நகரம் எரிக்கும் 
மாய விளக்குகள்தெறிக்கும் 
கண்ணாடி அறைக்குள்
நான் நெளிந்தேன்.
இரண்டு சாமங்களின் பின்
வேண்டப்படாத வெப்பத்தின் பிசு பிசுப்பில் 
என் ரத்தத்துள் புழுக்கள் நெளிந்தன.
ஆத்மாக்கள் இல்லாது 
பெண்களின் மீது விழும்  உடல்களின்
கனத்தில் இரவு நசியும் போது
மூன்றாம் சாமத்தில்
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
கை விடப்பட்ட அச்சியந்திரமாகி 
மை வடிந்துகிடந்தேன்.
கழிவுக்கூடைக்குள் என் குறியைக் கழற்றி வீசியபின்
ஆடைகளையும் கழுத்துப்பட்டிகளையும் அணிந்து அவர்கள் செல்லுமொலி 
என் கபாலத்துட் குடைகிறது.
அறுவடை முடிந்த இரவின்
அரிய கந்தத்திற் கிளர்ந்தவென் காதலும் 
முதற் புணர்வுமிந்தநகரத்தில் என்றோ முடிவடைந்தன.
என்னை  விற்றவனும் வாங்குபவனும் 
விரித்துவைத்த வானத்தின் கீழ்
கருத்தடை மாத்திரைகளும் ஆணுறைகளும் 
நிறைந்த குட்டியறைகுள் 
நான்காம் சாமத்தில் உறங்கிப்போனேன்.
ஆவணி 2007
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக