பின்பற்றுபவர்கள்

9 செப்டம்பர், 2007

வனமழிந்த காலம்

மகிழ்ச்சி பூமியை வனமாக மூடியிருந்த காலமொன்றிருந்தது.
வனம் பூமியை மகிழ்ச்சியாக மூடியிருந்த காலமுமதுதான்.
ஆறுகளின் மேனியில்
வனங்கள் கிறங்கிக் கவிந்த காலங்கள்...
துயரம் நிரம்பிய இதயத்தில்
சொற்கள் சிதறுண்ட நேரத்தில்
உருப்பெறாத கவிதைகளுடன் கானகம் புகுந்தனர் கவிஞர்கள்,
அற்புதமான கவிதைகளுடன் திரும்பி வந்தனர்.
நீங்களோ நானோ கண்டிராத அக்காலத்தைத் தேடிப் பயணப்பட்டேன்.
வேரடி மண்ணைப் பிரிய மனமில்லாத பட்ட மரங்களில்
பறவைகள் ஓலமிடுகையில்
பொட்டல் வெளிகளில்
வனமிருந்த பள்ளத்தில் துளிர்விடப் புல்லும் இல்லை.
புழுதியுரிந்து சிவப்பெனப் புயல் எழுகிறது.
காடுகளைத் தூர்த்த காலத்தின் காற்றில் அள்ளுப்படச் சருகுகளும் இல்லை.
அடவியின் இதய நீளத்தில் அரண் செல்கிறது.
துன்பம் நிறைந்த கவிதையின் சொற்களைத் தேடி
உலகத்தின் மிக அற்புதமான கவிஞன்
ஆத்மாவின் உள்ளெங்கும் பயணம் செய்வதைப் போல
இலைகள் அடர்ந்த அடவியைத் தேடிப் பயணம் செய்தேன்.
வனங்களைத் தின்னும் இராணுவம்
அரண்களில் கண்தூங்கிக் காவல் புரிகிறது.
எஞ்சிய மரங்களின் கீழே
முகங்கள் கோணிய மனிதர்கள்
வியர்வையை வழித்தெறிந்து புறுபுறுக்கிறார்கள்.
இன்னும் ஏதோ எஞ்சியிருப்பதாக நீண்ட தொலைவுக்குப் பார்க்கிறார்கள்.
தனித்துச் சிதறிய மரங்களோ
எதைச் சொல்லவல்ல நிலையிலுமில்லை.

ஆனி - 1998

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக