பின்பற்றுபவர்கள்

13 ஏப்ரல், 2008

எலும்புக்கூடும் இரண்டு கனவுகளும்

எங்கேயென் கனவுகளை எழுதிவைக்கலாம்?
நிறைவேறாத கனவுகளை வேறென்னசெய்ய?
ஏடுகளைக் கரையான் அரிக்கிறது.
எக்காலத்திற்கு வேண்டியவற்றை விட்டுவைக்கிறது- நானறியேன்?
காலம் சுவடிகளின் மீது நடந்து செல்லும்போது
சாமானியர்களின் கனவுகளை மதிப்பதில்லையோ?
ஊழியின் சுவைக்கென ஏங்கும்
ஆழியின் கரையில் இருப்பதே அச்சம் தருகையில்
கரையின் காயாத ஈரத்தில் எப்படி எழுதுவேன்?
அவள் என்னை ஆக்கிரமித்துப்புணர்ந்த;
ஆறு புனைந்த நாணற்படுக்கையில் எழுதிவைத்த கனவுகளை
காலம்தவறி வந்த பெருவெள்ளமள்ளிச்சென்றது.
துருவத்துள் முன்பொருகால் உறைந்து கிடந்த சூரியன்
கனவுகளைக்கரைத்து வெறும்நீராக்கினான்.
சேடமிழுக்கிறது மனிதக்கனவுகளின் துருவம்.
மனித நாகரிகங்கள் விளைந்த மண்ணை அகழ்கிறார்கள்.
ஊரோடும் வாழ்வோடும் புதைந்த மனிதர்க்கருகில்
இறுகிக்கிடந்தன-வாழும் காலத்திற் பேசப்படாக்கனவுகள்.
மென்தூரிகைகள் கொண்டு துலக்குதல் கூடுமோ
கனவுகளின் மௌனத்தை?
நாடோடி போல்
என் கனவுகளுக்கான நிலத்தைத்தேடி நடக்கிறேன்.
சுற்றிவளைப்புக்களுக்கும் தேடுதல்களுக்கும் தப்பிய இரவொன்றை
இடிந்துதிர்ந்து போன இல்லமொன்றினுள் கழிக்கையில்
ஆணென்றும் பெண்ணென்றும் அலியென்றும் வகையிடாக்
கனவொன்றைக் காறைச்சுவர்கட்கிடையிற் கண்டெடுத்தேன்.
என்றோவொருநாள்
என்கனவுகளும் அனாதையாகக்கூடுமென்றஞ்சியிருந்தேன்.
என் கனவின் கூட்டிற்குள் அதுவும் நுளைந்தது.
துகள்கள் நிறைந்து ஒளிபுகாச் சடமாகிய காற்றுவெளியிடை
பஞ்சடைந்ததன் கண்ணூடு நோக்கி
என் அம்மா சொன்னாள்:
“மகனே உன் கனவுகளை ஒருபோதும் விற்று விடாதே”
யுகங்கள் கழிந்து
மீண்டும் மண்ணகழும் போது
நாகரிகமேயில்லாத சமூகத்தோடு
புதைந்தவொரு எலும்புக்கூடும்
இரண்டு கனவுகளும்
மென்தூரிகைகளும்…

13/04/2008
தேவ அபிரா

1 கருத்து:

  1. பெயரில்லாஏப்ரல் 23, 2008 12:35 PM

    புலம் பெயர்ந்தவர்களின் கவிதைகள் உணர்வின் தளத்திலிருந்து அறிவின் தளத்திற்கு மாறி வருகின்றனவோ?

    பதிலளிநீக்கு