பின்பற்றுபவர்கள்

23 செப்டம்பர், 2007

மாயச்சுனை

நெஞ்சச் சிறுகுழியின் உள்ளிருந்து பின்னுகிறது ஏக்கம்
என் துயரம் எப்பொழுதும் வாழுமோ
என் கவிதையைப் போலே.
வெறுவான நுனியில் தலைநிமிர்த்திய
புளிய மரத்தின் சிற்றிலையின் அளவேயான என் கனவுகள்
அறைக் காற்றாடியின் அலகுகளில்
கறுப்பாகிப் படிந்துள்ளன.

சில நாட்களின் முன் எழுதிய
என் கவிதை இப்படி இருந்தது:
(ஓர் காதல் கவிதைக்குரிய தொடக்கம் இருப்பதாக
நீங்கள் நம்பத் தொடங்குமுன் வாசியுங்கள்...)

"வெறுமை மெல்ல மெல்ல அழிந்து போனது
மண்ணுடன் புரண்ட அலைகளில் குமுறல் இல்லை.
பெளர்ணமி நிலவோடு
காற்றோ விசும்பின் கதைகள் ஆனது.
தெப்பக்குளத்தில் மெல்லென விழுந்த பூவெனக்காதல்
என்னுள் ஆடுகிறது.
ஆத்மாவினுள் பிறந்து விழிகளில் பரிதவித்து
உன்னைத்தேடி ஏங்குகிறது காதல்
அந்திமாலை வேளைகளில்"
(என்ன
கரைகளை ஈரப்படுத்தும் துயரம் இருக்கவே செய்யும்
என்று உணர்கிறீர்களோ)
உன் ஆத்மாவை மூன்றாம் மனித வார்த்தைகளுக்குள் காணுவது
முடியாதென்பதைப் போலவே
விழியும் விழியுள் ஒளிரும் காதலும்
சாஸ்வதமாயிருக்கும் எனவும்
அது எவ்வார்த்தைகளுக்கும் அஞ்சாதிருக்கும் எனவும்
நான் நம்பேன்
என் காதல் இனியொருமுறை கெஞ்சாது

இளவேனில் காலத்தளிர் போலும் உதடுகளைக் கவ்வி
வசந்தகால ஊர்க்குருவியின்
உயர்வானச் சறுக்கல் போல
காதலின் ஆழியுள் ஓர்நாள் போவேன்.
உன் ஆத்மா எனக்குப் பொய் சொல்லாது என்றால்
இன்னொரு வசந்தத்திற்கு இந்த வேனிலில் வாடியிரு!

நானே என் நெஞ்சத்தில் அகழ்ந்த மாயச்சுனையில்
நீர்மொண்டு அருந்த முயன்று மாய்ந்தேன் என்றால்
நோவதற்கும் நொந்தழுது பாடுதற்கும் பின்
வாழ்வதற்கும் நானேயானேன்.

ஆவணி - 1995

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக