பின்பற்றுபவர்கள்

16 செப்டம்பர், 2007

முடிந்துபோன ஆண்டு

ஆவணி

தேமா மலரின் திரள்கள்
காற்றிற் கிளர்ந்து கடலின் திரையென உயரத்தாழ
விசையுறும் உள்ளம்.
மாலைப் பொழுது...
ஆழக்கடலின் மோகத்துளிகள் மோதிச்சிதறும் கரையில்
தனியக் கிடந்தேன்.

கடலின் மடியில் நிலவின் தடமும் அழியும் முகிலின் திரளில்.
பின்னிரவில் பேய்க்காற்றிற் பேதலித்தலையும் மரங்கள்.
மென்முலையோடணையா மழலைக்குரலோ அழுகிறது.

புரட்டாதி

அன்றோ
காற்றடங்கிய பகலில் மே மலர்களில் தீ எ¡¢ந்தது.
இன்றோ
ஓங்கார ஓலமிட்டு உலகத்தின் உதிர்வெல்லாம்
அள்ளி வந்தது சோளகம்.
இரவிலோ
நெடிதுயர்ந்த ஆலமரத்தின் கீழ்
நிலவில் பாடும் பைத்தியக்காரனுடன் தனித்திருந்தேன்.

ஐப்பசி

இரவினில் எங்கிருந்தோவரும் இசையுள் மூழ்குதல்...
கனவினுள் அமிழ்ந்து கடலுடன் பேசுதல்...
இல்லையெனில்
கண்ணீர் வழியத்
தேமாமரங்களுடன் தேம்புதல்...

கார்த்திகை

இரவின் மீது இரைகிற காற்றில்
விருட்சங்களின் இலைகள் பேசுகின்றன.
நிலவைத் தழுவ எழும்பும் கடலின் அலைகள்
ஏங்கி விழுகின்றன.

முன் மார்கழி

மானுட ஆன்மாவின் புன்னகையைத் தேடி நடந்த
காலத்திடலின் நடுவில்
புல் தேய்ந்தழிந்த தடமோ நீள்கிறது.
மழையில் நனைந்து
நிலவில் தனித்த பூக்கள் உதிரும்.

நடு மார்கழி

மாரிகால இரவிற் புதைந்து
மண்ணெது விண்ணெது
கடலெது கரையெது
என்றறியா இருளிலும்
ஆழியின் இசையெனத் திரள்வது எதுவோ?

பின் மார்கழி

நீள் தெருவெங்கும் நிராசை சிந்திப் பின்
அதிகாலைக் கடலில் ஆடும் படகில் வாழ்க்கை,
தீராக்காதலைத் தேடி
ஆறாத இன்பமருளும் மாயக் குகையுட் போனதென்றார்.
நாளை நதிமுகக் கலப்பில் இன்பம் நுரைக்கையில்
நறுமலர்ப் பொய்கையின் பொன்தாது கொண்டு வருமென்றார்.

போரும் பொய்மையின் பாதையில் போயழிந்த காலமும்
போற்றிப்பாடும் புலவரைப் பொரிந்து போனதென்றால்
பொய்யாம்!
அச்சமும்
அச்சத்தின் கனவுகளும் பற்றிப்பிடித்தலைக்க
ஆதரவற்ற காலத்தில் அணைந்து கொள்ள
ஆருமற்றுப் போனதடி வாழ்வு.

வாழ்வென்று எவர் சொன்ன வாழ்வும் வாழ்வல்ல
என்றறைகிறது ஆழி.

எல்லாம் மூடிய இருளிலும்
வெள்ளி அலைவீசி விண்ணின் ஒளி வீழ்த்தும்
என் இனிய கடலே!
ஆழத்தின் ஆழத்தில் உறையும்
உன் மெளன வர்மத்தின் துளி பருகி
உயிர் நிறைந்து
உயர்ந்து வரும் என் வாழ்க்கை
என்றுன் கரையில்
மணலின் துகள்கள் எண்ணிக் காத்திருப்பேன்.

மார்கழி - 1996

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக