பின்பற்றுபவர்கள்

23 செப்டம்பர், 2007

அரளிப் பூவும் தரங்காவும்...

மழலையின் விரல்கள் வருடச் சிலிர்க்கும்
மானுட முகம் போல்
மென்சிறு இலைகளின் வசந்த உயிர்ப்பு
ஒளிரும் காலைப் பொழுதில்
உன் காதலின் அழைப்பில்
ஏக்கமுறும் என் இதயம்
உன் செவ்விதழ்களில்
என் காதலைத்தரக் காலம் இல்லையே!
இதய ஆழத்திருந்து எழுந்து
வாழைக்குருத்தென விரியக்
கடும்காற்றில் கிழிந்த கனவுகளோடு
ஆறாத இரணங்களின் பிணமானேன்
அதுவொரு காலம்.
மீண்டும்...
வெண் அரளிப் பூக்களின் கொத்தைப் பறித்தெடுத்தேன்.
பூவிரண்டு தா
பூஜைக்கென்றாய்
மானுடர்க்கே அன்றிப் பூஜைக்கல்ல என்றேன் முகர்ந்தபடி.
செம்மை தீண்டப் பிடிவாதமுடன் சொல்கிறாய் "பூஜைக்கே"
மென்நய மெளனத்தில்
அரளிப்பூவின் விளிம்போரம் படரும்
செம்மையைப் பார்த்தேன் - உதடுகள்.
சூழவுள்ள விழிகளைத் தப்பி
மொழிகளையும் தப்பி
நீ எதையோ தேடுவதை
நான் மட்டும் உணர்வதேன்?
அந்தி மாலையில்
நித்திய கல்யாணிப் பூக்களை
என் முன்றலில் நீயேன் கொய்து கோர்க்கிறாய்?
விலகிச் செல்லும் என் ஆத்மாவின் சுனையில்
ஊற்றின் குமிழியொன்று
எழஎழப் பெரிதாகும் உணர்வில் துடிக்கிறேன்.
தீபாணி தரங்கா
பிரியும் நாளில்
நானும் அழுவேன்.

ஆனி - 1995

4 கருத்துகள்:

  1. கவிஞரே, காலையில்தான் உங்கள் வலை கண்டேன். இனித்தான் அகப்படவேணும். பின்னர் ஆறுதலாக எழுதுவேன்.
    வ.ஐ.ச.ஜெயபாலன்

    பதிலளிநீக்கு
  2. 'கடவுளே!இது கவிதை'வாசித்துக்கொண்டிருக்கையில் எழுந்த உணர்வைச் சொல்வதெனில் இவ்விதம்தான் சொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. கவிஞர் ஜெயபாலன், தமிழ் நதி,
    உங்கள் பின்னூட்டங்கள் மகிழ்ச்சியைத்தருகின்றன.
    மேலும் உங்களுடன் அறிமுகம் கொள்வதிலும் மகிழ்ச்சி.
    நன்றிகள்!

    பதிலளிநீக்கு