பின்பற்றுபவர்கள்

23 செப்டம்பர், 2007

மழையெல்லோரெம்பாவாய்...

இங்கு பொழிகிறது மழை.
அங்கென் மண்ணிலும்
கையேந்தா மனிதரின் கனவுகள்
உலர்ந்த காலத்திலும்
மழையின்றி நிமிராவெப்பயிரிலும்
பெய்யுமோ?
வேரறுந்து விலகிய மனிதரின் விளைநிலம்
சுவடிழந்து அழுகிறது.
தேரசைந்த திருக்கோவிற் கனவுகளை
பாழடைந்த கோபுரம் பாடும் பாடலை
பாடும் கிழவனின் கைத்தடியும்
வழுவி நனையுமோ?
ஊர் முடிந்த வெளியில்
பொன்னிற மாலையில்
மஞ்சள் குளிக்கும்
என் தனியொரு வீடும் வேம்பும் நனையுமோ?

ஏக்கம் மீதுற விண்ணின் துளிகள்
பின்னிப் பெருமழையெனப் பொழிய
என் சகியின் விழிகளை மருவி
இதழ்களைத் தழுவும்
சாளரக் கரையின் சயனத்துடலில்
படுமோ தூவானம்?
மூசிப் பெய்தும்
முழுநிலமும் கரையவோடியும்
பின்னும் பெயரின்றி
ஆழக்கடலில் கலந்து அழியும் மழையே!
தேடிப் பெய் என் தேசத்தை.

ஏங்கித் தளர்ந்து இனிப்புகலேயில்லை
எனத்தளம்பும் மனிதரை,
நெடுமரமடியின் நனையாக் குடிலில் இருத்திப் பின் பெய்.
'இம்மழை,
மண்ணில்
மரத்தில்
மனதிலும் பெய்தது'
என்றுனக்கழியாப் புகழ் தருவேன்.

கார்த்திகை - 1996

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக