பின்பற்றுபவர்கள்

6 டிசம்பர், 2009

மூங்கிலாறே முது நாள் நதியே

மூங்கிலாறே முது நாள் நதியே
மூச்சின்றிக்கிடந்தாயோ

காற்றிலாயிரம் கனல்கள் பறந்தன
சேற்றிலாயிரம் பிணங்கள் நெரிந்தன
காட்டின் ஒரு பிடி கருகிச்சரிந்தது
கண்ணீர் மல்கிக் கரைந்துறைந்தோமே
ஆடிய கால்கள் அடங்கிப்போயின
மோதிய விழிகள் மோட்சமடைந்தன
ஆடாக்கடலில் எதிரி படுத்தான்
ஆடையிழ்ந்து அகதியாகி
கூடாக்கனவில் குறுகிப்போனோம்.

சூழவாயிரம் சதிகள் பிறந்தன
காலநதியின் தடங்கள் சிதைந்தன
மூல வழிகள் தெளியாதிருந்தன
முள்ளிவாய்கால் முகிழாதொழிந்தது
நந்திக்கடலுள் நிணமும் நிறைந்தது
ஈழக் கனவை ஞாலம் மிதிக்க
சோழ விழிகள் சோபையிழந்தன.

வாழத்துளிகள் சேர்க்க நினைத்தோம்
நீள நடக்க நெஞ்சம் கொண்டோம்
ஊழித்தீக்கு உயிர்கள் தந்தோம்
காலக்கணக்கை கோட்டை விட்டோம்
மரணப்படுக்கை வளர்ந்து முடிந்தோம்

மூங்கிலாறே முது நாள் நதியே
மூச்சின்றிக்கிடந்தாயோ

தேர்தல்




எல்லாம்வல்ல அரசன்
என்னுன்னை நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்
உனது வளர்ப்புநாய்கள் அகதிகளின் கிழிந்த உள்ளாடைகளை
தெருநீளம் இழுத்துச்செல்கையில்
முட்கம்பிகளில் உன் சிவப்புத்தோள்ச்சால்வை
கிழிந்து தொங்குகையில்
உன்னது மமதையின் ராசாங்கத்தைக் காண்கிறேன்

இரவு பகலாக மதுவருந்திக்கொண்டு
தம்பிகளுக்கெல்லாம் பகிர்ந்து கொடுக்கிற
இரத்தவிறைச்சி தொங்குமான் தசையல்ல.

இரவுகள் கொடூரமான ஒலிகளை எழுப்பின.
காடுகள் வெந்துதணிந்தன.
சிதறிக்கிடந்த மார்புகளைக்
கைவிடப்பட்ட குழந்தைகள் நன்னின.

கருவையும் கருவறையையும்
கல்லறையையும் நசித்துச்சென்றவுன்குறியையும்
அதன் பிணவெடிலையும்
வேட்டிக்குள் மூடி வைக்கிறாய்.
பின் கமண்டலங்களும் கைத்தடியும்
தாங்கிய முனிவர்களை அனுப்புகிறாய்.
வரம்தர வந்தோமென்கிறாய்.

கமண்டலத்துள் இரத்தம்.
கைத்தடியில் என்பிள்ளைகளின் பிடரிமயிர்.

அழகிய கனவை மூன்று தலைமுறைகள் சுமந்தேன்.
வாழ்வின் ஒரு துளிதான் கண்டேன்.
மரணத்தின் பெருவலி பெற்றேன்.
வடகிழக்கு மூலையில் இன்றோடுங்கிப்போனேன்.

நிசப்தம் ‐அரியவரமுனக்கு ஆடு.
இருண்மை‐துயரங்களின் விளைநிலம் எங்களுக்கு.

தத்துவவாதிகள் தாங்கள் அறிந்த புத்தகங்களுக்கு மேல்
தலைகளை உயர்த்தவில்லை.
வியாபாரிகள் இரத்தத்தை வடிகட்டிய நிலத்தை
பங்குபோடுகிறார்கள்.
எஞ்சிய நிலத்தில் கண்ணிவெடியென்கிறாய்.

எனது பிள்ளைகளோ அழுகிறார்கள்
அவர்களின் முன் நீயோ வாக்குப்பெட்டியை வைக்கிறாய்
போடா! துர்க்குறி!!
ஓங்கியழந்தகாலால் என்பெருநிலத்தையறைந்தவன் நீ!!!
என் பிள்ளைகள்
தமது இரத்தத்தைக்குடிக்கும் எல்லாவரசர்களையும்
அறிந்திருக்கிறார்கள்
என்றேன்றைக்கும்.

தேவ அபிரா
05‐12‐2009
நன்றி Global Tamil News

17 ஜூலை, 2009

நாடு கடந்த அரசு [Transnational Government]




"பிரபாகரனுடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம்.
ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது."
- வி. உருத்திரகுமாரன்


உலகம் முழுவதும் கிரமமாகப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுவருகின்றன. அல்லது போராளிகள் தங்களுக்குள் அடிபட்டுக்கொள்கிறார்கள். இவற்றினால் மக்கள் அடையும் துன்பங்கள் சொல்லிமாளாதவை. இக்கட்டுரை எழுதப்படும் போது சோமாலியாவில் முஸ்லீம் அடிப்படை வாதிகளுக்கும் அரசபடைகளுக்குமிடையில் மக்கள் சிக்கி மரணமடைந்துகொண்டிருக்கிறார்கள் அல்லது வாழிடங்களை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் இப்பொழுதுதான் ஒரு விடுதலைப் போராட்டத்தின் தோல்வி எப்படியிருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து வருகிறோம்.
அதன் வலியை உணர்ந்து வருகிறோம்.
வெற்றியடைந்த சிங்களப் பேரினவாதம் தலைகால் புரியாத ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அது செய்யப் போகிற எந்த நடவடிக்கையையும் எங்களால் இனிவரும் காலங்களில் மெளனமாக பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடியும்.
வடக்கு கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையுமே சனநாயகத்தை இழந்து நிற்கிறது.
சனநாயகம் என்பதைத் துளிகூடஅறியாத காட்டுமிராண்டிகளின் கூட்டத்தை அரியணையில் ஏற்றியபோது அதன் விளைவுகள் எவ்வாறு எதிர்காலத்தில் அமையும் என யாரும் அறிந்திருக்கவில்லை.
இன்றைக்கு விடுதலைப்புலிகள் அடைந்த தோல்விதான் தமிழ் விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தோல்வி என யாரும் கருதுவார்களானால் அது தவறாகும்.உண்மையிலும் விடுதலைப்புலிகள் எப்போதோ தோல்வியடைந்து விட்டிருந்தனர். இலங்கை அரசின் கொடூரமான ஒடுக்குமுறையொன்றே அவர்களின் இருப்பை நியாயப்படுத்திவந்தது.
ஆய்வாளர்கள் பலரும் விடுதலைப்புலிகளின் தோல்விக்கான காரணங்களையே தேடிவருகின்றனர்.
தமிழீழவிடுதலைப்புலிகள் வெற்றி அடைந்திருந்தாலும் நாம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.
இது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரக்ஞை மற்றும் குணாம்சங்கள் பற்றியவையாக இருந்திருக்கும்.


சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அணிதிரண்ட போராளிகள்
எப்போது சனநாயக மறுப்புக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனரோ, எல்லாவகையான அக மற்றும் புற சமூகஅரசியற் பிரச்சனைகளுக்கும் ஆயுதங்களினாலேயே தீர்வைத் தேடத் தொடங்கினரோ அன்றைக்கே ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான அத்திவாரம் இடப்பட்டுவிட்டது.

இன்றைக்கு
அரசுடன் இணைந்திருந்து கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் அடாவடித்தனம் என சகலவற்றையும் செய்கிற தமிழ் இளைஞர்கள் அனைவரும் முன்னாற் போராளிகளே. இவர்கள் கொண்டிருக்கிற அரசியல்- வெளிப்படுத்துகிற அரசியல் நடத்தைகள் எங்குகற்றுக்கொண்டவை.

"மூன்று தலைமுறை இளைஞர்களைச் சொல்வதைச் செய்யப் பழக்கினோமே தவிர சிந்திக்கப் பழக்கவில்லையே! எதற்கெடுத்தாலும் துவக்கை நீட்டுகிற கலாசாரத்தைத்தானே அய்யா நாடு காண்கிறது"

தமிழீழவிடுதலைப் போராட்டத்தினைத் தலைமை தாங்க விரும்பியவர்கள் எவருமே கீழ்குறித்த இரண்டு விடையங்களையும் சரியாகக் கவனத்திற்கு எடுக்கவில்லை;கையாளவில்லை.
தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் பெளதிக எல்லைக்குள் மதரீதியாகவும் இனரீதியாகவும் சாதிரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் பிளவுண்ட சமூகங்கள் இருக்கின்றன.
இவற்றுக்குள் முரண்பாடுகள் இருக்கின்றன.
தமிழீழவிடுதலைப் போராட்டம் தொடங்கிய போது அது தனக்குள்
கேள்விக்குட்படுத்திய பல்வேறு விடையங்கள்.

அதேவேளை தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் புறக்காரணிகளாக இருந்தவை
இலங்கை அரசின் அரசியல் பொருளாதர இராணுவ அடக்குமுறைகள், பிராந்திய அரசியற் சூழ்நிலைகள் மற்றும் சர்வதேச அரசியற் சூழ்நிலைகள் ஆகும்.இவற்றையும் அவர்கள் சரியாகக்கையாளவில்லை.
இன்றைக்கு விடுதலைப்புலிகளின் தோல்வியோடு தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டம் இலங்கையின் அரசியலின் அகக்கூறுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

சாதாரண கட்டிடம் அல்லது பாலம் ஒன்றைக் கட்டுவதற்கே பன்முக அறிவுகளையும் வளங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடி திட்டமிட்டு சேர்ந்து வேலை செய்கிறார்கள்.ஒரு சமூகத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு எத்தகைய கலந்துரையாடலும் கூட்டுழைப்பும் தேவைப்படும் என்பது கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும்.
தமிழீழவிடுதலைப்புலிகளின் தோல்விகளுக்கான காரணங்களை மட்டுமே தேடுவோமேயானால்
தமிழீழவிடுதலைப் போராட்டம்
தோல்விகளையே எதிர்காலத்திலும் சந்திக்கும்.
இன்றைக்கு விடுதலைப்புலிகளின் எஞ்சியுள்ளவர்கள் நாடுகடந்த அரசு என்னும் கருத்தாக்கத்தை முன்வைக்கும் போது கடந்த காலங்களில் தமது அரசியல் குணாம்சம் எப்படி இருந்தது என்பதையும் சுயவிமர்சனம் கொள்வது காலத்தின் வேண்டுதலாகும். ஒருவரியிலல்ல.
விடுதலைப்புலிகள் இந்தியாவுடன் கொண்டுள்ள பகைமையைக் களைவதிற் காட்டும் முனைப்பு தமிழீழவிடுதலைப்போராட்டம் கோரும் பல்வேறு அம்சங்களில் ஒன்றுமட்டுமே. மேலும் இந்திய அரசுடனான பகைமையைக்களைவது
என்பது இராசதந்திரமே அன்றி மூலோபாயமல்ல. இந்தியா ஒடுக்கப்படுகிறவர்களின் நண்பனல்ல.

பெரும் இராணுவக்கட்டமைப்பை கட்டியெழுப்பிய, சிங்களப் பேரினவாதத்திற்கு அடிபணிய மறுத்த வீரம் மிக்க ஒரு போராளியைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஒளிவட்டம் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் முழுப்பரிமாணத்தையும் ஒளியூட்டவில்லை.
இந்தப்பின்ணணியிலேயே நாடுகடந்த அரசு என்னும் கருத்தாக்கத்தை நோக்கவேண்டும்.
தமிழீழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல விரும்புகிற அனைத்து தரப்பினரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்குக் காரணமான தவறுகளை ஆராய்வதும் சுயவிமர்சனம் செய்து கொள்வதும் காலத்தின் தேவையாகும்.

நாடுகடந்த அரசு என்னும் அரசியல் முனைப்பு தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் அகக் காரணிகள் மீது நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தப் போவதில்லை.
வெற்றிகொண்ட சிங்கள அரசு தமிழீழத்தின் அகமுரண்பாடுகளை பெரிதாக்குவதுடன் எதிர்ப்பரசியலைச் சிதைக்கும் எல்லாவிதமான சீரழிவுக்கலாசாரங்களையும் ஊக்குவிக்கவும் செய்யும். இவற்றுக்கெதிராக நின்றுபிடிக்கும் ஆன்மீகவலுவை நீண்ட யுத்தத்தில் சீரழிந்திருக்கும் சமூகம் கொண்டிருக்குமோ?
இலங்கைக்குள் தமிழ் மக்களின் விடுதலைக்கான எந்த அரசியல் முனைவையும் தற்போது எவராலும் எடுக்க முடியாத நிலையில் நாடுகடந்த அரசு என்னும் அரசியல் முனைப்பு தமிழர்களின் ஒடுக்குமுறைக்கதிரான எதிர்ப்பரசியலை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும்.

ஆனால் பழைய கள்ளைப் புதிய மொந்தையில் தருவதென்ற நிலை இருக்கும் எனின் அது எந்தப் பலனையும் தரப்போவதில்லை.
உலகில் கேள்விக்குள்ளாக்கப்படக்கூடாதவை என்றெதுவுமிலை.

எனேனில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் வெறும் அதிகார மாற்றத்திற்கான போராட்டம் அல்ல.தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழதிகாரம் தனக்கான சந்தையை கட்டி எழுப்புவதற்கு மட்டுமேயான போராட்டமும் அல்ல.ஆனால் விடுதலைப்புலிகள் இதனையே செய்ய விளைந்தனர்.
சந்தையின் மீதான அதிகாரத்தை மூலதனமும் மூலதனப்பெயர்வும் தீர்மானிக்கிற
உலக ஒழுங்கில்
இலங்கை போன்ற நாடுகளின் கையில் எதுவுமே இல்லை. அரசியல் ரீதியில் எதிரியாக இருக்கிற நாட்டுடன் வர்த்தக ரீதியில் நண்பனாக இருக்க வேண்டிய சூழ்நிலையே இன்றைய உலகு.
மேலும் இலங்கைகுள் தமிழ் மக்கள் மீண்டும் தமது அரசியல் அபிலாசைக்கான போராட்டங்களை எப்போது வெளிப்படையாகச் செய்ய முடிகிறதோ அன்றைக்கே நாடுகடந்த தமிழீழஅரசு என்னும் அரசியல் வடிவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மையான பகுதியாகவும் ஆகும்.
யதார்த்தத்தில் இலங்கையின் சகல சமூகங்களும் சிங்கள பெளத்த இராணுவ மேலாதிக்க வாதத்தின் மிகக் கடுமையான சனநாயக மறுப்பினுள் சிக்கியுள்ளன.
ஆயுதப்போராட்டம் நசுக்கப்பட்ட நிலையில் சனநாயகமற்ற சூழ்நிலையில் எந்தப்போராட்டமும் தலை தூக்க முடியாது.

"வாயைத்திறக்க முடியாது"
அதுமட்டுமல்ல மகிந்த அரசாங்கம் உருவாக்கி வரும் இராணுவச் சனநாயகமறுப்புக்கட்டமைப்பு வலுவாக வேரூன்றிச் சமூகக்கலாச்சாரமாகி விடும் போது ஆட்சிக்கு வரக்கூடிய எந்தக் கட்சியும் அந்தக் கலாச்சாரத்துக்குள் விழாமல் ஆட்சியை நடாத்த முடியாது போய்விடும்.

சுதந்திரத்திற்கு பின்னான காலத்தில் எவ்வாறு மெல்ல மெல்ல சிறுபான்மை இனங்களின் உரிமைகள் மறுக்கும் அதிகார கலாசாரத்துக்குள் எல்லாவிதமான சிங்களக் கட்சிகளும் விழுந்தனவோ அதேபோல மகிந்த அரசு ஏற்படுத்திவரும் காடைத்தனமான அதிகாரச்சமூககலாசாரத்துக்குள்ளேயே எதிர்கால இலங்கையின் அரசியல் சிக்கப்போகிறது.

சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழ் பகுதிகளில் அரசியல் வியாபாரத்திற்காக கடைதிறந்துள்ள சகல கட்சிகளின் இரத்த நாளங்களினுள்ளும் அப்பாவிமக்களின் கண்ணீரும் இரத்தமுமே ஓடுகின்றன. அவர்களுக்குத்தெரிந்த ஒரேயொரு கலாசாரமும் மகிந்தவின் கலாசாரமும் வேறல்ல.
இந்நிலையில் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் இன்றைய முக்கியமான சவால்களாக பின்வருவனவற்றைக் கருதலாம்.
ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பரசியலை நீறு பூத்த நெருப்பாகவேனும் பேணுவது.
சனநாயக உணர்வைத் தமிழ் சமூகத்துக்குள் கட்டியெழுப்புதல்.
முழு இலங்கைக்குமான சனநாயகத்தை விரும்புகிற எனைய சக்திகளை இனம் காணுதல் அவர்களுடன் பொதுவேலைத்திட்டத்தில் இணைதல்.
பிராந்திய மற்றும் சர்வதேச அரசியற்சூழ்நிலைகளைச் சரியான முறையில் எதிர்கொள்ளல்.
தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் பெளதிக எல்லைக்குள் மதரீதியாகவும் இனரீதியாகவும் சாதிரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் பிளவுண்டு வாழுகிற சமூகங்களுக்கிடையில் இருக்கிற முரண்பாடுகளை ஒடுக்குமுறையற்ற முறையில் அணுகுதல்.
எதற்கும் சனநாயக அடிப்படையிலான கலந்துரையாடலும் கூட்டுழைப்பும் அவசியமானது. புலிகளைக் கடுமையாக ஆதரித்தவர்களும் புலிகளைக் கடுமையாக எதிர்த்தவர்களும் கண்டு கொள்ளாததும் கண்டு கொள்ள விரும்பாததும் இதுவேயாகும்.



நாடுகடந்த அரசு என்னும் கருத்தாக்கத்தை முன்வைப்பவர்கள் கண்டு கொள்ள வேண்டியவற்றை முப்பதுவருட கால இழப்பு துகிலுரிந்து கண்முன் காட்டிக்கொண்டிருக்கிறது.

"அகாலத்தின் பிடியில்
அம்மணமாக நிற்கிறோம்.
கண்ணீரானது கனவு
கம்பலையானது வாழ்வு
*எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்!"

அரிதேவா.
13/07/2009
*கவிஞர்
புதுவை இரத்தினத்துரையின் வரிகள்

28 ஜூன், 2009

துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்

"நாளைய கனவுகள் இன்று கரைந்தன
நேற்றைய உணர்வுகள் இன்று சிதைந்தன
காக்கி உடையில் துப்பாக்கி அரக்கர்
தாண்டவம் ஆடினர்
ஒரு பெரும் நகரம் மரணம் அடைந்தது."

- ஏம்.ஏ.நு•மான்

பல ஆண்டுகளுக்கு முன் நு•மான் எழுதிய கவிதை இன்று இப்படியாகிப் பொருந்திப்போனது.
இலங்கை அரசு பயங்கரவாதத்தை வென்றுவிட்டது என்று சொல்லிக் கொள்கிறது ஆனால் அது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு எல்லாவிதமான பயங்கரவாதங்களையும் செய்துகொண்டிருக்கிறது. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குள்ள எந்த கடமையையும் சரியாகச் செய்யாத ஒரு அரசாங்கத்திடம் விடுதலைப்புலிப் போராளிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடைய நேர்ந்தது வரலாற்றுத் துயர்.
விடுதலைப்புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை யாவரும் அறிவர். ஆனால் பயங்கரவாத நடவடிக்ககளைச் செய்வதொன்றே அவர்களது நோக்கமாக இருந்ததா?
தமிழ் ஈழத்தை அடைய எதையெல்லாம் செய்தால் முடியும் என்று புலிகளின் தலைமை நினைத்ததோ அவையெல்லாம் நிகழ்த்தப்பட்டன. அதில் பயங்கரவாத நடவடிக்கைகளும் அடங்கும்.
மேலும் ஒடுக்குகிறவர்களின் பண ஆள் ஆயுத பலத்துடன் ஒப்பிடும் போது ஒடுக்கப்படுகிறவர்கள் பலவீனமாகவே இருக்கின்றனர். இப்பலவீனமும் தூர நோக்கற்ற அரசியல் சிந்தனையும், குறுகிய காலத்தில் பலத்த சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஆசையும் காரணமாக விடுதலை இயக்கங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
உலக வரலாற்றில் அரசுகளும் போராட்ட அமைப்புக்களும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு அளவிற் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றன.
அரசோ அல்லது விடுதலை அமைப்பொன்றோ மேற்கொள்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கான பொறுப்பை அவற்றின் தலைமையே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எய்தவனிருக்க அம்பை நோவானேன் என்னும் பழமொழி இங்கு பொருந்தும். விடுதலைக்காகப் போராடுகின்ற அமைப்பொன்றின் செயற்பாடுகள் அரசியல் நோக்கமொன்றின் அடிப்படையிலானதாகும்.தமிழ் ஈழம் என்பது அரசியற்கோரிக்கை. எனவே அடிப்படையில் விடுதலைப் புலிகள் அரசியற் கைதிகள்.

இது எனது பூமி என உணர்வுபூர்வமாக எழுந்த இந்த இளையதலைமுறையின் நோக்கம் குற்றச்செயல்களில் ஈடுபடுவதல்ல...

"அய்யா,
என்னை அடைத்து வைக்கிறீர்கள்
நான் ஆட்சேபிக்க முடியாது
சித்திரவதைகளையும்
என்னால் தடுக்க முடியாது
ஏனெனில்,
நான் கைதி.
நாங்கள் கோருவது விடுதலை எனினும்
உங்களது வார்த்தைகளில்
“பயங்கரவாதி”
- ஊர்வசி

ஒரு சனநாயகநாடு அரசியற் கைதிகளை எவ்வாறு நடத்த வேண்டுமோ அவ்வாறே இலங்கை அரசும் அவர்களை நடத்த வேண்டும்.
இராணுவ மற்றும் அரசியல் முரண்பாடுகள் நிகழும் உலகின் சகல பாகங்களிலும் அரசியற் கைதிகள் முறையற்ற விதத்தில் விசாரணை செய்யப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் உலகறிந்த விடையம்.
கியூபாவின் குவந்தனமோ வில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அல்கைத்தாப் போராளிகளை அந்த வகையில் அடைத்து வைப்பதும் நடாத்துவதும் பிழையானதென அமெரிக்க ஒபாமா அரசாங்கம் ஒத்துக்கொண்டு மாற்று வழிகளைத் தேடுகிறதை இங்கு கவனிக்க வேண்டும்.
இலங்கையில் அரசியற் கைதிகளைத் துன்புறுத்துவது சித்திரவதை செய்வது விசாரணை என்ற முறைமைக்குள் முற்றிலும் அடங்காத வழியில் விசாரணை செய்வது எல்லாம் மிகச் சாதாரணமான விடையங்கள்.

“முகமூடி அணிந்த உருவம் ஒன்று என்னை LTTE என்று அடையாளம் காட்டியது. அதைக் கேட்டவுடைனேயே இராணுவத்தினர் என்னைப் பலமாகத் தாக்கினார்கள். அப்போதுதான் இலேசாக மாறிக்கொண்டிருந்த காயங்களின் மேல் துவக்குப் பின்புறத்தால் தாக்கினார்கள். கைவிலங்கிடப்பட்ட நிலையில் மேசைமீது எனது கைகள் வைக்கப்பட்டு விரல்கள் மீது தடியால் தாக்கியதால் எனது வலது கையின் நாலாவது விரல் முறிந்தது. நடுவிரலும் சிதைக்கப்பட்டது. பின் எனது கால் விரல்களைச் சிறு குறடு ஒன்றினால் பிடித்து மடக்கி சத்திரவதை செய்தார்கள். போலித்தீன் பையை நெருப்பில் உருக்கி எனது ஆணுடம்பின் மீது ஊற்றினார்கள். எனது இடது கையில் மெல்லிய கத்தியால் மூன்று தடவைகள் கீறி மிளகாய்த் தூள் போட்டார்கள். நான் மயங்கி விட்டேன்”
- சோபாசக்தி(கொரில்லா என்னும் நாவலில்)


சனநாயகச் சிந்தனை கொண்ட எவரும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்கள் இவை.எந்த வித விசாரணைகளும் இன்றியே இளைஞர்கள் மறைந்து போகிறார்கள்.
பெண் விடுதலைப்புலிப்போராளிகள் இப்படியான சந்தர்ப்பங்க்ளில் அனுபவிக்கக்கூடிய துயரங்கள் பன்முகமானவை.குறிப்பாகப் பாலியற்சித்திரவதைகள்.

விடுதலைப் புலிகளுடன் இறுதிக்காலத்தில் இணைக்கப்பட்டவர்களுள் பெரும்பான்மையானவர்கள் சொந்த விருப்பத்திற்கு மாறாகவே இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். அது அவர்களுடைய அரசியல் தெரிவாக இருக்கவில்லை.
யுத்தக்கைதிகள் அரசியற்கைதிகள் போன்றோரை எவ்வாறு நாடாத்த வேண்டும் எனச் சர்வதேசச்சட்டங்கள் கூறுகின்றன. எந்த போர்க்கைதியும் அல்லது அரசியற்கைதியும் வெளிப்படையாகவே கையாளப்படவேண்டும்.
தோற்கடிக்கப்படுகிற அரசியல் போராட்டத்தில் இணைந்திருந்த அனைவரையுமே கொன்றொழிக்கும், பழிவாங்கும் சிந்தனை மிகக் கொடுமையான பயங்கரவாதமாகும்.
அதனையே இலங்கை அரசு செய்து வருகிறது.
உலக வரலாற்றில் அரசியல் மாற்றங்களின் போதும் போராட்டத் தோல்விகளின் போதும் வெற்றி கொண்டவர்கள் மாற்றவர்களைக் கொன்றொழிப்பதையே வேலையாகக் கொண்டுள்ளனர்.
சாதாரண தமிழ் மக்களையே மிருகங்கள் போல் நடத்தும் இந்த அரசு இந்த முன்னாள் போராளிகளை எப்படி நாடாத்தும் எனச்சொல்லத்தேவை இல்லை
தமிழர்களின் அரசியற் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படாத நிலையில் வன்னியில் எஞ்சியுள்ள இளைய தலைமுறையை அழித்தொழிக்க அரசாங்கம் நினைக்கிறது. ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போது ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இவ்வாறுதான் சுவடில்லாமல் ஆக்கப்பட்டனர்.

தேர்தல் வெற்றிகளோடு அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். யுத்தம் நடந்த மண்ணின் குருதியும் வெப்பமும் ஆறும் ஆறாது யுத்தங்களில் கணவனை மனைவியை பிள்ளைகளை இழந்த சீவன்களின் ரணமும் துயரமும்.

விடுதலைப் புலிகளின் சகல போராளிகளையும் அரசியல் கைதிகளாகவே கையாள வேண்டும்.அவர்கள் யாவரும் மீண்டும் வாழ்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும்.

இலங்கை அரசின் வெற்றியும் மமதையும் மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான நடத்தைகளும் சீரழிந்த நாட்டையே உருவாக்கும்.

அரிதேவா

22 ஜூன், 2009

எப்பொருளையும்பேச விடு! அப்பொருளின் மெய்ப்பொருளும் காணவிடு!!



கடந்த ஞாயிறன்று நெதர்லாந்தின் தேசியத் தொலைக்காட்சியின் செய்தியை அவதானித்துக் கொண்டிருந்தேன். அதன் 8 மணிப் பிரதான செய்தியில் இலங்கையின் அரசு இலங்கைத் தமிழ் மக்களைப் பாரபட்சமாக நடத்துகிறது என்னும் சாரப்படும்படியான முக்கியமான செய்தித் தொகுப்பொன்றை வழங்கியது. இதே முறையான வியாக்கியானப்படுத்தலை விடுதலைப் புலிகளையும் அவர்களோடு சேர்த்து பல்லாயிரம் மக்களையும் இலங்கை அரசு கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது இந்தச் செய்தி நிறுவனம் செய்யவில்லை.
அப்போது இலங்கை அரசு மக்களைப் பயணக்கைதி நிலையில் இருந்து விடுவித்தது என்றும் யுத்தப்பிரதேச நிலவரத்தை விட மக்கள் முகாம்களில் நல்ல நிலையில் உள்ளனர் என்றும் ஒரு வியாக்கியானத்தைச் செய்திருந்தது.

சிறுபான்மை இனங்களின் மீதான இலங்கை அரசின் அடக்குமுறையையும் விடுதலைப்புலிகளின் சனநாயக மறுப்பையும் இருவேறாகப்பார்க்க முடியாத முட்டாள்கள் அல்ல இவர்கள்.
பலஸ்தீனத்தில் ஹமாஸ் அடிப்படைவாத இயக்கமாகவிருந்தபோதும் இஸ்ரேலின் காசா மீதான இறுதியான படைஎடுப்பையும் பொதுமக்களின் இழப்பையும் பெருமளவுக்கு நடு நிலையில் நின்று மேற்குலக ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
இஸ்ரேலின் யுத்த விதி மீறல்கள் குறித்தும் மேற்குலக மக்கள் அறிந்து கொண்டனர்
ஊடகங்கள் வழங்குகின்ற தகவல்களின் அடிப்படையிலேயே நிகழ்வுகள் தொடர்பான ஒரு விம்பத்தை/முழு உருவத்தை நாங்கள் அடைகிறோம்.
எமது கண்ணுக்கு முன்னால் நடக்கும் ஒரு நிகழ்வைக்கூட ஊடகங்களின் ஊடாகவே நாங்கள் முழமையாக வடிவமாக்கிக் கொள்கிறோம்.
இது தகவற்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் சமூகவியலில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம்.
ஒரு நிகழ்வின் உண்மையான பரிமாணத்தைப் புரிந்து கொள்வதற்குப் பல ஊடகங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல பல்வேறு ஊடக நிறுவனங்களின் செய்திகளையும் ஒருங்கிணைத்தே விடையங்களை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.ஏனெனில் உள்ளூர் ஊடகங்கள் தணிக்கை காரணமாக வெளியிடாதவொரு செய்தியை வெளியூர் ஊடகங்களினூடாகப் பெறக்கூடியதாக உள்ளது.
ஒவ்வொருவரும் தமது கோணத்தில் இருந்தே செய்திகளை வழங்குகின்றனர். மேலும் செய்தி வழங்கப்படும் முறையை செய்தி வழங்குபவர்களின் உணர்வு நிலையும் கருத்து நிலையும் தீர்மானிக்கிறது.




உள்நாட்டு ஊடக கலாசாரம்



இலங்கையில் ஊடகங்கள் கடந்த 50 வருட காலத்தில் மெதுவாக இரண்டு முகாம்களாகபிளவுபட்டன. இந்த முகாங்களைத் தமிழ்-சிங்களம் என மேலெழுந்தவாரியாகக் கூறமுடியும் எனினும் அடிப்படையில் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவானது எனவும் சிறுபான்மை தமிழ் தேசியவாதத்திற்கு ஆதரவானதெனவும் இவற்றைப்பிரிக்கலாம். இப்பிளவு மக்களின் சிந்தனை மற்றும் கலாச்சாரத் தளத்தில் மிக ஆழமான தெளிவான பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஊடகங்கள் மக்களைப் பிளவு படுத்தி நிற்கும் கருத்தியலை மட்டுமே விற்க அல்லது சந்தைப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மக்கள் தாம் விரும்புவதையே வாசிக்கவும் கேட்கவும் விரும்புகின்றனர். கசப்பான உண்மைகளை விட மாயமான பொய்களை இலகுவாக விற்க முடிகிற உண்மையே இலங்கையில் யதார்த்தமாக உள்ளது.
உண்மைகள் அல்லது செய்திகள் என்பதை மக்களால் விரும்பப்படுகிற அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகிற கருத்தியல் நிலையில் நின்று அறிக்கையிடுகிற சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழர்களின் கலாசாரத்தில் விம்பங்களை உருவாக்குதல் ஒரு முக்கியமான அம்சமாக காணப்படுகிறது. இது பல சந்தர்ப்பங்களில் யதார்த்தத்தை அறியவிடாமல் தடுத்துவிடுகிறது.
சிறுபான்மை இனங்களின் நலன்கள் பாதிக்கப்படும்போது அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது அவை பற்றிய செய்திகளை வியாக்கியானம் செய்யாமல் செய்திகளாக வெளியிடவேண்டிய கடமையானது சிங்கள ஊடகங்களுக்கு உள்ளது.ஆனால் இது வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இது போல தமிழீழ விடுதலைப்போராட்டகாலத்தில் மக்கள் மீது விடுதலைஸ்தாபனங்கள் மேற்கொண்ட சனநாயக, மனித உரிமை மீறல்கள் தமிழ் ஊடகங்களினால் உரிய முறையில்அறிக்கையிடப்பட்டிருகவில்லை.
இது அந்தந்தப்பிரதேசங்களில் அந்தந்தக்காலங்களில் இருந்த இருக்கிற அதிகார சக்திகளின் அழுத்தத்தினாலும் ஊடகங்கள் தமதுசார்பு நிலைகாரணமாகக் கொண்டிருந்த சுய தணிக்கையினாலும் ஏற்பட்டதாகும்.
எந்த சமூகத்தினதும் தூண்களாக நீதித்துறை, சட்டம், அரச அதிகார அமைப்பு மற்றும் பத்திரிகைத்துறை விளங்குகின்றன .அதிலும் பல்லினச்சமூகங்கள் வாழுமொரு நாட்டில் மேற்கூறிய நான்கு தூண்களும் மிகக் கவனமான முறையிலும் உறுதியான முறையிலும் நிலை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்
ஒரு அரசு அல்லது ஒரு அதிகார அமைப்பு மக்களின் மீது கொண்டுள்ள இறையாண்மை என்பது எப்பொழுதெல்லாம் தவறான முறையில் மோசமான முறையில் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் பத்திரிகைத்துறை விழித்துக்கொள்ள வேண்டும் ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் மேற்குறிக்கப்பட்ட நான்கு தூண்களும் மக்களின் துயரத்திலும் இரத்தத்திலும் தோய்ந்து கோரமாய்ப்பிளந்து குத்தீட்டியாக உள்ளன.
இலங்கையில் நிகழும் ஒரு நிகழ்வு குறிப்பாக அரசியல் நிகழ்வு சிங்கள மக்களுக்கு சிங்கள அல்லது ஆங்கில ஊடகங்கள் மூலமாகவும் தமிழ் மக்களுக்கு தமிழ் அல்லது ஆங்கில ஊடகங்கள் மூலமாகவும் வழங்கப்படுகின்றன. குறித்த ஒரு நிகழ்வு தொடர்பாக சிங்கள் ஊடகங்கள் எவ்வாறு அறிக்கை இடுகின்றன, அதன்மூலம் அவர்கள் என்ன விம்பத்தைப் பெறுகிறார்கள் எனத் தமிழ் மக்களுக்குத்
தெரிவதில்லை. இதேபோன்று தமிழ்மக்கள் தமிழ் ஊடகங்களினூடாக என்ன விம்பத்தைப்பெறுகிறார்கள் எனச் சிங்களமக்களுக்குத் தெரிவதில்லை.
ஒரே செய்தியை அல்லது நிகழ்வை பல்வேறு ஊடகங்களும்பல்வேறு ஊடக நிறுவனங்களும் வெவ்வேறாக வியாக்கியானம் செய்து செய்தியாக வெளியிடும் போது மக்கள் மத்தியில் குழப்பங்கள் எற்படுகின்றன.


தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகிற சகல ஒடுக்குமுறைகளும் விடுதலைப் புலிகளுக்கெதிரானதாக, பயங்கர வாதத்திற்கெதிரானதாக சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்தப்படுகின்றன. வன்னியில் முகாம்களில் மிருகங்களிலும் கேவலமான முறையில் நடாத்தப்படுகிற சகோதர இனத்தைப்பற்றிச் சிங்கள இனம் அறியவில்லை இதே போல் மலையகத் தமிழ் மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிற ஒடுக்குமுறைகள் பற்றியோ தென்னிலங்கையில் நடந்த கிளர்ச்சிகளின் போது சிங்கள மக்கள் எவ்வாறு கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பது பற்றியோ பெரும்பான்மையான தமிழ்மக்களுக்கு அறிக்கையிடப்பட்டிருக்கவில்லை. ஒரே நிகழ்வு பல்வேறு மொழிகளிலும் ஒரே மாதிரியாக அறிக்கையிடப்படுவதில்லை என்பது பன்மொழிக் கலாச்சாரம் நிலவுகிற அனேகமான வளர்ச்சி அடையாத நாடுகளில் குறிப்பிடத்தக்கதொரு பண்பாகவுள்ளது.
இது இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு தடையானதாகும்.
உதாரணமாக இந்தியாவில் இலங்கை யுத்தம் தொடர்பாக பன்மொழிகளிலும் ஒரேமாதிரியாகச் செய்திகள்
அளிக்கப்பட்டிருக்கவில்லை பெருமளவான ஆங்கிலப்பத்திரிகைகள் யுத்தத்தை தமிழர்களுக்கெதிரானதாக சித்தரிக்கவில்லை. இலங்கை அரசின் கோர முகத்தைச் சரியாக அவை வெளிப்படுத்தவில்லை.
பெரும்பான்மை இன அரசொன்று ஊடகங்களைத் தன் கையகப்படுத்தி மக்கள் என்னென்ன விம்பங்களைப் பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவர்களின் அதிகாரத்தை பேணுவதற்கும் மக்களை மேலும் மாயைக்குள் அழுத்தி வைத்திருக்கவும் மட்டுமே உதவும்.
ஊடகங்கள் எதை எல்லாம் சொல்ல முடியும் என்பதை அரசோ அல்லது இன்னொரு அதிகாரசக்தியோ தீர்மானிக்கும் நிலை இருக்கும் எந்தச்சமூகமும் வளர முடியாது.
ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் மக்களுக்கு தெரிய வேண்டியவைகள் “இவைகள் மட்டுமே” என வரையறை செய்யப்பட்டிருக்கும். மேலும் மக்களுக்குத் தெரியக்கூடாதவைகள் என அதிகாரத்தில் உள்ளவர்களால் கருதப்படுபவைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கும். குழியைத் தோண்ட முயலும் பத்திரிகையாளர்களும் குழி தோண்டிப் புதைக்கப்படுவார்கள்.
இன்றைய சூழ்நிலையில் செய்திகளை செய்தியாகவே பன்மொழியிலும் வெளியிடும் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டியது முக்கியமாகிறது.
கருத்தியலைச் சந்தைப்படுத்துகிற இலங்கையின் ஊடக கலாச்சாரத்தில் “செய்திகளைச் சந்தைப்படுத்துகிற” நிலையை இரு முகாங்களைச் சேர்ந்த ஊடகங்களும் எடுக்கக் தயங்குகின்றன.

வெளிநாட்டு ஊடக கலாசாரம்



வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் மக்கள் அறியக்கூடாதது என்று எதுவுமே இருப்பதில்லை. இங்கு "பேசாப்பொருட்களைக் காண்பதரிது" அப்படி ஏதாவது இருப்பின் அதையும் பத்திரிகையாளர்கள் வெளியுலகுக்குக் காலம் பிந்தினாலும் வெளிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இவ்வாறு தொழிற்படும் பத்திரிகையாளர்கள் சட்டத்தினாலும் மக்கள் மத்தியில் நிலவும் சனாநாயகக் கலாசாரத்தினாலும் பாதுகாக்கப்படுகிறார்கள். மேலும் இங்கு பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளால் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது போல் நேரிடையான அச்சுறுத்தல்களுக்குள்ளாவது மிகக்குறைவு. பத்திரிகையளர்களை பணத்தினால் விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள் அது வேறு.
மேலும் பொருளாதர அரசியல் சமூகப் பிரச்சனைகளில் மக்களும் அதிகாரத்தின் சகல மட்டத்தினரும் ஊடகங்களினூடாகச் சந்தித்துக்கொள்கிறார்கள்.
அண்மையில் அம்ஸ்ரடாமில் தவறான தகவல் ஒன்றினடிப்படையில் மொரக்கோவைப்பூர்வீகமாக கொண்ட நெதர்லாந்துவாசிகளை கைது செய்த சம்பவத்தில் நெதர்லாந்துத் தேசிய தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் தொழிற்பட்ட விதம் ஊடக சுதந்திரத்திற்கு எடுத்துக்காடாகும்.
இத்தேசியதொலைக்காட்சி பாதிக்கப்பட்டவர்களின் பேட்டியை ஒளிபரப்பியதுடன் மாநகர மேயர் ஏன் அந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்கவிலை எனவும் அவரிடம் வலியுறுத்திக்கேட்டிருந்தது

சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் இலக்காகக் கொண்டியங்கும் ஊடகங்களால் அவர்களுக்குரிய குரல்களை வழங்க முடிகிறது. ஆயினும் முதலாளித்துவ சனநாயகம் எல்லைகள் அற்றதல்ல. பயங்கரவாதத்ததிற்கெதிரான போரெனும் அணுகுமுறையினால் இச்சுதந்திரத்தின் எல்லைகள் குறுகி வருகின்றன
சனநாயக நாடுகள் என்று சொல்லப்படும் நெதர்லாந்து போன்ற வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளின் ஊடகங்களும் தமது எல்லைக்கு வெளியே செய்தி விம்பங்களை 100 வீத நடுநிலையில் நின்று உருவாக்குவதில்லை. ஆப்கானிஸ்தான் ஈராக் போன்ற நாடுகளில் நிகழும் மேற்குலகின் தலையீடுகளையும் இந்த ஊடகங்கள் முற்றிலும் நடுநிலைமையுடன் உருவாக்குவதில்லை.ஆனாலும் பொதுமக்களுக்கேற்படும் பாதிப்புக்களை கூறவே செய்கின்றன. மேலும் தன்னார்வப் பத்திரிகையாளர்களின் நடுநிலையான புலனாய்வுச் செய்தி வழங்கலை இருட்டடிப்புச் செய்யாமல் வெளியிடும் துணிவையும் இவை கொண்டுள்ளன. பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சிறப்பான சட்டரீதியான பாதுகாப்புகளும் இங்கு உள்ளன. இங்குள்ள அரசியல்வாதிகளும் இந்தச்சட்டங்களை பொதுவில் மதிக்கும் சனநாயக உணர்வைக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அய்ரோப்பாவில் காணப்படும் இந்தப்பண்பு அண்மைக்காலம் வரையும் தனிமனித கருத்துச் சுதந்திரத்தில் பின்தங்கியிருந்த கிழக்கைரோப்பியநாடுகளை நோக்கி நகர்ந்து வருகிறதைக் காணமுடிகிறது. முதலாளித்துவ சனநாயகத்தின் கூறுகளை அந்த நாடுகள் உள்வாங்கி வருகின்றன.
பர்மாவில் நிகழும் இராணுவ அடக்குமுறை, துருக்கியில் குர்திஸ்தானிகளின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறை திபேத்தில் நிகழும் ஒடுக்குமுறை சிம்பாபேயில் நிகழும் ஒடுக்குமுறை போன்றவைகள் தொடர்பாக மேற்குலக ஊடக நிறுவனங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் நடந்துவரும் போராடம் பற்றி அனேகமான மேற்குலக ஊடகங்க்ள் போதிய கவனம் எடுத்திருக்கவில்லை . (சில தவிர்ப்பான ஊடகங்கள் உள்ளன)

இவ்வூடகங்களின் கவனம் இலங்கையில் வாழும் மக்களின் வாழ்நிலையில் உடனடி மாற்றங்களைக் கொண்டு வரப்போவதில்லை. ஆனால் சர்வதேச மக்கள் மத்தியில் இலங்கை அரசு பற்றிய தெளிவானவிம்பத்தை ஏற்படுத்த இவை உதவும். இந்த மக்களுக்குள் இருந்து எழுந்து வரும் அழுத்தக்குழுக்கள் அந்தந்த நாட்டு கொள்கைவகுப்பாளர்களிடத்தும் அரசியல்வாதிகளிடத்தும் உரையாடக்கூடியவர்கள். அவர்களின் மூலமாக சர்வதேச அரங்கில் தமிழ் இன ஒடுக்கு முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
இலங்கையின் இனங்கள் எவ்வாறு பிளவுண்ட சகிப்புத் தன்மையற்ற சமூகங்களாக மாறினவோ அதேபோல தமிழ் சமூகமும் சனநாயக சிந்தனையில் பின்தங்கி கருத்தியலில் பிளவுண்ட சகிப்புத் தன்மையற்ற சமூகமாக மாறியுள்ளது. இதனால் இலங்கையின் பல்லினச்சமூகங்களுக்கும் இடையிலும் தமிழ் சமூகத்தின் பல்வேறு முகாம்களுக்கிடையிலும் கருத்துப் பரிமாற்றத்துக்கான சாத்தியங்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதனை ஊடகங்களே செய்ய வேண்டும்.

ஈழம் பிரிவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்கிற யதார்த்தம் எங்களை அறைந்துள்ளது. இலங்கையின் பல்லினச்சமூகங்கள் தம்முள் இணங்கி வாழ்வதைத்தவிர அவற்றுக்கு வேறு வழி இல்லை. எனவே சனநாயகச் சிந்தனை ஒன்றே எங்களை வாழ வைக்கும். சக உயிரின் உணர்வையும் உரிமையையும் மதிக்காத எந்த நாட்டிலும் அமைதி இல்லை.
(இக் கட்டுரை பிரதானவோட்டத்தில் உள்ள ஊடகங்களை(main stream media)) அடிப்படையாகக்கொண்டே எழுதப்படுகிறது).
அரிதேவா.
12/06/2009

13 ஜூன், 2009

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதிகார வெற்றிடமும்...



சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் அதிகாரம் சிங்கள இனத்தினது எனக் கருதப்படக்கூடிய வகையில் மாற்றம் அடைந்தது. நாடோன்றின் அரசஅதிகாரம், குறித்த இனம் ஒன்றினால் மட்டுமே அனுபவிக்கப்படும் போது பல்லினங்கள் வாழும் நாட்டில் பிரச்சினைகள் தோன்றும். தோன்றுகின்றன. இனங்களின் தனித்தன்மைகளுக்கு பாதுகாப்பும் உரிமையும் அளிக்கப்படவேண்டும். அரசு இன அடிப்படையில் இயங்க முடியாது. ஆனால் இலங்கையில் அரசு அவ்வாறே இயங்குகிறது.

தமிழர்கள் தாம் சிங்களவர்களால் ஆளப்படுவதாக உணரத்தொடங்கினர். மிக ஆரம்பத்திலேயே இந்த உணர்வை உறுதிப்படுத்தும் புறநிலையான காரணிகள் அறியப்பட்டன. அதிகாரத்தில் சிறுபான்மை இனங்களுக்கு பங்கு இல்லை. பெரும்பான்மை இனத்தைச் சார்ந்து, சலுகைகளை மட்டுமே பெறமுடியும் என்னும் நிலை தமிழர்களைத் தங்களுக்கென அதிகாரத்தை பெறவேண்டும் என்னும் எண்ணக்கருவை நோக்கித் தள்ளியது.

மனிதரை மிருக நிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சித்தால் அதிகாரம் என்பது மிருக நிலையின் அடிப்படையான பண்பென்பதை அறியலாம். மிருகங்கள் தமது சமூகத்திற்குள்ளும் சகசமூகங்களுடனும் தமது வாழிட எல்லைக்குள்ளும் வெளியிலும் மிகத் தெளிவான அதிகாரப்போட்டியினைக் கொண்டுள்ளன.

மிருகங்களின் அதிகாரப் போட்டி வெற்றி அல்லது தோல்வியினால் தீர்த்து வைக்கப்படுகிறது. மனிதர்களின் அதிகாரப் போட்டியும் வெற்றி அல்லது தோல்வி என்ற முறையில் அணுகப்படுவது வியப்புக்குரியதல்ல.

தமிழர்கள் தமக்கான அதிகாரத்தைத் தேடத் தொடங்கிய போது தமிழர்களிடையே பல போராட்டக் குழுக்கள் தோன்றின. காலப்போக்கில் அவை கரைந்து தமிழ்ச் சமூகத்தினுள் இருந்த சமூகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய அமைப்புக்களாக மாறின.

இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் தமிழர்கள் தமது அதிகாரத்தை வேண்டி நின்றது மட்டுமல்ல அது எத்தகையதாக இருக்க வேண்டும் எனச் சிந்தித்ததும் தான். அதிகாரப் போட்டி என்பது அதிகாரத்தின் பண்புகள் குறித்த கேள்வியுடனும் இணைந்திருந்தது. அதிகாரம் என்பது சமூக அதிகாரம் பொருளாதார அதிகாரம் அரசியல் அதிகாரம் எனவிரிவடையும். தனிமனித உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் இடையே நிலவும் அதிகாரம் மற்றும் குடும்பத்துள் நிலவும் அதிகாரம் ஆகியவை ஒன்றிணைந்து சமூக அதிகாரமாக விரிவடைகிறது. ஒரு இனத்துக்குள் இருக்கும் பல்வேறு சமூகப் பிரிவினருக்குள்ளும் மேற்குறித்த மூன்று வகையான அதிகார அம்சங்களைக் காணமுடியும்.

பல்லினங்கள் வாழும் நாட்டில் எவ்வாறு சகல இனங்களுக்கும் அதிகாரத்தில் பங்கு இருக்க வேண்டுமோ அது போலவே போராடும் ஒரு இனத்துக்குள் இருக்கும் சகல சமூகப் பிரிவுகளுக்கும் சரியான அதிகாரப்பகிர்வும் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே இனம் ஒன்றின் முழுச்சக்தியையும் ஒன்றிணைக்க முடியும்.

ஒரு அமைப்பு ஒரு இனத்தின் முழு அதிகாரத்தையும் தனது கையில் எடுக்கும் போது அதன் அழிவுடன் அபாயகரமானதொரு அதிகாரவெற்றிடம் தோன்றுகிறது. இது வெற்றிகொண்ட இனத்திற்கு வாய்ப்பான சூழ்நிலையைத் தந்துவிடுகிறது.

உதாரணமாக ஒரு பேச்சுக்கு பலஸ்தீனத்தில் கமாஸ் முற்றுமுழுதாக அழிக்கப்படுகிறது என வைத்துக்கொண்டால் இதனைத் தொடர்ந்து பலஸ்தீன மக்களின் மத்தியில் ஒரு அதிகார வெற்றிடம் தோன்றப்போவதில்லை.பலஸ்தீன மக்களின் அதிகாரம் எப்படியானதாக இருக்கவேண்டும் என்பதில் அவர்களுக்கு முரண்பாடு தோன்றலாம் அது வேறு.

80 களில் மேலெழுந்து வந்த பிரதான விடுதலை இயக்கங்கள் சமூகத்தின் வேறுபட்ட பிரிவுகளை அல்லது கருத்தியல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நின்றதைக் காணமுடிந்தது. ஆனால் இவை சரியான முறையில் ஒரு ஜக்கிய முன்னணியாக இணைக்கப்பட்டிருக்கவில்லை.

உதாரணமாக பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அத்தகைய இணக்கப்பாடு ஒரு கால கட்டத்தில் அடையப்பட்டிருந்தது. அந்தக்காலகட்டமே பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் பொற்காலமுமாக இருந்தது.

ஆரம்பத்தில் இருந்த பல்வேறு சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய தமிழர் விடுதலை இயக்கங்களின் ஜக்கிய முன்னணிக்கான சாத்தியம் என்னென்ன காரணங்களால் சாத்தியமற்றுப் போனது என மீள்வாசிப்புச்செய்வது புதிய படிப்பினைகளைத்தரலாம்.

எந்த இனத்துக்குள்ளும் பல்வேறு கருத்தியல்கள் நிலவும். இவை ஒரு சமூகம் தன்னை மீள்வாசிப்புச்செய்யும் போது இயக்கமடையத் தொடங்கும். இந்த இயக்கங்களின் இயக்கவியலை சரியான முறையில் ஒன்றிணைக்கக் கூடிய சனநாயக ரீதியான அணுகுமுறை மட்டுமே ஒரு இனத்தை முன்னோக்கித்தள்ளும்; எந்த இடர்ப்பாடுகளுக்குள்ளும் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும்.

தமிழர்களின் விடுதலைப்போராட்டம் படிப்படியாக அங்கீகரிக்கப்படாத ஆனால் உறுதியான அதிகாரத்தை மெதுவாக எடுத்துக்கொண்டது.

விடுதலைப்புலிகள் தமது அதிகாரத்தை ஏனைய ஸ்தாபனங்களை அழித்து ஸ்தாபிப்பதில் வெற்றி அடைந்தனர். ஈரோசைத் தவிர எனைய ஸ்தாபனங்கள் தமக்குள் ஏற்கனவே அதிகாரப் போட்டி காரணமாக அழியத்தொடங்கியும் இருந்தன. இது விடுதலைப்புலிகளின் வெற்றியை இலகுபடுத்தியது எனலாம்.

தமிழ்ப் பகுதிகளில் இயங்கிய இலங்கைச் சிங்கள அரசஅதிகாரத்தின் மீது தமிழர்களின் அங்கீகரிக்கப்படாத அதிகாரம் நிழலாகப்படியத் தொடங்கியது. தமிழர்களின் இந்த நிழல் அதிகாரத்தைத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சிங்கள அதிகாரம் இயலாமையுடன் பார்த்து நின்றது.

இலங்கை இராணுவம் பொலிஸ் மட்டுமல்ல சிவில் நிர்வாக அதிகாரிகளும் முடக்கப்பட்டனர். தமிழ் நிழல் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் வடக்கு கிழக்கை விட்டு நீங்கினர் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர். காலப்போக்கில் தமிழ் பிரதேசங்களின் இலங்கை அரசின் அதிகாரிகள் தமிழ் நிழல் நிர்வாகத்துடன் இணக்கப்பாட்டுக்கு வரலாயினர். இலங்கைக்குள் நிகழத்தொடங்கிய இந்த அதிகாரப் போட்டி தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் பரிமாணங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.

விடுதலைப்புலிகள் மிகத் தெளிவான அதிகார நிலையை எடுக்க முன்னர் அதேநேரம் சிங்கள அரசு அதிகாரம் வலுவிழந்து இருந்த நேரம் தமிழ் சமூகத்துள் பல்வேறு அம்சங்கள் கேள்விக்குட்படுத்தப்பட்டன.

குறிப்பாக மொழி உணர்வும் பயன்பாடும், சமூகத்தில் பெண்ணின் நிலை, சாதிய முரண்பாடுகள் வர்க்க முரண்பாடுகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

விடுதலைப்புலிகள் போராட்டத்தில் தீர்மானகரமான சக்தியாக வளர்ச்சி அடைந்த போது இனத்துக்குள் பல்வேறு பிரிவினருக்கும் இருக்கக்கூடிய அதிகார உரிமையையும் பங்கீட்டையும் அங்கீகரிக்கும் சனநாயக நிலையை எடுக்காமல் எல்லைகளை விடுவிக்கும் இராணுவ அணுகுமுறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர். இது 80 களில் தோன்றிய எழுச்சியைச் சிதறடித்து அன்றைய இளைஞர்களின் ஒரு பகுதியினரைப் போராட்டக் களத்தில் இருந்து அகற்றியது.

தமிழ் அதிகாரத்துள் ஒரு காலத்தில் ஆழமாக கேள்விக்குள்ளாக்கப்பட்ட பல்வேறு விடையங்கள் விடுதலைப்புலிகளால் பின்னர் ஆழமாகக் கேள்விக்குட்படுத்தப்படவில்லை. ஆனாலும் அவர்கள் கொண்டிருந்த அதிகார எல்லைக்குள் அவற்றைப் பற்றி முணுமுணுப்பவர்களாவது இருக்கவே செய்தனர். அல்லது அவர்கள் சக பயணிகளாகவிருந்தனர்.





குறிப்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் அவர்களுக்கென இருந்த “கடமைகளுக்கு” புறம்பான விடையங்களைச் செய்வதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டனர்.

இன்றைக்கு எற்பட்டுள்ள அதிகார வெற்றிடத்தால் மிக மிகப் பாதிப்புக்குள்ளாகப் போகிறவர்களும் பெண்களே.குறிப்பாகப் போராளிப் பெண்களே.

சமூகத்தின் சகல பிரிவினரையும் போரில் இணைப்பதற்காக அவர்களுக்கிடையில் இருந்த முரண்பாடுகள் பேசப்படாது விடப்பட்டன.

தமிழ் அதிகார எல்லைக்குள் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு இருக்கக்கூடிய அதிகார உரிமை பறிக்கப்பட்டு துரத்தப்பட்ட துரதிஸ்டவசமான நிலையும் இக்காலகட்டத்திலேயே தோன்றியது.

தமிழ் அதிகாரம் பற்றி பேசுகிற ஒவ்வொரு கணமும் சனநாயகம் பற்றிய எண்ணக்கருவும் இணைந்தே வரவேண்டும்.

அதிகாரத்தை பிரயோகிக்கும் போதே சனநாயகத்தையும் உறுதிசெய்ய வேண்டியது அவசியம். இதனால்தான் எந்த அரசியல் அமைப்பிலும் இது தொடர்பான விளக்கங்களும் விபரிப்புக்களும் வரையறைகளும் உள்ளன. இவற்றை நன்கு விளங்கி ஆட்சி செய்ய வேண்டியது அரசாங்கங்களினதும் அதிகாரிகளினதும் பொறுப்பாகும். இலங்கையின் எந்த அரசாங்கங்களும் இப்பொறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை. துரதிஸ்டவசமாக விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்குள்ளும் இப்பொறுப்புணர்வு இருக்கவிலை.

பிழையான அதிகார அமைப்புக்குள் மக்களை வாழ நிர்ப்பந்தித்தால் அல்லது வாழப்பழக்கப்படுத்தினால் அதிகார வெற்றிடம் ஒன்று ஏற்படும் போது மக்கள் முன்பிருந்த அதிகார அமைப்பை நிபந்தனைகள் அற்று ஏற்றுக்கொள்ளும் மரத்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மாற்றீடான அதிகாரம், தான் எந்த வகையில் முன்பிருந்த அதிகாரத்திற்கு மாற்றீடு என்பதையும் உணர்த்த வேண்டும்.

தமிழர்களின் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த பன்முகத்தன்மையான அதிகார ஒருங்கிணைப்பிற்கான சாத்தியம் சிதைக்கப்பட்டு ஒருமுகமான அதிகார அமைப்பு விடுதலைப்புலிகளால் ஸ்தாபிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் எல்லைகள் பரந்திருந்தபோது நிர்மாணிக்கப்பட்ட நீதி நிர்வாக பொருளாதாரக் கட்டமைப்புக்களின் தன்மை குறித்து ஆழமான விமர்சனத்தை அதனை நன்கறிந்தவர்கள் செய்யவேண்டும்.

அவர்களின் சட்டமூலத்தொகுப்பில் இலங்கை அரசுடன் ஒப்பிடும்போது முற்போக்கான அம்சங்கள் இருந்ததாக முன்பு பேசப்பட்டது.

ஆனால் தமிழ்மக்களின் அரசு அனேகமான சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் என்னும் ஸ்தாபனத்தின் நலன்களைப் பேணுவதற்காகவே தொழிற்பட்டதையும் காணமுடிந்தது.

ஒரு விடுதலை அமைப்பு அரசாக பரிமாணம் கொள்ள முயன்றது. ஆனால் பரிணாமம் அடையவில்லை. அது சாத்தியமும் இல்லை. என்னேனில் அரசுருவாக்கம் நான் முன்பு கூறிய மூவகை அதிகாரங்களின் கூட்டிணைவுடன் சம்பந்தப்பட்டது.

விடுதலைப்புலிகளின் பொருளாதாரக் கட்டமைப்பு தமிழ் மக்களின் பொருளாதாரக் கட்டமைப்பு என்பதாக மாறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் ஈழம் கிடைத்திருப்பின் சாத்தியமாக இருந்திருக்கலாம்.

எனவே அங்கீகரிக்கப்பட்ட அதிகாரமோ அல்லது அங்கீகரிக்கப்படாத அதிகாரமோ அல்லது நிழல் அதிகாரமோ எதுவாயினும் சரி அது ஒரு முழுமையான அதிகாரமாக வளர்ச்சியடைவது தனியே எல்லைகளை விடுவிப்பதுடன் மட்டும் சாத்தியமாகி விடுவதில்லை.

சமூக அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்கள் சரியான முறையில் சனநாயக ரீதியான பங்கீட்டுடன் இணைக்கப்பட்டு எல்லைகளும் விடுவிக்கப்படும் போதுதான் ஒரு நாடு உருவாகிறது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான தோல்வி விடுதலைப்புலிகளின் அழிவல்ல. பதிலாகத் தமிழர்கள் தங்களின் சுய அதிகார உணர்வை இழந்ததுதான்.


.
இங்கு சொல்லப்படுகிற அதிகார உணர்வு என்பது மற்ற இனத்தை கொல்லும் உணர்வல்ல. இன்னொரு இனத்தின் உரிமைகளைப் பறிக்கும் அதிகாரமல்ல. பதிலாக நாம் என்று நிமிர்ந்து நிற்கும் சுய தன்னம்பிக்கை பற்றிய உணர்வு‐கூட்டுணர்வு இதனை ஒரு சமூகம் இழக்கும் போது அது அரசியல் ரீதியில் சிதறிவிடுகிறது.
அந்தச்சிதறலை நாங்கள் இன்று பார்கிறோம் அனுபவிக்கிறோம்.

முழமையான அதிகாரம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு எல்லைகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆனால் பெளதிக எல்லைகளில் தங்கி இருக்காத முக்கியமான அம்சங்களை தமிழர்களின் விடுதலைப் போராட்டம் கவனிக்கத்தவறியதின் விளைவே இன்றைக்கு தோன்றியுள்ள அதிகார வெற்றிடத்துள் தமிழர்கள் தலைகுனிந்து நிற்கக் காரணம்.

ஒரு இனம் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டிய சனநாயகச் சிந்தனை அதன் சமூக அதிகாரத்திற்கு மிக அவசியமாகும்.




தமிழ் சமூகத்தின் திறந்த தன்மை, உரையாடற் பண்பு, சேர்ந்து வேலை செய்யும் தன்மை, கேள்வி கேட்டல் என்பவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் ஏன் தவறவிட்டோம்.

விடுதலைப்புலிகளின் சனநாயக மறுப்பைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அதன் அடித்தளம் என்ன என்பதை மறந்து விடுகிறார்கள். விடுதலைப்புலிகள் சனநாயகத்தை விரும்பியிருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் சனநாயக மறுப்பை விடுதலைப்புலிகளே தொடங்கி வைத்ததாக யாரும் கூறுவார்களேயானால் அவர்கள் கோத்தபாயவோடு தேனீர் அருந்தலாம்.

தமிழ்ச்சமூகத்தினுள் தனிநபர் மற்றும் குடும்ப உறவகளுக்குள் நிலவுகிற அதிகாரத்தை புறநிலையாக நின்று அது எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை நாங்கள் அவதானிப்போமாயின் இலங்கையின் துயரத்திற்கான காரணத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.குடும்ப உறவுகளுக்குள் குறிப்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு சனநாயகமாக இருப்பதில்லை.

மாணவன் ஆசிரியருக்குப்பயம். ஆசிரியர் அதிபருக்கு பயம். அதிபர் அதிகாரிக்கு பயம். அதிகாரி மேலதிகாரிக்கு பயம். மேலதிகாரி அமைச்சருக்கு பயம். அமைச்சர் சனாதிபதிக்குபயம். சனாதிபதியோ எவருக்கும் பயம் இல்லை.

இப்படிப்பட்ட அதிகார அடுக்குள்ளேயே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். மேலும் இவ்வதிகார அடுக்கின் ஒவ்வொரு தட்டுகளிலும் இருப்போருக்குள் தமக்குள் சேர்ந்து வேலை செய்தலும் சாத்தியப்படுவதில்லை.

அதிகாரத்தை நாட்டை அல்லது சமூகத்தை கட்டுக் கோப்புடன் இயக்கப் பயன்படுத்தாமல் தனிநபர்களும் கட்சிகளும் தமது சுயநலன்களை அடைய பயன் படுத்தப்படும் போக்கே உலகெங்கும் அவதானிக்கப்படுகிறது.

அதிகாரமும் சனநாயகமும் ஒரு நாணயக்குற்றியின் இரண்டு பக்கங்கள். அது இரண்டாகப் பிளக்கப்பட்டு தத்தமது தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. மக்களோ செல்லாக் காசாகி நிற்கிறார்கள்.

தமிழர்களிடம் தோன்றியுள்ள அதிகார வெற்றிடம் வெறுமனே ஒரு அரசியல் வெற்றிடம் அல்ல என்பதை உணர்ந்து கொண்டால் மட்டுமே அதை மீண்டும் நிரப்புவது எவ்வளவு கடினம் என்பது புரியும்.

இனிமேல் குறுகிய காலத்துள் தனிநாடு ஒன்றை அடைவதன் மூலம் தமிழர்கள் தங்களுக்கென ஒரு அதிகாரத்தை ஸ்தாபிக்க முடியும் என்பது பகற்கனவாகும்.
எனவே யதார்த்தத்தில் எஞ்சியுள்ள தெரிவுகள் இவையே:

• இலங்கை என்ற முழுமைக்குள் கிடைக்கக்கூடிய அதிகாரப்பகிர்வு.

• இலங்கை என்ற முழுமைக்குள் எந்தவித அரசியல் வேண்டுகோளும் இன்றி ஏற்கனவே உள்ள அரசியல் அதிகாரத்தை எற்றுக்கொண்டு வாழ்வது.

பிராந்திய மற்றும் உள்நாட்டு அரசியற்சூழ்நிலைகளை அவதானிக்கும் போது யதார்த்தத்தில் தமிழர்களுக்கு இந்தத் தெரிவே எஞ்சியுள்ளது. இலங்கையில் இருக்கும் எந்தச்சிங்களக்கட்சியும் தமிழர்களுடன் இதய சுத்தியுடன் அதிகாரத்தைப்பகிர்ந்துகொள்ளக்கூடியவை அல்ல.

மீள்குடியேற்றம் புணர்வாழ்வு நிவாரணம் ஆகிய மூன்றுக்குள்ளும் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் புதைக்கப்பட்டு விடும். சர்வதேச அழுத்தம் ஒன்றின் மூலம் மட்டுமே தமிழர்களுக்கான குறைந்த பட்ச அதிகாரப்பகிர்வாவது சாத்தியம். ஆனால் பிராந்திய அரசுகள் யுத்தமற்ற இலங்கையை நிர்ப்பந்தங்கள் கட்டுப்பாடுகள் எதுவுமற்ற திறந்த சந்தையாக்க மட்டுமே முயற்சி செய்வார்கள். தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி அவர்கள் கவலைப்படப்போவதிலை.

சிங்கள் பெளத்த பேரினவாத அரசு தனது சனநாயகமற்ற அதிகாரத்தைப் பேணுவதற்காக எதையும் செய்யும் நிலையில் உள்ளது.தற்போதைய அரசாங்கம் தமிழ்த்தேசியம் முழுமூச்சுடன் மீண்டும் அரசியல் ரீதியாக எழக்கூடிய சகல வழிகளையும் அடைக்கவே முயற்சி செய்யும்.

சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு தமிழர்களின் பிரதிநிதித்துவமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூடுமானவரை செயலிழக்கச் செய்யவும் உடைக்கவும் இந்த அரசாங்கம் முயற்சி செய்யும்.

இதுவரை காலமும் அரசுடன் இணைந்திருந்த இராணுவக் குழுக்களை இவ்வரசாங்கம் உடன் கலைக்கப்போவதில்லை. மாறாக இவற்றை தன்னைச்சார்ந்து சலுகைகளைப்பெறும் அரசியல்வாதிகளாக மாற்றுவதுடன் தமிழர்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைவதை இவர்களின் உதவியுடன் தடுக்கவும் செய்யும். இக்குழுக்களைப் பயன்படுத்தித் தேர்தல் காலங்களில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ சனநாயக மீறல்களிலும் ஈடுபடக்கூடும். மேலும் இந்தக் குழுக்கள் யுத்த காலத்தில் எந்தக் கொள்கைகளும் இன்றி அரசு சார்ந்து தமது இருப்பைப் பேணிக் கொண்டவைகள் என்பதுடன் இவையும் சனநாயக உரிமைகளைக் கோரமான முறையில் நசுக்கியவையே. இத்தகைய அமைப்புக்கள் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களை ஒருங்கிணைத்து வலுவான கோரிக்கைகளை வைக்கும் சக்திகளாக மேலெழ முடியாது.

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னைய காலங்களில் இருந்த அரசியல் வியாபாரமே( தமிழ் நாட்டில்‐இந்தியாவில் உள்ளது போன்று) இனி வடக்கு கிழக்கில் தலைதூக்கும்.


ஆசிய ஆபிரிக்க நாடுகளில் நிகழும் அரசியல் வியாபாரங்களைப் பற்றி எவரும் சொல்லத்தேவையில்லை. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் அரசியல் சந்தையாகவே கருதப்படுகிறது. ஆனால் அது நுகர்வோர் மையப்படுத்தப்பட்ட சந்தையாகவிருக்கிறது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் அரசியல்வாதியை மையப்படுத்தியே அரசியற்சந்தை உள்ளது.

அறிவுபூர்வமான அணுகுமுறைகள் இன்றி அரசியல் பொருளாதார சமூக கட்டுமானங்களை அதிகார போதையில் சுயலாபங்களுக்காக அரசியல்வாதிகள் சிதைக்கின்றனர். அவர்களின் ஒரே நோக்கம் அதிகாரத்தில் இருப்பது. தேர்தல் தோல்விகளைச் தவிர்ப்பதற்காக எதையும் செய்கிற நிலமையே உள்ளது.

இதை இங்கு சொல்வதன் நோக்கம் என்னவெனில் இலங்கை போன்ற நாடுகளில் நிலவுகிற பாராளுமன்ற அதிகாரம் என்பது சனநாயகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட அதிகாரமாகும்.

இத்தகைய பாராளுமன்றக்கலாசாரத்துள் தமிழர்கள் வேறோரு சனநாயக கலாச்சாரத்தை மக்களின் நலன்களை மையப்படுத்திய அரசியல் கலாச்சாரத்தை கொண்டுவருதல் மிகக் கடினமாகும்.

தமக்குள் இருக்கிற பல்வேறு சமூகப் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகிற அரசியல் கட்சிகளை உருவாக்குவதும் அவற்றுக்கிடையே ஜக்கியத்தை கொண்டுவருவதும் மிக மோசமான ஒடுக்குமுறைக்குச் சவால் விடுக்குமொன்றாக மாறலாம். முற்றிலும் புதிய கோணத்தில் பாராளுமன்ற அரசியலை அணுகும் அரசியல் கட்டமைப்பு தமிழர்களுக்குத் தேவை. ஏனேனில் இன்னொரு அமிர்தலிங்கமோ இருக்கிற ஆனந்தசங்கரியோ தமிழர்களுக்குத் தேவை இல்லை.

சிங்களசமூகத்திற்குள் இருக்கக்கூடிய சனநாய சக்திகளை, ஒடுக்குமுறைக்கு எதிரானவர்களை இனம் காணுவதும் இங்கு அவசியமாகும்.

தமிழ் மக்கள் தங்களுக்குள் வலுவான சனநாயக ஐக்கிய முன்ணனி ஒன்றை உருவாக்காத வரை சிங்கள பௌத்த பேரினவாதம் பேயாட்டமாடவே செய்யும்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் விட்டுச்சென்ற தமிழர்களின் அதிகாரம் என்ற தேன்கிண்ணத்துள் தமிழர்களின் குருதியை நிரப்பி அது குடிக்கவே செய்யும்.

அரிதேவா
நன்றி:- குளோபல் தமிழ்ச் செய்திகள்

2 ஜூன், 2009

மாயையும் யதார்த்தமும்



உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களின் இதயங்கள் கனத்துப் போயுள்ளன! பல்வேறுவிதமான உணர்வலைகளுக்குள்ளும் அவர்கள் சிக்கி உடைந்து போயுள்ளனர். தமிழர்கள் கொடுமையான இழப்பின் துயரினாலும் அவமானத்தினாலும் தலைகுனிந்து நிற்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் இராணுவக் கூட்டமைப்பும் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் சிதைக்கப்பட்டமைக்கான உடனடிக் காரணம் இலங்கை இராணுவத்தின் அதீத பலமே.இதை யாவரும் அறிவர். இந்தப்பலம் வெளியில் இருந்து கிடைத்த உதவிகளினாலேயே ஏற்பட்டதாகும். மேலும் விடுதலைப்பபுலிகளின் உண்மையான பலத்தை அறிந்த கருணாவின் துரோகமும் இதற்கு உதவியது எனலாம். இத்தைகைய பலத்துடன் ஒரு இராணுவம் பாயும் போது அதைத் தடுப்பதற்கு எந்த விடுதலை அமைப்பாலும் முடியாது.

உலக வரலாற்றில் அரசுகள் விடுதலை இயக்கங்களை இதே முறையில் ஒடுக்கி உள்ளதை நாங்கள் இங்கு நினைவிற் கொள்ளலாம்.

பிலிப்பைன்ஸில் NPA இனையும் கொலம்பியாவில் இடது சாரி கொரில்லாக்களையும் அந்தநாட்டு அரசுகள் அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் கணிசமான அளவுக்கு ஒடுக்கியுள்ளன.

கடந்த 30 வருட காலமாக பல்வேறு பரிமாணங்களினூடாக நகர்ந்து வந்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மிக மோசமான முறையில் நசுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நியாயமான அரசியற் கோரிக்கைகள் பதிலளிக்கப்படாது உள்ளன. இவ்வளவு கால இழப்பும் நெருப்பும் சிங்கத்தின் கொடூரமான காலடிக்குள் அவிந்து போய் கிடக்கின்றன.



தமிழர்களின் அரசியல் வரலாற்றில் தோன்றியுள்ள இந்த பாரிய அரசியல் வெற்றிடம் என்னென்ன விளைவுகளைக் கொண்டு வரப்போகிறது என்பது எவருக்கும் தெரியாது.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் இவ்வாறு கொடூரமான முறையில் நசுக்கப்பட்டதற்கு மூல காரணம் சர்வதேசச் சூழ்நிலைகள் தான். இந்து சமூத்திரப் பிராந்தியத்துள் நிலவும் அதிகாரப் போட்டிக்குள் தமிழ் ஈழம் பிரிவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. இந்தியா என்கிற நாசகார பிராந்திய வல்லரசு எமது தலைக்கு மேல் இருக்கும் வரைக்கும் முற்றுமுழுதான சுதந்திர ஈழம் கனவாகவே இருக்கும். வளர்ந்து வரும் சீன வல்லரசு சிங்கள பேரினிவாத அரசை தனது கைக்குள் வரச்செய்வதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறது.

தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளைத் தமிழ்ஈழத்தை அடைவதன் மூலம் மட்டுமே வென்று எடுக்க முடியும் என்ற முடிவில் உறுதியாக நின்றதற்கான விலையை புலிகளும் அவர்களுடன் விரும்பியோ விரும்பாமலோ சக பயணிகளாக இருந்த மக்களும் கொடுத்துள்ளனர்.

எந்த விதமான ஆக்கிரமிப்புக்கும் ஒடுக்கு முறைக்கும் எந்த நிலையிலும் பணிய மாட்டோம் என உறுதியாக நின்று மரணம் அடைந்த ஒவ்வொரு உறுதிப் புலிவீரரினதும் தியாகத்தின் முன் உலகும் சிங்கள சமூகமும் வெட்கித் தலை குனிய வேண்டும்.

தமிழ் ஈழம் என்கிற ஒரே நோக்கில் மட்டும் உறுதியாக இருந்த விடுதலைப் புலிகளின் தலைமை கணக்கெடுக்கத்தவறிய பல முக்கியமான விடையங்கள் அரசியல் தளத்தில் அவர்களின் மீது திரும்பிப் பாய்ந்துள்ளன.

தமிழ் ஈழம் தவிர்ந்த வேறு ஒரு தீர்வை வலியுறுத்தக் கூடிய பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் விடுதலைப்புலிகள் அதனை புறக்கணித்திருந்தனர். தம்மைச் சூழ உள்ள புற அரசியல் சூழ்நிலைகள் பற்றிய சரியான கணிப்பீடு இருந்திருப்பின் இந்தப் புறக்கணிப்புக்களை அவர்கள் செய்திருக்கத் தேவையில்லை.

உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகின்றவர்களுக்கு ஆரதவு தருவதற்கு எவரும் முனைவதில்லை. எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஒடுக்கப்படுகிறவர்களைச் சமரசத்திற்கு நிர்பந்திக்கின்ற சூழ்நிலையே உள்ளது.

இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் தமது நலன்களைப் பேணுவதற்கு விடுதலைப்பலிகள் என்கிற அமைப்பு எந்த வல்லரசுக்கும் தேவையானதாக இருக்கவில்லை. கிழக்குத் தீமோர் மற்றும் கொசோவோ போன்ற நாடுகள் விடுதலை அடைந்ததற்கு அந்த பிராந்தியத்தில் நிலவிய சாதகமான அரசியல் சூழ்நிலைகளே காரணம்.

இலங்கை மோசமான படையெடுப்பொன்றை நடத்தியபோது விடுதலைப் புலிகளின் அழிப்பைத் தடுப்பதற்கு உலக நாடுகள் முன்வரவில்லை. விடுதலைப்புலிகளின் தீவிரமான ஜனநாயக மறுப்பையும் அரசியற் கொலைகளையும் காரணம் காட்டி மக்களைப்பற்றி மட்டும் கவலைப்படுவதாக அறிக்கைகளை விடுவதுடன் ஒதுங்கி நின்று கொண்டது. ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களின் மீதும் உடல்களின் மீதும் இராணுவத்தின் வாகனங்கள் ஏறிச் செல்ல அவர்கள் அலறிய போதும் கண்டு கொள்ளாத உலக நாடுகள் தத்தமது நலன்களை பேணுவதற்காக தற்போது மனித உரிமைமீறல் போர்க்குற்றம் போன்ற விடையங்களை மேற்கொண்டுவர முயற்சிக்கின்றன. இலங்கையின் சீனச்சார்பு நிலை அமெரிக்காவையும் ஜரோப்பாவையும் அச்சத்திற்கும் எரிச்சலுக்கும் உள்ளாக்குகிறது.

இலங்கை அரசு தமிழர்களுக்கான சனநாயக உரிமைகளை மறுத்த போது விடுதலைப் புலிகள் தழிழர்களுக்குள் இருக்க கூடிய மாறுபட்ட கருத்துக்களுக்கு மதிப்பளிக்கத் தவறி இருந்ததுடன் அவற்றைக் கடுமையாக ஒடுக்கியும் வந்துள்ளனர். இது அவர்களைச் சூழ எதிரிகளையே இன்னும் உருவாக்கியிருந்தது. அரசியற் கொலைகள் தூரநோக்கில் எந்த விதமான சாதகமான விளைவுகளையும் தந்திருக்கவில்லை.

அண்மைக் காலங்களில் தமிழ்ச்;சமூக அசைவியக்கத்தில் ஏற்பட்டிருந்த முக்கியமான ஒரு அம்சத்தை விடுதலைப்புலிகள் கணக்கெடுக்கத் தவறி இருந்தனர்.சுய விருப்பிலான மக்களின் போர்ப் பங்கேற்பு வீதம் குறையத் தொடங்கியிருந்ததே அது.

இதனை விடுதலைப் புலிகள் உணர்ந்து மதிப்பளித்திருந்திருப்பின் அவர்கள் இராணுவ ரீதியான வெற்றியில் நம்பிக்கை வைத்திருந்திருக்க மாட்டார்கள். மக்களைப் பலவந்தமாக போரில் பங்கேற்கச் செய்வது மிகப் பாதகமான விளைவுகளையே கொண்டுவரும். புலிகள் கடைசி காலங்களில் மக்களை பலவந்தமாக போரில் பங்கேற்கச் செய்ய முயற்;சித்திருந்தனர்.

மாறிவரும் உலக சூழ்நிலையில் தகவற் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகக் கலாச்சாரத்தை குக்கிராமங்கள் வரையும் கொண்டு வருகிறது. மக்கள் வர்த்;தகமயப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் மக்கள் யுத்தத்தில் தன்னெழுச்சியாகப் பங்கேற்பது சாத்தியமற்றதாகி வருகிறது. விடுதலை அமைப்பொன்று மரபு வழி இராணுவமாக மாற்றம் அடைவதற்கு சுய விருப்பிலான மக்களின் யுத்தப் பங்கேற்பு வீதம் அதிகமாக இருக்க வேண்டும். அது இல்லை என்கிறபோதே விடுதலைப் புலிகள் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். உலகம் பூராகவும் உள்ள தமிழர்களில் மிக பெரும்பான்மையானவர்கள்; தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் இவர்களில் எத்தனை வீதமானவர்கள் சுயவிருப்பின் பேரில் நேரடி யுத்தத்தில் பங்கேற்கத் தயாராக இருந்தனர்?

விடுதலைப் புலிகள் இன்றைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் முடிவை சில ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் பேரம்பேசக்கூடிய நிலையில் இருந்த போதே எடுத்திருக்க முடியும்.



இந்தோனேசியாவின் ஆச்சே மாநில விடுதலைப் போராளிகளும் நேபாளத்தின் இடது சாரி போராளிகளும் மாறி வந்த சர்வதேசச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே சமரசத்திற்கு இறங்கி சென்றார்கள். ஈராக்கில் குர்திஸ்தான் விடுதலைப் போராளிகள் அமெரிக்க ஒடுக்குமுறையுடன் கணிசமான அளவு சமரசங்களுக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் தமது பிராந்தியத்தில் கணிசமான சுயாட்சித் தன்மைகளைப் பெற்றிருந்தனர். நிக்கரகூவாவில் தொடர்ந்த ஆயுத போராட்டம் தேக்க நிலையை அடைந்த போது அவர்களின் தலைவரான டானியல் ஒட்டேகா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததாக கூறி அரசியல் வழியைத் தேர்ந்தெடுத்தார்.

மேற்குறித்த உதாரணங்கள் ஒடுக்கப்படுகிற மக்கள் பூரணமான அரசியல் உரிமைகளை வென்றுவிட்டதை குறிக்காவிடினும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தமது முடிவுகளை மாற்றிக்கொண்டதையே குறிக்கின்றன. இது ஒரு வகையில் சமரசம். ஆனால் சர்வதேச சூழ்நிலைகளைச் சரியாக எடைபோடுகிற ஒரு அரசியல் இயக்கம் தனது தந்திரோபாயங்களை மாற்றிக் கொள்வது தவறானது அல்ல.

ஒரு சமூகத்தின் இயக்கத்தை தனது கைகளில் எடுத்துக் கொள்கிற தலைமை தானும் தனது அமைப்பும் சமூக இயக்கவியலில் என்னென்ன தாக்கங்களை உண்டு பண்ணுகிறோம் எனவும் சமூக இயக்கவியல் தமது அமைப்புக்குள் என்னென்ன மாற்றங்களைக் கோருகிறது எனவும் நின்று அவதானிக்க வேண்டும்.

முடிவுகள் வெறும் சுயநம்பிக்கையில் புறநிலையான காரணிகளைக் கணக்கெடுக்காது மேற்கொள்ளப்படும் போது மோசமான தோல்விகளையும் சந்திக்கநேரும். தமது முடிவுகளுக்கு அமைப்பும் தலைமையும் மட்டுமல்ல சக பயணிகளாக இருக்கின்ற மக்களும் மிகக் கொடுமையான விலைகளைக் கொடுக்கவேண்டியிருக்கும்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தத்துள் அகப்பட்டுச் சிதைந்த நான்கு லட்சம் மக்களின் இழப்புக்களுக்கும் துயரங்களுக்கும் காட்டுமிராண்டித்தனமான சிங்கள் அரசு மட்டுமல்ல விடுதலைப் போராளிகளான புலிகளும் பதில் சொல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகளின் அழிக்கப்படாத தலைமைகள் மீண்டும் திரண்டு போராட முற்படலாம். அது இனி தொடரப் போகும் அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தது. இலங்கை அரசு தனது அரசியலமைப்பை மாற்றிச் சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை உரிமைகளை பாதுகாக்கும் சனநாயகரீதியான நீதி நிர்வாகக் கட்டமைப்புக்களை உருவாக்காத வரை மீண்டும் விடுதலைப்புலிகள் போராடுவதற்கான சூழ்நிலைகள் தோன்றவே செய்யும்.

வடக்கு கிழக்கை கடுமையான இராணுவ பிடியில் தொடர்ந்தும் அரசு வைத்திருக்குமமெனில் மீண்டும் போர் தொடரவே செய்யும்.

ஒடுக்குமுறையாளனையும் ஒடுக்கப்படுகிறவர்களுக்குத் தலைமைதாங்குபவர்களையும் வேறுபடுத்தும் முக்கியமான பண்பு ஒடுக்கப்படுகிற மக்களின் தலைமை தனது மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிப்பதாகும்.

மேலும் விடுதலைப்புலிகளின் நோக்கம் அதிகாரமாற்றமாகும். முழுமையான அதிகாரத்தை அடைவதற்கான போராட்டத்தை அதிகப்பட்ச அதிகாரங்களை அடைவதற்கான போராட்டமாக மாற்றக்கூடிய தந்திரோபாய நிலையை விடுதலைப் புலிகள் எடுத்திருப்பின் அது தமிழினத்திற்குச் செய்யப்ட்ட துரோகமாக கருதப்படதேவையில்லை என்பதை இன்றைய இழப்பு சொல்லி நிற்கிறது.

நடைமுறையில் உள்ள அரசாங்கத்தின் குணாம்சங்களை அவதானிக்கும் போது விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவது சாத்தியமாகவே தோன்றுகிறது. ஆனால் முன்பு இருந்தது போன்ற பேரம் பேசும் நிலைமைக்கு வளரமுடியுமா என்பது கேள்விக்குறி.
வடக்குகிழக்கு பகுதிகளில் வாழ்கிற சகல மக்களும் யுத்தத்தின் கொடூரத்திற்கு பல்வேறுபட்ட காலங்களில் முகம் கொடுத்திருந்தனர். இவர்கள் மீண்டும் யுத்தத்திற்கு தயாராவார்களா?

நாங்கள் அடைந்த தோல்விக்கான காரணங்களை அலசாவிடின் இழப்பில் இருந்து மீண்டு வர முடியாது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் எற்பட்டுள்ள வெற்றிடம் காலகதியில் சூன்யமாக மாறிவிடும்.

ஒரு தலைமை தனது இலட்சியம் எவ்வளவு உன்னதமானதாக இருப்பினும் மக்களின் மீது அதனை திணிக்கமுடியாது. மக்களைத் தொடர்ச்சியான கருத்தாடல்களின் மூலம் சனநாயக வழியில் அணிதிரட்டுவது மெதுவாதாக இருப்பினும் வலிமையானதாக இருக்கும்.

எந்த அரசியற்போராட்டத்திலும் பிம்பங்களைக் கட்டி எழுப்புவதை விட மக்களின் உணர்வுகளை எடைபோடுவதும் அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதும் முக்கியமானது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தற்போது மேலெழுந்து வரும் முக்கியமானதொரு பண்பை இங்கு கவனிக்கலாம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரப்பிடிக்குள் சிக்கிக் கிடக்கும் இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்களை இராணுவரீதியாக அணிதிரட்டுவதை விடுத்து அரசியல்ரீதியாக அணிதிரட்டி பாராளுமன்றத்தினூடாக அதிகாரத்தை கைப்பற்றி மக்கள் நலன் புரியும் அரசுகளை நிறுவும் முயற்சியில் சில தலைவர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

மிகக் கொடூரமான யுத்தத்தில் உயிர்களும் வளங்களும் அழிவதேயன்றி வேறெதுவும் நிகழ்வதில்லை.

இலங்கை அரசு விடுதலைப்புலிகளை வெல்வதற்காக உலக ஒழுங்கில் மிகத் தெளிவான மேற்குலக எதிர்ப்பு நிலையை எடுத்துக் கொண்டது.

இலங்கை அரசாங்கம் பல்லாண்டு காலமாக சிங்கள மக்களின் மனதுக்குள் ஊறி இருக்கும் சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்திற்கு தீனி போடுவதன் மூலம் மிக இலகுவாக எந்தவித சனநாயக மற்றும் பொருளாதாரச் சிந்தனை அற்ற அதிகார அமைப்பொன்றைப் இலங்கையில் பேணமுடியம் எனக் கண்டுகொண்டது. இலங்கை அரசாங்கத்தின் இயங்கியல் சிம்பாவே மற்றும் பர்மா போன்றதொரு அதிகார கலாச்சாரத்தை நோக்கி செல்வதைக் காணமுடிகிறது.

இலங்கையில் பாராளுமன்றப் பாதையினூடாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாதபடிக்கு இலங்கையின் அரசியல் அமைப்பு உள்ளது. ஆனாலும் உலகெங்கிலுமுள்ள ஏனைய விடுதலை இயக்கங்களுக்கு இல்லாத விடுதலைப்புலிகளுக்கு இருந்த சிறப்பான நிலமை என்னவெனில் அவர்களிடம் அன்றிருந்த இராணுவச் சமநிலையும் அதிகளவான பேரம் பேசும் சக்தியும் தான்.

புலிகள் பலமாக இருந்த நிலையில் சர்வதேசத்தின் அனுசரணையுடன் இலங்கை அரசக்கு நிர்பந்தங்களை உருவாக்கும் படியான சூழ்நிலைகளை, அரசியல் அமைப்பை மாற்றக்கூடிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தக்கூடிய தந்திரோபாய நிலையை ஏன் எடுக்கவில்லை?


புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் வழங்காமல் விடுவதுடன் இன்னும் இருக்கிற உரிமைகளையும் பறிக்க கூடிய வலுவான நிலமையை அடைந்துள்ளது.

தமது பிராந்திய நலன்களைப் பேணுவதற்காக ஜரோப்பாவும் அமெரிக்காவும் கொடுக்கப்போகின்ற நிர்ப்பந்தங்களுக்கு இலங்கை அடிபணியப் போவதில்லை. ஏனெனில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள அதிகாரப் போட்டிக்குள் சார்ந்து கொண்டு தனது அதிகாரத்தைப் பேணுவதற்கு இலங்கைக்கு போதுமான அணிகள் உள்ளன.

தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் இயக்கவியல் சரியான முறையில் புரிந்துகொள்ளப்பட்டு கையாளப்பட்டதா என்ற கேள்விக்கு நாம் பதிலைத் தேடவேண்டும். ஏனெனில் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் எதை விரும்பியதோ அதை அடையாமல் எதை விரும்பவில்லையோ அதை அடைந்திருக்கிறது.

பிரபாகரன் மீண்டும் வருவாரானால் அவர் மேற்குறித்த கேள்விக்கான விடையுடனேயே வரவேண்டும். ஏனெனில் மேற்குறித்த கேள்வி மக்களைப் பிரதிநிதிப்படுத்த விரும்புகிற எல்லா தலைமைகளிடமும் கேட்கப்படுகிற கேள்வியாகும்.

நன்றி
global tamil news.

29 மார்ச், 2009

அதர்மச்சக்கரம்

மரண வீட்டின் ஒப்பாரிக்கும்
இடுகாட்டின் மௌனத்திற்குமிடையே
என் சொற்கள் சிக்கிக்கொண்டன.

தரையில் பதிந்த இராட்சதக்காலடிகளைக்
கண்டேங்கிப்போனேன்.
ஓரிலையோடெனினும் ஒருமரப்பொந்திருப்பின்
என் பிள்ளைகளை ஒழித்து வைப்பேன்
இல்லையே! எங்கே போயின வனங்கள்?

இருண்ட குழியுள் இரவும் பகலும் சிக்கிக்கொண்டன
மருண்ட கண்ணைக்கருநாகம் கொத்தியது.

எனது காவலர்களோ உன்மத்தமாயிருக்கிறார்கள்
அவர்களின் இதயம் கல்லாயிருக்கிறது
மலையே வரினும் தலையே சுமவென்னும்
காலத்தைத் தாங்குவாய் வாழி!
நம்பிகைகளைச் சுமந்தவர் முதுகில்
கூன் விழாதிருக்கக் கடவது.

கணங்கள் யுகங்களாகின்றன.
இரக்கமற்ற கண்களைக் காண விரும்பாதவர்
எங்கென்றாலும் தனித்தேயிருப்பர்.
இயலாமைக்கும்
எதிலிமைக்கும்
நடுவிலோர் இடைத்தங்கல் முகாமெதற்கு?

ஊழித்தாண்டவமாடும் தர்மச்சக்கரம்
என்தலையிற்புரிவிட்டுச் சுழல்கிறது.
வங்காள விரிகுடாவில்
இரத்தம் வழிகிற என் முகத்தைச்சுற்றிச்
சுறாக்களும் கழுகுகளும் வலம் வருகின்றன.

அட பிணம் தின்னி!
நீ உனக்கு மட்டுமே எனச்சொல்கிற
இந்த நாடு ஓர் நாள் இந்து சமுத்திரத்தில் பிணமாக மிதக்கும்.

தேவ அபிரா
27.03.2009
இப் பெருவெளியில் பெண்ணாய் பிறந்தேனே!

இப் பெருவெளியில்
பெண்ணாய் பிறந்தேனே!
உடல் மட்டும் அறிவீர்
உள்ளிருந்தும் மொழியா உணர்வறியீர்
உயிரின் வலியும் அறியீர்


1869 ம் ஆண்டு பிரித்தாணிய பாராளுமன்றப் பிரதிநிதியாகிய ஸ்ருவாட் மில் முதன் முதலில் பெண்களுக்கான வாக்குரிமை பற்றி பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பேசினார். 1893 ம் ஆண்டு நியூசிலாந்து முதல்முதலில் பெண்களுக்கான வாக்குரிமையை அளித்தது. 1910 ம் ஆண்டு வேலை செய்யும் பெண்களுக்கான சர்வதேச மகாநாடு கொப்பன்காகனில் நடைபெற்றது. அம் மகாநாட்டில் ஜேர்மனியின் சோசலிச சனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவுத் தலைவியான கிளாரா செர்கின் சர்வதேச பெண்கள் தினம் என்னும் எண்ணக் கருவை முன்வைத்தார்.

உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரே தினத்தில் பெண்களின் குரல்களையும் அவர்களது வேண்டுகோள்களையும் ஒலிக்கச் செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அவ் எண்ணக்கரு அன்று அம் மகாநாட்டில் கூடியிருந்த 17 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் சோசலிச கட்சிகள வேலைசெய்யும் பெண்களைப் பிரதித்துவம் செய்த குழுக்கள் போன்றவற்றைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களால் எந்த வித எதிர்ப்புமின்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பெண்களுக்கான வாக்குரிமை அரசியலில் பெண்களின் பங்களிப்பு வேலை செய்யும் பெண்களின் உரிமைகள் போன்ற விடையங்கள் படிப்படியாகப் பேசு பொருளாக்கப்பட்டன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் பெண்களின் நிலமைகள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகின்ற போதும் வளர்ச்சி அடையாத நாடுகளிலும் போர் நிகழ்ந்து வரும் நாடுகளிலும் பெண்களின் நிலமைகள் 18ம் நூற்றாண்டுகளில் இருந்த நிலைகளுக்கு ஒப்பானதாகவே உள்ளன.

உலகம் பெண்கள் தினத்தை கொண்டாடும் தருணத்தில் நாங்கள் எங்கு நிற்கிறோம் எனத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் 80 களில் தமிழச் சமூகத்தின் எல்லா விழுமியங்களையும் கேள்விக்குள்ளாக்கி எழுச்சி கொண்டது. அக்காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலமையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. தமிழ்ப் பெண்ணிலைவாதிகளும் கவிஞர்களும் மேற் கிளம்பினர். பெருமளவான பெண்கள் குடும்பம் என்னும் கட்டமைப்புக்குள் இருந்து போராட்ட அமைப்புகளை நோக்கிப் பெயர்ந்தனர். அக்கால கட்டத்தில் வேலைக்கு போன பெண்களை விடவும் போராட புறப்பட்ட பெண்கள் அதிகமானவர்களாக இருந்தனர். ஆயினும் பல அமைப்புக்கள் சிதைந்த போது போராட போன பெண்கள் நிர்க்கதியானது மட்டுமல்ல அவர்கள் மாற்ற நினைத்த பெண்களின் சுயாதீனத்தை மறுக்கிற சமூக விழுமியங்களை மீளவும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகினார்கள்.

மறுபுறம் ஸ்தாபன அமைப்பு சிதையாத ஒரேயொரு அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கென ஒரு மகளிர் இராணுவத்தைக் கட்டியெழுப்பியதுடன் ஈழத்தில் பெண்களின் வினைத்திறன் மிக்க போர்ப் பங்களிப்பை உறுதிப்படுத்தினார்கள். ஆயினும் குடும்பம் ‐ சமூகம் என்னும் கருத்தியலுக்குள் பெண்ணின் நிலை தொடர்பான ஆழமான விமர்சனங்களை அவர்கள் ஸ்தாபன ரீதியாக முன்வைத்துச் செயற்படவில்லை. இதுவரை காலமும் பெண்கள் செய்யாத வேலைகளைச் செய்ய விடுதலைப்புலிகள் இயக்கம் சந்தர்ப்பத்தை உருவாக்கியது. ஆனால் முழு மொத்தமான பெண் விடுதலை என்னும் எண்ணக்கரு பற்றியும் யுத்தத்திற்கு பின்னர் பெண்ணின் நிலை என்ன என்பது பற்றியும் தெளிவான சிந்தனைக் கண்ணோட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

சனத்தொகைப் பெருக்கம் சேவைகளின் தேவை முதலாளித்துவ வளர்ச்சி என்பன காரணமாகப் பெண்களின் சேவையை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதனால் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கான வேலைகள் என அடையாளம் காணப்பட்ட வேலைகளை நோக்கிப் பெண்கள் நகர்ந்து வருகின்றார்கள். ஆயினும் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கும் அதிகாரம் இன்னமும் குடும்பத் தலைவனிடத்தில் அல்லது ஆணிடத்திலேயே இருக்கிறது.


பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பை ஆணே வழங்கி வருகிறான். தமது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானிக்கும் 100 வீத உரிமை இன்னமும் பெண்களுக்கில்லை. பெண்கள் பற்றிய தங்கள் பொறுப்புணர்வைஆண்கள் இன்னமும் கொண்டிருக்கிறார்கள் வளர்ந்து வரும் ஆண்தலைமுறையினரும் அக்காவை அம்மாவை தங்கையை மனைவியை பாதுகாக்கும் ஆண்களாக‐ அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக வளர்க்கப்படுகிறார்கள். அதே வேளை பெண்கள் உணர்வு ரீதியாக ஆண்களில் தங்கி வாழ்பவர்களாக வளர்க்கப்படுகிறார்கள்.

இத்தகைய ஆண் தன்மை மிகுந்த சமூகக்கட்டமைப்பை மிகக் கடுமையான முறையில் கேள்விக்குள்ளாக்ககூடிய ஒரு சந்தர்ப்பத்தை தமிழீழ விடுதலைப் போராட்டக் களம் தந்திருந்தது. ஆயினும் தமிழீழ விடுதலைப் போராட்டம் மிக கொடூரமான முறையில் ஒடுக்கப்படும்போது அது கேள்விக்குள்ளாக்கிய பல விழுமியங்கள் மெதுவாக அழிந்து பழைய விழுமியங்கள் தலையெடுத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழர்களின் இன்றைய நிலைக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகளும் காரணமென அரசியல் விமர்சகர்கள் சுட்டுகிறார்கள். தமிழர்களை ஸ்தாபன ரீதியாக பிரதிநிதித்துவப் படுத்துகின்ற விடுதலைப் புலிகளின் மீது சுமத்தப்படுகிற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் அப்பால் சிங்களப் பெரும் தேசிய வாதத்தின் ஒடுக்குமுறை முதன்நிலைப்படுத்தப்பட்டு கவனிக்கப்படவேண்டியதாக உள்ளது.

சமூகத்தில் ஏற்கனவே உள்ள பல்வேறு ஒடுக்குமுறைகளுடன் போரின் கொடுமையும் பெண்களைச் சிதைத்து வருகிறது.


போரில் நேரடியாகப் பங்கேற்கும் பெண்கள் எதற்காக உயிரை விடுகிறார்கள்.
அதிகார மாற்றத்திற்கா?


தரிசாகிக் கிடக்கும் நிலத்திற்காகவா?


இல்லை யுகங்களாக அடிமைப்பட்டுக் கிடக்கும் சக பெண்கள் இனியொருகால் சுயமாகத் தலை நிமிர்ந்து வாழ்வார்கள் என்பதற்காகவா?


விடைகள் இல்லை

வெண்ணிலவும் சூரியனும்
இல்லாத வானத்தில்
புற்தரையும் தண்ணீரும்
இல்லாத தேசத்தில்
நீ மட்டும் தனியாக நின்றாயே தோழி

‐ சுதாகினி சுப்ரமணியம்

போரில் நேரடியாகப் பங்கேற்காத பெண்களும் சிதைகிறார்கள்.
அரச பயங்கரவாதத்தினாலும் போராளிக் குழுக்களுக்கிடையேயான மோதல்களாலும் காணாமல் போன கணவனை பிள்ளைகளை எண்ணி எண்ணிச் சிதைகிறார்கள். வருமானமில்லாத குடும்பத்தில் கஞ்சி காய்ச்சுவது எப்படி என்று திகைக்கிறார்கள். அகதி முகாம்களில் திறந்த வெளியில் அந்நிய இராணுவத்தின் முன் இயற்கைக் கடன்களைக் கழிக்கவும் குளிக்கவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக இனவெறி இராணுவத்தின் பாலியல் வெறிக்கு இரையாகிறார்கள். பாலியல் வன்முறை என்பது இராணுவ ஒடுக்கு முறையின் மிகத் தெளிவான ஒரு கூறாக வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. ஈழப் பெரும்நிலப்பரப்பில் பாலியல் தொல்லைகளுக்கு அல்லது பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும் பெண்களின் குரல்கள் ஈனமாக அடங்கிப் போவதை யாரறிவார்.

பெண்ணை வன்புணர்வுக்கு உள்ளாக்கும் இராணுவம் அவளிடம் இருக்கும் புனிதத்தை பறித்து அவள் சார்ந்த இனத்தை பழிவாங்கிவிட்டதாக நினைக்கிறது. உண்மையிலும் எந்த நிலையிலும் வன்புணர்வுக்கு உள்ளாகும் ஒரு பெண் இழப்பது தான் எவருடன் எப்போது எவ்வகையில் உடலுறவு கொள்வது என்கிற உரிமையை மட்டுமே. புணர்வு என்பது புனிதம் சார்ந்த விடையமல்ல. உண்மையிலும் எமது சமூகத்தில் பெண்கள் எந்த நிலமையிலும் மேற்குறித்த உரிமையைக் கொண்டிருப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில் இராணுவம் செய்கிற வேலையை கணவனே செய்வதையும் காண்கிறோம். சமூகத்தில் பெண் புனிதத்தின் குறியீடாக இருக்கும் நிலை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்கள் தமது ரணங்களை மறந்து மனிதர்களாக நிமிர்வதற்கும் ஒடுக்குமுறை இராணுவங்களுக்கு எதிராக நிமிர்ந்து போராடுவதற்கும் உரிய சமூக தளத்தை இதன் மூலம் உருவாக்க முடியும்.



அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாசையை
எனக்குள் உணர்த்திற்று.

அழகி மன்னம்பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் ‐ நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாசையை புரிந்து கொண்டேன்.
அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.
‐ ஆழியாள்


உரிமைகளுக்காக எழுந்து நிற்கின்ற எவரும் மரணத்தை தவிர எதையும் பதிலாகப் பெறமுடியாத சூழ்நிலையை உலகம் தோற்றுவித்துள்ளது. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்கிற நிலையில் தமிழ் சமூகம் வந்து நிற்கிறது.


தமிழ் பெண் கேட்கிறாள்:
என்னைச் சுற்றி அப்பா நிற்கிறார் கணவன் நிற்கிறான் அண்ணன் நிற்கிறான் தம்பி நிற்கிறான் ஆசிரியர் நிற்கிறார் அதிகாரி நிற்கிறார் எல்லாவற்றிற்கும் மேலாக இராணுவம் நிற்கிறது. சர்வ தேச பெண்கள் தினத்தை நான் எப்படி கொண்டாடுவது?

தேவஅபிரா.


2009-03-08

கடன் பட்டார் நெஞ்சம்

சிங்களமக்கள் வெற்றியில் மிதக்கிறார்கள்.
தமிழர்களோ இரத்தத்தில் மிதக்கிறார்கள்.
இலங்கையோ கடனில் மிதக்கிறது…

இலங்கை, வரலாற்றில் முதன்முறையாக இனவெறியும் பணவெறியும் மட்டுமே கொண்ட அடி முட்டாள்களின் கையில் விழுந்துள்ளதை யாவரும் காண்கிறோம். இலங்கையின் பொருளாதரம் அதளபாதாளத்தை நோக்கிச்செல்கிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிற அனைவரும் தமது பணப்பெட்டிகளை மட்டுமே நிரப்பி வருகிறார்கள்.அரசு பெறும் கடன்கள் தமிழ் மக்களின் தலையில் குண்டுகளாக வந்து விழுகிறது; ஊழல் நிறைந்த அரச நிதி நிர்வாகக்கட்டமைப்புக்களுக்குள் கரைந்து போகிறது அல்லது அரசு சார்ந்தவர்களின் முட்டாள்த்தனமான முதலீடுகளுக்குள் அழிந்து போகிறது.
கடந்த வருடம் விடுதலைப்புலிகளின் அரசியற்பொறுப்பாளர் நடேசன் இலங்கையின் 30 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை அழிப்பதே தங்கள் நோக்கம் எனத்தெரிவித்திருந்தார். அதனையும் இங்கு நினைவுகூரலாம்.

இன்ரர்பிறஸ் சேவிசிற்காக பைசல் சமத் என்பவர்எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் கீழே தரப்படுகிறது


இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் தனது பிச்சைப் பாத்திரத்தை தூக்கிச் சென்றுள்ளது.

இரண்டு வருடங்களின் முன்பு நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மீண்டும் மண்டியிட்டுள்ளது. அந்நியச் செலவாணிக் கையிருப்பில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகவே இலங்கை இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் இறக்குமதிச் செலவானது அதன் ஏற்றுமதிச் செலவுகளிலும் பார்க்க மிக அதிகமாக இருப்பதுடன் அதன் அந்நிய செலவாணிக் கையிருப்பு சராசரியாக 3 மாதங்களுக்கான இறக்குமதியின் பெறுமதிக்கு சமமானதாக இருக்கிறது.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி இரு பக்கங்களைக் கொண்டுள்ளது.
ஒன்று: ஏற்றுமதி பலவீனமடைந்து வரும் அதேவேளை இலங்கையின் மத்திய வங்கி தனது கையிருப்பில் உள்ள சில டொலர்களைக் கொண்டு உள்ளுர்ச் சந்தையில் இலங்கை ரூபாவின் பெறுமதியை டொலருக்கு எதிராக வீழ்ச்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது.
மற்றயது உலகப் பொருளாதாரத்தில் தோன்றியுள்ள நெருக்கடியால் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகின்ற நிலமையைச் சமாளிப்பது.
பொதுவில் இவ்வாறு பெறுகின்ற கடன்களின் மூலமே இலங்கை தமிழ்ப்போராளிகளுக்கெதிரான போரின் செலவையும் மற்றும் இதர அரச செலவுகளையும் கவனித்து வருகிறது.

கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் அவசரமாக சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9பில்லியன் டொலர்களை கடனாக பெற பேச்சுவார்த்தை நாடாத்தியதுடன் அது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டது!



அரசின் நிதி தொடர்பில் நாட்டை பிழையான வழியில் நடத்தி செல்வதாக பொருளியலாளர்களாலும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளாலும் விமர்சிக்கப்படும் இலங்கையின் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிசாட் கப்ரால் பின்வருமாறு கூறுகிறார்:
“ நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் நிபந்தனையற்ற முறையிலேயே கடனை வழங்குமாறு கேட்டிருக்கிறோம். அந்தக் கடன் எங்களுக்கு தேவைப்படும் என்று தோன்றவில்லை. ஆயினும் அவ்வாறு வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அது நல்லதொரு வாய்ப்பாகவும் இருக்கும்.”

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இலங்கை அரசிடம் 1.7 பில்லியன் டொலர்கள் கையிருப்பாக இருந்தது. இது ஆக ஒன்றரை மாதத்திற்கு தேவையான இறக்குமதியைச் செய்ய மட்டுமே போதுமானதாகும். அதற்கு முந்திய வருடம் இக் கையிருப்பு 3.5 பில்லியன் டொலர்களாக இருந்தமை கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
கொழும்புப் பல்கலைக் கழகத்தின் மூத்த பொருளியல் அறிஞரான சிறிமல் அபேயவர்த்தனா இலங்கையின் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கிறது. இலங்கைக்கு வேறு வழிகள் இல்லை. இல்லாவிடின் அரசு ஏன் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்கவேண்டும் குறிப்பாக அரசு எவரிடம் கடன் வாங்க விருப்பப்படவில்லையோ அவர்களிடமே ஏன் திரும்பிச்செல்ல வேண்டும் என்கிறார்.



கொள்கைகள் கற்றல் நிலையத்தின் மூத்த பொருளியல் அறிஞரான துஸ்னி வீரக்கோன் இலங்கையின் முக்கியமான பிரச்சனைகள் என்னவென பின்வருமாறு கூறுகிறார்.
“ கடந்தவாண்டில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக பெருமளவான அந்நிய நாணயச் செலவாணி திரும்பிச் சென்றது. எனவே எங்களிடம் இருக்கக் கூடிய எல்லா வளங்களையும் பயன்படுத்தி உள்ளுர்ச் சந்தையில் இலங்கை நாணயத்தின் பெறுமதியை பாதுகாக்க வேண்டி இருந்தது.”

சென்ற வருடத்தின் இரண்டாவது அரைப்பகுதியில் 600 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான அன்னியச் செலவாணி இலங்கையின் மத்திய வங்கியில் இருந்து வெளிநாட்டு வைப்பாளர்களினால் மீளப் பெறப்பட்டிருந்தது.

இது மட்டுமல்ல மத்திய வங்கியானது கடந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும் மாதத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீதம் இலங்கையின் ரூபாவின் பெறுமதியை பேணும் கொள்கைத் திட்டத்திற்காக செலவளித்திருந்தது. இது எந்த வித முன்னேற்றத்தையும் தந்திராதவொரு திட்டமாகும்.
ஓக்ரோபர் 2008 வரைக்கும் இலங்கை தனது டொலருக்கெதிரான நாணய மாற்று வீதத்தை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக 108 ரூபாவாக வைத்திருந்தது.

ஆனாலும் ஒக்ரோபருக்குப் பின்பு ரூபாவின் பெறுமதி 114ரூபா30 சதமாக வீழ்ச்சி அடைந்தது.
2007 ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கையில் எந்த வேலையும் இல்லை எனக் கூறி அது தனது கந்தோரை மூடிக்கொண்டு வெளியேறியது.
ஆயினும் மீண்டும் இலங்கை தனது அவசரத் தேவைகளுக்காகவே சர்வதேச நாணய நிதியத்தினை தற்போது நாடியுள்ளது. இலங்கை அரசானது அதன் பங்காளிகளான ஜே.வி.பி, ஜே.எச்.யு போன்ற கடும் போக்காளர்களின் நெருக்குதல்களுக்கு பணிந்தே சர்வதேச நாணய நிதியத்தினை வெளியேற்றும் முடிவுக்கு வந்திருந்ததாக எதிர்க்கடசியினரும் பொருளியல் அறிஞர்களும் கூறி இருந்தனர்.

மேற்கத்திய அரசுகளின் நலன் பேணும் சர்வதேச நாணயநிதியம் உலகவங்கி போன்றவை கடன் வழங்கும் போது விதிக்கின்ற கடுமையான விதிகளையிட்டு இக் கடும் போக்காளர்கள் கோபமும் அச்சமும் அடைந்திருந்தனர்.
2003 க்கும் 2006ம் ஆண்டுக்கும் இடையில் இலங்கை அரசு கொண்டிருந்த பொருளாதாரத்திட்டங்களுக்கு உதவி வழங்கும் முகமாக 2003 ம் ஆண்டு ஏப்பிரலில் சர்வதேச நாணய நிதியம் 567 மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்க இணங்கி இருந்தது. அதன் ஒரு பகுதியாக 81 மில்லியன் டொலர்களை வழங்கியும் இருந்தது. ஆயினும் நவம்பர் 2003 ல் அக்கடன் அரசியல் பிரச்சனைகள் காரணமாக ரத்துச் செய்யப்பட்டதுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2006 ம் ஆண்டு ஏப்பிரலில் காலாவதியுமானது.

1979 இல் இருந்து சர்வதேச நாணய நிதியம் கொழும்பில் தனது அலுவலகத்தைக் கொண்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடன் பெற விரும்புகிற எவரும் உடனேயே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதெனில் அதன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். சிக்கனமான வரவு செலவுத் திட்டம்; அரச செலவுகளில் கட்டுப்பாடு; தளர்வான நாணயமாற்று விகிதம்; முதன்மையான கரன்சிகளின் பெறுமதிக்கு ஈடாக நாணயத் தளம்பல்களை அனுமதித்தல் எனப் பல கட்டுப்பாடுகளை நாணய நிதியம் விதிக்கும். தற்சமயம் ரூபாவின் பெறுமதி மத்திய வங்கியினால் செயற்கையான முறையில் டொலருக்கு எதிராக உயர்வாகப் பேணப்பட்டு வருகிறது.
இது இலங்கையின் இறக்குமதித் தேவைகளுக்கு அமைவாக செயற்கையான முறையில் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பலவருடங்களாக தமது ஏற்றுமதி வருமானம் குறைவாக இருப்பதாக குறைப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதியின் செலவுகளைக் குறைப்பதற்காக இலங்கை நாணயத்தின் பெறுமதி செயற்கையாக மத்திய வங்கியினால் டொலருக்கு எதிராக உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. அரசின் பொருளியலாளர்களும் மத்திய வங்கியும் தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடி நிலையொன்று உள்ளதை மறுத்து வந்துள்ளனர்.

ஏற்றுமதி குறைவடைகிறது. அதிக வருமானத்தை ஈட்டித்தந்த ஆடைத் தொழிற்சாலைகள் உலக சந்தையில் ஏற்பட்ட கேள்விப் பற்றாக்குறையினால் நட்டப்படத் தொடங்கியுள்ளன. பல்வேறு தொழிற் பிரிவுகளிலும் ஏற்பட்டுவரும் வேலை இழப்புகளும் இலங்கையின் நிதிநிலமையை மேலும் கடினமாக்கியுள்ளன. இலங்கையின் முதலாளிகள் சம்மேளனம் தமது செலவுகளைக் குறைப்பதற்காக வேலை நேரக் குறைப்புக்கு அரசின் அனுமதியைக் கோரியுள்ளது.

வர்த்தக ரீதியான கடன்களைப் பெறுவதில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையானது உலகளாவிய பொருளாதார நெருக்கடியுடன் சம்பந்தப்பட்டதாகும் என துஸ்னி வீரக்கோன் கருதுகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் இணையத் தளத்தில் உள்ள அறிக்கை ஒன்றின்படிக்கு இலங்கை மட்டுமன்றி இன்னும் பல நாடுகளும் இத்தகைய நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளன. உலகின் பொருளாதார நெருக்கடி நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்நாடுகளின் நிலமை இன்னும் மோசமாகும்

தமது நிதித் தேவைகளை பூர்த்தி செய்யப் போராடும் இத்தகைய நாடிகளின் நெருக்கடியைப் போக்க குறைந்த பட்சம் 25 பில்லியன் டொலர்களாவது தேவைப்படும் எனவும் இல்லையேல் பல லட்சக்கணக்கான மக்கள் மீளவும் வறுமைக் கோட்டுக்கு உள்ளே விழுவார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை உத்தி மற்றும் மீள் பார்வை வளாகத்தின் உதவி இயக்குனரான ஹக் பிறேடன்காம்ப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

உலகளாவிய நிதி நெருக்கடிக்கு முன்னர் தமது வரவு செலவு திடடத்திற்கான நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சர்வதேச சந்தைக்குள் வருமானம் குறைந்த நாடுகள் இணையத் தொடங்கின. இலங்கையும் கானாவும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக சந்தைகள் மூடப்படும் போக்கினால் இந்த நாடுகள் கடுமையாகத் தாக்கப் படுகின்றன.

கானா அந்நிய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுப்பதற்காக யூரோ பொன்ட் எனும் செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்தவிருந்தது எனினும் இம்முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையானது மிக விரிந்த அளவில் சர்வதேசக் கடன்களை பெற்றுக் கொண்டுள்ளதுடன் அது இனிமெலும் கடன்களைப் பெறமுடியாத எல்லைகளை நோக்கி செல்வதையும் காண்கிறோம்.

இரண்டு நாடுகளில் இருந்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளுர்ச் சந்தை நிதியங்களில் இருந்து வெளியேறி வருகிறார்கள். ஆக நாட்டின் வரவு செலவுகளூக்கு ஆதாரமாகவிருந்த அந்நிய முதலீடும் இலகுவாகக் கடன்களைப் பெறவிருந்த மார்க்கங்களும் குறையும் போது இத்தகைய நாடுகள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிண்றன. வேறு சில பொருளியலாளர்கள் இலங்கையின் செலவுகள் குறிப்பாக இராணுவச் செலவுகள் பெரும்பாலும் உள்நாட்டுக் கடன்களின் மூலமே ஈடுகட்டப்பட்டு வந்தன எனவும் ஆனால் உள்நாட்டுச் சந்தையும் வருமானமும் நலிவடைந்து போனதால் அரசாங்கம் வெளிநாட்டு வர்த்தக மூலங்களான சீனா மற்றும் ஈரானிடம் இருந்து கடன்களை பெறுவதாக கூறுகின்றனர்.


இலங்கையானது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீனாவின் பக்கம் சாய்ந்து வருகின்றது. முன்பு மேற்குலகுக்கு சார்பான கொள்கையைக் கொண்டிருந்த போதும் மேற்குலகின் மனித உரிமைகள் தொடர்பான விமர்சனம் காரணமாக இலங்கை சீனா சார்பு நிலையை எடுத்து வருகிறது. உலகளாவிய நிதி நெருக்கடி நிலை தொடங்குவதற்கு முன்பாக இலங்கை அரசு வர்த்தக ரீதியான நாடுகளிடம் இருந்து கிடைக்கக்கூடிய கடன்கள் குறித்து மிகத் தீவிரமான நம்பிக்கைகளுடன் இருந்திருந்தது. அக் காலப் பகுதியில் நிதி அமைச்சின் செல்வாக்கு மிக்க அதிகாரி ஒருவர் உலக வங்கியின் அதிகாரியிடம் பின்வருமாறு கூறியிருந்தார்

“நிபந்தனைகளுடன் வருகிற உங்களின் காசு எங்களுக்குத் தேவையில்லை. மலிவான வட்டிவீதம் கொண்ட நிபந்தனையற்ற கடனை வழங்குவதற்கு பலர் உள்ளனர் “


சனாதிபதியின் முன்னாள் ஆலோசகரும் மத்திய வங்கியின் ஆளுனர் பதவியை அரசியல் செல்வாக்கின் மூலம் பெற்றுக் கொண்டவருமான அஜித் நிவாட் கப்ரல் சுருங்கிவரும் அந்நியச் செலாவாணிக்கையிருப்பை உயர்த்துவதற்கென இரு திட்டங்களை தெரிவித்தார். புலம்பெயர்ந்த சிங்களவர்களிடம் இருந்து 500மில்லியன் டொலர்களைத்திரட்டுதல் ஆசியப்பிராந்தியத்தில் உள்ள எனைய மதிய வங்கிகளுடன் நாணயப் பரிமாற்றம் செய்தல் ஆகிய இரண்டுமே அவை.

ஆனால் இவ்விரு திட்டங்களும் எதிர்பார்த்தபடிக்கு வேலை செய்யவில்லை. மேற்குறித்த இரு திட்டங்களும் குறுகிய காலத்துள் தொழிற்படக்கூடியனவல்ல என வீரக்கோன் கூறுகிறார். நாணயப்பரிமாற்று தொடர்பாக மலேசியாவுடன் ஒரு ஒப்பந்தமும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையும் நடந்துவருகின்றன அவர் கூறுகிறார்.
ஆளுனரின் கூற்றுப்படி உள்ளூர்ச் சந்தை நிதியத்தில் சில புலம்பெயர்ந்த நிதியாளர்கள் கணக்குகளை திறந்துள்ளபோதும் முன்னேற்றம் மந்தமாகவே உள்ளது. பொருளியலாளர் அபேரத்தினவின் கருத்தின்படி இலங்கை கடுமையான கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது.
“கடன்களை அடைப்பதற்கு கடன் பட வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.நாங்கள் நிதிநிலைமையில் அடிமட்டத்தை அடைந்துள்ளோம். புலம்பெயர்ந்தவர்களின் வைப்புக்கள் எதிர்பார்த்தளவு கிடைக்க வில்லை.கடந்த வருடம் இலங்கை அரைமில்லியன்களூக்குமதிகமாக வட்டி செலுத்த வேண்டியிருந்தது.

இந்த வருடம் இத்தொகை இன்னுமதிகமாகும். சர்வதேச நாணய நிதியத்திடம் பெறப்போகும் தொகையில் ஒரு பகுதி மீண்டும் கடன்களைச் செலுத்தவே பயன்படும் “
வீரக்கோனின் கருத்துப்படிக்கும் இந்த வருடத்தில் காலாவதியாகும் இன்னும் சில நிதியங்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்யும் போது மீளச்செலுத வேண்டிய கடன்தொகை இன்னுமதிகமாகும். மேலும் கடனடிப்படியில் ஈரானிடமிருந்து பெறப்பட்ட எரிபொருளுக்கான நிலுவைகளும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எங்களிடம் நீண்ட நிலுவைகளின் பட்டியல் உள்ளதென்கிறார் அவர்.

நன்றி:Global Tamil news
2009-03-21
மூலம் - ஏசியா தமிழ் ஒன்லைனில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

10 பிப்ரவரி, 2009


சிங்களதேசமே!

காலத்திடலில் கிழிந்து கந்தலான
வடக்கை,
கிழக்கை,
பார்க்காதே.. கேட்காதே..

பாட முடியாப் பறவைகளைக்
காலை வைக்க அஞ்சிக்கடந்துபோன
கூழக்கடாக்களைக்
கருகிப்போன கார்த்திகையைக்
கட்டுடைந்த குளத்தைக்
கனரகப் போர்வெறியில் கடைசேறான வயலைப்பார்க்காதே..

உன்மத்தமானவர் உயிர் விடும் வெளியைப்பார்க்காதே..

முப்பது தலைமுறைகள் வாழ்ந்த முற்றத்தைப்
பற்றுக்கோடென்றிருந்த ஒரேயொரு மகளைக்
கொழுத்திய கொத்தணிக் குண்டைக்
குருதியொழுகவொழுகக்
கொண்டோடியவென் குஞ்சைப் பார்க்காதே..


அண்டங்கள் அதறப்
பிண்டங்கள் சிதறிப் பேயறைந்த கிறவல் வீதியை
உருக்குலைந்து போன வீட்டை
உள்ளிருந்து மணக்கும் பிணத்தை
கரு சிதைந்த தாயை
உருத்தெரியாதழிந்த என் பாட்டனைப்
பார்த்தழும் என் பாட்டியைப்
பாதுகாக்கமுடியாப்பதுங்குகுழியைப்
பார்க்க முடியாதுறைந்த விழியை
அதனுள்ளுறைந்த மொழியை கேட்காதே..

உடைக்கப்பட்ட பேனாவையும்
முடக்கப்பட்ட வாயையும்
அடைக்கப்பட்ட காதையும்
உன்காலின் கீழோடும் குருதியையும் பார்க்காதே..
கைநிறையக்கூலி வரக் கையசைத்து
விடை கொடுத்தவுன் மகனை,
வராது நின்ற மடலை,
உடலைக்கேட்காதே..
உயர்ந்து செல்லும் விலையை
தளர்ந்துசெல்லுமுன் வாழ்வைப் பார்க்காதே..

பார் உங்கள் சிங்கக்கொடியை...
கேள் உங்கள் தேசிய கீதத்தை…

சிங்கள தேசமே!

தீயனவற்றைப்பார்க்காதே
தீயனவற்றைக்கேட்காதே
தீயனவற்றை...........

தேவ அபிரா
09-02-2009

27 ஜனவரி, 2009




எமது உயிரிலும் மேலான தமிழீழ மக்களே!

நீங்கள் படும் பாடுகள் பற்றியும்
பட்டினியாகவும் பாதுகாப்பற்றிருப்பது பற்றியும்
யாரிடம் முறையிடலாம் என யோசிக்கிறீர்கள்
யார் யாரோவிடமெல்லாம் யாசிக்கிறீர்கள்
கதறி அழும் உங்களுக்கருகில்
அன்புக்குரியவர்களின் பிணங்கள்,
அவயங்கள்
அவர்கள் பற்றிய துயரச்செய்தி
கிடத்தப்பட்டிருக்கிறது.

அழுகிறவர்களை உணர்ச்சி வசப்படாதிருக்கக் கோருகிறோம்.

நிகழ்வுகளைப் புறநிலையாக நின்று புரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் அதனையே விரும்புகிறது.
உலகம் விரும்புவதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறீPர்கள்,
படைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

யாருடைய சொல்லைக் கேட்கவில்லையென்பதால்
இந்நிலைக்காளானீர்கள் என்றறியீர்கள்.
எவருடைய சொல்லைக் கேட்டிருந்தாலும்
இந்நிலைக்கே ஆளாகியிருப்பீர்கள் என்றுமறியீர்கள்.

ஆயினும்
உங்கள் முறைப்பாட்டைக்
கண்களால்
கைகளால்
கண்ணீரால்
வார்த்தைகளால்
கேவல்களால்
காற்றில் எழுதுகிறீர்கள்.

உங்களுடைய துயரங்களிலும் கண்ணீரிலும்
நாங்கள் ஏன் கரையவில்லை' என்கிறீர்கள்.
நாங்கள் துயரங்களுக்கு தூரமாக இருப்பவர்கள்

இறைதூதர்களைத் தவிர
எங்கள் எல்லாத் தூதர்களுக்கும்
உங்களைப்பற்றி முறையிடப்பட்டிருக்கிறது.

எங்களுக்கு உங்கள் மீது கோபம் கூட வருகிறது
ஏன் இப்படிக் கதறுகிறீர்கள்
ஊர் உலகத்தில் எங்கும் இது நடக்காதது போலவும்
உங்களுக்கு மட்டுமே நடப்பது போலவும்.....

ஆப்கானிஸ்தான், ஈராக,; பலஸ்தீனம்,
செஸ்னியா, குர்திஸ்தான், கொங்கோ, சோமாலியா,
நாகலாந்து, அசாம், காஸ்மீர்.....

உங்களுக்கு என்ன வந்தது!
நடந்தவைகள் நடக்கின்றவைகள் நடக்கப்போகிறவைகள் யாவும்
நல்லதற்கே என்றெண்ணி அமைதி அடையாச்சென்மங்கள!;
துயரங்கள் முட்டியா உங்கள் தலை வெடிக்கவேண்டும்?
அடபோங்கள்!
இலங்கை இராணுவத்திற்கெதற்குக் கொத்தணிக்குண்டுகளைக் கொடுக்கிறோம்
உடைக்கப்பட்ட குளங்களை ஆழப்படுத்தவோ?

இப்படிக்கு.....

பி.கு. உலகத்தலைவர்களின் சார்பில் இக்கடிதத்தில் கையொப்பமிட விரும்பும் மனச்சாட்சியுள்ள கனவான்கள் மேலே கையொப்பமிடலாம்.

தேவஅபிரா
26-01-1009