பின்பற்றுபவர்கள்

பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜூன், 2012

ஒரு பாடல்


மறுகும் மனவெளியில்  ஒரு கனவு வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ

உயிர் வெந்து வாடும் உடல் நின்று தேடும்
மனம் கொண்ட பின்னாலே வருகின்ற மாயம்
களி கொண்டு ஆடும் மொழி நின்று போகும்
இதழ் தின்ற பின்னாலே வருகின்ற மோகம்

மறுகும் மனவெளியில் ஒரு கனவு வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ

கடல் தாண்டிப் போகும் கலம் என்று ஆனாய்
நீ சென்ற பின்னாலே நிலவில்லா மாடம்
விடைபெற்ற நாளும் விழி கொண்ட நீரும்
சுரம் நின்ற பின்னாலே அழுகின்ற கானம்

மறுகும் மனவெளியில் ஒரு கனவு வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ

போர் தின்ற நாடு போய் எங்கு சேரும்
பேய் வந்த பின்னாலே வாழ்விங்கு சாபம்
வாழ் வென்று கூட வீ டொன்று வாடும்
சீர் வந்த பின்னாலே மூச்சொன்று சேரும்.

மறுகும் மனவெளியில் ஒரு கனவு வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ

தேவ அபிரா
22-06-2012

13 ஜனவரி, 2010

துயரின் நிழலே படராப்பொழுதாய்

துயரின் நிழலே
படராப்பொழுதாய்
நீளும் வாழ்வே நினதாய் ஆக
வருவார் உன் அப்பா
விழிகள் மூடு எந்தன் முத்தே!

வாழ்த்துளிகள் தேட நினைந்து
காலக்கடலைக் கடைய முனைந்து
அழிவின்கரையில் அடங்கிப்போனோம்
ஊரின் துயரம் வழியும் விழியில்
ஆரும் கேட்கா அகதியானோம்
ஒலைக்குடிலுள் உனது கோபம்
உறங்கமறுத்து ஊரை எழுப்பும்
சிறிய மகளே நறிய முகத்திற்
நகையைச்சேர்த்து உறங்குவாயோ

துயரின் நிழலே
படராப்பொழுதாய்
நீளும் வாழ்வே நினதாய் ஆக
வருவார் உன் அப்பா
விழிகள் மூடு எந்தன் முத்தே!

நாறிகிடந்த பிணங்கள் கடந்து
ஊர்கள் தோறும் உன்னைச்சுமந்து
நினைக்க முடியா அகதி வாழ்வில்
நீயும் வரமாய் வந்து சேர்ந்தாய்
எமது இரவில் அவரின் மடியில்
கிறங்கிக் கிடந்த கணங்கள் நூறு
அறியாவயதில்உறங்கிக்கொள்ளு
அறியும் வயதில்விழித்துக்கொள்ளு.
சிறிய மகளே நறிய முகத்திற்
நகையைச்சேர்த்து உறங்குவாயோ

தேவ அபிரா
01/10

6 டிசம்பர், 2009

மூங்கிலாறே முது நாள் நதியே

மூங்கிலாறே முது நாள் நதியே
மூச்சின்றிக்கிடந்தாயோ

காற்றிலாயிரம் கனல்கள் பறந்தன
சேற்றிலாயிரம் பிணங்கள் நெரிந்தன
காட்டின் ஒரு பிடி கருகிச்சரிந்தது
கண்ணீர் மல்கிக் கரைந்துறைந்தோமே
ஆடிய கால்கள் அடங்கிப்போயின
மோதிய விழிகள் மோட்சமடைந்தன
ஆடாக்கடலில் எதிரி படுத்தான்
ஆடையிழ்ந்து அகதியாகி
கூடாக்கனவில் குறுகிப்போனோம்.

சூழவாயிரம் சதிகள் பிறந்தன
காலநதியின் தடங்கள் சிதைந்தன
மூல வழிகள் தெளியாதிருந்தன
முள்ளிவாய்கால் முகிழாதொழிந்தது
நந்திக்கடலுள் நிணமும் நிறைந்தது
ஈழக் கனவை ஞாலம் மிதிக்க
சோழ விழிகள் சோபையிழந்தன.

வாழத்துளிகள் சேர்க்க நினைத்தோம்
நீள நடக்க நெஞ்சம் கொண்டோம்
ஊழித்தீக்கு உயிர்கள் தந்தோம்
காலக்கணக்கை கோட்டை விட்டோம்
மரணப்படுக்கை வளர்ந்து முடிந்தோம்

மூங்கிலாறே முது நாள் நதியே
மூச்சின்றிக்கிடந்தாயோ