பின்பற்றுபவர்கள்

16 செப்டம்பர், 2007

கவிஞனுடன் மதுவருந்தல்

சிறுமேசை
செந்நிற விரிப்பு
சிம்னி ஒளி இறங்கித் தவழ்கிறது.
பொன்னிறத்தில் நுரைக்கிறது மென்மது.

"குற்றவுணர்வுகளின் குறைந்த பட்ச ஆயுட்காலம் எவ்வளவு?
கோடைப் பொழுதின் குளிர் கள் பருக எத்தனை பேருக்கு அஞ்ச வேண்டியுள்ளது
பெண்களுக்கான ஏக்கத்தில் குறி புடைக்கிறது.
உலர் காற்றில் ஆடும் அவள் உள்ளாடைகளில்
என் காமம் காய்கிறதே!
சட்டைப்பையிற் கனக்கிறது இரவல் காசு
இறந்தவர் நினைவிற் கல்லாகிறது இரவு
நீ ஏன் உரையாடுகிறாய் இல்லை" - அவன் கேட்கிறான்.
"முட்டை வட்டப் பொரியலைத் தின்று தீர்க்காதே
உரையாட வேண்டும் இவ்விரவு முழுவதும்"- சினக்கிறான்.

மதுக்கடை நிறைகிறது
உரையாடல்கள் உயர்கின்றன.

"கருத்தரங்கொன்றில் தேநீர் பரிமாறிய பெண்ணைத்
தன் மடியில் அமரக் கெஞ்சிய கவிஞனைப் பற்றியாவது
பேசுவோமா" என்கிறான்.
"எஞ்சிய மதுவை
ஊற்றிக் கொள்" - என்றேன்.
இன்னும் ஏதேதோ சொல்ல உன்னுகிறான்
என் நட்பார்ந்த கவிஞன்.

எழுந்து வருகிறோம் வெளியே
கடற்காற்றில் போதை வலுக்கிறது.
கரையைப் பிரிந்த கலங்கள் தூரக்கடலில்...
முற்றுப் பெறாத உரையாடலொடு
முடிவுறாத இரவு நீள்கிறது.

வைகாசி - 1998

1 கருத்து: