பின்பற்றுபவர்கள்

9 செப்டம்பர், 2007

தலைப்பிட முடியாவொரு கவிதை

புரியாமையில் ஒளி இழந்த உன் விழிகளைத் துயரம் படுத்துகிறது.
போர் நிலத்தின் அனுபவத்தில்
இருண்டு போன மனங்களில்
வன்மம் ஒரு பெரும் சுழியாய் எழுகிறது.
நீ போய் வா!
விகாரமான முகங்களுள் உறவுகள்
புதையுண்டு போயின.
வனங்களின் மர்மம் பிடிபடாது
போர் உன்மத்தம் பிடித்து அலைகிறது.
அலை அடங்கிய ஆடாத கடலின் மெளனம்
தேடுவாரற்றுக் கிடக்கிறது.
இலையுதிர்ந்து உணர்வுகளின் சுழிப்பென
கிளைதிரிந்து பாதையெங்கும் தவமியற்றும்
மரங்களில் தளிர்களை எண்ணப் பிடிக்குமோர் காலத்தில்
திரும்பி வா!


கல்லறைக்கு வர்ணம் பூசும் சவக்காலைத் தெருவில்
நான் ஓடிக் கொண்டிருப்பேன்.

ஆடி - 1999

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக