பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2007

நகரம்

மர்மங்களின் முடிச்சவிழ்க்கும் பெருந்தாடிக்கிழவனின் கைத்தடிபோல்
அறைச்சுவரில் தொங்கிக் கொண்டிருக்காமல்
நானின்றிறங்கி நகரத் தெருவுள் விழுந்தேன்.

அடர்ந்த கானகம் போலல்லாது
நகரம் எல்லாரையும் பார்த்துப் பல்லிளித்தது.

வாழ்வுச் சட்டியின் வெறுமைக்குள் வரண்டவர்கள்
வர்ணங்களின் மாயத்தில்
அகப்பட்டுச் சுழல்கின்றார்கள்.
உண்டியல்கள் உடைந்த கண்ணில் போதையின் கோணல்...

இரண்டாம் சாமத்தின்
கண்ணாடிச் சாளரத்தினுள்
அடக்க முடியாத விரகத்தில் எரியும் கண்கள் படையெடுக்கின்றன.
நெளிந்து நசிகிறது பெண்மை.

புட்டிகளும் கிண்ணங்களும் வெறுமையாகும் மதுச்சாலைத் தரையில்
நிலக்கடலைக்கோது நரிபடுகிறது
எள்ளிலும் சிறிய எண்ணங்களின் விகசிப்பில்
சொல் விளம்புமோ மது?
செல்லப்பிராணிகள் பற்றியும்
விலையுயர்ந்த காலணியை அணியக் கூடிய விருந்துகள் பற்றியும்
அவர்கள் நற நறக்கும் ஒலியில்
நள்ளிரவுத்தேவாலய மணி அறுந்து போகிறது

சில நூறு ஆண்டுகளின் முன்பு
எமது கிராமங்களில் அள்ளி வந்த
பொற்கழஞ்சுகள் சிதறச் சிதற சீமான்களும் சீமாட்டிகளும் ஆடிய நடனத்தின் ஒலி இன்னும்
அடங்காது திரிகிறது.
நானோ,
கனவுகள் வெடித்த காலக்கிழவியின் நெற்றியெனக் கற்கள் நெருங்கி
புல்லும்கருக மருந்தடித்த இரவுவீதியில்
திமிறிக்கிடந்த வரலாற்று வேர்களில் தடக்கி
புலத்தைப்பாடும் துருக்கிக்காரன் இரவுப்பாட்டில் சில்லறையென விழுந்தேன்.
இலையுதிர் காலத்தின் மழை நகரத்தை மூடுகையில்
விசும்பின் தொன்மையின்கீழ்
நானும் அவனும் தனித்து நடுங்கிக்கொண்டிருந்தோம்...

மாசி 2006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக