பின்பற்றுபவர்கள்

28 ஜூன், 2009

துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்

"நாளைய கனவுகள் இன்று கரைந்தன
நேற்றைய உணர்வுகள் இன்று சிதைந்தன
காக்கி உடையில் துப்பாக்கி அரக்கர்
தாண்டவம் ஆடினர்
ஒரு பெரும் நகரம் மரணம் அடைந்தது."

- ஏம்.ஏ.நு•மான்

பல ஆண்டுகளுக்கு முன் நு•மான் எழுதிய கவிதை இன்று இப்படியாகிப் பொருந்திப்போனது.
இலங்கை அரசு பயங்கரவாதத்தை வென்றுவிட்டது என்று சொல்லிக் கொள்கிறது ஆனால் அது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு எல்லாவிதமான பயங்கரவாதங்களையும் செய்துகொண்டிருக்கிறது. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குள்ள எந்த கடமையையும் சரியாகச் செய்யாத ஒரு அரசாங்கத்திடம் விடுதலைப்புலிப் போராளிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடைய நேர்ந்தது வரலாற்றுத் துயர்.
விடுதலைப்புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை யாவரும் அறிவர். ஆனால் பயங்கரவாத நடவடிக்ககளைச் செய்வதொன்றே அவர்களது நோக்கமாக இருந்ததா?
தமிழ் ஈழத்தை அடைய எதையெல்லாம் செய்தால் முடியும் என்று புலிகளின் தலைமை நினைத்ததோ அவையெல்லாம் நிகழ்த்தப்பட்டன. அதில் பயங்கரவாத நடவடிக்கைகளும் அடங்கும்.
மேலும் ஒடுக்குகிறவர்களின் பண ஆள் ஆயுத பலத்துடன் ஒப்பிடும் போது ஒடுக்கப்படுகிறவர்கள் பலவீனமாகவே இருக்கின்றனர். இப்பலவீனமும் தூர நோக்கற்ற அரசியல் சிந்தனையும், குறுகிய காலத்தில் பலத்த சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஆசையும் காரணமாக விடுதலை இயக்கங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
உலக வரலாற்றில் அரசுகளும் போராட்ட அமைப்புக்களும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு அளவிற் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றன.
அரசோ அல்லது விடுதலை அமைப்பொன்றோ மேற்கொள்கின்ற பயங்கரவாதச் செயல்களுக்கான பொறுப்பை அவற்றின் தலைமையே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எய்தவனிருக்க அம்பை நோவானேன் என்னும் பழமொழி இங்கு பொருந்தும். விடுதலைக்காகப் போராடுகின்ற அமைப்பொன்றின் செயற்பாடுகள் அரசியல் நோக்கமொன்றின் அடிப்படையிலானதாகும்.தமிழ் ஈழம் என்பது அரசியற்கோரிக்கை. எனவே அடிப்படையில் விடுதலைப் புலிகள் அரசியற் கைதிகள்.

இது எனது பூமி என உணர்வுபூர்வமாக எழுந்த இந்த இளையதலைமுறையின் நோக்கம் குற்றச்செயல்களில் ஈடுபடுவதல்ல...

"அய்யா,
என்னை அடைத்து வைக்கிறீர்கள்
நான் ஆட்சேபிக்க முடியாது
சித்திரவதைகளையும்
என்னால் தடுக்க முடியாது
ஏனெனில்,
நான் கைதி.
நாங்கள் கோருவது விடுதலை எனினும்
உங்களது வார்த்தைகளில்
“பயங்கரவாதி”
- ஊர்வசி

ஒரு சனநாயகநாடு அரசியற் கைதிகளை எவ்வாறு நடத்த வேண்டுமோ அவ்வாறே இலங்கை அரசும் அவர்களை நடத்த வேண்டும்.
இராணுவ மற்றும் அரசியல் முரண்பாடுகள் நிகழும் உலகின் சகல பாகங்களிலும் அரசியற் கைதிகள் முறையற்ற விதத்தில் விசாரணை செய்யப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் உலகறிந்த விடையம்.
கியூபாவின் குவந்தனமோ வில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அல்கைத்தாப் போராளிகளை அந்த வகையில் அடைத்து வைப்பதும் நடாத்துவதும் பிழையானதென அமெரிக்க ஒபாமா அரசாங்கம் ஒத்துக்கொண்டு மாற்று வழிகளைத் தேடுகிறதை இங்கு கவனிக்க வேண்டும்.
இலங்கையில் அரசியற் கைதிகளைத் துன்புறுத்துவது சித்திரவதை செய்வது விசாரணை என்ற முறைமைக்குள் முற்றிலும் அடங்காத வழியில் விசாரணை செய்வது எல்லாம் மிகச் சாதாரணமான விடையங்கள்.

“முகமூடி அணிந்த உருவம் ஒன்று என்னை LTTE என்று அடையாளம் காட்டியது. அதைக் கேட்டவுடைனேயே இராணுவத்தினர் என்னைப் பலமாகத் தாக்கினார்கள். அப்போதுதான் இலேசாக மாறிக்கொண்டிருந்த காயங்களின் மேல் துவக்குப் பின்புறத்தால் தாக்கினார்கள். கைவிலங்கிடப்பட்ட நிலையில் மேசைமீது எனது கைகள் வைக்கப்பட்டு விரல்கள் மீது தடியால் தாக்கியதால் எனது வலது கையின் நாலாவது விரல் முறிந்தது. நடுவிரலும் சிதைக்கப்பட்டது. பின் எனது கால் விரல்களைச் சிறு குறடு ஒன்றினால் பிடித்து மடக்கி சத்திரவதை செய்தார்கள். போலித்தீன் பையை நெருப்பில் உருக்கி எனது ஆணுடம்பின் மீது ஊற்றினார்கள். எனது இடது கையில் மெல்லிய கத்தியால் மூன்று தடவைகள் கீறி மிளகாய்த் தூள் போட்டார்கள். நான் மயங்கி விட்டேன்”
- சோபாசக்தி(கொரில்லா என்னும் நாவலில்)


சனநாயகச் சிந்தனை கொண்ட எவரும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்கள் இவை.எந்த வித விசாரணைகளும் இன்றியே இளைஞர்கள் மறைந்து போகிறார்கள்.
பெண் விடுதலைப்புலிப்போராளிகள் இப்படியான சந்தர்ப்பங்க்ளில் அனுபவிக்கக்கூடிய துயரங்கள் பன்முகமானவை.குறிப்பாகப் பாலியற்சித்திரவதைகள்.

விடுதலைப் புலிகளுடன் இறுதிக்காலத்தில் இணைக்கப்பட்டவர்களுள் பெரும்பான்மையானவர்கள் சொந்த விருப்பத்திற்கு மாறாகவே இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். அது அவர்களுடைய அரசியல் தெரிவாக இருக்கவில்லை.
யுத்தக்கைதிகள் அரசியற்கைதிகள் போன்றோரை எவ்வாறு நாடாத்த வேண்டும் எனச் சர்வதேசச்சட்டங்கள் கூறுகின்றன. எந்த போர்க்கைதியும் அல்லது அரசியற்கைதியும் வெளிப்படையாகவே கையாளப்படவேண்டும்.
தோற்கடிக்கப்படுகிற அரசியல் போராட்டத்தில் இணைந்திருந்த அனைவரையுமே கொன்றொழிக்கும், பழிவாங்கும் சிந்தனை மிகக் கொடுமையான பயங்கரவாதமாகும்.
அதனையே இலங்கை அரசு செய்து வருகிறது.
உலக வரலாற்றில் அரசியல் மாற்றங்களின் போதும் போராட்டத் தோல்விகளின் போதும் வெற்றி கொண்டவர்கள் மாற்றவர்களைக் கொன்றொழிப்பதையே வேலையாகக் கொண்டுள்ளனர்.
சாதாரண தமிழ் மக்களையே மிருகங்கள் போல் நடத்தும் இந்த அரசு இந்த முன்னாள் போராளிகளை எப்படி நாடாத்தும் எனச்சொல்லத்தேவை இல்லை
தமிழர்களின் அரசியற் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படாத நிலையில் வன்னியில் எஞ்சியுள்ள இளைய தலைமுறையை அழித்தொழிக்க அரசாங்கம் நினைக்கிறது. ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போது ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இவ்வாறுதான் சுவடில்லாமல் ஆக்கப்பட்டனர்.

தேர்தல் வெற்றிகளோடு அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். யுத்தம் நடந்த மண்ணின் குருதியும் வெப்பமும் ஆறும் ஆறாது யுத்தங்களில் கணவனை மனைவியை பிள்ளைகளை இழந்த சீவன்களின் ரணமும் துயரமும்.

விடுதலைப் புலிகளின் சகல போராளிகளையும் அரசியல் கைதிகளாகவே கையாள வேண்டும்.அவர்கள் யாவரும் மீண்டும் வாழ்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும்.

இலங்கை அரசின் வெற்றியும் மமதையும் மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான நடத்தைகளும் சீரழிந்த நாட்டையே உருவாக்கும்.

அரிதேவா

1 கருத்து:

  1. பெயரில்லாஜூன் 28, 2009 5:41 PM

    //விடுதலைப்புலிப் போராளிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடைய நேர்ந்தது வரலாற்றுத் துயர்.//
    மிக சிறந்த விடயம்.காலம் கடந்த ஞானோதயம்.
    அதை முன்பே செய்திருந்தால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றுப்பட்டிருக்கும், அழிவுகள் குறைந்திருக்கும்.

    பதிலளிநீக்கு