பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2007

(அ)காலத்தின் சொற்கள்

தடிமனும் சளியும் சற்று அதிகமாக இருப்பதாலும்
சமாதான ஒப்பந்தம் முறியப் போவது பற்றித் தன்
மூக்கு நுனி வியர்ப்பதில் இருந்து முன்னுணர்வதாகவும்
என் நண்பன் கூறியதால்
அக்கடைசி இரவை வீணாக்காமல் இருக்க மட்டுமே
நாங்கள் மதுவருந்தப் போனோம்.

அன்றிரவு எந்த இலக்கியவாதியும்
என் நண்பனின் வசவுக்குத் தப்பவில்லை.
இலக்கியத்தின் உச்சாணிக் கொப்பில் நின்று
தன் சளி அவ்வளவையும் காறித் துப்பினான்.

"அட இலக்கியவாதியே
என் கேள்விகளுக்கு நீ மட்டும் பதில் சொன்னால்
இன்னுமொரு போத்தல் மதுவினால்
உச்சாணிக் கொப்புக்கு மேல் உனக்கொரு சொர்க்கம்
உருவாக்கித் தருகிறேன்" - என்றேன்
பொரி கடலையும் பற்களும் நொ¢பட
விழியுருட்டிக் "கேள்" - என்றான்
"இடியும் மின்னலும் மழையும் மிகைபடப் பொழியும்
இரவில் உன் மடியுள் முடங்கும் பிள்ளையின் முகத்தில் தெரிவது...?"
"அச்சம்"
"வீசும் பிரம்பொடு மூசும் குருவின் முன்னே
விதிர்க்கும் சிறுவன் மூக்கில்
உதிர்வது?"
"வியர்வை"
"உன் காலுக்கிடையில் சிக்கிய எறும்பின் வாழ்வு"
"அவலம்"
"மனிதனை மெளனமாக்குவது?"
"மரணம்"
"உச்சாணிக் கொப்பில் இருந்து நீ சொர்க்கத்திற்குப் பாய
இன்னும் ஒரேயொரு கேள்வியே உள்ளது"
"சொல்லிவை மதுவுக்கு"

"உன் எல்லாச் சொற்களும் ஒரேயொரு அர்த்தத்தை மட்டுமே
கொள்ளும் காலம் எது?"

"என்ன!
ஒரு சொல்லுக்குப் பல பொருளும்
பல சொல்லுக்கொரு பொருளும்
உண்டென் மொழியில் - உண்மை
ஆனால் மேற்சொன்ன சொற்களில்
ஒன்றேனும் ஒன்றுக்கும்
எக்காலமும் பொருந்தாதே!
என்னடா!!
முட்டாள் கவிஞன் ஒருவன் தன் புலம்பல் தொகுப்புக்கு
வைத்த தலைப்போ உன் கேள்வி
போடா உன் மதுவும் சொர்க்கமும்!"

இரவு தள்ளாடிப் போக
நாங்கள் கலைந்தோம்.

அதிகாலை என் தொலைபேசி ஒலித்தது
கலங்கித் தழும்பி உடையும் குரலில் நண்பன்:
"எல்லாச் சொற்களும் ஒரேயொரு அர்த்தத்தை மட்டுமே கொண்ட
காலத்தை நேற்றிரவு பெற்றேனப்பா!
நேற்றிரவு
விசேட அதிரடிப்படை என் பிள்ளையை..."

அச்சம் வியர்வை அவலம் மரணம்...

வைகாசி - 1995

1 கருத்து: