பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2007

சுடுதல்

திருக்கோவில் தெப்பக்குளம் போலவும்
தெருக்கோவிற் பிள்ளையார் போலவும்
சூடு சுறணையற்றிருந்தது வாழ்க்கை.
பால பருவமது
பாலப்பம் பகோடா
தோசை வடை சுடுதல் நடந்தகாலம்

பள்ளிக் காலப் பொல்லாக் காதலோ
தீயினால் சுட்டவடு ஆறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடுவென்றறைந்தது.
பின்
சுட்டமண்;
சுட்டபழம்;
சுடாத பழமுமறிந்தேன்.

தன்வினை தன்னைச்சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடுமென்று
உள்ளுறைந்த போதம் பயம் காட்டும்
அறிவறிந்த காலத்திலும்.

ஆயினும்
சூடடைந்து சுறணை கொண்டதுவாழ்வொருநாள்
சுடுவதற்கான சுதந்திரம்
சுதந்திரத்திற்கான சுடுகள்
எனப்பலபரிமாணங்களிற்
சூடுகளை நானப்பொழுது கேட்கத்தொடங்கினேன்

சுடுதலின் சுகத்தை நானறியேன்
(அறிய விரும்பவும் இல்லை)
சுடப்படும் துயரம் நானறியாவரம் வேண்டும்.
சுடுவதற்கும்
சுடப்படுவதற்கும் இடையில் அகப்பட்ட
ஆயிரம் கணங்கள் அடியேன் தன்வினையைச் சாருமோ?
நானறியேன்!

சுடுபவர்க்குத் தெரியாது
எதைச் சுடுகிறோமென்று!
சுடப்பட்டவர்க்குத் தெரியாது
எது சுடுகிறதென்று!!
சுடச் சொன்னவர்க்குச் சுடப்படுபவைகள் பற்றிக்
கவலைகள் இல்லை!

சுடுவதற்கும்
சுடப்படின் ஆறுவதற்கும்
ஆனதத்துவங்கள் எங்கள் வேர்களுக்குள் உள்ள போது
சுட்டவர்களையும் சூடுபட்டவர்களையும்
சொல்லிப் பெயரிடின் இது
கவிதையல்ல!
சூடுகள் பற்றி எவருமே எதுவுமே
அறியாக் காலமென்றொன்று
இருந்திருக்குமோவென்று
மாய்ந்தேன்

சுடுதல் சூடிக் கொண்ட நாடு!

நல்ல மாட்டுக்கோர் சூடு போதுமென்பார்
நன் மிருகங்களைநலமடித்துச் சூடு வைத்து மேய்த்தவகையில்.

நாமறிந்த மாடுகளைக் கவிதையும் சுடுவதில்லை!

மாடுகள் மனிதர்க்காகி வந்தமைக்கு
மாடுகள் என்னை மன்னிக்க!

ஆவணி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக