பின்பற்றுபவர்கள்

23 செப்டம்பர், 2008

Behind the women behind the Bomb

International Herald Tribune இல் வெளியான தற்கொலைத்தாக்குதல்கள்-வெடிகுண்டுக்குப்பினால் உள்ள பெண்மணி” என்னும் கட்டுரையின் தமிழ் வடிவம் இது.
இதனை எழுதியவர் Lindsey O'Rourke

இவர் அரசியல் விஞ்ஞானத்தில் கலா நிதிப்பட்டம் பெறுவதற்காக சிக்காகொ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இக்கட்டுரை தொட்டுச்செல்கிற மிக முக்கியமான சில விடையங்கள் கருதி இதை மொழிபெயர்க்க விரும்பினேன்

தற்கொலைப்போராளிகள் பற்றி இக்கட்டுரை ஆழமான பார்வையை கொண்டிராத போதும் அமெரிக்க நலனில் இருந்து பிரச்சனையை அணுகுகின்ற போதும்

பெண் தற்கொலைப் போராளிகளின் விளைதளங்களான இரண்டு அம்சங்களை சுட்டுகிறது
1. அந்தந்த நாடுகளில் நிலவும் பெண் ஒடுக்குமுறைகள்.
2.அன்னிய ஆக்கிரமிப்பு

கட்டுரையில் சில பகுதிகளை தடிப்பாக்கி நிறமுட்டியிருக்கிறேன்
அழுத்தம் தருவதற்காக.

மொழி பெயர்ப்பும் குறிப்பும்
தேவ அபிரா
21/09/2008


தற்கொலைத்தாக்குதல்கள்-வெடிகுண்டுக்குப்பினால் உள்ள பெண்மணி




இந்தக் கிழமை மேலும் நான்கு ஈராக்கி பெண்கள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் இந்த வருடத்தில் பெண் தற்கொலையாளிகள் மேற்கொண்ட 27வது தாக்குதல் இதுவாகும்.
பத்திரிகைகளை அல்லது தொலைக்காட்சிகளை அவதானிப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் இப் பெண்களின் தற்கொலைப்பயங்கரவாதத்தின் வேர்களைப்பற்றித் தெளிவற்ற கருத்தை அல்லது தவறான அபிப்பிராயத்தையே கொள்ளும்படி வழிநடத்தப்படுவது புலனாகிறது.

இந்தப் பெண்கள் விரக்தியினால், மனநோயினால், சமய அடிப்படையில் உண்டான ஆணாதிக்கக் கருத்துக்களின் ஆதிக்கத்திற்குட்பட்டதால், பால்ரீதியிலான சமமின்மையால் உண்டான விரக்தியினால், மேலும் பெண் என்பதால் இருக்கக் கூடிய சிறப்பான ஒடுக்குமுறைக்காரணிகளால் பயங்கரவாதிகளாக மாறியதாகக் கூறப்பட்டிருக்கிறோம்.

உண்மைதான்! இங்கு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒரே கருத்து என்னவெனில் ஆணையும் பெண்ணையும் தற்கொலைக்கொலையாளிகளாக மாற்றுகின்ற உந்துணர்வு அடிப்படையில் வேறுபட்டதாகும். ஆயினும் இங்கு முக்கியமான பிரச்சினை என்னவெனில் பெண்களைத் தற்கொலையாளிகளாக மாற்றுகிற குறிப்பான பெண்ணியக் காரணிகள் இவை எனச் சுட்டிக்குறிப்பிடுவதற்கு ஆதாரங்கள் மிகக்குறைவு அல்லது இல்லை எனலாம்.

1981 ம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் பெண்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த தற்கொலைத் தாக்குதல்களை நான் அவதானித்து வந்துள்ளேன்.ஆப்கானித்தான், இஸ்ரேல், இந்தியா, லெபனான், பாகிஸ்தான், ரஸ்சியா, சோமாலியா, இலங்கை, துருக்கி மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களையே குறிப்பிடுகிறேன். மேற்குறித்த நாடுகளில் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட அப் பெண்களின் நோக்கங்களை அறிவதற்காக மேற்குறித்த தாக்குதல்கள் பற்றிய தரவுகளை, தற்கொலைப் பயங்கரவாதம் தொடர்பான சிக்காகோ ஆய்வுத்திட்டத்தின் தரவுக்கோவையில் உள்ளடக்கப்பட்டிருந்த, அதுவரை அறியப்பட்டிருந்த பெண் தற்கொலைத் தாக்குதல் பற்றிய விபரங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தேன். இந்த ஆராட்சி என்னை தெளிவான ஒரு முடிவுக்கு இட்டுச் சென்றது.
தற்கொலைத் தாக்குதலுக்கு பெண்ணைத் தூண்டுகிற பிரதான உந்துணர்வுகளும் சூழ்நிலைகளும் ஆண்களை அதே வகையான (தற்கொலைத் தாக்குதலுக்கு) தாக்குதலுக்கு தூண்டுகிற காரணிகளில் இருந்து பெருமளவில் வேறுபட்டதாக இருக்கவில்லை. ஆயினும் பெண் தாக்குதலாளர்களை ஆட்சி செய்யும் பரிமாணங்களைப் புலனாய்வு செய்வது இவ்வகையான தாக்குதல்கள் பற்றிய தவறான கருதுகோள்களைத் திருத்திக் கொள்ள உதவுவதுடன் பொதுவில் தற்கொலைப் பயங்கரவாதத்தின் முக்கியமான பண்புகளை இனம் கண்டுகொள்ளவும் உதவும்.
இது தொடர்பாக ஆரம்பிப்பதற்கு எளிமையான- இது பெண் தாக்குதல்காரர்களினது எனப் பொதுமைப்படுத்தப்படக்கூடிய அவர்களது எண்ணிக்கை, வயது இயல்புகள் குணாதிசியங்கள், நோக்கங்கள், சமூகநிலை போன்ற அம்சங்கள்( Demographic profile)அவர்களிடையே இல்லை.

1980 களில் லெபனானில் இருந்து இஸ்ரேலை வெளியேற்றுவதற்காக தற்கொலைத் தாக்குதல்களை ஆரம்பித்து வைத்த திருமணமாகாத இடதுசாரிகளால் இருந்து, தங்களது கணவர்மார்களைப் போர்களில் இழந்த செச்சென்யாவின் கறுப்பு விதவைகள் என அழைக்கப்பட்ட பெண் தற்கொலைத் தாக்குதலாளிகளில் இருந்து, இலங்கையின் பிரிவினவாத இயக்கமான விடுதலைப் புலிகளின் நீண்டநாள் அதிதீவிர விசுவாசிகளான பெண் தற்கொலை போராளிகள் வரை எல்லாருமே கருத்தியலிலும் தன்னிமனித அனுபவங்களிலும் மிக வேறுபட்ட வாழ்க்கை வரலாற்றுக்குறிப்புகளையே வெளிப்படுத்தி நிற்கிறார்கள்.
செய்திகளை சுவாரசியமாக்குவதற்கும் வாசகர்களை ஆர்வப்படுத்துவதற்கும் (மேலும் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தினை கோடிட்டுக் காட்டுவதற்காகவும் தாக்குதல்களில் ஈடுபடும் இவ்விளம் பெண்களை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் எனவும் இத்தாக்குதல்களை மேற்கொள்ளும்படி பலவந்தப்படுத்தப்பட்டவர்களாகவும் கதைகளிலும் செய்திகளிலும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் இவ்வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகச்சிலவே! உதாரணமாக தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடும் பெண்கள் தங்களது நடு இருபது வயதுகளைக் கடந்தவர்களாகவும் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடும் ஆண்களை விடவும் வயது கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர்
மேலும் பெண்கள் பலவந்தப்படுத்தப்பட்டே தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற கூற்றும் மிகையானதாகவே இருக்கிறது.
ஊதாரணமாக பக்தாத் பொம்மைச் சந்தையில் பலரைத் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொன்ற இரு பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என நன்கு பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் பிற்பாடு அது அவ்வாறில்லை என அறியப்பட்டது.
இஸ்லாமிய அடிப்படை வாதத்தை இது தொடர்பில் குற்றம் சொல்வதும் சூழ்நிலைகளுக்குப் பொருந்தாத வாதமாகும்.
1981ம் ஆண்டில் இருந்து தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட பெண் போராளிகளுள் 85 வீதமானவர்கள் மதசார்பற்ற நிறுவனங்களின் சார்பிலேயே தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்பது மட்டுமல்ல இவர்கள் கிறிஸ்தவ மற்றும் இந்து குடும்பங்களிலேயே பிறந்து வளர்ந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
மேலும் இஸ்லாமியக் குழுக்கள் பொதுவில் பெண்கள் தற்கொலைப் போராளிகளாக உருவாகுவதை ஊக்குவிக்கவில்லை என்பதுடன் மிகத் தவிர்ப்பான சூழ்நிலைகளில் மிகக் கோபமும் தாக்கவேண்டும் என முனைப்பும் உறுதியும் கொண்டிருந்த சிலரையே தற்கொலைத்தாக்குதலாளிகளாக அனுமதித்தனர்.
2000 ம் ஆண்டு இரண்டாவது இன்ரிபாடா(Intifada) வின் ஆரம்பத்தில் கமாஸ் இயக்கத்தின் ஆரம்ப ஸ்தாபகரான சேக் அகமட் யாசின் பின்வருமாறு கூறினார்: “பெண் தற்கொலைப் போராளி என்னும் கருத்து இஸ்லாமிய சமூகத்திற்குப் பிரச்சினை தரும் விடையம். பெண்னை இத்தகைய தாக்குதல்களுக்கு சேர்த்துக் கொள்பவர்கள் இஸ்லாமியச் சட்டங்களை மீறுகிறார்கள்”
2002ம் ஆண்டு சமய சார்பற்ற அமைப்பான அக்ஸ் தற்கொலைப் படை (Aqsa Martyrs Brigade) சார்பில் குண்டுத் தாக்குதலை நடாத்திய இரண்டாவது பலஸ்தீனப் பெண் போராளியான தாரின் சுபு எய்சேக்(Dari abu Eisheh) இனை கமாஸ் நிராகரித்திருந்தது.
ஆக பெண் தற்கொலைப் போராளிகளை தூண்டுவது எது?.
ஆச்சரியப்படத்தக்க வகையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஆண்களை ஈடுபடத் தூண்டுகிற அதே விடையங்களே பெண்களையும் ஈடுபடத் தூண்டுகின்றன.
95 வீதமான தற்தொலைத் தாக்குதல்கள் அந்நிய ஆக்கிமிப்புப் படைகளுக்தெதிரான இராணுவத் தாக்குதல்களின் நிமித்தமே செய்யப்பட்டுள்ளன. இதனை நான் மேலெழுந்தவாரியான ரீதியில் சொன்னாலும் இத்தாக்குதல்களின் தந்திரோபாய ரீதியான தர்க்கவியல் தங்களது இன ரீதியான பிரதேச இறையாண்மையை உருவாக்குதல் அல்லது தக்கவைத்தல் என்பதாகவே இருக்கிறது.
இத்துடன் தொடர்புடையதாக ஆண் மற்றும் பெண் தற்கொலைப் போராளிகளின் முதன்மையான தனிமனித உந்துணர்வாக இருப்பது அவர்களின் சமூகம் மீதான ஆழமான பற்றுறுதியும் எதிரிப்படைகளின் மீது கொண்டுள்ள பல்வேறு தனிப்பட்ட வெறுப்பணர்வுகளும் ஆகும்.
பயங்கரவாத இயக்கங்கள் ஆண்களினதும் பெண்களினதும் தனிப்பட்ட இத்தகைய உந்துணர்வுகளை நன்கு அறிந்து வைத்துள்ளன. இதனடிப்படையில் அமைந்த ஆட்சேர்ப்புத் தந்திரோபாயங்கள் பெண்களை முதன்நிலைப்படுத்தி நிற்கின்றன.
இந்த ஆட்சேர்ப்புத் தந்திரங்கள் பல வாதங்களை- இன்னும் ஒன்றுடன் ஒன்று முரண்படுகிற வாதங்களை முன்வைக்கின்றன.
சமூகத்தில் ஒடுக்கபட்டுள்ள பெண்கள் அதற்கெதிரான ஒரு பெறுமதியான மதிப்புமிக்க பங்களிப்பைத் தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் செய்வதாகக் கூறப்படுகிறது.
தேசியத்தில், சமயத்தில், சமூகத்தில் பெண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாத்திரத்தை மீறுவதன் மூலம் ( தற்கொலைத் தாக்குதல் மூலம்) பழிவாங்குவதன் மூலம் பெண்களுக்கு மதிப்பளிக்கப்படுதிறது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. எதுவாயினும் தந்திரோபாய ரீதியான மூல நோக்கம் அந்நியப்படைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தலென்பதாகும் எனவே மூலவுபாயத்துடன் முரண்படாத எந்தவொரு உந்துணர்வும்மேற்றுக்கொள்ளப்படுகிறது.


எல்லா மதசார்பற்ற இயக்கங்களும் ஆரம்பத்திலேயே அடிக்கடி தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பெண் போராளிகளைப் பயன்படுத்தி இருந்தனர். உதாரணமாக குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் 76 சதவீதமான தற்கொலைப்போராளிகள் பெண்கள். இதேபோல செஸ்னியாவின் பிரிவினவாத குழுக்களின் 66 வீதமான தற்கொலைப் போராளிகள் பெண்கள். சிரியாவின் தேசிய சோசலிச கட்சியின் 45 வீதமான தற்கொலைத் தாக்குதலாளிகள் பெண்கள். விடுதலைப் புலிகளினது சதவீதம் 25 ஆகும்.
சமய ரீதியான குழுக்கள், சமய ரீதியற்ற குழுக்களின் பெண் தற்கொலைத் தாக்குதலாளர்களின் வெற்றிகளை அவதானித்த பின்னரே தற்கொலைத் தாக்குதல்களில் பெண்களை ஈடுபடுத்துவதில் உள்ள தந்திரோபாய முக்கியத்துவத்தை உணர்ந்தன.
உதாரணமாக ‘உம் ஒசாமா'(Um Osama) எனத் தன்னை அழைத்துக் கொண்ட அல்கைடாவின் பெண் பிரதிநிதி ஒருவர் சவுதி அரேபியாவின் பத்திரிகை ஒன்றுக்கு 2003ம் ஆண்டு வழங்கிய பேட்டியொன்றில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் பலஸ்தீன இளம் பெண் போராளிகள் நடாத்திய தாக்குதல்களினால் கிடைத்த வெற்றிகளில் இருந்தே பெண் தற்கொலைக்கொலையாளிகள் பற்றிய கருத்தாக்கம் எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஏன் பெண்களை உபயோகிக்க வேண்டும்?

இந்த தாக்குதல்கள் நிகழ்கிற இடங்களில் உள்ள சமூகங்களில் பெண்ணின் நடத்தைகள் தொடர்பான விதிகள் அல்லது ஒழுங்குகள் இருக்கின்றன. உண்மையிலும் அவ்வாறு தோன்றாவிடினும் இவ் விதிகள் அல்லது ஒழுங்குகள்தான் பெண் தாக்குதலாளாளர்களை உருவாக்கும் தந்திரோபாய மூலமாக இருக்கிறது.
அனேகமான இந்நாடுகளில் பெண்கள் இரண்டாம் தரப்பிரசைகளாகவே இருக்கின்றனர்.
பெண்கள் இராணுவக் கண்ணோட்டத்தில் குறைந்தளவு சந்தேகப்பார்வைக்குள்ளாகின்றனர். மேலும் பெண்களால் வெடிபொருட்களை இலகுவாக மறைத்துக் கொள்ளவும் முடிகிறது. “பெண் தாக்குதலாளர்கள் என்பது இன்னும் அதிர்ச்சிக்குரிய விடையமாக இருப்பதுடன் பெண் தாக்குதலாளர்கள் செய்தி ஊடகங்களின் குறிப்பான கவனத்தை ஈர்ப்பவர்களாகவும் அமைகின்றனர். இதன் மூலம் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களையும் ஈர்க்க முடிகிறது.
இவ் எண்ண ஓட்டத்தில் எனது ஆராட்சியில் இன்னுமொன்றும் புலனாகியது. தனியொரு இலக்கை அல்லது ஒருவரைத் தாக்கி அழிப்பதற்கு ஆணைவிடப் பெண் தற்கொலைத் தாக்குதலாளரைப் பயன்படுத்தும் உத்தியே அது.
இதற்கு உதாரணமாக மிகப்பிரபலமான தற்கொலைத்தாக்குதலான 1991ம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியான ராஜுவ் காந்தி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலைக் குறிப்பிடலாம். இது விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலாளியான தேன்மொழி ராசரத்தினம் என்பவரால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

ஆக ஈராக்கில் பெருகி வரும் பெண் தற்கொலைத் தாக்குதால்காரர்களிடம் இருந்து எப்படி பாதுகாப்பை பலப்ப்டுத்துவது?
தர்க்க ரீதியாக பார்த்தால் பாதுகாப்பு முனைகளில் பெண்களை மிகக்கவனமாகச் சோதிப்பது முதற்படியாக இருக்கும். இதற்கு இணையாக அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் “ஈராக்கின் புதல்விகள்” என்னும் திட்டத்தையும் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் ஈராக்கில் பெண்களுக்கு பெண்களைச் சோதனையிடுவதற்கு பயிற்சி வழங்கும் முயற்சியில் உள்ளனர். இதன்மூலம் பெண் தாக்குதலாளர்களை இலகுவாக அடையாளம் காணமுடியும் என்பது நோக்கமாகும்.
ஏவ்வாறெனினும் இத்திட்டம் திட்டவட்டமான விளைவுகளை தருமென்பதற்கு எந்த உறுதியுமில்லை. என்பதற்குப் பின்வரும் மூன்று விடையங்களும் ஆதாரமாகும்.
முதலாவது இத்திட்டம் மிகச்சிறியதாகவும் 30 பெண்களே இப்பயிற்சியை முடித்து வெளியேறியும் உள்ளனர். மேலும் இவர்கள் ஒரு மாதத்தில் சில நாட்களே வேலையில் ஈடுபடுகின்றனர்.
இரண்டாவது அந்நியப் படைகளுக்கெதிரான கோப உணர்வே இத்தற்கொலைத் தாக்குதல்களுக்கு மூலவேராக இருக்கும் போது ஈராக்கில் பெண்களது தேசாபிமானத்தை மேற்குறித்த திட்டத்தின் மூலம் விலைக்கு வாங்க முற்படுவது இன்னும் ஆத்திரமூட்டும் செயலாகவே இருக்கும்.
மூன்றாவது கடுமையான பாதுகாப்புக் கட்டமைப்புக்கு எதிராக புதிய தந்திரோபாயங்களைத் தேடி வரும் சமய அடிப்படைவாதக் குழுக்கள் பெண்களை தாக்குதலாளர்களாக உள்வாங்காத பழமையான நிலைப்பாட்டில் இருந்து மாறிப் பெண்களைத் தற்கொலைத்தாக்குதலாளர்களாக மாற்றும் நிதர்சனம்.
ஆக ஈராக்கின் புதல்வியர் போன்ற இத்திட்டங்கள் தற்காலிகமானவையே.



நீண்ட காலத்தில் பெண் தற்கொலைத் தாக்குதல்களைக் குறைப்பது என்பது ஈராக்கில் ஈராக்கி மக்கள் தங்களது பிரத்தியேகமானது எனக் கருதுகிற சூழ்நிலைகளில் அமெரிக்க படைகளின் பிரசன்னத்தைக் குறைக்கும் தந்திரோபாயத்துடன் சம்பந்தப்பட்டதேயாகும். அதேவேளை எல்லா ஈராக்கியர்களுக்கும் போதுமான உதவிகளை வழங்குவதன் மூலம் அவரகள் எல்லோரினதும் வாழ்க்கைத் தரத்தை உயரத்த உதவவும் வேண்டும்.
ஆக இப்போதைக்கு தந்திரோபாயரீதியாக பெண்தற்கொலைத்தாக்குதலாளர்களுக்குள்ள தேவையைக் கருத்துக்கெடுக்கும் போது அவர்களின் தாக்குதல்கள் பெருகுவதையே காணமுடியும்.
தங்களது கண்களில் தமது தேசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் காண்கிற அவர்கள் அதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தங்களையும் தங்களது சக நாட்டாரையும் கொல்கிறார்கள்.

நன்றி
International Herald Tribune.

SUICIDE ATTACKS
The woman behind the bomb
By Lindsey O'Rourke
Published: August 4, 2008

21 ஆகஸ்ட், 2008

காதல்

காதல்

கடலோங்கிக் கரைதழுவப் பார்த்து
உடலுள்ளிருந்து தவித்தெழுந்தாத்மா
மெய்யிறங்கியுன் விழி தேடி வருகிறது.
பொய்யெது மெய்யெது
போதிமாதவச் சிரிப்பெதுவென்றறியா
மென்மயிர்ப் பூனைபோலேங்கி நடந்தவென்னிதயம்
உன்மார்பிலணைகிறது.
முலைதழுவி முன்னெற்றி மயிரொதுக்கி
முத்தமிட்டுன் நறுவுதட்டுச் சாரலையும் தாவென்று தவித்து
ஆண்மையும் பெண்மையும் பெயரழியும்
காலத்துள் போய்வரவாவென்று கேட்பேன்.
கேசம் கலைந்து கிடந்தவுன் கழுத்தில் புதைந்து புதைந்து
நீலம் படர்ந்த நெடுவான முடிவுக்கும் போவேன்.

மெய்யும் காதலும் ஒன்றென்றுயிர் சுடர்கிறது.

ஆடி - 1997

விசாரம்

விசாரம்

வேர்களில் பரவி
இலைகள் செறிந்து
நிலவுக்கு நிமிர்ந்த
மரங்களின் கீழே நகர்ந்தது அருவி.
இருண்ட காட்டின் நறுமணமும் கமழ்ந்தது.

நீரலையைத் தழுவும் பாறையை மருவிக்கிடக்கையில்
வாவென இழுத்துத் தேகம் ஆட்டும்
அருவியைக் கேட்டேன்:
"மானிட ஆத்மாக்களின் துயரம் ஊற்றெடுப்பது எங்கிருந்து ...?
கனவின் வண்ணங்களுடன் வரும் இதய ஆழத்தின் குமிழிகள்
பூமியில் உடைவதேன்...?
காலத்தின் மெளனத்தில் புதைந்திருப்பது என்ன...?"

அருவி போய்க் கொண்டிருந்தது.

மார்கழி - 1994

பிரிதல்

பிரிதல்


இரவுக் காற்றில் மனித முறையீட்டின் பாங்கொலி.
பாறைகளைத் தழுவும் ஆற்றின் குரல்.
ஓயாது சலியாது
பள்ளத்தாக்கின் பாறைகளும் ஆறுகளும் செய்யுமோ காதல்?

மலைகளைப் படலமிட்ட புல்வெளியில்
விழுகிறது என்னிதயம்.

உன் விழிகளுக்கு ஒளியென்னும் அர்த்தம்
இல்லையென்றுணராமல் போனேனே!

மலைகளை மோதிக் குளிரில் உறையுமோ காதல்?

நாளை நான் போய் விடுவேன்
தடுமாற்றம் நிறைந்தது இவ்விரவு - உனக்கு.

இருளான இதயங்களுக்குள் நீ
சிறுசுட்டி - நின்றெரியும் அதன் சுடராகவாவது ஆகியிருக்கலாம்

நீயும் என்னை மறந்தாய்.

சமரசங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டதென் ஆத்மா.

முன்னறையில் இருந்து
பிரியும் என் முதுகைப் பார்த்திரு!

புரட்டாதி - 1993

31 மே, 2008

இலங்கையின் ஊடகத்துறையும் அது எதிர்கொள்ளும் சவால்களும்:

உலகத்தமிழ்ச் செய்திகள் என்னும் இணையத்தளத்தில் பரிபூரணன் என்பவர் எழுதிய கட்டுரையை இங்கு இணைத்துள்ளேன்

இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் அய்யாத்துரை நடேசன் கொல்லப்பட்டு இன்று 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004 ஆம் ஆண்டு ஒரு திங்கட்கிழமை காலை 8 மணியளவில் தனது வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது ஆயுததாரிகளினால் அவரது உயிர்காவுகொள்ளப்பட்டது. 2002 ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதானம் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருந்த காலப்பகுதி அது. இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க கோலோச்சியகாலம் அது. விடுதலைப் கிழக்கின் தனித்துவம்பேசி புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறிய மிகப்பரபரப்பான காலம் அது. வீரகேசரி,ஐ.பீ.சீ மற்றும் உள்நாட்டு இலத்திரணியல் ஊடகங்களில் செய்தியாளராக கடமையாற்றிய நடேசன் சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். ரிச்சார்டீ சொய்சா முதல் நிமலராஜன், நடேசன், சிவராம், ரஜிவர்மன், ரேலங்கி செல்வராஜா, றமேஸ்நடராஜா, பாலநடராஜஐயர், சுகிர்தராஜன் சம்பத் லக்மால் என நீண்டு இறுதியாக மே28 ஆம் திகதி தேவகுமாரன் என 15க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை இலங்கை பலிகொண்டிருக்கிறது. சில ஊடகவியலாளர்கள் காணமல் போனவர்களாகவே உள்ளனர். 2005 ஆம் ஆண்டின் பின் மே 31 2008 வரை யாழ்ப்பாணத்தில் மட்டும் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இப்போ யாழ் குடாநாட்டில் ஊடகத்துறையின் பக்கம் தலைவைத்து படுக்கக் கூட ஊடகத்துறையினர் பயப்படுவதாக ஒரு ஊடகவியலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். அங்கு மட்டும் அல்ல இலங்கையின் எப்பாகத்திலும் இன்று ஊடகத்துறை தனது பணியை சுதந்திரமாகச் செய்ய முடியாதவாறு அராஜகம் தலைவிரித்தாடுகிறது. ஆரசாங்கத்திற்கு சார்பான திவயின பத்திரிகையின் பாதுகாப்பு பத்தி எழுதாளரின் பேனாகூட பாதுகாப்பு குறித்து எழுத வேண்டாம் என்ற கட்டளைக்கு உட்பட்டுள்ளது. முன்பு வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே பிரச்சனை என்ற கால் மாறி இலங்கை பூராகவும் ஊடகவியலாளர்கள் கொடூரமாக அடக்கப்படுகிறார்கள், பழிவாங்கப்படுகிறார்கள். இக்பால் அத்தாஸ் முதல் ஹேயித் நொயார் வரை ஏராளமான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும், கொலைப்பயமுறுத்தலுக்கு உள்ளாகியும் உள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக அரசாங்க ஊடகமான ரூபவாஹினிக்குள் ஒரு அமைச்சர் புகுந்து ஊடகவியலாளர்களை தாக்கி அச்சுறுத்தி உள்ளார். அதேபோல் லேக்கவுஸ் பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு செயலரால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கையின் ஊடகத்தொறையின் செல்நெறி குறித்து சற்று பின்னோக்கிப் பார்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இலங்கையின் ஊடகத்துறை என்பது மொழிசார்ந்த இனம் சார்ந்த மதம்சார்ந்த ஒன்றாக தற்போது வளர்ச்சி பெற்றுள்ளது. ஊடகம் என்ற பொது வரையறையைத் தாண்டி குறுகிய வட்டத்துள் தனது செயற்பாட்டை குறுக்கிக்கொண்டுள்ளது.

1983களின் பின் எழுச்சிபெற்ற தமிழ்தேசிய விடுதலைப்போராட்டமும் குறிப்பாக ஆயுத எழுச்சியும் தமிழ் சிங்களம் என்ற மொழிவாரியான இனக் கூர்மையை, இனரீதியான பிரிவினையை கூர்மை அடையச் செய்தன.

இதனால் ஆரம்பத்தில் இரண்டு பிரதான இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்தி வந்த ஊடகங்கள் 1990களில் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட பின்னர் மூவினங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வெளிப்படுத்த முயற்சித்தன.

எனது அறிவுக்கு எட்டியவகையில் 1990களின் பிற்பாடு இலங்கையின் பிரதான 3 இனங்களான சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஊடகங்கள் எழுச்சிபெறத் தொடங்கின. இந்த புதிய ஊடக கலாச்சாரம் அச்சு ஊடகங்களிலேயே அவதானிக்க முடிந்தது.

சிங்கள மொழிசார்ந்த அச்சு ஊடகங்கள் பல சிங்கள தேசியவாதத்த்தை நியாயப்பாடுத்துவதாகவும், தமிழ் மொழி சார்ந்த ஊடகங்கள் தமிழ்தேசியவாதத்தை நியாயப்படுத்துகின்றனவாகவும் தம்மை அடையாளப்படுத்தின.

தழிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டபோதும்; இனரீதியாக முஸ்லீம் கலாசாரத்த்தை கொண்ட முஸ்லீம்கள் தமது தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தும் அச்சு ஊடகங்களை ஆரம்பிக்கலாயினர்.

இந்த செயற்பாடுகள் காலப்போக்கில் தமது தனித்துவங்களை உறுதிப்படுத்துவதற்கான அமைப்பியல் சார்ந்த நடவடிக்கைகளாகவும் மாற்றம் பெற்றன.

அதனால் 1990களின் பிற்பகுதியில் தமிழ் ஊடகவியலாளர் சங்கங்கள், முஸ்லீம் ஊடகவியலாளர் சங்கங்கள், சிங்கள ஊடகவியலாளர்களை அறுதிப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊடகசங்கங்கள் என பல தோற்றம் பெற்றன.

இது இலங்கையின் ஊடகத்துறையில் ஒரு பாரிய சிக்கலான அல்லது முரண்பட்ட விடயமாக காணப்படுகின்றது.

குறிப்பாக பக்கசார்பற்ற தகவல்களை வழங்குகின்ற தமது கடப்பாட்டில் இருந்து விலகிச் செயற்படும் பல ஊடகங்கள் பக்கச் சார்பான, அல்லது தாம் சார்ந்த இன, மொழி, மத, பண்பாட்டு கலாசார விழுமியங்களை முதன்மைப்படுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் மரபு சார்ந்த அல்லது அடிப்படைவாத நிலைப்பாடுகளை எடுத்துள்ளன.

இந்த துர்ப்பாக்கிய நிலையானது, உரியதும் முக்கியமானதுமானதும் சரியானதுமான தகவல்கள் மக்களை சென்றடைய முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன.

இலங்கையின் ஊடகத்துறையின் அடுத்த பிரதான பிரச்சனை அரசாங்க ஊடகங்கள் அல்லது அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்களின் செயற்பாடுகள்.

மறுபக்கம் தனியார் ஊடகங்கள் அல்லது அரசியல் கட்சிகளைச் சார்ந்த அல்லது அவற்றிற்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்துள்ள ஊடகங்களின் செயற்பாடுகள்.

இந்த நடைமுறையானது இலங்கையில் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக ஒழுக்கவியற் கோட்பாடு என்ற ஒன்றின் இன்றியமையாத தேவையை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் இலங்கை சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டைக் கடந்த பின்பும் இலங்கையின் ஊடகத்துறையினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய பொதுவான ஊடக ஒழுக்கவியற் கோட்பாடு இல்லை என்றே கூறலாம்.

இன்னொரு புறம் இலங்கையில் 1980களின் ஆரம்பத்தில்; தோற்றம் பெற்ற ஆயுதப் போராட்டத்தின் ஊடு, பல ஆயுத அமைப்புக்கள் உருவாக்கம்பெற்றன. இந்த அமைப்புகளில் முன்னர் உறுப்பினர்களாக இருந்து, அவற்றில் இருந்து விடுபட்டு தற்பொது ஊடகவியலாளர்களாக பலர் மாறி உள்ளனர். அதேவேளை தற்போதும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பலரும் தமது அமைப்புக்களின் ஊடகங்களிலும் பிற ஊடகங்களிலும் ஊடகவியலாளர்களாகவும் தம்மை அடையாளப் படுத்தியுள்ளனர்.


இன்னும் சிலர் ஊடகவியலாளர்களாக உள்ள அதேநேரம் மறைமுகமாக ஆயுத அமைப்புக்களுடன் உறவை வைத்திருப்பவர்களாக காணப்படுகின்றனர்.

மேற்குறித்த இந்த விசேட பண்பு தமிழ் ஊடகத்துறையிலேயே காணப்படுகிறது.

இதனால் ஊடகத்துறையில் இவர்கள் தொழிற்படும் போது மாற்று தரப்பினர் இவர்களை அவர்களின் பின்புலத்தோடு இணைத்து சந்தேகத்தோடு நோக்குகின்றனர்.

இது இவர்கள் என்ன சொல்ல வருகின்றனர் என்பதற்கு அப்பால் இவர்கள் யார் இவர்களின் பின்புலம் என்ன என்ற விடயங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. அதனால் இவர்களினால் வெளியிடப்படும் கருத்துக்களுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகின்ற நிலமை காணப்படுகின்றது.

இந்த முரண்பாடும் கடந்த காலத்தில் எம்மில் பலர் கொல்லப்பட்டும் காணாமல் போவதற்குமான பிரதான காரணிகளில் முக்கியம் பெறுகின்றன.

மறுபுறம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கூறுகின்ற, அல்லது வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர முனையும் ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் புலிகளாக அல்லது புலி ஆதரவாளர்களாக அல்லது அதற்கும் மேலாக தேசத் துரோகிகளாக பார்க்கும் தென்பகுதியின் நிலை.

ஆரம்பத்தில் தமிழ் ஊடகங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த பார்வை தற்போது அனைத்து ஊடகங்களுக்குமே பொதுநிலைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று ஆயுதப் போராட்டதரப்புகளை விமர்சிக்கும் அல்லது அத்தரப்பினரின் உண்மை நிலைகளை வெளிக்கொணர முற்படும் ஊடகங்கள் அரச சார்பு ஊடகங்களாகவும் அல்லது தமது நிலைப்பாட்டுக்கு துரோகம் இளைப்பவர்களாகவும், போராட்டத்தை காட்டிக் கொடுப்பவர்களாகவும், அல்லது தமது ஆயுதக் குழுவை காட்டிக் கொடுப்பவர்களாகவும் நோக்கப்படும் நிலை தொடர்கிறது.
இதில் விசேடமான பிறிதொரு பாதிப்பை தமிழ் ஊடகத் துறை எதிர் கொள்கிறது. குறிப்பாக யுத்த பிரதேசங்களிலோ அல்லது வடகிழக்கிற்கு வெளியிலோ தமிழ் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டோ, காணாமல் போயோ, கொல்லப்பட்டோ இருப்பின் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சார்பானவர்கள், விடுதலைப் புலிகளின் ஒற்றர்கள் என பல சிங்கள ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. இது ஊடகத்துறையினருக்கு இடையிலேயே உள்ளகரீதியான முரண்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றன.

மறுபுறம் சிங்கள ஆங்கில ஊடகங்களை நோக்கினால் அரச சார்பு, அரச எதிர்ப்பு ஊடகங்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகள், அரசாங்க செயற்பாட்டாளர்களின் ஊழல்கள், மக்கள் விரோத செயற்பாடுகள் என்பவற்றை விமர்சிக்கும் ஊடகங்கள் அரச விரோத அல்லது தேசவிரோத ஊடகங்களாக முத்திரை குத்தப்படுகின்றன. இதனால் பல ஊடகவியலாளர்கள் உடல், உள பாதிப்புகளுக்கும், ஆபத்துக்களுக்கும் முகம் கொடுக்கின்றனர்.
எனினும் ஒப்பீட்டு ரிதியில் இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களே பாரிய ஆபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த ஆபத்துக்கள் ஆளும் தரப்புகளாலும் ஆயுததரப்புகளாலும் ஏற்பட்டு வருகின்றமையை எவரும் மறுக்க முடியாது.

இதனால் 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆரப்பத்தில் கிழக்கில் இருந்தும் 2005 ஆண்டின் பின் வடக்கில் இருந்தும் 25ற்கும் மேற்பட்ட தமிழ ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இன்னும் பலர் தமது ஊடக தொழிலை விட்டு வேறு தொழில்களுக்கு மாறி உள்ளனர்.

இன்னும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் காணமால் போயுள்ளனர்.

இன்று வடக்கு கிழக்கில் இருந்து சுயாதீன செய்திகளை பெறுவது என்பது மிகவும் சிரமமானதொன்றாகியுள்ளது.

சிங்கள ஆங்கில மொழிமூல ஊடகவிலாளர்கள் சிலரும் தெற்கில் ஆபத்துகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பில் ஊடக சுதந்திரம் குறித்த வரையறைகள் அல்லது மீறப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கான பரிகாரம் என்பன குறித்த தெளிவான வரையறைகள் செய்யப்படவில்லை.

அரசியல் அமைப்பின் 10 முதல் 17 வரையிலான உறுப்புரையில் அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. இதில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசியல் அமைப்பில் ஊடக சுதந்திரம் குறித்து விசேட உறுப்புரைகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை.

அரசியல் அமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் சுதந்திர ஆணைக்குழுக்கள் அமைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன் று ஊடகசுதந்திர ஆணைக்குழு. எனினும் இந்த விடயம் ஆளும் தரப்புகளால் பிற்போடப்பட்டு வருவதனால் நடைமுறையில் அதனைக் காண்பது இயலாத விடயமாகி உள்ளது.

எனினும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் நாட்டின் பாடுகாப்பு, இன ஐக்கியம், சமூகப் பாதுகாப்பு, மதரீதியிலான சுமூகம், பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட நலன்களுக்காக ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த வளிஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூல் நேரடியான ஊடக தணிக்கைகளை ஏற்படுத்த முடியும்.

தவிரவும் உளம்சார்ந்த அல்லது மனோரீதியான மூளைச் சலவை செய்வதன் மூலமும ஊடகங்கள் மீதான மறைமுக அழுத்தங்கள் தொடர்கின்றன.

குறிப்பா யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பனர் தாம்சார்ந்தவர்களது மனோனிலை பாதிக்கப்படும்படி செய்திகள் வெளியிடுவதனைத் தவிர்க்குமாறு கோருகின்றனர்.

அல்லது யுத்தத்தில் உள்ளவர்கள் மனோரீதியிலான விழ்ச்சியை அடைவதற்கு காரணமாகும் தகவல்களை தவிர்க்கும்படியான கோரிக்கைகளை விடுகின்றனர்.

அதாவது ஊடகங்கள் ஊடக வெளிப்பாடுகள் யுத்தமயமாக்கப்படுகின்றன. யுத்தம் புரிகின்ற ஒவ்வொரு தரப்பினரும்; தமது யுத்த விரிவாக்கத்திற்கு ஊடகங்கள பக்கபலமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் ஊடகத்துறையானது தற்போது யுத்தகால ஊடக முறைமைக்கும் மெய்யான இயல்பு நிலைமைக்கும் இடையில் இரண்டும் அற்ற சூழலில் தொழிற்படும் நிலை உருவாகி உள்ளது.

இங்கு ஒரு ஊடக முறைமையானது யுத்தகாலத்தில் எவ்வாறு செயற்படவேண்டும், ஒரு மெய்யான சூழலில் எவ்வாறு தொழிற்பட வேண்டும், இயற்கை அனர்ரத சூழல் ஒன்றில் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்ற தொழில்சார் ஊடக முறைமை இதுவரை உருவாக்கப்படவில்லை.

மறுபக்கம் இலங்கையில் தொழில்சார் ஊடகவியலாளர்களும் குறிப்படத்தக்க வகையில் உருவாகவில்லை அல்லது இருப்பவர்களும் அதற்கான வெளிப்பாடுகளை அடையாளப்படுத்த வில்லை.

காரணம் ஊடக கற்கை நெறி பல்கலைக்கழக மட்டங்களில் பட்டப்படிப்பிற்கான கற்கையாக நடைமுறையில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

தனியார் துறையில் அல்லது பல்கலைக்கழக மட்டத்தில் இருக்கும் ஊடக கற்கை நெறிகள் டிப்ளோமாவாகவும், பட்டபின்படிப்பில் ஊடக தலைப்பை தெரிவு செய்வதாகவும் மட்டுமே உள்ளன.

அத்துடன் ஊடகவியல் என்பது ஒரு நிறுவனமயப்பட்ட வளர்ச்சியை இதுவரை இங்கு பெற்றுக் கொள்ளவில்லை.

மேலைத் தேயத்தில் ஒவ்வொரு நாட்டுக்குமான ஊடக முறைமை என்பது இருப்பது போல் இலங்கையில் இல்லை என்றே கூறலாம். இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சனை அல்ல். இது 3 ஆம் உலக நாடுகளுக்கே பொதுவான ஒரு இயல்பாகக் கொள்ளலாம்;.

எனவேதான் இலங்கை போன்றதொரு நாட்டில் கற்கை நெறியின் ஊடான நடைமுறையோடு பயிற்றப்பட்ட நிறுவனமயப்பட்ட தொழில்சார் ஊடகவியலாளர்களை உருவாக்க வேண்டும்.
அதன்மூலமே ஊடக ஒழுக்கவியல் என்பதனைக் கட்டிஎழுப்ப முடியும்.

இவ்வாறு ஊடகத்துறை கட்டி எழுப்பப்பட்டால் யுத்தகால சூழல் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது செய்தியிடும் முறைமைகளை அல்லது ஆறிக்ககை இடும் முறைமைகளை அவர்கள் புரிந்து கொள்ளமுடியும். இதன் மூல் ஆபத்து விளைவிக்கும் செய்திகளை எவ்வாறு நாசூக்காக கொடுக்க முடியும் என ஊடகவியலாளர்கள் கற்றுக்கொள்வர்.

இதுமட்டும் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. ஊள்நாட்டில் யுத்தகால நிலமையின் போது உடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான பாதுகாப்பை எவ்வாறு உத்தரவாதப்படுத்த முடியும் என்ற பொதுவான பாதுகாப்பு முறைமை ஒன்றை சர்வதேசம் உருவாக்க வேண்டும்.

ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமரிக்க பிராந்தியங்களில் உள்ள 3ஆம் உலக நாடுகளில் நிலவுகின்ற உள்ளக மோதல்களின் போது ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் ஆபத்துக்களை உருவாக்குபவர்கள் மீதான கடுமையான நடைமுறை ரீதியிலான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இவை அறிக்கை வடிவில் அல்லாமல் கடுமையான தடைகள், அல்லது தண்டனைகளை விதிக்க வேண்டும். உள்நாட்டில் சுதந்திரமான ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக உண்மையானதும், சுதந்திரமானதும், விரைவானதும் விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும். ஊடகவியலாளர்களின் கடத்தல் காணாமல் போதல், கொல்லப்படுதல் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். இவற்றின் ஊடு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அவர்கள் சட்டத்தன் பிடியில் இருந்து தப்பிப்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் துணைபுரிவதனை தடுக்க வேண்டும். இதற்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடின் இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டும் அல்லாமல் நாடு பூராகவும் உள்ள ஊடகவியலாளர்கள் பாரிய விளைவுகளை இன்னும் இன்னும் எதிர்கொள்ள நேரிடும் என்பது வெளிப்படை.

பரிபூரணன்
Thanks to Global Tamil News |உலகத் தமிழ்ச் செய்திகள்

13 ஏப்ரல், 2008

எலும்புக்கூடும் இரண்டு கனவுகளும்

எங்கேயென் கனவுகளை எழுதிவைக்கலாம்?
நிறைவேறாத கனவுகளை வேறென்னசெய்ய?
ஏடுகளைக் கரையான் அரிக்கிறது.
எக்காலத்திற்கு வேண்டியவற்றை விட்டுவைக்கிறது- நானறியேன்?
காலம் சுவடிகளின் மீது நடந்து செல்லும்போது
சாமானியர்களின் கனவுகளை மதிப்பதில்லையோ?
ஊழியின் சுவைக்கென ஏங்கும்
ஆழியின் கரையில் இருப்பதே அச்சம் தருகையில்
கரையின் காயாத ஈரத்தில் எப்படி எழுதுவேன்?
அவள் என்னை ஆக்கிரமித்துப்புணர்ந்த;
ஆறு புனைந்த நாணற்படுக்கையில் எழுதிவைத்த கனவுகளை
காலம்தவறி வந்த பெருவெள்ளமள்ளிச்சென்றது.
துருவத்துள் முன்பொருகால் உறைந்து கிடந்த சூரியன்
கனவுகளைக்கரைத்து வெறும்நீராக்கினான்.
சேடமிழுக்கிறது மனிதக்கனவுகளின் துருவம்.
மனித நாகரிகங்கள் விளைந்த மண்ணை அகழ்கிறார்கள்.
ஊரோடும் வாழ்வோடும் புதைந்த மனிதர்க்கருகில்
இறுகிக்கிடந்தன-வாழும் காலத்திற் பேசப்படாக்கனவுகள்.
மென்தூரிகைகள் கொண்டு துலக்குதல் கூடுமோ
கனவுகளின் மௌனத்தை?
நாடோடி போல்
என் கனவுகளுக்கான நிலத்தைத்தேடி நடக்கிறேன்.
சுற்றிவளைப்புக்களுக்கும் தேடுதல்களுக்கும் தப்பிய இரவொன்றை
இடிந்துதிர்ந்து போன இல்லமொன்றினுள் கழிக்கையில்
ஆணென்றும் பெண்ணென்றும் அலியென்றும் வகையிடாக்
கனவொன்றைக் காறைச்சுவர்கட்கிடையிற் கண்டெடுத்தேன்.
என்றோவொருநாள்
என்கனவுகளும் அனாதையாகக்கூடுமென்றஞ்சியிருந்தேன்.
என் கனவின் கூட்டிற்குள் அதுவும் நுளைந்தது.
துகள்கள் நிறைந்து ஒளிபுகாச் சடமாகிய காற்றுவெளியிடை
பஞ்சடைந்ததன் கண்ணூடு நோக்கி
என் அம்மா சொன்னாள்:
“மகனே உன் கனவுகளை ஒருபோதும் விற்று விடாதே”
யுகங்கள் கழிந்து
மீண்டும் மண்ணகழும் போது
நாகரிகமேயில்லாத சமூகத்தோடு
புதைந்தவொரு எலும்புக்கூடும்
இரண்டு கனவுகளும்
மென்தூரிகைகளும்…

13/04/2008
தேவ அபிரா

12 ஏப்ரல், 2008

நாங்கள் சேர்ந்து நடந்தோம்

நாங்கள் சேர்ந்து நடந்தோம்

நாங்கள் இருவரும் ஒரே நோக்கத்திற்காகவே நடந்தோம்

நீ அறிவின் வலிவுடனும்

நான் உணர்வின்தாளத்துடனும்

ஆயினும் நீயும் நானும் ஒரே இலயத்தில் இல்லை

எனேனில் உன் வழி எனதல்ல

நாங்கள் ஒரே பாடலையே படித்தோம்

ஒன்றுடனொன்று பொருந்தாத பாடுமுறையென்றபோதும்

மீண்டும் மீண்டும் முயற்சித்தோம்

எமது எல்லா எத்தனங்களும் தோல்வியில் முடிந்தபோது

நான் உனது முறையிலும் பாட முனைந்தேன்

அக்கணத்தில் அது நானல்ல என்றுணர்ந்தபோது அதிர்ச்சியுற்றேன்.

நானேதான் நானாகவிருக்கவும் எனது பாடலைப்பாடவும்.

எனது பாடல் உன்னைச்சேரவிலை-அச்சமுற்றேன்

ஒரே விளையாட்டை விளையாடிய இருவரும் மகிழ்ச்சியாகவுமில்லை.

உனது ஆட்டவிதிகள் என்னுடையதை விடவும் வெறுபட்டிருந்தன.

இவ்வாறுதான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்தோம்.

ஒவ்வொருவரும் தனக்காக; தனியாக நாளையைநோக்கிய பாதையில்…

உண்மையிலும் எந்தவிடத்தை நோக்கியுமல்ல..

மரிகெ த ஜொங்.

நெதர்லாந்து

மொழிபெயர்ப்பு: சாகித்தியன்
நன்றி:www.globaltamilnews.com