பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2007

விடுதலை

முன்னோர் விட்டுச்சென்ற கவிதைகளிலன்று
விடுதலையையுணர்ந்தோம்.
இன்று இருண்மையுட் தனித்துப் போனோம்...
அடர்ந்த வனங்களுள்
நடந்தபோதுமில்லாதவுணர்வு.
அற்புதமான கனவுகளுடன் பிள்ளைகள்
பிறக்கிறபோதும்
வாழ்வேனற்பமாகிறது?
இரத்தத்தில் தொட்டெழுதும் அரிச்சுவடி..
எண் சட்டத்தில் தலைகள்..
வாழ்வு சொற்பமாகிறது.
வடக்குகிழக்கைத் திராட்சைத்தோட்டமாக்கி
அரசருந்துகிறது மது.
அதிகாரிகளுக்கோ
போர் புரிகையில் மனம் சமாதானமாயிருக்கிறது.
மக்களுக்கோ கீதையும் மஹாவம்சமும் துணையிருக்கிறது.
பாலைமரக்காலடியின்கண்ணியில்
காலிழந்தது கூழைக்கடா.
கார்த்திகைப்பூக்களின் வெறுமையில்
இறுகியது நதி.
மறுகியது
பல்லாண்டுகாலப்படிவுகளில் நிமிர்ந்த வனம்.
பட்டறிவு புழுதியாகிறது
சிந்தனையின் மடிப்புகளற்ற
மூளைகளுக்குள் யுத்தம்
விளைகிறது.
நாங்களறியா ஆழத்துள் வேரோடிய திமிரில்
போர் கைகொட்டிச்சிரிக்கிறது
புல்லாகிப் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப்
பறவையாய்ப் பாம்பாகி எல்லாமுமாகி
வினை கழிந்தும் பின்
மனிதராய் பிறந்தாரென்றால்
அந்தரிக்கவோ இன்னும் ஐயா?

வாழ்வின் முடிவே மரணம்
பற்றிக்கொள்ளத் தத்துவமல்ல.
விடுதலை,
கவிதைகளிலுமில்லையென்றால்
பிரபஞ்சமுமற்பமாகும்.

ஐப்பசி 2006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக