பின்பற்றுபவர்கள்

சக எழுத்தாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சக எழுத்தாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜனவரி, 2011

ஆரியல் சரோன்.. ஜோர்ஜ் குளோனி.. தமிழர்கள்,

செய்தி சொல்லும் செய்திகள் II

 
செய்தி சொல்லும் செய்திகள் II  ஆரியல் சரோன்.. ஜோர்ஜ் குளோனி.. தமிழர்கள் - GTNற்காக தேவன்

 
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வாழும் நாட்டில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் வந்த சில செய்திகள் பற்றி எனது நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் பின்வருமாறு கூறினார்.
 
“உவன் செய்த அநியாயத்திற்குத்தான் கோமாவில கிடந்து அனுபவிக்கிறான் கடவுளாப்பாத்து கொடுத்த தண்டனை. உவன் இன்னும் அந்தரிக்கவேணும்”
 
யாரைப்பற்றி நண்பர் குறிப்பிடுகிறார் என நீங்கள் யோசிக்கிறீர்கள்!
 
இந்தக் கிழமையுடன் சரியாக ஜந்து வருடங்களாக இஸ்ரேலிய முன்னை நாள் பிரதமர் ஆரியல் சரோன் (Ariel Sharon) கோமாவில் இருக்கிறார்.  கடந்த ஜந்து வருடங்களாகச் செயற்கையான முறையில் உயிர்தரிக்க வைக்கப்பட்டுள்ள Ariel Sharon சரோன் பாலஸ்தினியர்கள் மீதான ஓடுக்கு முறைகளை தீவிரப்படுத்தியவர்.
 
எனது நண்பரின் கருத்துப்படி பலஸ்தீனியர்களுக்கு அவர் செய்த அட்டூழியத்திற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனையே அக் கோமா. எமது ஈழத்து அரசியலிலும் அவ்வப்போது இவ்வாறான எதிர்பார்ப்புக்களைக் கேட்கிறோம். 
 
அடாது செய்தவன் படாது படுவான்.. தன்வினை தன்னைச்சுடும்... இது போன்ற பழமொழிகள் எமது உணர்வுகளுக்கு வடிகாலமைத்துவிடுவதை அவதானிக்கிறோம்,
 
எனது நண்பனின் தர்க்கவியல் சரி என்றால் இலங்கையில் கோமா வந்து படுக்க வேண்டியபலரைப் பட்டியலிடலாம். மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா, டக்லஸ், கருணா என அந்தப்பட்டியல் நீளும்!
 
விடுதலைப்புலிகளினால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாறானதொரு பட்டியலை வைத்திருக்கிறார்கள்.
 
உலக வரலாற்றில் தமது தவறுகளுக்காகவும் கொடூரமான அரசியல் செயற்பாடுகளுக்காகவும் தண்டிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்தான். ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆண்டவன் தான் காரணம் என நான் நம்பவில்லை.
 
ஏனெனில் உலகின் மிகப் பெரியபயங்கரவாதிகளான அமெரிக்கத் தலைவர்கள் எல்லோரும் சகல செளகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது சந்தோசமாகவே செத்துப் போயிருக்கிறார்கள்.
 
விடுதலைப் புலிகள் தாம் உயிர்ப்புடன் இருந்தவரை தமது அரசியல் எதிரிகளை ஆண்டவனைத் தண்டிக்க விடாமல் தாமே தண்டித்துக் கொண்டிருந்தார்கள்.
 
லலித், பிரேமதாச, காமினி, ராஜீவ் காந்தி என அவர்களின் தண்டனை பட்டியலில் பூர்த்தி செய்யப்பட்டவர்கள் மரணமடையாது இருந்திருந்தால் அவர்களின் தவறுகளுக்காக நியாயமான தண்டனைகளைப் பெற்றிருப்பார்களா என்பது மறுபுறத்தில் சந்தேகமே! 
 
உலக அரசியல் வரலாற்றில் ஆதிகாரஅரசியலில் தமக்கு சாதகமான இடங்களை எடுக்க முடியாதவர்கள், அதிகாரத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர்கள் அல்லது பலவீனமானவர்கள் தமது தவறுகளுக்கான  தண்டனைகளை சிலவேளைகளில் அடைகிறார்கள்.
 
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சில ஆபிரிக்க அரசியல் மற்றும் இராணுவத்தலைவர்கள்,  முன்னைநாள் கம்யூனிசத் தலைவர்கள், சேர்பிய அரசியல் மற்றும் சில இராணுவத் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றறத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலான குற்றவாளிகள் அப்பாவிகளைத் தண்டித்துக் கொண்டு மூக்கும் முழியுமாக உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
 
ஆரியல் சரோனின் பிழையான உணவுப்பழக்கம் காரணமாகவே அவரது மூளைக்கு குருதி வழங்கும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது என்றும் அதனாலேயே கோமா ஏற்பட்டது என்றும் கூறிய போது என் நண்பனின் முகம் சற்றே இருண்டு போனது.
 
இன்னுமொரு செய்தியும் எங்களது உரையாடலுக்குக் களமானது.
 
அண்மையில் வெளியிடப்பட்ட வீடியோ செய்தி ஒன்றில் அமெரிக்க நடிகரான ஜோர்ச் குளோனி(George Clooney) பின்வருமாறு கூறுகிறார்.
 
“நாங்கள் கொங்கோவைத் தவறவிட்டோம் ருவண்டாவைத் தவறவிட்டோம் ஏன் டாவூரையும் தவறவிட்டோம்.   போர் தொடங்குவதற்கு முன்னம் அதை நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் இருந்திருக்கிறது என்பதை அறிந்திருந்தும் கொங்கோவிலும் ருவண்டாவிலும் டாபூரிலும் இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்குப் பிந்திவிட்டோம்"
 
இதனை அவர் “ The World is Watching (உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது)”என்னும் செயற்திட்டத்திற்கு உதவியளித்து வெளியிட்ட வீடியோச் செய்தியிலேயே குறிப்பிட்டார்.
 
இச் செயற்திட்டம் சூடானை மையப்படுத்தியே தொடங்கப்பட்டுள்ளது.
 
ஏதிர்வரும் திங்கட்கிழமை தென் சூடானில் சர்வசனவாக்கெடுப்பு ஒன்று நடைபெறவுள்ளது.  தென்சூடான் சூடானின் ஒருபகுதியாக இருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பே அதுவாகும்.
 
தென் சூடான்(கிறிஸ்தவ ஆபிரிக்க மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும்) நீண்ட காலமாக வடசூடானின் (அராபிய அரசியல் தலைமைகளால் நிர்வகிக்கப்படும்பகுதி) ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர்.   வட சூடானின் ஒடுக்குமுறையின் உச்சக்கட்டமாக சூடானின் டாவூர் மாகாணத்தில் கொடூரமான இனப்படுகொலைகள் கடந்த காலங்களில் நடந்தேறின.ஆனால் இது தொடர்பான தகவல்கள் மிகவும் காலம்கடந்தே உலகுக்கு தெரிய வந்தது. தற்போது நடைபெறவிருக்கும் சர்வசன வாக்கெடுப்புகாரணமாக சூடானில் மீண்டுமொரு வன்செயல் நிகழலாம் என உலகம் அஞ்சுகிறது "உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது-The World is Watching” என்னும் செயற்திட்டத்தின் கீழ் தெற்கு மற்றும் வடக்கு சூடான் எல்லையை கடந்து செல்லும் சகல வர்த்தகச்செய்மதிகளும் அந்தப் பிரசேதத்தில் பொதுமக்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளையும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளையும் கண்காணிக்கும்,
அழிக்கப்பட்ட கிராமங்கள் குண்டு வீசப்பட்ட பிரதேசங்கள் மற்றும் செறிவான மனிதப் படுகொலைகள் நிகழக் கூடிய சாத்தியங்களை அவதானித்து இச்செய்மதிகள் தகவல்களைத்திரட்டும் இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களையும் படங்களையும் கூகுள் மற்றும் இணையத்தளவடிவமைப்பு நிறுவனமான Trellon ஆகியவற்றின் உதவியுடன் ஜக்கிய நாடுகள் சபையின் செய்மதிச்செயற்திட்டம் (UNOSAT) ஆராய்ச்சி செய்து தெளிவான தகவல்களாக  www.satsentinel.org. என்னும் இணையத்திற்கு வழங்கும்.  இதன்மூலம் இணைய வசதி உள்ள எவரும் சூடானில் நிகழும் எந்த வன்முறையையும் 36 மணித்தியாலத்திற்குள் காணக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தச்செய்தியை வாசித்த பின்னர் எனது நண்பர் கேட்டார்: “முள்ளிவாய்க்காலையும் நாங்கள் தவறவிட்டுவிட்டோம்” என ஜோர்ச் குளோனி ஏன் சொல்லவில்லை”
 
அவருக்கு தமிழர்கள் என்றொரு இனம் இருப்பதே தெரிந்திருக்குமோ தெரியாது என்றேன்.
 
நாடுகடந்து இருக்கிற தமிழர்களிடம் சொல்லிக் குளோனியுடன் கதைக்கலாமே என்றார்.
 
நாடுகடந்த தமிழர்கள் பலகுழுக்களாகப் பிரிந்து தமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை நாடினால் இன்னொருவருக்கு பிடிக்காதென்றேன்.
 
நாசமாய் போகவென்றார்!  என் நண்பர்.
 
GTNற்காக தேவன்
08/01/2011

31 மே, 2008

இலங்கையின் ஊடகத்துறையும் அது எதிர்கொள்ளும் சவால்களும்:

உலகத்தமிழ்ச் செய்திகள் என்னும் இணையத்தளத்தில் பரிபூரணன் என்பவர் எழுதிய கட்டுரையை இங்கு இணைத்துள்ளேன்

இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் அய்யாத்துரை நடேசன் கொல்லப்பட்டு இன்று 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004 ஆம் ஆண்டு ஒரு திங்கட்கிழமை காலை 8 மணியளவில் தனது வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது ஆயுததாரிகளினால் அவரது உயிர்காவுகொள்ளப்பட்டது. 2002 ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதானம் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருந்த காலப்பகுதி அது. இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க கோலோச்சியகாலம் அது. விடுதலைப் கிழக்கின் தனித்துவம்பேசி புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறிய மிகப்பரபரப்பான காலம் அது. வீரகேசரி,ஐ.பீ.சீ மற்றும் உள்நாட்டு இலத்திரணியல் ஊடகங்களில் செய்தியாளராக கடமையாற்றிய நடேசன் சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். ரிச்சார்டீ சொய்சா முதல் நிமலராஜன், நடேசன், சிவராம், ரஜிவர்மன், ரேலங்கி செல்வராஜா, றமேஸ்நடராஜா, பாலநடராஜஐயர், சுகிர்தராஜன் சம்பத் லக்மால் என நீண்டு இறுதியாக மே28 ஆம் திகதி தேவகுமாரன் என 15க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை இலங்கை பலிகொண்டிருக்கிறது. சில ஊடகவியலாளர்கள் காணமல் போனவர்களாகவே உள்ளனர். 2005 ஆம் ஆண்டின் பின் மே 31 2008 வரை யாழ்ப்பாணத்தில் மட்டும் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இப்போ யாழ் குடாநாட்டில் ஊடகத்துறையின் பக்கம் தலைவைத்து படுக்கக் கூட ஊடகத்துறையினர் பயப்படுவதாக ஒரு ஊடகவியலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். அங்கு மட்டும் அல்ல இலங்கையின் எப்பாகத்திலும் இன்று ஊடகத்துறை தனது பணியை சுதந்திரமாகச் செய்ய முடியாதவாறு அராஜகம் தலைவிரித்தாடுகிறது. ஆரசாங்கத்திற்கு சார்பான திவயின பத்திரிகையின் பாதுகாப்பு பத்தி எழுதாளரின் பேனாகூட பாதுகாப்பு குறித்து எழுத வேண்டாம் என்ற கட்டளைக்கு உட்பட்டுள்ளது. முன்பு வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே பிரச்சனை என்ற கால் மாறி இலங்கை பூராகவும் ஊடகவியலாளர்கள் கொடூரமாக அடக்கப்படுகிறார்கள், பழிவாங்கப்படுகிறார்கள். இக்பால் அத்தாஸ் முதல் ஹேயித் நொயார் வரை ஏராளமான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும், கொலைப்பயமுறுத்தலுக்கு உள்ளாகியும் உள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக அரசாங்க ஊடகமான ரூபவாஹினிக்குள் ஒரு அமைச்சர் புகுந்து ஊடகவியலாளர்களை தாக்கி அச்சுறுத்தி உள்ளார். அதேபோல் லேக்கவுஸ் பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு செயலரால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கையின் ஊடகத்தொறையின் செல்நெறி குறித்து சற்று பின்னோக்கிப் பார்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இலங்கையின் ஊடகத்துறை என்பது மொழிசார்ந்த இனம் சார்ந்த மதம்சார்ந்த ஒன்றாக தற்போது வளர்ச்சி பெற்றுள்ளது. ஊடகம் என்ற பொது வரையறையைத் தாண்டி குறுகிய வட்டத்துள் தனது செயற்பாட்டை குறுக்கிக்கொண்டுள்ளது.

1983களின் பின் எழுச்சிபெற்ற தமிழ்தேசிய விடுதலைப்போராட்டமும் குறிப்பாக ஆயுத எழுச்சியும் தமிழ் சிங்களம் என்ற மொழிவாரியான இனக் கூர்மையை, இனரீதியான பிரிவினையை கூர்மை அடையச் செய்தன.

இதனால் ஆரம்பத்தில் இரண்டு பிரதான இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்தி வந்த ஊடகங்கள் 1990களில் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட பின்னர் மூவினங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வெளிப்படுத்த முயற்சித்தன.

எனது அறிவுக்கு எட்டியவகையில் 1990களின் பிற்பாடு இலங்கையின் பிரதான 3 இனங்களான சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஊடகங்கள் எழுச்சிபெறத் தொடங்கின. இந்த புதிய ஊடக கலாச்சாரம் அச்சு ஊடகங்களிலேயே அவதானிக்க முடிந்தது.

சிங்கள மொழிசார்ந்த அச்சு ஊடகங்கள் பல சிங்கள தேசியவாதத்த்தை நியாயப்பாடுத்துவதாகவும், தமிழ் மொழி சார்ந்த ஊடகங்கள் தமிழ்தேசியவாதத்தை நியாயப்படுத்துகின்றனவாகவும் தம்மை அடையாளப்படுத்தின.

தழிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டபோதும்; இனரீதியாக முஸ்லீம் கலாசாரத்த்தை கொண்ட முஸ்லீம்கள் தமது தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தும் அச்சு ஊடகங்களை ஆரம்பிக்கலாயினர்.

இந்த செயற்பாடுகள் காலப்போக்கில் தமது தனித்துவங்களை உறுதிப்படுத்துவதற்கான அமைப்பியல் சார்ந்த நடவடிக்கைகளாகவும் மாற்றம் பெற்றன.

அதனால் 1990களின் பிற்பகுதியில் தமிழ் ஊடகவியலாளர் சங்கங்கள், முஸ்லீம் ஊடகவியலாளர் சங்கங்கள், சிங்கள ஊடகவியலாளர்களை அறுதிப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊடகசங்கங்கள் என பல தோற்றம் பெற்றன.

இது இலங்கையின் ஊடகத்துறையில் ஒரு பாரிய சிக்கலான அல்லது முரண்பட்ட விடயமாக காணப்படுகின்றது.

குறிப்பாக பக்கசார்பற்ற தகவல்களை வழங்குகின்ற தமது கடப்பாட்டில் இருந்து விலகிச் செயற்படும் பல ஊடகங்கள் பக்கச் சார்பான, அல்லது தாம் சார்ந்த இன, மொழி, மத, பண்பாட்டு கலாசார விழுமியங்களை முதன்மைப்படுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் மரபு சார்ந்த அல்லது அடிப்படைவாத நிலைப்பாடுகளை எடுத்துள்ளன.

இந்த துர்ப்பாக்கிய நிலையானது, உரியதும் முக்கியமானதுமானதும் சரியானதுமான தகவல்கள் மக்களை சென்றடைய முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன.

இலங்கையின் ஊடகத்துறையின் அடுத்த பிரதான பிரச்சனை அரசாங்க ஊடகங்கள் அல்லது அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்களின் செயற்பாடுகள்.

மறுபக்கம் தனியார் ஊடகங்கள் அல்லது அரசியல் கட்சிகளைச் சார்ந்த அல்லது அவற்றிற்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஊடகங்களின் செயற்பாடுகள்.

இந்த நடைமுறையானது இலங்கையில் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக ஒழுக்கவியற் கோட்பாடு என்ற ஒன்றின் இன்றியமையாத தேவையை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் இலங்கை சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டைக் கடந்த பின்பும் இலங்கையின் ஊடகத்துறையினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய பொதுவான ஊடக ஒழுக்கவியற் கோட்பாடு இல்லை என்றே கூறலாம்.

இன்னொரு புறம் இலங்கையில் 1980களின் ஆரம்பத்தில்; தோற்றம் பெற்ற ஆயுதப் போராட்டத்தின் ஊடு, பல ஆயுத அமைப்புக்கள் உருவாக்கம்பெற்றன. இந்த அமைப்புகளில் முன்னர் உறுப்பினர்களாக இருந்து, அவற்றில் இருந்து விடுபட்டு தற்பொது ஊடகவியலாளர்களாக பலர் மாறி உள்ளனர். அதேவேளை தற்போதும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பலரும் தமது அமைப்புக்களின் ஊடகங்களிலும் பிற ஊடகங்களிலும் ஊடகவியலாளர்களாகவும் தம்மை அடையாளப் படுத்தியுள்ளனர்.


இன்னும் சிலர் ஊடகவியலாளர்களாக உள்ள அதேநேரம் மறைமுகமாக ஆயுத அமைப்புக்களுடன் உறவை வைத்திருப்பவர்களாக காணப்படுகின்றனர்.

மேற்குறித்த இந்த விசேட பண்பு தமிழ் ஊடகத்துறையிலேயே காணப்படுகிறது.

இதனால் ஊடகத்துறையில் இவர்கள் தொழிற்படும் போது மாற்று தரப்பினர் இவர்களை அவர்களின் பின்புலத்தோடு இணைத்து சந்தேகத்தோடு நோக்குகின்றனர்.

இது இவர்கள் என்ன சொல்ல வருகின்றனர் என்பதற்கு அப்பால் இவர்கள் யார் இவர்களின் பின்புலம் என்ன என்ற விடயங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. அதனால் இவர்களினால் வெளியிடப்படும் கருத்துக்களுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகின்ற நிலமை காணப்படுகின்றது.

இந்த முரண்பாடும் கடந்த காலத்தில் எம்மில் பலர் கொல்லப்பட்டும் காணாமல் போவதற்குமான பிரதான காரணிகளில் முக்கியம் பெறுகின்றன.

மறுபுறம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கூறுகின்ற, அல்லது வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர முனையும் ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் புலிகளாக அல்லது புலி ஆதரவாளர்களாக அல்லது அதற்கும் மேலாக தேசத் துரோகிகளாக பார்க்கும் தென்பகுதியின் நிலை.

ஆரம்பத்தில் தமிழ் ஊடகங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த பார்வை தற்போது அனைத்து ஊடகங்களுக்குமே பொதுநிலைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று ஆயுதப் போராட்டதரப்புகளை விமர்சிக்கும் அல்லது அத்தரப்பினரின் உண்மை நிலைகளை வெளிக்கொணர முற்படும் ஊடகங்கள் அரச சார்பு ஊடகங்களாகவும் அல்லது தமது நிலைப்பாட்டுக்கு துரோகம் இளைப்பவர்களாகவும், போராட்டத்தை காட்டிக் கொடுப்பவர்களாகவும், அல்லது தமது ஆயுதக் குழுவை காட்டிக் கொடுப்பவர்களாகவும் நோக்கப்படும் நிலை தொடர்கிறது.
இதில் விசேடமான பிறிதொரு பாதிப்பை தமிழ் ஊடகத் துறை எதிர் கொள்கிறது. குறிப்பாக யுத்த பிரதேசங்களிலோ அல்லது வடகிழக்கிற்கு வெளியிலோ தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டோ, காணாமல் போயோ, கொல்லப்பட்டோ இருப்பின் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சார்பானவர்கள், விடுதலைப் புலிகளின் ஒற்றர்கள் என பல சிங்கள ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. இது ஊடகத்துறையினருக்கு இடையிலேயே உள்ளகரீதியான முரண்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றன.

மறுபுறம் சிங்கள ஆங்கில ஊடகங்களை நோக்கினால் அரச சார்பு, அரச எதிர்ப்பு ஊடகங்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகள், அரசாங்க செயற்பாட்டாளர்களின் ஊழல்கள், மக்கள் விரோத செயற்பாடுகள் என்பவற்றை விமர்சிக்கும் ஊடகங்கள் அரச விரோத அல்லது தேசவிரோத ஊடகங்களாக முத்திரை குத்தப்படுகின்றன. இதனால் பல ஊடகவியலாளர்கள் உடல், உள பாதிப்புகளுக்கும், ஆபத்துக்களுக்கும் முகம் கொடுக்கின்றனர்.
எனினும் ஒப்பீட்டு ரிதியில் இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களே பாரிய ஆபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த ஆபத்துக்கள் ஆளும் தரப்புகளாலும் ஆயுததரப்புகளாலும் ஏற்பட்டு வருகின்றமையை எவரும் மறுக்க முடியாது.

இதனால் 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆரப்பத்தில் கிழக்கில் இருந்தும் 2005 ஆண்டின் பின் வடக்கில் இருந்தும் 25ற்கும் மேற்பட்ட தமிழ ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இன்னும் பலர் தமது ஊடக தொழிலை விட்டு வேறு தொழில்களுக்கு மாறி உள்ளனர்.

இன்னும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் காணமால் போயுள்ளனர்.

இன்று வடக்கு கிழக்கில் இருந்து சுயாதீன செய்திகளை பெறுவது என்பது மிகவும் சிரமமானதொன்றாகியுள்ளது.

சிங்கள ஆங்கில மொழிமூல ஊடகவிலாளர்கள் சிலரும் தெற்கில் ஆபத்துகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பில் ஊடக சுதந்திரம் குறித்த வரையறைகள் அல்லது மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கான பரிகாரம் என்பன குறித்த தெளிவான வரையறைகள் செய்யப்படவில்லை.

அரசியல் அமைப்பின் 10 முதல் 17 வரையிலான உறுப்புரையில் அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. இதில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசியல் அமைப்பில் ஊடக சுதந்திரம் குறித்து விசேட உறுப்புரைகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை.

அரசியல் அமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் சுதந்திர ஆணைக்குழுக்கள் அமைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன் று ஊடகசுதந்திர ஆணைக்குழு. எனினும் இந்த விடயம் ஆளும் தரப்புகளால் பிற்போடப்பட்டு வருவதனால் நடைமுறையில் அதனைக் காண்பது இயலாத விடயமாகி உள்ளது.

எனினும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் நாட்டின் பாடுகாப்பு, இன ஐக்கியம், சமூகப் பாதுகாப்பு, மதரீதியிலான சுமூகம், பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட நலன்களுக்காக ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த வளிஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூல் நேரடியான ஊடக தணிக்கைகளை ஏற்படுத்த முடியும்.

தவிரவும் உளம்சார்ந்த அல்லது மனோரீதியான மூளைச் சலவை செய்வதன் மூலமும ஊடகங்கள் மீதான மறைமுக அழுத்தங்கள் தொடர்கின்றன.

குறிப்பா யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பனர் தாம்சார்ந்தவர்களது மனோனிலை பாதிக்கப்படும்படி செய்திகள் வெளியிடுவதனைத் தவிர்க்குமாறு கோருகின்றனர்.

அல்லது யுத்தத்தில் உள்ளவர்கள் மனோரீதியிலான விழ்ச்சியை அடைவதற்கு காரணமாகும் தகவல்களை தவிர்க்கும்படியான கோரிக்கைகளை விடுகின்றனர்.

அதாவது ஊடகங்கள் ஊடக வெளிப்பாடுகள் யுத்தமயமாக்கப்படுகின்றன. யுத்தம் புரிகின்ற ஒவ்வொரு தரப்பினரும்; தமது யுத்த விரிவாக்கத்திற்கு ஊடகங்கள பக்கபலமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் ஊடகத்துறையானது தற்போது யுத்தகால ஊடக முறைமைக்கும் மெய்யான இயல்பு நிலைமைக்கும் இடையில் இரண்டும் அற்ற சூழலில் தொழிற்படும் நிலை உருவாகி உள்ளது.

இங்கு ஒரு ஊடக முறைமையானது யுத்தகாலத்தில் எவ்வாறு செயற்படவேண்டும், ஒரு மெய்யான சூழலில் எவ்வாறு தொழிற்பட வேண்டும், இயற்கை அனர்ரத சூழல் ஒன்றில் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்ற தொழில்சார் ஊடக முறைமை இதுவரை உருவாக்கப்படவில்லை.

மறுபக்கம் இலங்கையில் தொழில்சார் ஊடகவியலாளர்களும் குறிப்படத்தக்க வகையில் உருவாகவில்லை அல்லது இருப்பவர்களும் அதற்கான வெளிப்பாடுகளை அடையாளப்படுத்த வில்லை.

காரணம் ஊடக கற்கை நெறி பல்கலைக்கழக மட்டங்களில் பட்டப்படிப்பிற்கான கற்கையாக நடைமுறையில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

தனியார் துறையில் அல்லது பல்கலைக்கழக மட்டத்தில் இருக்கும் ஊடக கற்கை நெறிகள் டிப்ளோமாவாகவும், பட்டபின்படிப்பில் ஊடக தலைப்பை தெரிவு செய்வதாகவும் மட்டுமே உள்ளன.

அத்துடன் ஊடகவியல் என்பது ஒரு நிறுவனமயப்பட்ட வளர்ச்சியை இதுவரை இங்கு பெற்றுக் கொள்ளவில்லை.

மேலைத் தேயத்தில் ஒவ்வொரு நாட்டுக்குமான ஊடக முறைமை என்பது இருப்பது போல் இலங்கையில் இல்லை என்றே கூறலாம். இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சனை அல்ல். இது 3 ஆம் உலக நாடுகளுக்கே பொதுவான ஒரு இயல்பாகக் கொள்ளலாம்;.

எனவேதான் இலங்கை போன்றதொரு நாட்டில் கற்கை நெறியின் ஊடான நடைமுறையோடு பயிற்றப்பட்ட நிறுவனமயப்பட்ட தொழில்சார் ஊடகவியலாளர்களை உருவாக்க வேண்டும்.
அதன்மூலமே ஊடக ஒழுக்கவியல் என்பதனைக் கட்டிஎழுப்ப முடியும்.

இவ்வாறு ஊடகத்துறை கட்டி எழுப்பப்பட்டால் யுத்தகால சூழல் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது செய்தியிடும் முறைமைகளை அல்லது ஆறிக்ககை இடும் முறைமைகளை அவர்கள் புரிந்து கொள்ளமுடியும். இதன் மூல் ஆபத்து விளைவிக்கும் செய்திகளை எவ்வாறு நாசூக்காக கொடுக்க முடியும் என ஊடகவியலாளர்கள் கற்றுக்கொள்வர்.

இதுமட்டும் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. ஊள்நாட்டில் யுத்தகால நிலமையின் போது உடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான பாதுகாப்பை எவ்வாறு உத்தரவாதப்படுத்த முடியும் என்ற பொதுவான பாதுகாப்பு முறைமை ஒன்றை சர்வதேசம் உருவாக்க வேண்டும்.

ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமரிக்க பிராந்தியங்களில் உள்ள 3ஆம் உலக நாடுகளில் நிலவுகின்ற உள்ளக மோதல்களின் போது ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் ஆபத்துக்களை உருவாக்குபவர்கள் மீதான கடுமையான நடைமுறை ரீதியிலான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இவை அறிக்கை வடிவில் அல்லாமல் கடுமையான தடைகள், அல்லது தண்டனைகளை விதிக்க வேண்டும். உள்நாட்டில் சுதந்திரமான ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக உண்மையானதும், சுதந்திரமானதும், விரைவானதும் விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும். ஊடகவியலாளர்களின் கடத்தல் காணாமல் போதல், கொல்லப்படுதல் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். இவற்றின் ஊடு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அவர்கள் சட்டத்தன் பிடியில் இருந்து தப்பிப்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் துணைபுரிவதனை தடுக்க வேண்டும். இதற்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடின் இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டும் அல்லாமல் நாடு பூராகவும் உள்ள ஊடகவியலாளர்கள் பாரிய விளைவுகளை இன்னும் இன்னும் எதிர்கொள்ள நேரிடும் என்பது வெளிப்படை.

பரிபூரணன்
Thanks to Global Tamil News |உலகத் தமிழ்ச் செய்திகள்

11 டிசம்பர், 2007

விக்னேஸ்வரனின் கட்டுரையொன்று

விக்கி என அழைக்கப்படும் விக்னேஸ்வரன் குறிப்பிடத்தகுந்த சமூக அரசியல் விமர்சகர். முன்பு சரிநிகர் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். இவர் காலச்சுவட்டில் எழுதிய கட்டுரையை இங்கு இணைத்துள்ளேன்

தமிழ்ச்செல்வன் படுகொலை
- சமாதான முயற்சிகளுக்கெதிரான தாக்குதல்


தனிநபர்களைக் கொல்வதன் மூலமாக ஒரு நாட்டின் அல்லது ஒரு தேசத்தின் அரசியலை மாற்றி அமைத்துவிட முடியுமா? அந்த நாட்டு மக்களின் அல்லது தேசத்தின் உரிமைகட்கான போராட்டத்தை நசுக்கிவிட முடியுமா? ஒடுக்கப்படுகின்ற மக்களின் அரசியலை முன்வைத்துப் போராடுகின்ற ஒரு அரசியல் இயக்கம் தன்னளவில் எவ்வளவுதான் அரசியல் தவறுகளை மேற்கொண்டாலும், அந்தத் தவறுகட்காக அது ஒடுக்குகின்ற எதிரியின் கையில்சிக்கி அழிவதை அந்த நாட்டு மக்களோ அல்லது தேசமோ ஏற்றுக்கொள்ளுமா?

இவை ஒன்றும் புதிய கேள்விகள் அல்ல. ஈழத்து அரசியற் போராட்ட வரலாற்றில் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்ட கேள்விகள்தான். இவைமட்டுமல்ல, இவற்றுடன் கூடவே, அரசியற் தவறுகள், மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போராட்டங்களை நடாத்தும் ஒரு விடுதலை இயக்கத்தை அதன் நோக்கத்திலிருந்து விலகாமற் செல்ல அனுமதிக்குமா என்ற கேள்வியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இன்றுவரை இந்த விவாதங்கள் தொடர்கின்ற போதும் இலங்கையில் இவ்விவாதங்களின் உள்ளொளி உணரப்பட்டதாகத் தெரியவில்லை. வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இன்னமும் கணக்கெடுக்கப்படாததாகவே இருந்துவருகிறது.

விளைவு, நாட்டில் ஓடும் இரத்தக் களரியும் இளஞ்சந்ததியின் அழிவும் நாட்டின் அனைத்து வளங்களும் ஈடுசெய்ய முடியாத விதத்திலும் வேகத்திலும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட நிகழ்வு, ஒரு மாபெரும் வெற்றியாகத் தென்னிலங்கையின் பல பகுதிகளில் வெடி கொளுத்தி ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்கின்ற அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழ்ச்செல்வனுக்காக அஞ்சலிக் கூட்டங்கள் நடை பெற்றுக்கொண்டிருக்கையில் தெற்கில் இவ்வாறு நடந்தது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய பிளவுக்கு உதாரணமான மிகக்கிட்டிய சம்பவமாகும். இது இலங்கையில் சமாதானத்தைக் காண்பதற்கான காலம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறது. இதன் அர்த்தம் தமிழ்ச்செல்வன் உயிரோடு இருந்திருந்தால் விரைவில் சமாதானத்தைக் கொண்டுவந்து விடுவார் என்பதல்ல, மாறாக, தெற்கு இன்னமும் சமாதானத்தை அவசியமான ஒன்றாகக் கருதத் தொடங்கவில்லை என்பதை இச்சம்பவம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

அரச மற்றும் இராணுவத் தரப்பினைப் பொறுத்தவரை இந்தக் கொலை, புலிகள் தரப்புக்கு விழுந்த மாபெரும் அடி என்ற நம்பிக்கையே நிலவுகிறது. உண்மையில் அப்படி அவர்கள் நம்புகிறார்கள் என்பதைவிட அப்படி ஒரு படத்தை அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என்பதே சரியானது. கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சொன்றின்போது கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் இந்தக் கொலை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச 'இது தொடரும். புலிகளின் தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எமக்குத் தெரியும். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவராக இப்படி இல்லாமற்செய்வோம், என்று முழங்கியிருந்தார். ஆனால் உண்மையில் அவருக்குத் தெரியும், தமிழ்ச்செல்வனின் கொலை 'காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை'யாக நடந்த ஒரு சம்பவம் என்று. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தியைப் புலிகள் அறிவிக்கும்வரை இலங்கை இராணுவத்தினருக்குக் கொல்லப்பட்டவர்கள் யார் என்றே தெரிந்திருக்கவில்லை.

வன்னிக்கான கட்டளைத்தளபதி 'எமக்குத் தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்தில் தமிழ்ச்செல்வன் இருந்தார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை' எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கப் பேச்சாளர் ஹெகலிய றம்புக்வலவிற்குப் பாதுகாப்புச் செயலாளர் போலவே, அப்படிச்சொல்வது கௌரவக் குறைவாக இருந்திருக்கிறது.

தமது படையினர் மிகவும் நுணுக்கமான உளவு ஆற்றல்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று காட்டவும் அனுராதபுரம் விமானப்படைத்தளத் தாக்குதலின்போது ஏற்பட்ட இழப்புக்களால் உருவாகியிருந்த சிங்கள மக்கள் மத்தியிலான உணர்வலைகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதற்காகவும் அவர் தாம் தெரிந்துகொண்டே குண்டை வீசியதாக அறிவித்தார். அரசாங்கத் தகவல் அறிவிப்பாளராக இருந்தபோதும், பெரும்பாலும் ஒரு யுத்தகளத் தளபதி போல வீறாப்புடன் பேசுவதற்காகத் தவறான தகவல்களைக்கூடத் தெரிவிக்கத் தயங்காத றம்புக்வலவின் இந்த அறிவிப்பு எதிர்பார்த்ததைவிட அரசுக்குச் சர்வதேச மட்டத்திலிருந்து பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

சமாதானப் பேச்சுக்கான புலிகள் தரப்புப் பேச்சாளர் என்ற முறையில், தமிழ்ச்செல்வனைக் கொலை செய்தது சமாதான முயற்சிகளுக்கு எதிரான நடவடிக்கையாகும் என்ற கண்டனத்தை அரசு எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இதனால், பின்னர் தமக்குத் தகவல் கிடைத்தது உண்மை என்றும் ஆனால் அது புலிகளின் நடமாட்டம் பற்றிய தகவல் என்றும் அதில் தமிழ்ச்செல்வனும் இருக்கிறார் என்பது அவர் கொல்லப்பட்ட பின்னரே தெரியும் என்றும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவூடக அறிவிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.

எது எப்படியிருப்பினும், இந்தக் கொலையை ஒட்டி நடந்த ஆரவாரங்கள் இலங்கை அரசாங்கத்தின் இன்றைய அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகளிடம் இருக்கும் இன்றைய நிலைமை பற்றிய பார்வையானது மிகத் தெளிவாக ஒரு அரசியற் தீர்வை நோக்கியதல்ல, யுத்தத்தில் புலிகளை முழுமையாகத் தோற்கடிப்பதே என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அதிலும் புலிகளை இராணுவரீதியாக அழிக்க எந்த வழிமுறைகளையும் அவர்கள் கையாளத் தயார் என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த வழிமுறைகளில் ஒன்றாக, புலிகளின் முக்கியத் தலைவர்களைத் தேடிப்பிடித்துக் கொன்றுவிடுவதும் அடங்குகிறது. ஆனால், புலிகளை தமிழ்த்தரப்பினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அணியாக அங்கீகரித்துக்கொண்டு அதைச் செய்ய முடியாது என்பதால் - அல்லது அப்படிச் செய்வது நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று என்பதால் - புலிகளை வெறும் பயங்கரவாத அணியென்றும் பிரபாகரனைத் தலைமைப் பயங்கரவாதி என்றும் அரசுத் தரப்பு இப்போது தீவிரமாகப் பேசிவருகிறது. இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதத்தில் ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

அண்மையில், பயங்கரவாதம் மற்றும் இராணுவத் துறை தொடர்பான ஆய்வு நிறுவனமொன்றை (மிஸீstவீtutமீ யீஷீக்ஷீ ஞிமீயீமீஸீநீமீ ணீஸீபீ ஷிtக்ஷீணீtமீரீவீநீ ஷிtuபீவீமீs) சிங்கப்பூரில் நடாத்திவரும் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர் கலாநிதி றொகான் குணரத்னவின் பேட்டி ஒன்றை ஆங்கிலப் பத்திரிகை ஒன்று பிரசுரித்திருந்தது. அந்தப் பேட்டி தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் இலங்கை அரசின் அண்மைக்கால வெற்றிகள் தொடர்பாகவும் அரசாங்கத்தின் முன் முயற்சி இன்மை பற்றியும் விமர்சித்திருந்தது. கிழக்கில் இலங்கைப் படையினர் புலிகள் வசமிருந்த நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றி, அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டிருப்பது குறித்தும் அதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுவரும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் கிட்டத்தட்ட யுத்தம் முடிவுக்கே வந்துவிட்டது என்ற ரீதியில் போடும் கூப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தெரிவித்த பதில் இது:

"இது போன்ற ஒரு தேக்கம் நிறைந்த போரில் பிரதேசங்களையோ அல்லது படைகளையோ இழப்பது என்பது ஒன்றும் முக்கியமான விடயம் அல்ல. சர்வதேசரீதியாக நடைபெற்றுவரும் பல போராட்டங்களில் இதற்கு ஆதாரமான பல முன்னுதாரணங்கள் உள்ளன. மேலே ஒரு அரசியல் தலைமை இருந்து செயற்படும்வரை, பிரதேசங்கள் கைப்பற்றப்படுவதும் இழக்கப்படுவதும் திரும்பத் திரும்ப எத்தனை தடவைகளும் நடக்கலாம். அதுபோலவே கீழ்மட்டத் துருப்புகள் கொல்லப்படுவதும் அவை விரைவாகவே புதியவர்களால் ஒப்பீட்டளவில் இலகுவாக நிரப்பப்படுவதும் நடக்கலாம். இவ்வாறான ஒரு யுத்தம் முடிவில்லாத யுத்தமாக நூற்றுக்கணக்கான வருடங்களுக்கும் தொடரலாம். இத்தகைய ஒரு யுத்தத்தில் வெல்வதற்கு இரு முனையிலான முயற்சி அவசியம். ஆனால், இங்கே இருமுனைகளுமே காணப்படவில்லை

முதலாவது முயற்சி, தீவு பூராவுமுள்ள தமிழர்களின் இதயங்களை வெல்வதை மையங்கொண்டதாக அமையவேண்டும். இது மிக முக்கியமான புலிகளின் பிரதேசத்தில் விடுதலைக்கான கலகங்களைத் தூண்டுகின்ற நடவடிக்கையாக அமையும். இப்போது தமிழ் மக்கள் கட்டாந்தரைக்கும் பாறைக்கும் இடையில் அகப்பட்டுக் கிடக்கிறார்கள். இந்த அரசியல்ரீதியிலான முயற்சியானது தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதை நோக்கமாகக்கொண்டிருப்பதுடன் புலிகளின் உயர்மட்டத் தலைமைகளை அழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு, பிரபாகரன் இயக்கத்தின் இறுக்கமான பிடியைத் தனது கையில் வைத்திருப்பதால், பிரபாகரன், அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி, பொட்டு அம்மான், மற்றும் கே.பி. ஆகியோர் இன்று கொல்லப்பட்டால் நாளை யுத்தம் நின்றுவிடும். அரசாங்கத்திடம் அத்தகைய ஒரு மூலோபாயம் குறித்த முன்னெடுப்புக்கள் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், படையணித் தலைமைகள் மற்றும் உளவு அமைப்புக்களை ஒரு அரசாங்கம் வைத்திருப்பது என்பது, பாரிய தந்திரோபாய மூளைகள் பொருத்தமான மூலோபாயங்களை வகுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக அன்றி வேறெதற்குமாக அல்ல. ஆனால் அவர்கள் யாரும் ஒரு வெற்றி பெறக்கூடிய மூலோபாயத்தை உருவாக்குவதை நோக்காகக்கொண்டு பணியாற்றுவதாகத் தெரியவில்லை. (ஷிuஸீபீணீஹ் றீமீணீபீமீக்ஷீ, ளிநீtஷீதீமீக்ஷீ 7, 2007)

