பின்பற்றுபவர்கள்

3 செப்டம்பர், 2007

தேடல்

இதயத்துள்ளிருந்து கவிதை வருவதை
ஏதோவொன்று அடைத்துக் கொண்டிருக்கிறது.
அகவெளியின் சஞ்சாரம் அற்றிருக்கிறேன்
பழைய நண்பர்களைச் சந்திக்கையில்
திரி தீண்டிய விளக்கொளி நெஞ்சத்தில்.
ஆத்மாவுக்கருகில் ஒலித்த குரல்கள்
தொலைதூரங்களுக்குச் சிதறுண்டு போனபின்
வாழ்க்கைக்கு மரணம் என்றொரு அர்த்தம் உள்ளதை உணர்கிறேன்.
தனித்து விடப்பட்ட மனிதர்களின் கண்கள் ஒளி மங்கிப் பஞ்சடைந்து வருகின்றன.
துன்பம் பிரபஞ்சமயமாகி வருகிறது.
பெரும் வனங்களும் சரிகின்றன.
வெட்டுக்கட்டைகளின் மீதான வட்டவரிகளில்
காட்டுப்பறவையின் ஏகாந்தம் எஞ்சியுள்ளது.
விடுதலையைப் பாடும் எண்ணுக்கணக்கற்ற கவிஞர்களின்
குரல்களுக்கிடையிலுள்ள இடைவெளியை நிரப்பிச்செல்லும்
சத்தியநதியின் ஊற்று மூலத்தை அடைத்திருப்பது எது?

ஐப்பசி - 1999

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக