பின்பற்றுபவர்கள்

21 மே, 2012

ஐக்கிய நாடுகள் சபை ஏன் இலங்கையை போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறச் சொல்கிறது? -ஜே.எஸ்.திசைநாயகம்




கடந்த வியாழக்கிழமை ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  இந்தப் பிரேரணை இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கையைப் பொறுப்பு கூற நிர்ப்பந்திக்கும் சர்வதேசத்தின் நம்பிக்கை தரக்கூடிய முதன் முயற்சியாக மனித உரிமை ஆர்வலர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சில் 2009 லேயே முழுமையான அங்கத்துவ நாடாக வந்த அமெரிக்காவினால் இந்தப் பிரேரணை முன்மொழியப்பட்டிருப்பது கவனத்திற்குரியது.  இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ்ச் சமூகங்களுக்கிடையில் நடந்துவந்த 27 வருடச் சிவில் யுத்தம் 2009 இல் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததுடன் முடிவுக்கு வந்தது.
யுத்தம் முடிவடைந்த பிற்பாடு யுத்தம் நடந்த இறுதி மாதங்களில் அரசும் விடுதலைப்புலிகளும் யுத்த விதி மீறல்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டமை வெளிச்சத்திற்கு வந்தது.
ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் இன நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கோருகிறது.
இந்த ஆணைக்குழு போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதே ழுத்தங்களைத் தணிக்கும் நோக்கிலேயே இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டது.
LLRC  2011 டிசம்பரில் தனது பரிந்துரைகளைப் பகிரங்கப்படுத்தியது.  ஆனால் பொதுமக்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொண்ட போதும் இந்தக் கொலைகள் பரந்துபட்டு நிகழவில்லை எனவும் இவை திட்டமிடப்பட்டுத் தீர்மானிக்கப்பட்டு செய்யப்பட்டவை அல்ல எனவும் கூறி இராணுவத்தைக் குற்றக் கூண்டில் ஏற்றுவதைத் தவிர்த்து விட்டது. ஆனால் விடுதலைப்புலிகள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக  LLRC தெளிவாகக் குற்றம் சாட்டியது.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை உள்ளுரிலேயே ஒரு விசாரணைக் குழுவை நியமித்துத் தவறு புரிந்தவர்களைத் தண்டிக்குமாறு கூறியது.
LLRC இன் இந்தப் பரிந்துரைகளுக்கு சர்வதேச சமூகமும் தமிழ்க் குழுக்களும் மனித உரிமைக் குழுக்களும் வலுவான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.  வர்கள் இந்த விசாரணைகளைச் சர்வதேசப் பொறிமுறை ஒன்றுக்கூடாகவே நடாத்த வேண்டும் என்றும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் பாரபட்சமற்றவையாகவோ அரசின் தலையீடு அற்றவையாகவோ இருக்காதென்றும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு சர்வதேசமும் மனித உரிமைவாதிகளும் கோரிக்கொண்டு இருக்கும் போதே இலங்கை அரசாங்கம் தான் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குக் கூடத் தயக்கத்தைக்காட்டியது. இதன் விளைவாக ஜெனிவாவில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை முக்கியத்துவப்படுத்தாமல் LLRC இன் பரிந்துரைகளை நிறைவேற்க் கோருவதென்ற சமரசம் ட்டப்பட்டுக் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
LLRC இனால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் தொடர்பாக மனித உரிமைக்குழுக்கள் ஓரளவுக்குத் திருப்தி அடைந்துள்ளன எனலாம்.  ஏனெனில் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்து ஒன்றில் LLRC இன் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை செய்யும் நடைமுறைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கவுன்சில் (UNHRC) கண்காணிக்கும் எனவும் இதனை இலங்கையுடன் இணக்கப்பாட்டுடனேயே அது செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை மனித உரிமைவாதிகள் இலங்கையில் இருக்கும் ஜக்கிய நாடுகள் சபையின் நிறுவனக் கட்டமைப்பில் இருக்கும் குறைபாடுகள் அல்லது பற்றாக்குறைகள் காரணமாக இலங்கையானது இந்த விடையத்தில் தனது கடமைகளைச் சரியாகச் செய்கிறதா எனக் கண்காணிப்பது முழுவதும் சாத்தியமாக இருக்காது என்றும் அஞ்சுகிறார்கள்.
UNHRC  ஆனது இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தினூடாகவே  இலங்கை LLRC இன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துகிறதா எனக் கண்காணிக்கவேண்டும். ஆனால் இலங்கையில் இருக்கும்  ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் இலங்கையில் நடக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு நன்கொடை வழங்கும் அலுவலகமாகவும் அவற்றைப் பராமரிக்கும் அலுவலகமாகவும் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் மனித உரிமைக் கண்காணிப்பகம் ஒன்றையும் அதனுள் திறப்பதன் மூலம் வினைத்திறனுடன் அதனால் பணியாற்றமுடியுமா என மனித உரிமைவாதிகள் அச்சமடைகிறார்கள்
இலங்கையில் தொழிற்படுகிற ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகம் தான் இலங்கையில் கொண்டுள்ள செயற்பாட்டு முறைமையை, புதிதாக பெற்றுக்கொண்ட பணியை(மனித உரிமைக்கண்காணிப்பு) நிறைவேற்றுவதற்குரிய முறையில் மாற்றுவதற்குத் தேவைப்படுகின்ற வளங்களைக் கொண்டிருக்கிறதா? அதற்கும் மேலாகத் தனது புதிய பணியையும் செவ்வனே செய்யக்கூடிய வகையில் தன்னைத் தனது நிர்வாக ஒழுங்குகளை மாற்றி அமைக்கக் கூடிய விருப்பத்தையும் கொண்டிருக்கிறதா? என்கிற கேள்விகள் எழுகின்றன.
கடந்த கால அனுபவங்களைப் பார்க்கும் போது ஐக்கிய நாடுகள் சபை இத்தகைய விருப்பத்தைப் புலப்படுத்தி இருக்கவில்லை என்பது புலனாகும்.   உதாரணமாக இலங்கை அரசாங்கமானது 2009 இல் தனது இறுதித் தாக்குதலுக்குத் தயாரானபோது விடுதலைப்புலிகளின் சிறிய கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் ஏறத்தாள 300000 அதிகமான மக்கள் அடைபட்டுப்போயிருந்தனர்.  இலங்கை அரசானது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த சகல அரச சார்பற்ற அமைப்புக்களையும் வெளியேறுமாறு அப்பொழுது கட்டளையிட்டது.  அப்பொழுது பொதுமக்கள் தங்களை அனாதரவாகக் கைவிட்டுச் செல்லவேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்களை மன்றாடிய போதும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள்  அந்தப் பகுதியில் தொடர்ந்தும் இருப்பதற்காக இலங்கை அரசுடன் எந்தச் சமரசப் பேச்சுவார்த்தைகளையும் நடாத்த முனையாமல் மக்களை கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்..
ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராக இருந்த கோட்டொன் வைஸ் இந்த நிகழ்வைப் பின்னர் தவறான முடிவென்று கூறியிருந்தார்.
நெருகடியான நிலமைகளில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஏந்தச் சமசர முயற்சியிலும் ஈடுபடாமல் கைவிட்டுச் செல்வது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறை விதிகளுக்கு முரணானது என்ற போதும் சூடானின் டாவூரிலும் கூட சூடான் அரசின் உத்தரவை அடுத்து எந்த விதமான சமரசப்பேச்சுக்களிலும் ஈடுபடாமல் அங்கிருந்து ஐ. நா வெளியேறியிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் இன்னொரு தவறான அணுகுமுறையும் இங்கு குறிப்பிடவேண்டும் இலங்கையில் நிகழ்ந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபை றுத்துவிட்டது.  ஐக்கிய நாடுகள் சபை தாங்கள் உடல்களை எண்ணுவதில்லைஎனவும் வாதிட்டது.
ஆனால் மனிதாமிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளரிடம் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் இருந்ததை ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இருந்து இரகசியமாகப் பெறப்பட்ட ஆவணம் ஒன்றினூடாக உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்ததாக 2009 மார்ச் 18 ல் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்தது.  எனவே இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் சபையிடம் இருந்த போதும் அதனை அது திட்டமிட்டு மறைத்திருந்தது.
டாவூர் தொடக்கம் காசா வரையும் நிகழ்ந்த பல்வேறு போர்களில் ஐக்கிய நாடுகள் சபை கொல்லப்பட்டவர்கள் தொடர்பாஎண்ணிக்கைகளைத் தெரிவித்திருந்த போதும் இலங்கை விடையத்தில் அது இலங்கையைக் காப்பாற்றும் விதமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை திட்டமிட்டு மறைத்திருந்தது என்பதை இன்னர் சிற்றி பிரஸ் வெளிப்படுத்தி இருந்தது.
இத்தகைய சம்பவங்கள் காரணமாக விமர்சகர்கள் இலங்கை விடையத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துகிறார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஜெனிவாவில் கிடைத்த லாபங்களை எப்படிப் பேணிக்கொள்வது என்பது இங்கு கேள்வியாகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின்  மனித உரிமைகளுக்கான தூதுவரும் ஐக்கிய நாடுகள் சபையின்  அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களமும் இதுவரை காலமும் இலங்கையில் மேற்கொண்டு வரும் பணிகளைப்போலல்லாது  மிகவும் தீர்மானகரமான பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியமானதொரு தேவையாகிறது.
ஐக்கிய நாடுகள் சபை தனது சரத்துக்ளில் கூறப்பட்டுள்ளபடிக்கு உண்மையிலும் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் அமைதிக்கு விடுவிக்கபடும் அச்சுறுத்தல்களை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும்  கூட்டு முயற்சிகளையும் எடுக்க விரும்பினால் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் இலங்கையில் அது முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளை மிக நெருக்கமாகக் அவதானிக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட நோக்கங்களை உள்ளடக்கி இருக்கும் இலங்கைக்கான செயற்திட்டத்தைப் பலமாக்கி நிறைவேற்றுவதற்கு முன்னிற்கவேண்டும்.  இதன் மூலமே ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை நடைமுறைச் சாத்தியமானதாக மாறும்.
இலங்கையில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்குரியதாக மாற்றாத விடத்து அது தொடர்பான அக்கறைகளை எடுக்காவிடத்து இலங்கையானது தனது கடமைகளில் இருந்து வழுவிச் செல்வதையே காணமுடியும்.

ஜே.எஸ்.திசைநாயகம்
மொழிபெயர்ப்பு: தேவ அபிரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக