பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2007

வாழ்வில்லாப் போர்!

நினைவறிந்து
நெஞ்சம் கிளர்ந்து
தெரிந்த உலகமோவிது?
வாழ்வு புரிந்து
வலியையுணர்ந்து
யாரடைந்தார் ஞானம்?

புரிந்த போர்..
புரியாப் போர்..
களங்கொண்ட மெளனம்...
கையாலாகாத அமைதி...
கண்தெரியாச் சடுகுடுவாட்டம்...

அதிகாரமும் ஆணவமும் பேசும் வார்த்தைகளின்
உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் யாரறிவர்?

கண்ணீரும் கம்பலையுமாகி
மண்ணள்ளித்திட்டி மார்பிலடித்து
ஓலமிட்டு ஒப்பாரிவைத்தும்மாறாதரணங்களின் மீது
காலாதிகாலமாக இராசதந்திரமும் நடக்கிறது.

கைதொழுதேற்றும் காலடிகள் நீளும்.
கங்கை தின்ற சடையும்
காவி மூடிய தாது கோபுரமும்
கர்த்தரும்
பாங்கொலியும் பகரா விடைகள் மீது
பாவிகளின் கேள்விகள்...

காலத் தடத்திலும் உண்டே கையறு நிலை.

ஊழி கொண்ட ஆழியோ
உன்மத்தமான கோடையோ
அலையுமாயிரம் இலைகளில்
அழியுமிரவின் அமைதியோ
அன்பேயென்று என்னுள் உறங்கும் காதலோ
கூடவறியாத ஆயிரங்கணங்களின் கனத்தை
எப்பாயிரத்திலிறக்கி வைப்பேன்;
எப்போது வாழுவேன்?

ஆடி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக