பின்பற்றுபவர்கள்

17 டிசம்பர், 2010


நாடக உலகின் தாய்

அரங்கை ஒரு பலமிக்க பல தள வழிமுறையாக (means)  விசையுடன் பயன்படுத்திய குழந்தை அவர்கள் தமது சுயபடிமத்தை மௌனமாகவே வைத்துக் கொண்டார்.
சபா ஜெயராசா

குழந்தை .சண்முகலிங்கம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவரை நாடக உலகின் தாய் என பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார்.
1989 ம் ஆண்டில் சண்முகலிங்கம் சேர்ருடன்  எனக்கு அறிமுகம் கிடைத்தது.
கல்விப்பொதுத்தராதர உயர்தரச் சோதனைகள் முடிந்த பிறகு கலை இலக்கிய நாட்டம் காரணமாக நாட அரங்கக் கல்லூரிக்குள் இணைந்தேன். இது ஜெயசங்கர் மூலமாகவே நிகழ்ந்ததாக நினைவு.
அந்தக்காலத்தில் ஜெயசங்கர் அகிலன் சத்தியன் நந்தா இளங்கோ(இன்னும் பலரின் பெயர்கள் மறந்து விட்டன) என் நாங்கள் ஒரு குழுவாக இருந்தோம்.

இந்தக் குழுவில் இருந்த பலர் நாடகமும் அரங்கியலை  கல்விப்பொதுத்தராதர உயர்தரச் சோதனைக்கு ஒரு பாடமாக  சண்முகலிங்கம் சேரிடம் கற்றுக் கொண்டிருந்தனர்.
அதுநூட்டுமல்ல நாடக அரங்கக் கல்லூரியின் நாடகத்தயாரிப்புகள் களப்பயிற்சிகள் போன்றவற்றிலும் பங்கு கொண்டிருந்தனர். குறிப்பாக பாடசாலை நாடகங்கள் சிறுவர் நாடகங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில்/நெறியாள்கை செய்வதில் சண்முகலிங்கம் சேரின் வழிகாட்டலுடன் இந்தக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
சிறுவர் நாடகங்கள் தொடர்பாக- குறிப்பாக குழந்தைகளின் உளவியல் தொடர்பாக குழந்தை சேர் கொண்டிருந்த பிரக்ஞை மிக முக்கியமானது.
சனநாயகப்பண்புகள் குறைந்த எங்கள் தமிழ் சமூகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைகளினதும் சிறுவர்களினதும் ஆளுமை வெளிப்பாட்டுக்கான ஒரு வெளியை சிந்தித்து அதை நாடகத்தினூடாக வழங்க முடியும் என் நிரூபித்தவர் குழந்தை . சண்முகலிங்கம்.
ஈழத்து நாடக வரலாற்றில் நாடக அரங்கக் கல்லூரியின் உருவாக்கம் முக்கியமானதொரு திருப்புமுனையாகும்.
நாடக அரங்கக் கல்லூரி நடாத்திய நாடாத்துகிற களப்பயிற்சிகள் முக்கியமானவை.
நான் 1989க்கும் 1993க்கும் இடையில் நடந்த அனேகமான பயில் நெறிகளிலும் பங்கு கொண்டிருந்தேன்.
இவை என் ஆளுமையிலும்  அனுபவங்களிலும் பெருமளவு மாற்றங்களை கொண்டு வந்தன.
இன்று உலகம் முழுவதும் சிதறிச்சென்று  வாழ்கிற இந்தக்களப்பயிற்சிகளில் பங்கு கொண்ட அனைத்து நாடக மாணவர்களும் ஆர்வலர்களும் இதனை ஒத்துக்கொள்வார்கள்.
நாடகம் என்றால் வெறுமனே எழுத்துரு- ஒத்திகைபார்த்தல்-அளிக்கை என்ற ஒற்றைப்பரிமாணத்தை  மாற்றியமைத்தன இந்தக்களப்பயிற்சிகள்.
ஒரு நாடகத்தயாரிப்புக்குள் வருகிற அனைத்து விடையங்களையும் ஒருங்கிணைத்து  ஒரு பண்பாடக தானியங்கி  ஒழுக்க மாக மாற்றிவிடுகிற வேலையை இந்த களப்பயிற்சிகள் செய்துவிடுகின்றன.
நிதானமாக மனிதஉணர்வுகள் பற்றிய பொறுப்புணர்வுடன் குறித்த களப்பயிற்சியில் பங்குகொள்கிற சம்பந்தப்படுகிற அனைவரையும் நான் மேலே குறிப்பிட்ட தானியங்கிப் பொறிமுறைக்குள் கொண்டுவரும் அழகையும் சண்முகலிங்கம் சேரின் ஆளுமையையும் அதனை அனுபவித்தவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்வர்.

ஒரே நடிகன் ஒரே நெறியாளன் ஒரே எழுத்துருவாக்கன் கீழ் வரும் மூன்று  முக்கிய மான நாடகங்களில் மூன்று வேறு திசைகளுக்குள்  விரிந்து சென்றதைக் காணமுடிந்தது.

சிதம்பரநாதன்  சண்முகலிங்கம் சேர் கூட்டுழைப்பாக வந்த  மண்சுமந்த மேனியரின்  எழுத்துரு சண்முகலிங்கம் சேரின் முக்கியமானதொரு எழுத்துரு. பக்தி இலக்கியம் ,மண்வாசனை,
சமூக அவலம் ,விடுதலை வேட்கை என்பவற்றின் அற்புதமான கலவை  மண்சுமந்தமேனியர்.
யாழ் மாவட்டத்தின் பெருமளவான பார்வையாளர்களை சென்றடைந்த நாடகம் அது.
அன்னையிட்ட தீ யை வைத்திய காலாநிதி சிவயோகன் அவர்களின் தூண்டுதலாலும் துணையாலும் எழுதியதாக சண்முகலிங்கம் சேர் குறிப்பிடுவார்.
போரினால் உண்டான சமூக மற்றும் தனிமனித உளக்காயங்களுக்கு நாடகத்தை நோய்தீர்க்கும் நிவாரணியாக பயன்படுத்த இந்த நாடகம் முயல்கிறது
மற்றையது எந்தையும் தாயும். இது ஒரு நாற்சார் அரங்கம் படச்சட்ட மேடைக்குள் இயங்கிய இயங்கிவந்த நாடகத்தை நாற்சார் வீட்டுக்குள் கொண்டு சென்றது இந்த நாடகம். பார்வையாளனை நாடகத்தின் ஒரு பகுதியாகமாற்றியது. சண்முகலிங்கம் சேரின் அனேகமான நாடகங்கள்  (Narrative Theater ) எடுத்துரைக்கும் அரங்கங்களாகும். அனால் எந்தையும் தாயும் அதில் இருந்து மாறுபட்டு ஒருகதையை மையப்படுத்திய பாத்திர உருவாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தியது.
இது ஒரு சிறு குறிப்பெனினும் வாழும் கலைஞனை  அவர் வாழும் காலத்திலேயே நினைவு கூர்வதும் கௌரவிப்பதும் முக்கியமானதல்லவா?
தேவ அபிரா.
15 nov 2010







17 மே, 2010

முள்ளின் வாய்க்கால்- யார்க்கெடுத்துரைப்போம்


 

"துன்பங்கள் ஆயிரம் சூழினும்

வாழ்வின் துடிப்பில் உயிர் தரிப்போம்"

எனச்சேரன் எழுதினார்.

ஆனால் வாழிவின் துடிப்பையும் இழந்து நிற்கிறோம்.

எத்தனை     இழப்புக்களைச்சந்தித்தோம் நினைவுகூர்ந்தோம் அப்பொழுதெல்லாம் நம்பிக்கையுடன் இருந்தோம். இந்த இழப்புக்களுக்கெல்லாம் ஒரு அர்த்தம் இருக்கிறதென்று.

ஆனாலும் முள்ளிவாய்காலில் நிகழ்ந்தவைகளைக் கண்டு அதிர்ந்து நிற்கிறேம். உண்மையிலும் அதிர்ந்து நிற்கிறோமா? அப்படியும் தெரியவில்லை. ஏனென்றால் பேஸ் புக்கில்(face book) இருந்த குடும்பப் படம் ஒன்றின் கீழ் இளைஞன் ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தார்.

"முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவை மாதிரிக்கிடக்கு"


 



 

ஆனாலும் நாங்கள் இச் சிறு தீவில் நிகழ்ந்த பெரும் இன அழிப்பை மறக்கமாட்டோம். ஏன்றென்றைக்கும் நினைவு கூர்வோம். ஏனெனில் இது திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு உலகமே கூடி நின்று வேடிக்கை பார்க்க நிகழ்த்தப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று மூன்று இலட்சம் மக்களை உடலாலோ அல்லது உள்ளத்தாலோ முடமாக்கிய இந்த இன அழிப்பை நாங்கள் மறக்கக்க மாட்டோம்.

ஆனால் இருள் சூழ்ந்த இரவில் சூனியம் நிறைந்த பகலில் எங்கள் துன்பங்களையும் வலிகளையும் யாருடன் பகிர்ந்து கொள்ளுவோம்?

துன்பப்படுபவர்களின் குரல்களுக்கு செவி கொடுக்காதவர்களிடம் மண்டியிடுவோமா?

யாரிடம் எங்களின் துயரங்களைச் சொல்லியாறுவோம்.


 

ஏறத்தாள 120 வருடங்களுக்கு முன்பு 1890 ம் ஆண்டு அமெரிக்க கண்டத்தில் செவ்விந்தியர்களின் கடைசிப்போர் நிகழ்ந்தது. பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்க கண்டத்தின் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த அவர்கள் தங்களின் வாழ்வையும் வளத்தையும் வெள்ளையர்களிடம் முற்றுமுழுதாக வூண்டட் நீ (Wounded Knee)பள்ளத்தாக்கில் இழந்தார்கள்.

வூண்டட் நீ பள்ளத்தாக்கில் அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட இறுதிக் கணத்தில்

தாங்கள் கொல்லப்படுமுன்பு இறுதியாக ஆடிய "பிசாசு நடனத்தின்"(Ghost Dance) போது செவ்விந்தியர்களின் மூலிகை மனிதன் (Medicine Man) மண்ணை அள்ளித்தூவிக் கீழ்வருமாறு பாடி ஆடுகிறான்.


 

"நான் யுகங்கள் வாழ்ந்துவிட்டேன்

நீ பயப்படாதே!

உனது இதயத்தைப் பலமாக்கு!!

எம்மைச் சூழ்ந்து நிற்கும் படைகளிடம்

பல தோட்டாக்கள் உள்ளன

அவற்றால் எம்மைத் துளைக்க முடியாது!

அவர்களின் குண்டுகள் எங்களை நோக்கி வருமென்றால்

அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கும்

அடர்ந்தபுல்வெளிக்குள் அவை காற்றில் பறக்கும் இச் சாம்பல் துகள்கள் போல் சிதறிவிடும்."


அக் கடைசிப் போரையும் ஆண்டாண்டு கால இனவழிப்பையும் அனுபவித்த அந்த மக்களிடம் எங்களைப்பகிர்ந்து கொள்ளுவோம்.

போராளிகளும் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமாக அப் பள்ளத்தாக்கில் அமெரிக்கர்களால் ஒருகுழியுள் புதைக்கப்பட்ட அந்த மக்களிடம் எங்கள் வலியைச் சொல்லுவோம். அவர்களுக்கு மட்டுமே எமது வலி புரியும்.

இரண்டாம் உலக யுத்தத்தில் கிட்லரிடம் அகப்பட்ட மக்களின் துயரங்களை இத்தாலிய யூதக் கவிஞர் பிரிமொ லெவி(Primo Levi) இவ்வாறு விபரிக்கிறார்.


 

"மாலையில் வீடு திரும்பும் போது

பாதுகாப்பான வெப்பமான வீடுகளில்

வெதுவெதுப்பான உணவுகளும்

நட்பு நிறைந்த

முகங்களும் உங்களுக்காக காத்திருக்கின்றன

ஆனால் கருதுங்கள் இந்த மனிதனை

இவன் சேற்றில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பவன்;

போரின் அமைதி பற்றி அறியாதவன்;

ரோட்டித் துகள்களுக்காக போராடுபவன்.

ஆம் அல்லது இல்லை என்ற வார்த்தைக்குள்

ஆடிக்கொண்டிருக்கிறது இவனது மரணம்.

கருதுங்கள் இந்தப் பொண்ணை

உதிர்ந்த முடி அல்லது பெயரில்லாதவள்;

நினைவு படுத்துமளவுக்கு தெம்புமற்றவள்

சூனியமான விழிகளும் குளிர்ந்த கருப்பபையுமாக

பனிக்காலத் தவளையானவள்"


 

இவர்களிடம் சொல்லுவோம் எங்கள் முள்ளிவாய்க்கால் அவலத்தை.


 

இந்த நூற்றாண்டின் இன்னுமொரு அவலமாக சூடானின் டாவூர் இருக்கிறது.

சூடானை பிறப்பிடமாகக் கொண்ட 13 வயது சிறுவன் எம்திதால் (Emtithal Mahmoud, a 13-year-old Darfur native who now lives in Philadelphia.) பின்வருமாறு கேட்கிறான்.


 

உனது நகரங்களும் அவற்றின் அருகில் இருந்த எல்லாமும் குண்டுகளால் சிதைக்கப்பட்டால்

நீ என்ன செய்வாய்?

நீ குளிர்ந்து தனித்திருக்க நேர்ந்தால் என்ன செய்வாய்?

வீடுகள் இல்லாத வீதியில் தனித்திருக்க நேர்ந்தால்

நீ என்ன செய்வாய்?

உனது அம்மாவையும் அப்பாவையும் யாராவது கொன்றால்

நீ என்ன செய்வாய்?

உன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து போனால்

நீ என்ன செய்யவாய்?

பேச முடியாதவர்களுக்கு சாட்சியமாக இருந்ததிற்காக

நீ சிதறி உடைந்து போக நேர்ந்தால் என்ன செய்வாய்?

நீ ஓட விரும்பினால் எங்கு ஓடுவாய்?

நீ இறந்து போனால் யாரறிவார்?"

புழுதி மட்டுமே பறக்கிற பாலைவனத்தில் வாழ்வென்றாலே என்னவென்றறியாமல் வாழ்கின்ற ஒரு மில்லியன் டாபூர் மக்களிடம் சொல்லுவோம் எங்கள் அவலத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

1962 ம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையும் நெதர்லாந்தும் மேற்கு பப்புவா( West Papua) மக்களை இந்தோனேசியாவிடம் விற்றுவிட்டு சென்றனர்.

1966 ம் ஆண்டில் இருந்து இந்தோனேசியா செய்து வரும் இனப்படுகொலைகளை அவர்கள்அனுபவித்து வருகிறார்கள்.


 



 

கள்ளம் கபடமற்ற குழந்தைப் பருவத்தில் படங்களில்

என்னைப் போன்ற பிள்ளைகளும்

என் அப்பாக்களைப் போன்ற அப்பாக்களும்

கையால் பின்னப்பட்ட பிலும்ஸ் தோள்ப்பைகள் தொங்கும் அம்மாக்களும் அம்மம்மாக்களும் நிலங்களை விட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டிருந்தேன்.

நிலங்கள் அவர்களுடையதாக இருந்தபோதும்!

காக்கியுடையும் கருந்தலையும் துப்பாக்கியுமாக

வந்த அந்நியர்கள்

என் மாமாவைப் போன்ற ஒருவரை

தங்கள் கால்களுக்கிடையில் ஏன் அமுக்கிச்

சுட்டுக் கொன்றார்கள்

அந்தப் பெருநிலம்

அவருடையதாக இருந்தபோதும்!!


 

கபடமற்ற குழந்தைமையில் அதை அறியாதிருந்தேன்...

என ஸ்கொட் வைட (SCOTT WAIDE) என்னும் பப்புவன் கவிஞர் எழுதிச்செல்கிறார்.

உலகத்தால் கைவிடப்பட்ட அந்த மக்களிடம் சொல்லுவோம் எங்கள் கதைகளை.

21ம் நூற்றாண்டின் இன்னொரு துயரம் குர்திஸ்தான். நான்கு நாடுகளுக்கு நடுவில் அகப்பட்டு சிதைந்து கொண்டிருக்கும் குர்திஸ்தான், சதாம் குசைனின் இரசாயணத் தாக்குதலால்1998 ம் ஆண்டு இனப் படுகொலையைச் சந்தித்தது.தமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் வளர்க்க முடியாது மொழியையும் பேசமுடியாது துருக்கியிலும் சிரியாவிலும் ஈரானிலும் இன்னும் சிறுமைப்பட்டுக் கிடக்கிறார்கள் குர்தியர்கள்.

1998 ம் ஆண்டு நிகழ்ந்த கொடூரத்தை பின்வருமாறு 25 வயதான முகமட் அசிஸ் பின்வருமாறு கூறுகிறார்.

"எனது கண்கள் கனத்து வந்தன

எனது சுவாசம் கடுமையான நோவைத் தந்தது

பலமுறைகள் வாந்தி எடுத்தேன்

வீடுகளின் கதவைத் திறந்த ஒவ்வொரு பொழுதும்

அங்கெல்லாம் பிள்ளைகளும் பெண்களும் ஆண்களும்

வலியில் சிதைந்து செத்துக் கொண்டிருந்தார்கள்"

இதைத்தானே நாங்கள் முள்ளிவாய்காலில் 12 வருடங்களின் பின்பு அனுபவித்தோம்.உலகம் திருந்தியா இருந்தது?

இந்த மக்களிடம் செல்லுவோம் அவர்கள் சொல்வார்கள் எங்களுக்கு: "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று!

மனித குலம் வெட்கப்பட வேண்டிய இனப்படுகொலைகள் ஆபிரிக்காவிலும் நிகழ்ந்தன.ருவாண்டா, கொங்கோ எதியோப்பியா , சோமாலியா என நீள்கின்றன இரத்தத்தின் தடங்கள்.


1995ம் ஆண்டு Srebrenica வில் "பாதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் டச்சுப்படைகளிடம் தஞ்சமடைந்திருந்த பொஸ்னிய மக்களை டச்சு படைகளிடமிருந்து எடுத்துச்சென்று 8000 ஆண்களையும் இளைஞர்களையும் கொன்று குவித்தது சேர்பிய இராணுவம். டச்சுப்படைகள் வெறுமனே கைகட்டிப் பார்த்து நின்றனர்.


 


யார் எவர் என்று தெரியா முடியாமல் புதைகுழியுள் உருவழிக்கப்பட்ட அந்த மக்களின் சமாதிகள் கற்குறிகளாக குத்தி நிற்கின்றன. தன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என எல்லோரையும் இழந்து நிற்கும் ஒரு மூதாட்டி கற்குறியொன்றிற்கு மலர்வளையம் வைத்து அழுகிறாள். அவளிடம் கூறுவோம் எங்களிடம் இப்பொழுது கல்லறைகளும் இல்லை என்று ,அவள் புரிந்து கொள்ளுவாள்.

இன்னமும் ஆயிரம் இனக்கொலைகள் மெதுவாகவும் அமைதியாகவும் நடந்து கொண்டிருக்கின்றன.அதனை செய்பவர்களிடமேதான் மீண்டும் மீண்டும் நாங்கள் முறையிட்டுக்கொண்டிருக்கிறோம்.



 

இந்தியாவின் சத்திஸ்க்கார்(Chhattisgarh) மாநிலத்தில் இந்திய அதிகாரத்திடம் சிறுகச்சிறுக உயிரழியும் பழங்குடி மக்களிடம் சொல்லுவோம். தங்களது பூர்வீக நிலங்களை அதன் வளங்களை பன்நாட்டுக் கூட்டுத்தாபனங்களுக்கு தாரைவார்க்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிற அவர்களிடம் சொல்லுவோம். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும். "ஒடுங்கியிருத்தல்" என்றால் என்னவென்று.

இந்த நாளில் நாங்கள் எதற்காக போராடினோமோ அது எங்களிடமில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பேரால் நாங்களும் அழிவுகளை மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிறோம். "மற்றவர்களைக்" கொலைசெய்திருக்கிறோம். மற்றவர்களை அவர்களின் இருப்புக்களைச் சிதைத்து துரத்தியிருக்கிறோம். ஆனால் வெற்றியை நோக்கி நடக்கிற நினைவில் அவற்றை கவனிக்கவில்லை. ஒரு சமூகமாக எல்லாவற்றுக்கும் மெளனச் சாட்சியாக இருந்திருக்கிறோம்.பள்ளிவாசல்களிலும் பௌத்த விகாரைகளிலும் இன்னும் எமது சகோதரர்களின் இதயங்களிலும் ஈட்டியைப் பாய்ச்சி இரத்தம்மோடச் செய்திருக்கிறோம். அவர்களின் தாய்மாரும் தந்தைமாரும் உறவினர்களும் சந்ததியினரும் எம்மைப்போலவே அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமும் வேண்டுவோம் எங்களை மன்னித்து விடுங்கள் என...

இறுதியாக...

"அழிக்கப்பட்ட பெருநிலமெங்கும்

சிதைவுகளில் செடிகள் முளைக்கின்றன

அழிவு உறைந்து போயிருக்கிற அபாயச் சூழலில்

இந்தக் குழந்தைகள் புன்னகைக்கத் தொடங்குகிறார்கள்."

-தீபச்செல்வன்

தேவ அபிரா.

17-05-2010


 

உசாத்துணை:

http://en.wikipedia.org/wiki/Wounded_Knee_Massacre

http://rabbibrant.com/2007/04/15/the-poetry-of-genocide/

http://westpapua.net/2009/10/874/

13 மே, 2010

கோட்பாடுகளின் தோல்வி- நாடு கடந்த அரசு?

குளோபல் தமிழ்ச் செய்தி நிறுவனத்தில் வெளிவந்த திரு உருத்திரகுமாரனுடனான நேர்காணலைக் கேட்டும் வாசித்ததன் பின்பும் தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில் அந்தப்பேட்டியில் மேலெழுந்து வருகிற முன்வைக்கப்படுகிற சில முக்கியமான விடையங்களைத் தொகுக்க முனைந்துள்ளேன்.

  • தமிழ் மக்களுக்கான அரசியல் வெளியும் போராட்ட வலு மையமும்
  • பன்மைத்துவம்
  • நாங்களே ஒழுங்கமைத்துக்கொள்ளும் சனநாயகமும் அதன் விழுமியங்களும்
  • பொதுத் தேசிய அடையாளமும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் தோழமையும்
  • கோட்பாடுகளின் தோல்வி
  • பிராந்திய அரசியல் மாற்றங்கள் உலகமயமாதல் பொருளாதார நலன்கள்

தமிழ் மக்களுக்கான அரசியல் வெளியும் போராட்ட வலு மையமும்


 

தமிழ்மக்களின் அரசியல் வெளியும் போராட்ட வலுமையமும் அகம் புலம் என இரண்டினுள்ளும் பிரிந்துள்ளன.

தமிழ் மக்களின் அக அரசியல் வெளி தனிநாட்டுக் கோரிக்கைகளை வைக்க இடமளிக்கப்போவதில்லை. ஆனால் இலங்கை என்ற நாட்டுக்குள் தங்களுக்கு மறுக்கப்படுகின்ற சகல உரிமைகளுக்கும் எதிராக குரல் கொடுக்கக் கூடிய சாத்தியங்கள் அங்கே அற்றுப் போய்விடவில்லை.

தேர்தல்களுடாக தெரிவுசெய்யப்படும் தமிழ் பிரிதிநிதிகள் தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகளுக்கு உரிய முறையில் குரல் கொடுக்க முடியும். தமிழர்களின் அரசியல் உணர்வை அழியாது தக்க வைக்கும் உரிய பொறுப்பு அவர்களிடமே உள்ளது.

சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகின்ற அரசியல் சமூகக் குழுக்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து சக்திகளையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அடைவதற்கான சனநாயகப் பொறிமுறை ஒன்றினுள் இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அது தனியே திரு. உருத்திரகுமாரன் அவர்களின் பணி அல்ல. தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகள். சமூக அரசியல் பொருளாதார உரிமைகள் பேணப்படவேண்டும் என எண்ணுகின்ற சகலரும் ஒரு மையப் புள்ளியை நோக்கி வரவேண்டியுள்ளது.

சிங்கள மக்களிடம் மிகத்தீவிரமான மேலாதிக்க மனப்பான்மை இருக்கும் வரை தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படப்போவதில்லை. அதேநேரம் இலங்கை என்ற யதார்த்தத்துக்குள் இருக்கும் வரை அடிப்படை சனநாயக மனித உரிமைகளுக்காக போராடுவதை இலங்கை அரசு நேரடியாகத் தடுக்கவும் முடியாது.

இத்தகைய போராட்டங்களைத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒழுங்கமைத்து தலைமை தாங்குவதினூடாக மெல்ல மெல்ல எமக்கான அரசியல் வெளியை உருவாக்கலாம். உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதே நேரம் தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு ஒடுக்கு முறையையும் உலகிற்கு வெளிக்கொண்டு வரக்கூடிய ஒரு பலமான அமைப்பு புலத்தில் அவசியம். அது நாடு கடந்த அரசு என்னும் புலிகளின் அடுத்த வடிவமா அல்லது அதற்கும் மேலாக அதனையும் உள்ளடக்கிய பல்வேறு கோட்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பன்மைத்துவம் மிக்க சனநாயக ரீதியான தமிழ் தேசியத்திற்கான ஒரு கட்டமைப்பா என்பது விவாததிற்கு உரியது.

எது எவ்வாறு இருப்பினும் அகத்திற்கும் புலத்திற்குமிடையே முறையான ஊடாட்டங்களும் இடைத்தாக்கங்களும் இல்லாமல் சிங்களத்தேசியவாதத்தை நாங்கள் எதிர்கொள்ள முடியாது. அகத்தில் தொடர்ச்சியான சனநாயகக் கோரிக்கைகளை வைத்து வெகுசனப் போராட்டங்கள் தொடர்ச்சியான உரையாடல்கள் போன்றவற்றை தொடர்வதன் முலம் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வை தக்கவைத்துக்கொள்ளவேண்டும். தமிழ்மக்கள் தங்கள் வலுமையத்தை இழக்காமல் இருப்பதற்கான முதற்படியாகவும் அது இருக்கும். திரு உருத்திரகுமாரன் பேசுகிற வலு மையம் தனியே புலத்தில் மையம் கொள்வது சாத்தியமுமில்லை நல்லதுமில்லை.


 

பன்மைத்துவம்


 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி தமிழர்களது அரசியலை இலங்கை அரசின் அரசியல் வட்டத்துக்குள் இருந்து படிப்படியாக வெளிக்கொண்டு வந்தது. நேர்காணலில் பேசப்படுகிற பன்மைத்துவத்தை தமிழீழ விடுதலைப் போராட்டம் தனக்குள் வளர்த்துக் கொள்ளத் தவறியமை அதன் முக்கியமான பலவீனமாக அமைந்து விட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஏகத்துவத்துக்குள் கொண்டு சென்றார்கள். அப்போதும் கூட ஏகத்துவத்துக்குள் இருக்கக்கூடிய பன்மைத்துவத்தையும் அவர்கள் மறுதலித்திருந்தார்கள். இது இரண்டாவது முக்கியமான பலவீனம்.

இதனால்தான் பிரபாகரனின் இராணுவ மையப்பட்ட அணுகுமுறைகளின் மீது விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள் இருந்தவர்களினாலும்
கூட எந்த விதமான தாக்கங்களையும் ஏற்படுத்த முடியாது போய்விட்டது.

புலிகள் மக்களிடம் இருந்தே தோன்றினார்கள் ஆனால் மக்களிடம் இருந்து தம்மை அன்னியப்படுத்தக் கூடிய பாரிய தவறுகளையும் இறுதிவரையும் செய்தும் இருந்தார்கள்.

புலிகள் அடைந்த ஏக பிரதி நிதித்துவம் என்பது தமிழ் தேசியத்தின் இருப்புக்கு வலிமை சேர்க்கும் புறக்காரணிகள் இருந்தமையால் பெறப்பட்டதாகும். சிங்களப் பேரினவாதம் இருக்கும் வரையும் தமிழ் தேசிய வாதம் சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும். தமிழீழக் கோட்பாடு தோல்வி அடைந்துவிட்டதா எனக் கேட்பதை விடவும் தமிழ் தேசியம் அழிந்துவிட்டதா எனக் கேட்பதே நியாயமானதாகும். பதில் இல்லை என்பதாகும்.

உண்மையிலும் திரு உருத்திரகுமாரன் சொல்கின்ற பன்மைத்துவம் உண்மையான பன்மைத்துவம் அல்ல. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை எப்படி அடைய முடியும் என பல்வேறு தரப்பினரும் பல்வேறுவிதமான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் பொது நோக்கம் ஒன்றிக்காக இணைக்கும் போதுதான் உண்மையான பன்மைத்துவம் தோன்றும்.

உருத்திரகுமாரன் குறிப்பிடுகிற பன்மைத்துவம் தமிழீழம் என்னும் ஏகத்துவத்துக்குள் இருக்கிற பன்மைத்துவமாகும். தமிழீழக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளுகின்றவர்களுக்கிடையே அதை எவ்வாறு அடைவது என்பது பற்றி இருக்கக்கூடிய சனநாயக ரீதியான கருத்தாடல்களை இணைக்கும் பொறிமுறைபற்றியே உருத்திரகுமாரன் பேசுகிறார். இது தவறல்ல. தேவையானதுதான். விடுதலைப் புலிகள் தமது உச்சங்களில் இருந்தபோது செய்யாததை இப்போது செய்ய முனைகிறார்கள். இது முதற்படி மட்டுமே!


 

சுயமாக ஒழுங்கமைத்துக் கொள்ளும் சனநாயகம்


 

ஆசியாவில் சனநாயகத்தின் வளர்ச்சி மிக மந்தமான நிலையிலேயே இருக்கிறது. 'உண்மையான சனநாயகம்' என்பதை அல்லது அதற்கு கிட்டவாவது வரக்கூடிய சனநாயக கட்டமைப்பு என்பதை காணமுடியாது.

அனேகமான நாடுகளிலும் அரச வன்முறை பயங்கரவாதம் தேவைப்படும் போதெல்லாம் பாவிக்கப்படுகிறது. அரசாங்கங்கள் சட்டம் நீதி நிர்வாகக் கட்டமைப்புக்களில் தேவைப்படும் போதெல்லாம் தலையீடு செய்கின்றன.

ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்குத் தேர்தலை நடாத்துதல் என்பதனைத் தவிர சனநாயக நடவடிக்கைகள் எதுவும் இங்கு இருப்பதில்லை.

தேர்தல்களும் மக்களின் அரசியல் அபிலாசைகளின் வெளிப்பாடுகளாக இருப்பதில்லை.

அதிகாரத்தை அடைய விரும்புபவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பாதைகளில் ஏதோவொன்றைத் தெரிவு செய்ய நேரிடையாகவோ மறைமுகமாகவோ மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

எனவே நாடுகடந்த அரசாங்கத்தை ஸ்தாபிப்பவர்கள் யாரை சனநாயக மயப்படுத்தப்போகிறார்கள் என்பது முக்கியமானது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் சூழ்நிலைகளுக்கூடாகத் தவிர்க்கமுடியாதபடிக்கு முதலாளிததுவ சனநாயக கலாச்சாரத்துக்குள் படிப்படியாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. மரபுவழியான ஆண் தலைமைதாங்கிய குடும்பக் கட்டமைப்புக்கள் புலம் பெயர் நாடுகளில் மாற்றமடைந்து வருகின்றன. குடும்பம் என்னும் கட்டமைப்புக்குள் ஆண் பெண் பெற்றோர் பிள்ளைகள் என்னும் உறவுகளுள் சனநாயக மாற்றங்கள் மெதுவாக நிகழ்ந்து வருகின்றன. இதுவும் முக்கியமான ஒரு மாற்றமாகும்.

சனநாயகப் பண்பாட்டின் வளர்ச்சி இலங்கையிலேயே அதிகமாகத் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் தனது சகமனிதனின் இருப்பையும் உணர்வுகளையும் மதிக்கும் மனநிலையை அடந்து அது சமூக நடத்தையாக மாறும் போது மட்டுமே சனநாயகப்புரட்சி தோன்றும்.

தமிழ்தேசியத்தின் எழுச்சி பல்வேறுபட்ட விழுமியங்களை சமூக நடத்தைகளாக மாற்ற முனைந்திருந்தது. பெண் ஒடுக்குமுறை சாதிய ஒடுக்குமுறை போன்றவற்றுக்கெதிரான விழுமியங்கள் சமூக நடத்தைகளாக மாறவாரம்பித்திருந்தன. அப்பொழுது சனநாயக விழுமியங்களையும் இணத்துக்கொண்டிருப்பின் எமது தமிழ்ச்சமூகம் இன்னும் கூடிய பலத்துடன் இருந்திருக்கும்.

சிங்கள சமூகத்தின் சனநாயக மயப்பாட்டை சிங்கள பௌத்த பேரினவாதம் தடுத்து நிற்கிறது.

அதே போல் தமிழ்ச் சமூகத்தின் சனநாயக மயப்பாட்டைப்பற்றி அக்கறைப்படாமல் தம்வழியே சென்ற பிழையை விடுதலைப்புலிகளும் விட்டுள்ளனர்.

எனவே சனநாயகம் என்பது கட்சிக்கு உள்ளுக்கும் வெளியிலும் சமூகத்தினுள்ளும் வளர்த்தெடுக்கப்படவேண்டியது. இது மிக மெதுவான மாற்றமாகும். திரு உருத்திரகுமாரன் தமது கட்சிக்குள் சனநாயகப்பொறிமுறையை வளர்ப்பதைப் பற்றியே குறிப்பிடுகிறார். இதுவும் ஆரோக்கியமானதே!


 

பொதுத் தேசிய அடையாளமும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் தோழமையும்


 

புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்கின்ற சில முக்கியமான பிரச்சனைகளின் பின்னணியிலேயே மேற்குறித்த அம்சத்தை நோக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த ஒவ்வொருவரையும் அவர்கள் வாழும் நாட்டின் கலாசாரத்துள் கரையும் படி சட்ட ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் நிர்ப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. இதனாலும் மொழிப்பிரச்சனையினாலும் முதலாவது தலைமுறையினர் கலாசார தனிமைப்பாட்டை எதிர்கொள்கின்றனர். இதனை வெல்வதற்க்காக அவர்கள் இன்னும் தமது அகத்துடன் தம்மைப் பிணைத்துக் கொள்கின்றனர்.

இரண்டாவது மூன்றாவது தலைமுறையினர் மொழிப்பிரசனையினை எதிர்கொள்ளாவிடினும் தமது அடையாளத்தை தேடுகின்றனர். தமது தாய் தந்தையர் வாழ்ந்த நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை வேறு வெளிச்சத்திலேயே புரிந்துகொள்கின்றனர். ஆனாலும் தமது அடையாளம் காரணமாகவும் வேர்கள் காரணமாகவும் அரசியல் ரீதியான தோழமையை வழங்குகின்றனர்.

இந்த இரண்டு அம்சங்களையும் வைத்துப் பார்க்கும் போது தமிழ்த்தேசியம் தனக்கென இன்னுமொரு வகையான வலு மையத்தைப் புலத்திலும் உருவாக்கிக் கொள்வது சாத்தியம். ஆனால் இவர்களால் அரசியல் தோழமையை மட்டுமே வழங்கமுடியும்.

கோட்பாடுகளின் தோல்வி.


 

தமிழ்தேசியத்திற்கு தனது முறையில் அரச வடிவம் கொடுக்க முனைந்த பிரபாகரனின் சிந்தனை சிங்கள பௌத்த பேரினவாதத்தால் கோரமான முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் தமிழ்தேசிய உணர்வோடு இருந்தமையால் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை இத்தகைய கொடூரமான பாதையூடாக அழைத்துச் சென்ற புலிகளின் சுய விமர்சனத்திற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்களுக்கு அப்பாலும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கும் வல்லரசுகளுக்கும் அடிபணியாது மரணித்த போராளித் தலைவனாக நிமிர்ந்து நிற்கும் பிரபாகனின் கண்ணுகுத் தெரியாத சமாதிமீது மீண்டும் ஒளிவட்டத்தையும் மாயையும் கட்டி எழுப்ப முயலாது வெளிப்படையான அரசியலை செய்ய முனைவது காலத்தின் தேவை.

மூன்று தலைமுறைகளின் பின்பு தாம் அடைந்த இழப்பும் தோல்வியும் தமிழீழத்தின் சாத்தியம் பற்றிய அச்சவுணர்வை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது. அதற்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இருக்கிறது.

மக்களின் நலன்களை அடிபபடையாகக் கொண்டு உருவாக்கப்படும் கோட்பாடுகள் ஒருபோதும் தோல்வியடைவதில்லை. ஆனால் அதற்குச் செயல்வடிவம் கொடுக்க முனைபவர்கள் பல்வேறு அகப்புறக் காரணிகளால் தோல்வியடைகிறார்கள் அல்லது வெற்றியடைகிறார்கள்.


 


 

பிராந்திய அரசியல் மாற்றங்கள் உலகமயமாதல் பொருளாதார நலன்கள்


 

எதிரியின் வெற்றிக்கும் புலிகளின் தோல்விக்கும் தமிழ் தேசியத்தின் பின்னடைவுக்குமான அகப்புறக் காரணிகள் இடியப்பச் சிக்கலாக பிணைந்து முன் எதிர்வு கூறமுடியாதவாறு இருக்கின்றன. இன்னிலையில் பிராந்திய அரசியல் தமிழீழத்தை அமைப்பதற்கு சாத்தியமாக மாறும் என அடித்துக் கூறமுடியாது. மாறலாம். ஆனால் இதனை எமது மூல உபாயத்திற்கு ஆதாரமாகக் கொள்வது அரசியல் தற்கொலையாகும்.

சந்தைகளையும் அதிகாரத்தையும் கைப்பற்றித் தக்க வைத்துகொள்ளும் நோக்கத்துடனேயே உலகம் ஒழுங்கமைக்கப்படுகிறது. இந்த ஒழுங்குக்குள் இலங்கை என்கிற நாட்டிற்கு இருக்கின்ற பெறுமானம் தமிழீழம் என்ற சிறய அலகுக்கு இல்லை. மிகச் சிறிய இனமான எங்களுக்கு எந்தச் சந்தைப் பெறுமானமும் இல்லை.

இன்றைக்கு தமிழீழம் என்னும் எல்லைகளைப் பற்றிச் சிந்திப்பதை விடவும் தமிழ்த்தேசியத்தின் இருப்பைப் பாதுகாப்பதைப் பற்றிச் சிந்திப்பது இன்னும் முக்கியமானது. ஏனேனில் இன்னும் பத்து வருடங்களில் தமிழீழத்தின் சனத்தொகைப்பரம்பல் மாற்றப்பட்டுவிடும்.

சீனாவின் சின் ஜாங் உய்கூர் தன்னாட்சிப்பிரதேசம், திபெத், குர்திஸ்தான், பலஸ்தீனம் போன்ற பகுதிகளில் நடப்பவற்றை நாங்கள் இங்கு கவனிக்க வேண்டும்.

புலிகள் தமிழீழத்தை அடைவதற்கான இன்னுமொரு பொறிமுறையாக மட்டுமே நாடு கடந்த அரசு என்ற வடிவத்தை முன்னைடுப்பதாகத் தெரிகிறது.

ஆனால் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளைத் தமிழீழம் என்கிற ஒரு சட்டகத்தினுடாக மட்டுமே அணுக வேண்டும் என்கிற கோட்பாட்டு ஏகத்துவம் சர்வதேச அரசியலில் மீண்டும் நம்மைத் தனிமைப்படுத்தலாம்.

உண்மையில் தமிழர்களின் முக்கியமான வலுமையம் வடக்கு கிழக்கிலேயே அமையவேண்டும்.