பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2011

காணாமல் போதல்களைக் கண்டும்....

-பசில் பெர்ணான்டோ



நான் சிலகாலங்களுக்கு முன்பு எழுதிய பத்தி ஒன்றில்  இலங்கையில் குற்றச்செயல்கள்  மீதான விசாரணைகளை மேற்கொள்ளுவதை விட்டுவிட்டு  விசாரணைகள் செய்யப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வதந்திகளை மட்டுமே அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் பரப்புவதை  மையப்பொருளாக்கியிருந்தேன். அந்தப்பந்தியில் இலங்கையில் பலவந்தமான முறையில் மனிதர்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் எந்தவித சமூக எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தேன். அதுமட்டுமல்ல இந்த நிலமைக்கு ஏதுவாக எதோவொரு சமூகக் குணாம்சமும் இருக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தேன்.
இந்தப்பத்தியில்  காணாமல் போதல்களைக் கண்டும் காணாமல் விடுகிற சமூகக் குணாம்சத்தின் வேர்களைத்தேட விரும்புகிறேன்.
எங்கள் மத்தியில் பலமானவர்கள் எதனைச்செய்தாலும் அதனை வியந்து ஏற்றுக்கொள்கிற ஒரு பொதுமனோபாவம்  இருக்கிறதென நான் நினைக்கிறேன் . மேலும்  பலமானவர்களை எதிர்த்து  பலவீனமானவர்கள்  பேசுகிற வார்த்தைகள் கொண்டுவரக்கூடிய துர்அதிஸ்ட்டத்தையும் பலவீனமானவர்களே தேடிக்கொண்டார்கள் என எண்ணும் மனப்பாங்கும் எங்களுக்குள் உள்ளது. இதனை இன்னொரு மொழியில் சொல்வதானால்  நீ பலமானவர்களுக்கெதிராகக் கோபம் கொள்வாயேயானால் அதன் விளைவுகளையும் நீயே அனுபவிக்க வேண்டும்  என்பதாகும்.
நான் மேலே சொன்ன  சமூகக்குணாம்சம்  நீதி பற்றி எமது சமூகத்தில் நிலவுகிற அடிப்படையான அறிவீனத்தில் இருந்தே வருகிறது.
நீதியின் அடிப்படைத்தொடக்கமே பலமானவர்கள் பலவீனமானவர்களைக் காயப்படுத்தக்கூடாது என்பதுதான். இந்தப்புரிதல் நீதியின் முன் யாவரும் சமம் என்கிற அடிப்படையில் இருந்து எழுவதாகும். மனித  உறவுகளுக்கிடையில் இருக்கக் கூடிய பலமான மற்றும் பல‌வீனமான நிலைமைகள்  சமூகக்காரணிகளால் ஏற்படுத்தப்பட்டவையே தவிர இயற்கையாக ஏற்பட்டவையல்ல.
மனித மனங்களில் இருந்து நீதி பற்றிய சொல்லாடல் மறைந்து விடும்போது எல்லாவிதமான குரூரங்களும் தலைவிரித்தாடவே செய்யும். இதன்வழி பலவீனமானவர்கள் மீது மேற்கொள்ளப்படுகிற குரூரங்கள்  அதன் விளைவால் அவர்கள் அடைகிற துன்பங்கள் யாவும் இயற்கையானதாகக் கருதப்பட்டு விடுகிறது. நீதி பற்றிய எண்ணக்கருக்கள் உள்ளடக்கப்படாத ஒருகலாசாரம் நிலவும் நாட்டில் எது கொடூரம் எது கொடூரமில்லை என்பதைப் பகுத்தறிய முடியாது போகிறது. மிருக உலகில் இந்தப்பகுத்தறிதலுக்குத்  தேவையில்லை. சிங்கம் தனது இரையைக் கொல்வதைக் குரூரமாக எண்ணுவதில்லை. இன்னும் சொல்லப்போனால்  மற்றைய மிருகங்களைக் கொல்லுவதில் அதற்குள்ள திறமையில்தான் சிங்கத்தின் இருப்பே தங்கியுள்ளது.  எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்னும்  எண்ணக்கருவை ஏற்றுக் கொள்வதன் மூலமே மனிதர்கள் த‌ங்களை  மிருகங்களிடமிருந்து வேறுபடுத்திக்கொள்கிறார்கள்
தனிமனிதர்கள் ஒருவருடன் ஒருவர் கொள்கிற உறவுக்கு  அடிப்படையான நீதி இருக்கிறது அதனை கடைப்பிடிக்க வேண்டியதும்  ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதும் பொதுவான அவசியமாகும்.  இதனை ஏற்றுக் கொண்டால் ஒரு அரசு தனது எல்லைக்குள் நிகழும் எந்த கொலையையும் நேர்மையாக விசாரிப்பதற்கு தனது முழுவளங்களையும்  பயன்படுத்த வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு கொலையையும் விசாரிக்காமல் விடுவது நீதியை நிலை நாட்டாமல் விடச் செய்யப்படும் ஒரு முயற்சியாகும். 
ஒரு நாட்டின் மக்கள் தமது சக மனிதரின் மீது புரியப்பட்ட கொலைகளைக் கண்டு கோபப்படாமல் விடுவார்களேயானால் அல்லது கண்டுகொள்ளாமல் விடுவார்களேயானால் அந்த சமூகத்தின் உளவியல் ஆரோக்கியமற்று அழிந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தப்படும்.
இன்றைக்கு இலங்கையில் ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயும் கொல்லப்பட்டும் இன்னும் மோசமான துன்பப்படுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ள நிலையில் இலங்கையர்கள் ஆகிய நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.  அதுமட்டுமல்ல நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனக் குரல் எழுப்புபவர்களையும் கூட்ட அடக்கி ஒடுக்கி விட அதிகாரத்தில் உள்ளவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பலமானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையில் இருக்கக் கூடிய எல்லா விதமான வேறுபாடுகளையும் சமத்துவம் என்றும் எண்ணக்  கருவினூடாகவே நோக்க வேண்டும்.  எல்லோரும் சமமானவர்கள்  என்னும் கோட்பாடே சகமனிதர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாதென்கிற அடிப்படை விதிக்கு பலம் சேர்க்கும். இந்தக் கோட்பாடுதான்  மனித நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் எல்லாவற்றுக்கும் மேலான எண்ணக்கருவாகவும் இருக்கிறது.
எங்கள் வரலாற்றின் தடத்தில் எங்கோ ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டும் அதனாலேயே இன்னொருவருக்கு தீங்கு செய்யாதிருக்கும் கோட்பாடு எங்களிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. 
ஒருவரை ஒருவர் கொல்லுதல் கூட இலகுவாகிப் போகுமளவுக்கு இன்னொருவருக்கு தீங்கு செய்யாதிருக்கும் கோட்பாடு செயலிழந்து போய்விட்டது.  பலமானவர்கள் பலவீனமானவர்களை அவர்கள் விரும்பினால் எப்பொழுதும் கொல்லலாம் என்கிற நிலை,மேற்குறித்த கோட்பாட்டின் செயலிழப்பே தவிர வேறல்ல.
குற்றவியல் நீதிக்கருத்தியலின் அடிப்படையாக இருப்பது எந்த மனிதருக்கும் அவர்கள் எவ்வளவு பலமானவர்களாக இருந்தாலும் சரி சக மனிதரைக் கொல்ல உரிமை இல்லை என்பதாகும். 
நான் மேலே விபரித்த கொலைக் கலாச்சார நோயை சுட்டி எழுதுவது இலங்கையில் மேலாதிக்க உணர்வுடன் இருப்பவர்களைக்  காயப்படுத்தக்கூடும்  ஆனால் வேறுவழி இல்லை.
இந்தக் குறுகிய பத்தி இன்னுமொரு கேள்வியையும் எழுப்புகிறது.
இந்த விதமான கொலைக் கலாச்சார நோயை, வலிமையற்றவர்களைக் கொல்ல நினைக்கும் - நீதியை நிலைநாட்ட மறுக்கும் நிலையை எப்படி அடைந்தோம்?
இதனைப்பற்றியும் ஆராயவேண்டும்.
சிலவேளை ஏனையவர்களிடம் இதற்கான பதில் இருக்கக்கூடும்.

நன்றி:http://www.humanrights.asia/news/ahrc-news/AHRC-ART-037-2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக