகுடாவில்
இரத்தம் வழிகிற என் முகத்தைச்சுற்றிச்
சுறாக்களும் கழுகுகளும் வலம் வருகின்றன.

அட பிணம் தின்னி!
நீ உனக்கு மட்டுமே எனச்சொல்கிற
இந்த நாடு ஓர் நாள் இந்து சமுத்திரத்தில் பிணமாக மிதக்கும்.

தேவ அபிரா
27.03.2009

10 பிப்ரவரி, 2009


சிங்களதேசமே!

காலத்திடலில் கிழிந்து கந்தலான
வடக்கை,
கிழக்கை,
பார்க்காதே.. கேட்காதே..

பாட முடியாப் பறவைகளைக்
காலை வைக்க அஞ்சிக்கடந்துபோன
கூழக்கடாக்களைக்
கருகிப்போன கார்த்திகையைக்
கட்டுடைந்த குளத்தைக்
கனரகப் போர்வெறியில் கடைசேறான வயலைப்பார்க்காதே..

உன்மத்தமானவர் உயிர் விடும் வெளியைப்பார்க்காதே..

முப்பது தலைமுறைகள் வாழ்ந்த முற்றத்தைப்
பற்றுக்கோடென்றிருந்த ஒரேயொரு மகளைக்
கொழுத்திய கொத்தணிக் குண்டைக்
குருதியொழுகவொழுகக்
கொண்டோடியவென் குஞ்சைப் பார்க்காதே..


அண்டங்கள் அதறப்
பிண்டங்கள் சிதறிப் பேயறைந்த கிறவல் வீதியை
உருக்குலைந்து போன வீட்டை
உள்ளிருந்து மணக்கும் பிணத்தை
கரு சிதைந்த தாயை
உருத்தெரியாதழிந்த என் பாட்டனைப்
பார்த்தழும் என் பாட்டியைப்
பாதுகாக்கமுடியாப்பதுங்குகுழியைப்
பார்க்க முடியாதுறைந்த விழியை
அதனுள்ளுறைந்த மொழியை கேட்காதே..

உடைக்கப்பட்ட பேனாவையும்
முடக்கப்பட்ட வாயையும்
அடைக்கப்பட்ட காதையும்
உன்காலின் கீழோடும் குருதியையும் பார்க்காதே..
கைநிறையக்கூலி வரக் கையசைத்து
விடை கொடுத்தவுன் மகனை,
வராது நின்ற மடலை,
உடலைக்கேட்காதே..
உயர்ந்து செல்லும் விலையை
தளர்ந்துசெல்லுமுன் வாழ்வைப் பார்க்காதே..

பார் உங்கள் சிங்கக்கொடியை...
கேள் உங்கள் தேசிய கீதத்தை…

சிங்கள தேசமே!

தீயனவற்றைப்பார்க்காதே
தீயனவற்றைக்கேட்காதே
தீயனவற்றை...........

தேவ அபிரா
09-02-2009

27 ஜனவரி, 2009




எமது உயிரிலும் மேலான தமிழீழ மக்களே!

நீங்கள் படும் பாடுகள் பற்றியும்
பட்டினியாகவும் பாதுகாப்பற்றிருப்பது பற்றியும்
யாரிடம் முறையிடலாம் என யோசிக்கிறீர்கள்
யார் யாரோவிடமெல்லாம் யாசிக்கிறீர்கள்
கதறி அழும் உங்களுக்கருகில்
அன்புக்குரியவர்களின் பிணங்கள்,
அவயங்கள்
அவர்கள் பற்றிய துயரச்செய்தி
கிடத்தப்பட்டிருக்கிறது.

அழுகிறவர்களை உணர்ச்சி வசப்படாதிருக்கக் கோருகிறோம்.

நிகழ்வுகளைப் புறநிலையாக நின்று புரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் அதனையே விரும்புகிறது.
உலகம் விரும்புவதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறீPர்கள்,
படைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

யாருடைய சொல்லைக் கேட்கவில்லையென்பதால்
இந்நிலைக்காளானீர்கள் என்றறியீர்கள்.
எவருடைய சொல்லைக் கேட்டிருந்தாலும்
இந்நிலைக்கே ஆளாகியிருப்பீர்கள் என்றுமறியீர்கள்.

ஆயினும்
உங்கள் முறைப்பாட்டைக்
கண்களால்
கைகளால்
கண்ணீரால்
வார்த்தைகளால்
கேவல்களால்
காற்றில் எழுதுகிறீர்கள்.

உங்களுடைய துயரங்களிலும் கண்ணீரிலும்
நாங்கள் ஏன் கரையவில்லை' என்கிறீர்கள்.
நாங்கள் துயரங்களுக்கு தூரமாக இருப்பவர்கள்

இறைதூதர்களைத் தவிர
எங்கள் எல்லாத் தூதர்களுக்கும்
உங்களைப்பற்றி முறையிடப்பட்டிருக்கிறது.

எங்களுக்கு உங்கள் மீது கோபம் கூட வருகிறது
ஏன் இப்படிக் கதறுகிறீர்கள்
ஊர் உலகத்தில் எங்கும் இது நடக்காதது போலவும்
உங்களுக்கு மட்டுமே நடப்பது போலவும்.....

ஆப்கானிஸ்தான், ஈராக,; பலஸ்தீனம்,
செஸ்னியா, குர்திஸ்தான், கொங்கோ, சோமாலியா,
நாகலாந்து, அசாம், காஸ்மீர்.....

உங்களுக்கு என்ன வந்தது!
நடந்தவைகள் நடக்கின்றவைகள் நடக்கப்போகிறவைகள் யாவும்
நல்லதற்கே என்றெண்ணி அமைதி அடையாச்சென்மங்கள!;
துயரங்கள் முட்டியா உங்கள் தலை வெடிக்கவேண்டும்?
அடபோங்கள்!
இலங்கை இராணுவத்திற்கெதற்குக் கொத்தணிக்குண்டுகளைக் கொடுக்கிறோம்
உடைக்கப்பட்ட குளங்களை ஆழப்படுத்தவோ?

இப்படிக்கு.....

பி.கு. உலகத்தலைவர்களின் சார்பில் இக்கடிதத்தில் கையொப்பமிட விரும்பும் மனச்சாட்சியுள்ள கனவான்கள் மேலே கையொப்பமிடலாம்.

தேவஅபிரா
26-01-1009

21 ஆகஸ்ட், 2008

காதல்

காதல்

கடலோங்கிக் கரைதழுவப் பார்த்து
உடலுள்ளிருந்து தவித்தெழுந்தாத்மா
மெய்யிறங்கியுன் விழி தேடி வருகிறது.
பொய்யெது மெய்யெது
போதிமாதவச் சிரிப்பெதுவென்றறியா
மென்மயிர்ப் பூனைபோலேங்கி நடந்தவென்னிதயம்
உன்மார்பிலணைகிறது.
முலைதழுவி முன்னெற்றி மயிரொதுக்கி
முத்தமிட்டுன் நறுவுதட்டுச் சாரலையும் தாவென்று தவித்து
ஆண்மையும் பெண்மையும் பெயரழியும்
காலத்துள் போய்வரவாவென்று கேட்பேன்.
கேசம் கலைந்து கிடந்தவுன் கழுத்தில் புதைந்து புதைந்து
நீலம் படர்ந்த நெடுவான முடிவுக்கும் போவேன்.

மெய்யும் காதலும் ஒன்றென்றுயிர் சுடர்கிறது.

ஆடி - 1997

விசாரம்

விசாரம்

வேர்களில் பரவி
இலைகள் செறிந்து
நிலவுக்கு நிமிர்ந்த
மரங்களின் கீழே நகர்ந்தது அருவி.
இருண்ட காட்டின் நறுமணமும் கமழ்ந்தது.

நீரலையைத் தழுவும் பாறையை மருவிக்கிடக்கையில்
வாவென இழுத்துத் தேகம் ஆட்டும்
அருவியைக் கேட்டேன்:
"மானிட ஆத்மாக்களின் துயரம் ஊற்றெடுப்பது எங்கிருந்து ...?
கனவின் வண்ணங்களுடன் வரும் இதய ஆழத்தின் குமிழிகள்
பூமியில் உடைவதேன்...?
காலத்தின் மெளனத்தில் புதைந்திருப்பது என்ன...?"

அருவி போய்க் கொண்டிருந்தது.

மார்கழி - 1994

பிரிதல்

பிரிதல்


இரவுக் காற்றில் மனித முறையீட்டின் பாங்கொலி.
பாறைகளைத் தழுவும் ஆற்றின் குரல்.
ஓயாது சலியாது
பள்ளத்தாக்கின் பாறைகளும் ஆறுகளும் செய்யுமோ காதல்?

மலைகளைப் படலமிட்ட புல்வெளியில்
விழுகிறது என்னிதயம்.

உன் விழிகளுக்கு ஒளியென்னும் அர்த்தம்
இல்லையென்றுணராமல் போனேனே!

மலைகளை மோதிக் குளிரில் உறையுமோ காதல்?

நாளை நான் போய் விடுவேன்
தடுமாற்றம் நிறைந்தது இவ்விரவு - உனக்கு.

இருளான இதயங்களுக்குள் நீ
சிறுசுட்டி - நின்றெரியும் அதன் சுடராகவாவது ஆகியிருக்கலாம்

நீயும் என்னை மறந்தாய்.

சமரசங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டதென் ஆத்மா.

முன்னறையில் இருந்து
பிரியும் என் முதுகைப் பார்த்திரு!

புரட்டாதி - 1993

13 ஏப்ரல், 2008

எலும்புக்கூடும் இரண்டு கனவுகளும்

எங்கேயென் கனவுகளை எழுதிவைக்கலாம்?
நிறைவேறாத கனவுகளை வேறென்னசெய்ய?
ஏடுகளைக் கரையான் அரிக்கிறது.
எக்காலத்திற்கு வேண்டியவற்றை விட்டுவைக்கிறது- நானறியேன்?
காலம் சுவடிகளின் மீது நடந்து செல்லும்போது
சாமானியர்களின் கனவுகளை மதிப்பதில்லையோ?
ஊழியின் சுவைக்கென ஏங்கும்
ஆழியின் கரையில் இருப்பதே அச்சம் தருகையில்
கரையின் காயாத ஈரத்தில் எப்படி எழுதுவேன்?
அவள் என்னை ஆக்கிரமித்துப்புணர்ந்த;
ஆறு புனைந்த நாணற்படுக்கையில் எழுதிவைத்த கனவுகளை
காலம்தவறி வந்த பெருவெள்ளமள்ளிச்சென்றது.
துருவத்துள் முன்பொருகால் உறைந்து கிடந்த சூரியன்
கனவுகளைக்கரைத்து வெறும்நீராக்கினான்.
சேடமிழுக்கிறது மனிதக்கனவுகளின் துருவம்.
மனித நாகரிகங்கள் விளைந்த மண்ணை அகழ்கிறார்கள்.
ஊரோடும் வாழ்வோடும் புதைந்த மனிதர்க்கருகில்
இறுகிக்கிடந்தன-வாழும் காலத்திற் பேசப்படாக்கனவுகள்.
மென்தூரிகைகள் கொண்டு துலக்குதல் கூடுமோ
கனவுகளின் மௌனத்தை?
நாடோடி போல்
என் கனவுகளுக்கான நிலத்தைத்தேடி நடக்கிறேன்.
சுற்றிவளைப்புக்களுக்கும் தேடுதல்களுக்கும் தப்பிய இரவொன்றை
இடிந்துதிர்ந்து போன இல்லமொன்றினுள் கழிக்கையில்
ஆணென்றும் பெண்ணென்றும் அலியென்றும் வகையிடாக்
கனவொன்றைக் காறைச்சுவர்கட்கிடையிற் கண்டெடுத்தேன்.
என்றோவொருநாள்
என்கனவுகளும் அனாதையாகக்கூடுமென்றஞ்சியிருந்தேன்.
என் கனவின் கூட்டிற்குள் அதுவும் நுளைந்தது.
துகள்கள் நிறைந்து ஒளிபுகாச் சடமாகிய காற்றுவெளியிடை
பஞ்சடைந்ததன் கண்ணூடு நோக்கி
என் அம்மா சொன்னாள்:
“மகனே உன் கனவுகளை ஒருபோதும் விற்று விடாதே”
யுகங்கள் கழிந்து
மீண்டும் மண்ணகழும் போது
நாகரிகமேயில்லாத சமூகத்தோடு
புதைந்தவொரு எலும்புக்கூடும்
இரண்டு கனவுகளும்
மென்தூரிகைகளும்…

13/04/2008
தேவ அபிரா

6 டிசம்பர், 2007

உங்களுடனும்.....

உங்களுடனும்
உங்களுள் ஒருத்தியுடனுமான என் காதல்...


காற்றில்லை,
கரையோர நாணல்கள் ஆடவில்லை,
ஆற்றின் கண்ணீர் மெல்லிய கோடாய் வழிகிறது.
நேசத்தை இழந்த குயிலோ நீள் துயரம் பாடுகிறது.
நேற்றுவரை என்னருகில் எத்தனை விழிகள்!
அவளும் இருந்தாள்.
அவளாக இருந்தாள்.
நேசத்தின் உச்சமோ...? நிர்மலமான நாட்களோ...?
சொற்களின் எல்லைக்குள் அடங்காத சுருதியோ...?
உயிர்ப்புறும் ஆத்மா என்றிருந்தேன்.
எத்தனை திங்கள் எத்தகை நிலவு
எங்கள் பாடலில் செம்மண் சுடரச் சேர்ந்து நடந்தோம்...
முற்றிலும் பொய்யோ?
மூச்செறிந்து நடக்கிறேன்.
ஈரமற்ற மணலில் புதையும் கால்கள்.
ஈரமற்ற மடிகளில் புதையுமோ முகம்.

பரவைக்கடல் மீது
படகேறிப் பாடியதோர் நாள்...
இரவுகளிலிருந்து வாதம் புரிந்தது பலநாள்...
ஆழ்தியானப் பயில்வுகளில் எத்தனை நாள்...
கைபற்றிக் கண்ணீர் துடைத்து,
முடிகோதி முத்தமிட்டு,
பொய்யன்றிப் புரிதலின் ஆழமேயென்றிருந்தேன்.
ஐயோ!
அனலெரி நெஞ்சும் ஆற்றொணாத் துயரமும்
புனல்வற்றிப் போயழும் ஆற்றின் கரையில் ஆறுமோ?

பொய்மையின் முகந்தெரியப் போயழ மடியுமில்லை.

சொல்லே விளங்காத மனங்களில் சுருதியுறையுமோ?
வில்லேற்றி நாண் பூட்டி
விரையும் அம்புச் சொற்கள்
அவளும் ஏவினாள்.

நேசமொன்றை நெஞ்சிற் சுமந்ததற்காய்
நீயும் எய்யடி
சாகவே நான்.
அற்றகுளத்தில் அறும் பறவைக் கூட்டம்.
உற்றவிடத்தில் உறையும் விழிகள்.
விரையும் வழியில் நசியும் மனங்களை நானறிவேன்.
ஓருகால் ஆறியிருந்தால்

அழியா மனமொன்று அன்றேனும் இருக்குமென்றால்
அழவும் கூடும் நீங்கள்.

காதல் மறக்கலாம்! கனவுகள் துறக்கலாம்!!
வசையன்றி வேறறியாச் சமூகத்தின் வேர்கள் அறுமென்றால்.
வாழ்தலென்னும் இருப்புக்காய்
வெஞ்சமர் ஒன்றில் மெய்யுமாகுதியாகலாம்.
வேறெந்த வழியிலும் எழும்
விருட்சத்தின் பொய்நிழலில்
போய்ச்சுகம் கொள்ள நான் மாட்டேன்

போங்கள் நீங்கள்.

"நன்றி" உங்கள் சொற்களுக்கும்
நில்லாதலையும் அவள் விழிகளுக்கும்.
நானறியாப் பொழுதில் அவள் சுடர
அவளறியாப் பொழுதில் நான் தளர
இருளிலும் சுடர்ந்த அவள் விழிகள் சாரமிழந்தன.
காலமதன் துயரப்படிவுகளிலொன்றாய்க் கணக்கிடவோ?
நீள் வழியெங்கும் விழிபெருக நான் போன நாட்கள் போயின.

நெஞ்செங்கும் புண்ணென்றும்
நீ மயிலிறகு கொணர்வாயென்றும்
கண்மூடிக் கனவு காணும் முட்டாள்க் கவி,
மென்நெஞ்சு
மன்றாடும் புழுவென்றிருப்பாயோ?
நானறியேன்.
நேசத்தின் முன்னால்
"நெஞ்சத்து மானம்" எதற்கென்று நீயொருகால் உணர்வாய்.
மென்மையும் வன்மையும்
மேன்மைகொள் ஆத்மாவுமாய்
நான் நிமிர்கையில் நீயும் உணர்வாய்.
ஆக,
நான் விடைபெற விரும்புகிறேன் நண்பர்களே!
இறுதிப்பிரிதலுக்கு முத்தங்களோ கைலாகுகளோ வார்த்தைகளோ
தேவையில்லை
கடந்த கால அனுபவங்களே போதும்!

மழையின் நாள்

பூமி ஏங்கித் தவித்துக் கனன்று கொண்டிருந்தது.

வேனிலிலும் மரங்கள்
துளிர்களும் இலைகளுமாய் மதமதர்த்திருந்தன.
ஆழத்து நீரில் வேரோடிய திமிரில் நின்றன.

மண் தன் இறுதி நீரையும் இழந்தது.
ஆத்மாவிலும் துயரம் மிகுகிறது.
அனலைக் காற்று அள்ளி வருகிறது.
முந்திய வருகையில்
அவள் பதித்த ஈரமுத்தத்தடங்கள்
புழுதியாய் உரிந்து பறந்து போயின.
ஆடையவிழ்ந்து வார்த்தைகளற்ற துயரத்தில்
மண் காத்திருந்தது.

வானம் இருளில் அழிய
மரங்கள் எதிர்பாராதவொரு நாளில்
ஆர்ப்பரித்து ஆர்வமுடன்
ஆழியின் நீரெலாம் அள்ளிவந்தாள்.

துளிகள்
காதலாகிக் கண்ணீராக
மோகமாகி முத்தமாகி
ஓவென்ற ஒலியாகி மோதினாள்.

வெள்ளி நீளக்கோடுகளில் ஒளி முறிந்தது.
விசும்பதிர்ந்தது.
மண் தளர்ந்தது.
மரங்கள் விறைத்து நின்றன.

வைகாசி - 1993

நிறைவேறாத காதல்

தனிமை
துயர்தரும்
எனத்தெரிந்திருந்தும்
நீரற்ற ஆற்றின் கரையில் நான்.
வானம் சிவப்பாய் எரிந்தது
மந்தைகளும் இடையனும் மறைந்தனர்.
ஒரு தொலைவுக்கு வெற்று வீதி...
ஒரு நொடியில் இருள்...
எல்லாச் சமாதானங்களின் பின்பும்
பாறை வெடிப்பொன்றினூடு சீறிப்பாயும்
ஊற்று நீர் போல உன் நினைவு.
இக்காதலும் இப்புனிதமும்
இப்படியே வாழட்டும்.

நீயோ நானோ
ஒருவரை ஒருவர் நோக்கி வராதிருப்போம்.
மெளன அழுகை
ஆற்றை நிறைக்கட்டும்.

பங்குனி - 1991

11 அக்டோபர், 2007

நான்கு நகரங்கள்

நகரம் – 1

புகையிலைக்குடிலின் புகையும்
மூசிப்பெய்யும் மாசிப்பனியும் கவியும்
காலையில் இந்நகரத்தில் பிறந்தேன்.
மாடப்புறாக்கள் கிசுகிசுக்கும்
கோபுரக்கோவில்களின் மணியோசை
என்னை எழுப்பியது.
சப்பறச்சிற்பங்களில் முதிர்ந்தேன்.
ஆழங்களும் மாயங்களும்
நிறைந்ததிந்தநகரமென்றிருந்தகாலை
காயங்களும் நிகழ்ந்தன.
தொப்புள்கொடியும்
அறுந்து அவர்கள் செல்லச்செல்ல
“அல்லாவே”
என்ன செய்ததிந்த நகரம்?
இன்றோ
எவருக்கும் தெரியாமல் நடப்பவைகளும்
எல்லோருக்கும் தெரிய நடப்பவைகளும்
நகரத்தின் மடைமைக்குக் கிடைத்த பரிசு!
முன்னொருகாற் புகையிலை வியாபரம் செய்தவிந்நகரம்
ஒடுங்கியவர்களிடம் தோள்த் துண்டைப்பறித்தது
ஓங்கியவர்களிடம் சேவகம் செய்தது.
இந்நகரத்திற்கெனவொரு நதி இருந்திருப்பின்
அப்பாவிகள் துன்பத்தைக்கழுவியிருப்பர்
பாவிகள் சாபங்களைக் கழுவியிருப்பர்
அரசர்கள் வாள்களைக்கழுவியிருப்பர்
மதகுருமார்களின் புனிததீர்த்தமாகவுமது
நகரத்திற்குச் சாந்தியையழித்திருக்கும்.
எதுவுமில்லாதிது ஏனடிமையானது.

இரவையும் உசுப்பி நடந்த மனிதர்கள்
மறைந்து போனபின்
நம்பிக்கை
கைவிடப்பட்ட இராச்சியத்தின்
சிதிலமடைந்த சுவரானது

நகரம்- 2

சூரியன் உதிக்குமிந்த நகரத்தில்
நான் பிறக்கவுமிலை வாழவுமில்லை.
நடந்து கடந்த நாளொன்றில்
கட்டவிழ்ந்து அலையும் படகுகள் வாவியில்,
மானுடம் கையேந்தி அலையும் வீதியில்,
திசையறியாது சீவியம் சிதைந்தது பீதியில்.
எண்ணங்களையும் வார்த்தைகளையும்
ஒருங்கிணைக்கத்தெரியாத கவிஞன்போல்
அழுந்திக்கிடந்தது அந்நகரம்.

நகரம்-3

கோணங்களாகவும் குடாவாகவும்
இந்துமகா ஆழியுள் நெளிந்தது இந்நகரம்
பாறையாகிய முதுகில் மனிதர் வாழ்ந்தனர்
இரவின் தூக்கத்தைக் கடல் மென்றது
இருளின் வனப்பை அலை கொண்டது
மதுவின் சுவையைக் கரை தந்தது.
மனங்கள் மணற்றுகளுள் கரைந்தன.
நம்பிக்கைகளைத் தொங்கவிட்ட மரம்
நூற்றாண்டுகாலப் பூர்வீகக்கதைகளை நம்பியபடி
ஆழியின் மேற்றொங்கியது..
எதற்கும்மடங்காது வீசுகிற காற்றும் வெப்பமும்
மரண வாடையை மறைக்குமென்று
எண்ணுகிறவர்கள்கையில்
அந்நகரம் விழுகின்றபோதெல்லாம்
உப்பும் வெப்பமும் நிறைந்த கண்ணீரோடு மக்கள்
பிணங்களை எரிக்கிறார்கள்; புதைக்கிறார்கள்.
நான்கு மதங்களின் மயானமாகிக் கிடக்கும்
இந்நகரம்.

நகரம்-4

மாயங்கள் குழைந்தன
மின்னொளி இழைந்தது
இரவின்நகரத்தில்.
மாநகரின் நடைபாதை,
நாதியற்றவர்களின் இரவுப்புகலிடம்.
கொத்து ரொட்டிக்காரன் கடை வாசலில் பரதேசி,
பரதேசி வாயில் நகரின்பாடல்.
விழித்தபின்
விற்பதற்கும்
வாங்குவதற்குமான நெரிசலில் பகல்.
காற்றும் வெப்பமும் குமைந்தன.
அரச இயந்திரம் பாடாவதியாகிக் கக்கிய புகையில்
கருத்தது சூரியன்.
சொர்க்கத்தில் உழல்பவர்கள்
கட்டிய பன்சாலைகளில்
நரகத்தில் உழல்பவர்கள் அழுதார்கள்.
முன்னின்ற அலரிமலர்க்கொத்துக்களையோர்கணம் முகர்ந்தேன்.
“பாவம் அவைகள் என்ன செய்யும்”.
நீண்ட காலத்தின் பின்
இதயத்துக்குள் இருந்த நண்பர்களுடன் மதுவருந்திய
அவ்விரவிற் காவற்துறை என்னைக் கடத்திச்சென்றது
நான்கு நகரங்கள் பற்றிய என் கவிதை,
நான்கு வரிகளோடு முடிந்து போகுமென்று அவர்களறிவர்
நீங்கள்?
குண்டுகள் துளைத்த கட்குழியிலிருந்து
உதிர்ந்த கண்கள் அண்ணாந்து பார்க்கின்றன.
யார் பேசினாலும் மௌனம் இருண்மையுடன் கொண்ட உறவு
கலையவில்லை.
நீதியை பேசும் எந்நாக்குமறுமென்று யாருணர்ந்திருந்தார்.

நீடூழி வாழ்கவென் பொன்நகரங்கள்.


தேவ அபிரா
05-10-2007

25 செப்டம்பர், 2007

வசந்தம்

பூமியின் ஆழத்திலிருந்து காதல்
நெடுமரங்களின் வேர்களுட் புகுந்து மேலெழுந்து
வசந்தத் துளிர்களின் நடுவில் மலர்களாகிறது.
வேனிலின் அசைவற்ற மெளனத்தில்,
வெம்மையில்
ஒவ்வொன்றாக விழுகின்றன மலர்கள்.
நிலம் மறைகிறது.
ஏக்கம் கடலில் ஆவியாகி
விசும்பின் உயரத்தில் திரண்டு
விம்மி வெடிக்கிறது துயரமாக.
நெடுமூச்செறிந்து ஆவிபடரும் மண்ணின்
ஆன்மா அடங்குமோ!

துளிகள் சொட்டும் காலையில்
ஒற்றைக் குயிலின்
தீராக் குரலிலும் சிதைகிறது
வசந்தம்.

சித்திரை - 1995

விசாரம்

வேர்களில் பரவி
இலைகள் செறிந்து
நிலவுக்கு நிமிர்ந்த
மரங்களின் கீழே நகர்ந்தது அருவி.
இருண்ட காட்டின் நறுமணமும் கமழ்ந்தது.
நீரலையைத் தழுவும் பாறையை மருவிக்கிடக்கையில்
வாவென இழுத்துத் தேகம் ஆட்டும்
அருவியைக் கேட்டேன்:
"மானிட ஆத்மாக்களின் துயரம் ஊற்றெடுப்பது எங்கிருந்து ...?
கனவின் வண்ணங்களுடன் வரும் இதய ஆழத்தின் குமிழிகள்
பூமியில் உடைவதேன்...?
காலத்தின் மெளனத்தில் புதைந்திருப்பது என்ன...?"
அருவி போய்க் கொண்டிருந்தது.

மார்கழி - 1994

சமூக ஒழுங்கு

நள்ளிரவில் வீடு திரும்பிய அக்காவுக்கு அத்தான் கூறியது:
"இரவில் உலாவுவது பேய்கள் மட்டுமே"

அப்பா நீண்ட புகையிலையின்
நரம்புகளை நீக்கத் தொடங்குகையில்
புன்னகை ஒன்றை அத்தானுக்குப் பரிசளித்தார்.

அம்மா மன நிம்மதியுடன் அடுக்களைக்குப் போனார்.

அப்பா புகையிலைத் துகள்களை சேர்க்கையில்
அக்கா முகம் சுழித்தாள்.
அவளுக்கு புகையிலையின் மணமும் பிடிப்பதில்லை.
"ஒழுங்கான குடும்பத்தில்
யாரெண்டாலும் வீட்டுக்கு இருட்டுக்கு முன்னம் வரவேணும்"
தனது அறிவு தெளிந்த நாளில் இருந்தே
புகைப்பவரான அப்பா சொன்னார்.

"நகரத்தின் இரைச்சல் அடங்குவது;
காற்று மனம் விட்டு மரங்களுடன் பேசுவது;
நட்சத்திரங்கள் விசும்புடன் குழைவது;
ஆத்மாவின் தனிமை கீதம் இழைவது;
யாவும் இரவிலன்றோ?"

அக்காவோ இரவுவானத்தில் கனவுகளை எழுதுபவள்
அக்கா அத்தானிடம் இது பற்றி
அவ்விரவின் காமத்தின் முன்னரோ பின்னரோ
துணிய(க்)கூடுமோ...

தீக்குச்சியை பெட்டியில் உரோஞ்சி
சுருட்டில் பிடித்து
தீ பரவும் முகத்துடன் அப்பா கூறினார்:
"அதிலும் பெண்கள் வீட்டுக்கு வரவேணும்
இருட்டுக்கு முன்னம்"

அப்பாவின் புகையும்
அத்தானின் இரவும் நீள்கின்றன...

மாசி - 1995

(அ)காலத்தின் சொற்கள்

தடிமனும் சளியும் சற்று அதிகமாக இருப்பதாலும்
சமாதான ஒப்பந்தம் முறியப் போவது பற்றித் தன்
மூக்கு நுனி வியர்ப்பதில் இருந்து முன்னுணர்வதாகவும்
என் நண்பன் கூறியதால்
அக்கடைசி இரவை வீணாக்காமல் இருக்க மட்டுமே
நாங்கள் மதுவருந்தப் போனோம்.

அன்றிரவு எந்த இலக்கியவாதியும்
என் நண்பனின் வசவுக்குத் தப்பவில்லை.
இலக்கியத்தின் உச்சாணிக் கொப்பில் நின்று
தன் சளி அவ்வளவையும் காறித் துப்பினான்.

"அட இலக்கியவாதியே
என் கேள்விகளுக்கு நீ மட்டும் பதில் சொன்னால்
இன்னுமொரு போத்தல் மதுவினால்
உச்சாணிக் கொப்புக்கு மேல் உனக்கொரு சொர்க்கம்
உருவாக்கித் தருகிறேன்" - என்றேன்
பொரி கடலையும் பற்களும் நொ¢பட
விழியுருட்டிக் "கேள்" - என்றான்
"இடியும் மின்னலும் மழையும் மிகைபடப் பொழியும்
இரவில் உன் மடியுள் முடங்கும் பிள்ளையின் முகத்தில் தெரிவது...?"
"அச்சம்"
"வீசும் பிரம்பொடு மூசும் குருவின் முன்னே
விதிர்க்கும் சிறுவன் மூக்கில்
உதிர்வது?"
"வியர்வை"
"உன் காலுக்கிடையில் சிக்கிய எறும்பின் வாழ்வு"
"அவலம்"
"மனிதனை மெளனமாக்குவது?"
"மரணம்"
"உச்சாணிக் கொப்பில் இருந்து நீ சொர்க்கத்திற்குப் பாய
இன்னும் ஒரேயொரு கேள்வியே உள்ளது"
"சொல்லிவை மதுவுக்கு"

"உன் எல்லாச் சொற்களும் ஒரேயொரு அர்த்தத்தை மட்டுமே
கொள்ளும் காலம் எது?"

"என்ன!
ஒரு சொல்லுக்குப் பல பொருளும்
பல சொல்லுக்கொரு பொருளும்
உண்டென் மொழியில் - உண்மை
ஆனால் மேற்சொன்ன சொற்களில்
ஒன்றேனும் ஒன்றுக்கும்
எக்காலமும் பொருந்தாதே!
என்னடா!!
முட்டாள் கவிஞன் ஒருவன் தன் புலம்பல் தொகுப்புக்கு
வைத்த தலைப்போ உன் கேள்வி
போடா உன் மதுவும் சொர்க்கமும்!"

இரவு தள்ளாடிப் போக
நாங்கள் கலைந்தோம்.

அதிகாலை என் தொலைபேசி ஒலித்தது
கலங்கித் தழும்பி உடையும் குரலில் நண்பன்:
"எல்லாச் சொற்களும் ஒரேயொரு அர்த்தத்தை மட்டுமே கொண்ட
காலத்தை நேற்றிரவு பெற்றேனப்பா!
நேற்றிரவு
விசேட அதிரடிப்படை என் பிள்ளையை..."

அச்சம் வியர்வை அவலம் மரணம்...

வைகாசி - 1995

23 செப்டம்பர், 2007

அரளிப் பூவும் தரங்காவும்...

மழலையின் விரல்கள் வருடச் சிலிர்க்கும்
மானுட முகம் போல்
மென்சிறு இலைகளின் வசந்த உயிர்ப்பு
ஒளிரும் காலைப் பொழுதில்
உன் காதலின் அழைப்பில்
ஏக்கமுறும் என் இதயம்
உன் செவ்விதழ்களில்
என் காதலைத்தரக் காலம் இல்லையே!
இதய ஆழத்திருந்து எழுந்து
வாழைக்குருத்தென விரியக்
கடும்காற்றில் கிழிந்த கனவுகளோடு
ஆறாத இரணங்களின் பிணமானேன்
அதுவொரு காலம்.
மீண்டும்...
வெண் அரளிப் பூக்களின் கொத்தைப் பறித்தெடுத்தேன்.
பூவிரண்டு தா
பூஜைக்கென்றாய்
மானுடர்க்கே அன்றிப் பூஜைக்கல்ல என்றேன் முகர்ந்தபடி.
செம்மை தீண்டப் பிடிவாதமுடன் சொல்கிறாய் "பூஜைக்கே"
மென்நய மெளனத்தில்
அரளிப்பூவின் விளிம்போரம் படரும்
செம்மையைப் பார்த்தேன் - உதடுகள்.
சூழவுள்ள விழிகளைத் தப்பி
மொழிகளையும் தப்பி
நீ எதையோ தேடுவதை
நான் மட்டும் உணர்வதேன்?
அந்தி மாலையில்
நித்திய கல்யாணிப் பூக்களை
என் முன்றலில் நீயேன் கொய்து கோர்க்கிறாய்?
விலகிச் செல்லும் என் ஆத்மாவின் சுனையில்
ஊற்றின் குமிழியொன்று
எழஎழப் பெரிதாகும் உணர்வில் துடிக்கிறேன்.
தீபாணி தரங்கா
பிரியும் நாளில்
நானும் அழுவேன்.

ஆனி - 1995

மாயச்சுனை

நெஞ்சச் சிறுகுழியின் உள்ளிருந்து பின்னுகிறது ஏக்கம்
என் துயரம் எப்பொழுதும் வாழுமோ
என் கவிதையைப் போலே.
வெறுவான நுனியில் தலைநிமிர்த்திய
புளிய மரத்தின் சிற்றிலையின் அளவேயான என் கனவுகள்
அறைக் காற்றாடியின் அலகுகளில்
கறுப்பாகிப் படிந்துள்ளன.

சில நாட்களின் முன் எழுதிய
என் கவிதை இப்படி இருந்தது:
(ஓர் காதல் கவிதைக்குரிய தொடக்கம் இருப்பதாக
நீங்கள் நம்பத் தொடங்குமுன் வாசியுங்கள்...)

"வெறுமை மெல்ல மெல்ல அழிந்து போனது
மண்ணுடன் புரண்ட அலைகளில் குமுறல் இல்லை.
பெளர்ணமி நிலவோடு
காற்றோ விசும்பின் கதைகள் ஆனது.
தெப்பக்குளத்தில் மெல்லென விழுந்த பூவெனக்காதல்
என்னுள் ஆடுகிறது.
ஆத்மாவினுள் பிறந்து விழிகளில் பரிதவித்து
உன்னைத்தேடி ஏங்குகிறது காதல்
அந்திமாலை வேளைகளில்"
(என்ன
கரைகளை ஈரப்படுத்தும் துயரம் இருக்கவே செய்யும்
என்று உணர்கிறீர்களோ)
உன் ஆத்மாவை மூன்றாம் மனித வார்த்தைகளுக்குள் காணுவது
முடியாதென்பதைப் போலவே
விழியும் விழியுள் ஒளிரும் காதலும்
சாஸ்வதமாயிருக்கும் எனவும்
அது எவ்வார்த்தைகளுக்கும் அஞ்சாதிருக்கும் எனவும்
நான் நம்பேன்
என் காதல் இனியொருமுறை கெஞ்சாது

இளவேனில் காலத்தளிர் போலும் உதடுகளைக் கவ்வி
வசந்தகால ஊர்க்குருவியின்
உயர்வானச் சறுக்கல் போல
காதலின் ஆழியுள் ஓர்நாள் போவேன்.
உன் ஆத்மா எனக்குப் பொய் சொல்லாது என்றால்
இன்னொரு வசந்தத்திற்கு இந்த வேனிலில் வாடியிரு!

நானே என் நெஞ்சத்தில் அகழ்ந்த மாயச்சுனையில்
நீர்மொண்டு அருந்த முயன்று மாய்ந்தேன் என்றால்
நோவதற்கும் நொந்தழுது பாடுதற்கும் பின்
வாழ்வதற்கும் நானேயானேன்.

ஆவணி - 1995

மழையெல்லோரெம்பாவாய்...

இங்கு பொழிகிறது மழை.
அங்கென் மண்ணிலும்
கையேந்தா மனிதரின் கனவுகள்
உலர்ந்த காலத்திலும்
மழையின்றி நிமிராவெப்பயிரிலும்
பெய்யுமோ?
வேரறுந்து விலகிய மனிதரின் விளைநிலம்
சுவடிழந்து அழுகிறது.
தேரசைந்த திருக்கோவிற் கனவுகளை
பாழடைந்த கோபுரம் பாடும் பாடலை
பாடும் கிழவனின் கைத்தடியும்
வழுவி நனையுமோ?
ஊர் முடிந்த வெளியில்
பொன்னிற மாலையில்
மஞ்சள் குளிக்கும்
என் தனியொரு வீடும் வேம்பும் நனையுமோ?

ஏக்கம் மீதுற விண்ணின் துளிகள்
பின்னிப் பெருமழையெனப் பொழிய
என் சகியின் விழிகளை மருவி
இதழ்களைத் தழுவும்
சாளரக் கரையின் சயனத்துடலில்
படுமோ தூவானம்?
மூசிப் பெய்தும்
முழுநிலமும் கரையவோடியும்
பின்னும் பெயரின்றி
ஆழக்கடலில் கலந்து அழியும் மழையே!
தேடிப் பெய் என் தேசத்தை.

ஏங்கித் தளர்ந்து இனிப்புகலேயில்லை
எனத்தளம்பும் மனிதரை,
நெடுமரமடியின் நனையாக் குடிலில் இருத்திப் பின் பெய்.
'இம்மழை,
மண்ணில்
மரத்தில்
மனதிலும் பெய்தது'
என்றுனக்கழியாப் புகழ் தருவேன்.

கார்த்திகை - 1996