றொஹான் குணரத்ன ஈழத் தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு இராணுவ ஆய்வாளர். அரசப் படைத்தரப்புத் தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய தனது 'ஆய்வுகளினூடாக' ஆரூடம் கூறிவந்த ஒருவர் இவர். நூற்றாண்டுப் பழமை வாய்ந்த மற்றும் மேற்கத்தைய இராணுவக் கோட்பாடுகளை வைத்துக்கொண்டும் ஆயுதப் போராட்டங்களென்றாலே அவை பயங்கரவாதம்தான் என்று மட்டுமே புரிந்துவைத்துக்கொண்டும் நிலைமைகளை 'ஆய்வு' செய்து 90களில் பத்திரிகைகளில் கட்டுரைகளும் நூல்களும் எழுதிவந்தவர். அவரது மேற்படி கருத்துக்கூட திக்ஷீமீபீக்ஷீவீநீளீ tலீமீ நிக்ஷீமீணீt போன்றோரின் 17ஆம் நூற்றாண்டு இராணுவச் சிந்தனைகளைத் தாண்டவில்லை என்பதைக் காட்டுகின்றன. உலகிலுள்ள அனைத்து அடக்குமுறை அரச இராணுவமும் இதைத்தான் சொல்கிறது; செய்கிறது. இலங்கையின் றொகான் குணரத்ன போன்ற பேரினவாதப் புத்தி ஜீவிகளினதும் சிங்களப் பேரினவாத யுத்த வெறியர்களதும் சிந்தனை மட்டம் இதற்கு விதிவிலக்காகிவிட முடியுமா என்ன?

ஒரு போராட்ட அமைப்பின் தலைமை முக்கியமானதுதான் என்ற போதிலும் அந்த அமைப்பின் தோற்றத்திற்கான அரசியல் என்ன என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் இவர்களால் ஒருபோதும் கண்டுகொள்ள முடியாது என்பதை இந்த வரிகள் தெளிவாக இனங்காட்டுகின்றன. றொஹான் குணரத்ன போன்ற இராணுவ நிபுணர்களும் அதே அரசியல் கோட்பாட்டைக் கொண்டவர்களுந்தான் இன்றைய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் மட்டத்தில் இருக்கிறார்கள். ஒரே ஒரு வேறுபாடு இலங்கை அரசியல்வாதிகள் றொஹான் கூறுவதுபோல - அமெரிக்கப் பாணியில் - செயற்படாமல் இருப்பதுதான். ஆனால் இதிலுள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால் உண்மையில் அவர்கள் செயற்படாமல் இருக்கிறார்கள் என்பதைவிட அவர்களால் செயற்பட முடியாமல் இருக்கிறது என்பதுதான். தமிழ்ப் பிரதேசங்களில் புலிகளின் தலைமைகளை அழிப்பதற்கான முயற்சிகளில் அரசுப் படையினரால் நேரடியாக வெற்றி கரமாகச் செயற்பட முடியாததன் காரணமாகத்தான் அவர்கள் கருணா அணியினரினூடாக இத்தகைய செயல்களில் ஈடுபட்டனர்.

கருணா அணியின் நடவடிக்கை காரணமாகச் சில வெற்றிகளை அவர்களால் பெற முடிந்தபோதும் பெருமளவிலான சாதனைகள் எதனையும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. பதிலாக, கருணா அணிமூலம் வெற்றிகரமாகச் சாதிக்கப்பட்டதெல்லாம் கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற சமூக விரோதச் செயல்களை வளர்த்துவிட்டதும் அதற்கு ஆதரவான அரசுத் தரப்பு அணியொன்றை உருவாக்கிவிட்டதுந்தான். இதன் விளைவு அரசாங்கத்தை அரசியல்ரீதியாக சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டிருக்கிறது. கருணாவைப் பயன்படுத்தித் தமக்கு வேண்டியவற்றைச் சாதித்துக்கொண்ட அரசு சார்புச் சக்திகளுக்குக் கருணா அணியினால் ஏற்பட்ட அவப்பெயரைத் துடைக்க அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவது தவிர்க்க முடியா மற்போய்விட்டது. கருணாவுக் கெதிராகக் கருணாவின் துணையாளாக இயங்கிய பிள்ளையானை வளர்த்துவிட்டுக் கருணாவை நாட்டில் இருக்க முடியாத நிலைக்குத் தள்ளியதுடன் சாதாரண வெளிநாட்டு ஏஜென்சி வியாபாரம் செய்யும் நபர்கள்செய்வதுபோல அரசாங்க அமைச்சே தலைமாற்றிய கள்ளக் கடவுச்சீட்டில் வி.ஐ.பி ஒருவரது பெயரில் (கோகுல குணவர்த்தன) விசா எடுத்து இலண்டனுக்கு அனுப்பியிருக்கிறது. இந்தக் குடியகல்வுச்சட்ட மீறலுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்ட போதும் இலண்டனில் கருணா கைதானதன் காரணமாகப் பலத்த அவமானத்தை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டதுடன் சர்வதேச நாடுகளின நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது.

தமிழ்ச்செல்வனது கொலை, யுத்தமுனையில் புலிகளைப் பலவீனமடையச் செய்துவிடும் என்னும் நம்பிக்கை அரசுக்கு இருக்கும் என்று யாரும் நம்பத் தேவையில்லை. அப்படி நம்பியிருந்தாலும் அதற்குப் பின் முகமாலைப்பகுதியில் நடந்த யுத்தத்தில் அரசுப்படைகள் எதிர்கொண்ட பெரும் அழிவுகள் அந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கும். உண்மையில் தமிழ்ச்செல்வனது கொலை தொடர்பாக இலங்கை அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட ஆரவாரமான மகிழ்ச்சி எல்லாம் மிகக் குறுகிய அரசியல் லாபம் கருதிய ஆரவாரங்கள்தான். ஆனால் இதன் மூலம் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலமாகச் சமாதானத்தை அடைய நாம் ஒருபோதும் விரும்பவில்லை. புலிகளை அழிப்பதே சமாதானத்திற்கான எமது வழி என்ற சிங்கள மக்களுக்கு வலியுறுத்தித் தெரிவித்திருக்கிறது.

தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப்புலிகளது அரசியற் பிரிவின் தலைவர் மடடுமே. அதன் அரசியலுக்கான தலைவர் அல்ல. அந்த அமைப்பின் அரசியலைத் தீர்மானிக்கும் பொறுப்பைக் காலம் சென்ற முன்னாள் தலைவர் அன்ரன் பாலசிங்கம்கூடக்கொண்டிருக்கவில்லை. உண்மையில் அந்த அரசியலின் பிரச்சாரம் மற்றும் அதற்கான வேலைத் திட்டங்கனை நடைமுறைப்படுத்துபவர்களாகவே அவர்கள் இருந்து வந்துள்ளனர். அந்த வகையில் பாலசிங்கமும் சரி தமிழ்ச்செல்வனும் சரி இலங்கை அரசுடனும் சர்வதேச அணியுடனும் புலிகளின் சார்பாகக் கருத்துரைக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் போதுமான அதிகாரங்களைக் கொண்டிருந்தார்கள். குறைந்தபட்சம் இலங்கை அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட உயர்மட்ட அமைச்சர்களைவிட அவர்கள் அதிகளவுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டிருந்ததுடன் பிரச்சினை தொடர்பான தமது தரப்பு நியாயங்களை மிகவும் தெளிவாகத் தெரிந்தும்வைத்திருந்தார்கள்.

இலங்கை அரசுடனான அண்மைக்காலப் பேச்சுக்களின்போது தமிழ்ச்செல்வன் தமது பக்கம் பற்றி மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் தனது விவாதத்தை முன்வைக்கக் கூடியளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டிருந்தார். இலங்கை அரசுத் தரப்பினரைப் போல நிதானமிழந்து செயற்பட்டுப் பேச்சுவார்த்தை மேடையைப் பயனற்ற ஒன்றாக்கிவிடாமல் சிறப்பான தொழிற் தேர்ச்சியுடன் அவர் செயற்பட்டிருந்தார். தவிரவும் அவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கிவரும் ஒரு அங்கீகரிக்கப்படாத அரசின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கியும் செயற்படுத்தியும் வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் அந்த அரசச் சார்பு சிவில் நிர்வாக அமைப்பைக் கட்டி எழுப்புவதில் மிகத் திறமையுடன் செயற்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, வனவளம் போன்ற பல்வேறு துறைகளை அவர் தலைமையேற்றுச் செயற்படுத்தி வந்துள்ளதாகப் புலிகள் தெரிவிக்கின்றனர். புலிகளின் அரசியற் கருத்துக்களுடனோ அல்லது அவர்களது போராட்ட வழிமுறைகளுடனோ ஒருவர் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் அவர்களது நிர்வாகத் திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று சுனாமி அனர்த்த நிவாரணப் பணியின்போது பல வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் பாராட்டியிருந்தன. தமிழ்ச்செல்வனின் பங்களிப்பு இந்த நிர்வாக முகாமைத்துவ வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்ச்செல்வனது இறுதி ஊர்வல நிகழ்வுகள் அவருக்கு இருந்த செல்வாக்கைத் தெளிவாக வெளிப்படுத்தி இருந்தன. அவர் இறந்ததும் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதும் நிர்வாகம் தடங்களின்றித் தொடர்வதும் அந்த அங்கீகரிக்கப்படாத புலிகளின் அரச நிர்வாகத் துறையின் வெற்றி என்பதில் ஐயமில்லை.

தனிநபர்கள் கொல்லப்படுவதால் அரசியல் அழிவதில்லை; அரசும் அழிவதில்லை என்ற பழைய உண்மையை இச்சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதனை ஒட்டி ஏற்பட்ட நிகழ்வுகள் இருபக்க இராணுவச் சமநிலையில் எத்தகைய பாரிய மாற்றத்தையும் எற்படுத்திவிடவில்லை. ஆனால், அவரது கொலை மூலமாக ஏற்பட்டிருக்கும் இலங்கை அரசுமீதான நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் ஓரளவு அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது. (ஆயினும் இந்த நம்பிக்கை வெறுமனே யுத்தம் விரைவில் முடியப்போகிறது என்ற மாதிரியான ஒரு குறுகிய கால நம்பிக்கையே என்பது வேறு விடயம். ஆயினும் இப்போது அரசுக்குத் தன்னைத் தானே தேடிக்கொண்ட அரசியல் நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்க அது தேவையாக உள்ளது-குறைந்தபட்சம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் வரைக்குமாவது இது அவசியம்) தமிழ் மக்கள் மத்தியிலோ இது மாபெரும் உணர்வலைகளை ஏற்படுத்திவிட்டுள்ளது. சமாதானத்தை விரும்புகிற ஒவ்வொருவரும் இந்த நடவடிக்கை சமாதான முயற்சியைப் பலவீனப்படுத்தும் ஒன்றாகவே உணர்கின்றனர். அது மட்டுமல்லாமல் அந்த அரசு தமிழ் மக்களையோ அவர்களது அரசியலையோயற்றி எந்த அக்கறையுமற்றது என்னும் கருத்து மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் யுத்தம் மூலம் புலிகளை முற்றாக ஒழித்து விடமுடியும் என்று கருதுகிறது. புலிகளை ஒழிப்பதற்கு மட்டுமே இந்த அரசுக்குத் தாம் ஆதரவளிப்போம் என்று ஜே.வி.பி கூறுகிறது. யுத்தமே இந்த அரசின் இனப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வாகச் சொல்லாமற் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்ச்செல்வன் அரசைப் பொறுத்தவரை புலிகளின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவம் எதுவும் அற்றவர். எனவே அவரது கொலை ஒரு போர்க்கள வெற்றிமட்டுமே. ஆனால், தமிழ் மக்களுக்கோ தமிழ்ச்செல்வன் சமாதானத்திற்கான ஒரு குறியீடு. எனவே அக்கொலை சமாதான முயற்சிகட்கெதிரான ஒரு தாக்குதல்.

புலிகள் இந்தச் செய்தியைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதை அவர்கள் புலிகளின் பொலிஸ் பிரிவுத் தலைவரான நடேசன் அவர்களை அரசியற் பிரிவுத் தலைவராக உடனடியாக நியமித்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இலங்கையில் உடனடியாக இனிவரப்போகும் நாள்கள் சமாதானம் தொடர்பாக அவ்வளவுக்கு நம்பிக்கை தரும் நாள்களாக இருக்கும் என்பதற்கான அடையாளங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. விலைவாசி ஏறும் வேகத்தைப் பார்த்தால், முழு இலங்கையுமே போர்க்களமாக மாறும் அபாயம் நெருங்கிக்கொண்டிருப்பதாகவே கூற முடியும்.

நன்றி காலச்சுவடு